المختصر في صفة العمرة وأحكامها

المختصر في صفة العمرة وأحكامها

உம்ரா செய்யும் முறையும், அதன் சட்டங்களும்

Language: lang_ta
Prepared by: பல்மொழி இஸ்லாமிய உள்ளடக்க சேவை அமைப்பின் கல்விக் குழு
Version: 3.0
Translations 56
Amharic Assamese Azerbaijani Bambara +52
Attachments 7
PDF
Audio
Video
+3

உம்ரா செய்யும் முறையும், அதன் சட்டங்களும்

இப் பிரபஞ்சத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். அவனது தூதர் முஹம்மத் ﷺ அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் என்றென்றும் உண்டாகட்டும்.

அல்லாஹ்வைப்போற்றி புகழ்ந்தன் பின்னால்

இது உம்ரா செய்யும் முறை, அதன் சட்டங்கள், ஒழுங்கு முறைகள் பற்றி சுருக்கமாக குறிப்பிடும் ஒரு கையேடாகும். இதில் உம்ரா செய்பவருக்குத் தேவையான பெரும்பாலான விடயங்களை விளக்க முயன்றுள்ளோம்.

அல்லாஹ்வின் திருமுகம் நாடிய தூய பணியாகவும், முஸ்லிம்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாகவும் இதை அமைத்துத் தரவேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

பல்மொழி இஸ்லாமிய உள்ளடக்க சேவை அமைப்பின் கல்விக் குழு

அறிமுகம்

01. வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்:

வணக்கங்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பின்வரும் இரண்டு நிபந்தனைகள் அவசியமாகும்:

1. உளத்தூய்மை,அதாவது ஒரு வணக்கத்தை செய்யும் போது அல்லாஹ்வின் திருமுகத்தையும் மறுமையையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: "நேரிய வழியில் நின்று கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு அல்லாஹ்வை (தூய்மையாக)வணங்க வேண்டும்... என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை." (அல்குர்ஆன் 98 : 5). [1] அதாவது: அல்லாஹ்வையும், அவனது வணக்க வழிபாடுகளையும் மனதார ஏற்று, மற்ற அனைத்தையும் புறக்கணிப்பது இதன் அர்த்தமாகும். (தஃப்ஸீர் அஸ்ஸஅதி, பக்கம் 538)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் எண்ணியதற்கேட்பவே கூலி வழங்கப்படுகிறது.". [2]. (2) ஆதாரம்: புஹாரி 01, முஸ்லிம் 1907.

2. குறிப்பிட்ட வணக்கத்தில் நபி ﷺ அவர்களின் சொல், செயலை பின்பற்றுதல், நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : "நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உண்டாக்குகிறாரோ அது நிராகரிக்கப் பட்டதாகும்." மற்றொரு அறிவிப்பில், "எவரேனும் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்வாராயின் அது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்" (4). (3) ஆதாரம்: புஹாரி 2697, முஸ்லிம் 1718. (4) ஆதாரம் : முஸ்லிம் 1718.

***

02. உம்ரா செய்யும் முறையும், அதன் சட்டங்கள் பற்றி கற்றுக்கொள்வதன் சட்ட நிலைப்பாடும்.

ஒரு வணக்கம் ஸுன்னாவிற்கு ஒத்துப் போகும் வகையில் அமைய வேண்டுமாக இருந்தால் அது தொடர்பான நபி ﷺ அவர்களின் வழிகாட்டுதலைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். நபி ﷺ அவர்களும் தன்னையும், தனது வழிகாட்டுதலையும் பின்பற்றுமாறு மக்களை ஊக்குவித்தார்கள். மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்." (5) (5) ஆதாரம் : புஹாரி 6008.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் : "நபி ﷺ அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தமது வாகனத்தில் இருந்து கல்லெறிந்ததை நான் பார்த்தேன். அப்போது அவர், 'உங்களது ஹஜ் கிரியைகளை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு நான் மீண்டும் ஹஜ் செய்யமாட்டேனோ என எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்கள். (6) (6) ஆதாரம் : முஸ்லிம் 1297

***

03. உம்ராவின் சிறப்பு

உம்ராவிற்கு பொதுவான சிறப்பு, குறிப்பான சிறப்பு என இரு வகை சிறப்புகள் உண்டு :

பொதுவான சிறப்பு:

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை" (7) (7) ஆதாரம் : புஹாரி 1773, முஸ்லிம் 1349.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள் : "ஹஜ் உம்ராவை அடுத்தடுத்து நிறைவேற்றுங்கள். இரும்பு, தங்கம், வெள்ளி ஆகியவற்றின் அழுக்குகளை எவ்வாறு அடுப்பு (8) நீக்குகின்றதோ, அதேபோல அவை வறுமையையும் பாவங்களையும் ஒழிக்கின்றன. ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி கிடையாது." (8) உலோகங்கள் உருக்கப்படும் இடம். பார்க்க: இப்னு அப்துல் பர்ரின் 'தம்ஹீத்' எனும் நூல் (15/102). (9) ஆதாரம் : திர்மிதி 810, நஸாஈ 2631.

குறிப்பான சிறப்பு: இது ரமழான் மாத்திற்கு மாத்திரம் உரிய சிறப்பாகும். நபி ﷺ அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ரமழானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னுடன் ஹஜ் செய்வதற்கு நிகராகும்" (10) (10) ஆதாரம்: புஹாரி 1863, முஸ்லிம் 1256.

***

உம்ரா செய்யும் முறை

01. நிய்யத் வைக்கும் பிரதேச எல்லைகள் தொடர்பான சட்டங்கள்

நிய்யத் வைக்கும் பிரதேச எல்லைகள் என்பது ஹஜ், உம்ரா செய்ய மக்கா வருபவர்கள் நிய்யத் வைப்பதற்கும், புனித பூமியினுள் நுழைவதற்கான விதிகளைப் பேணவும் நபியவர்களால் நிர்ணயிக்கப்பட்ட சில இடங்களாகும்.

இவ்விடங்களில் ஏதெனும் ஒன்றினால் ஹஜ் உம்ரா செய்பவர் மக்காவிற்குள் நுழைய முற்பட்டால் அவர் ஹஜ் உம்ராவுக்காக நிய்யத் வைப்பது கட்டாயக் கடமையாகும். அவ்வாறு நிய்யத் இன்றி இவ்விடங்களை கடந்துவிடக் கூடாது.

இவ் எல்லைகளைத் தாண்டி மக்காவுக்கு அருகாமையில் வசிப்போருக்கு அவர்கள் வசிக்கும் இடமே அவர்களின் நிய்யத் வைக்கும் இடமாகும். அங்கிருந்தே ஹஜ் உம்ராவுக்காக நிய்யத் வைக்க வேண்டும்.

மக்காவில் வசிப்பவர்களும் அங்கிருந்தே இஹ்ராம் நிய்யத் வைப்பவர்களும் ஹஜ்ஜுக்காக தாம் இருக்கும் இடத்திலிருந்து நிய்யத் வைக்க முடியும். ஆனால் உம்ரா செய்பவர்கள் புனித பூமியின் எல்லைக்கு வெளியில் சென்று உம்ராவுக்கான நிய்யத் வைத்து வரவேண்டும்.

விமானத்தில் பயணிப்பவர் தமக்கான எல்லையை நெருங்கும் முன் தயாராகி இஹ்ராம் ஆடைகளை அணிய வேண்டும். எல்லையை நெருங்கும் போது உடனே இஹ்ராம் நிய்யத் வைக்க வேண்டும். விமான நிலையத்தில் இறங்கும் வரை தாமதிக்கக் கூடாது. விமானத்தின் வேகத்தால் தல்பியா கூறும் இடத்தைத் தவற விடாமல் இருக்க, எல்லையை நெருங்கும் முன் தல்பியா கூறிக்கொள்ளலாம்.

02. இஹ்ராம் (நிய்யத்) வைக்கும் முறையும் அதன் சட்டங்களும் :

இஹ்ராம் நிய்யத் வைப்பவர்கள் பின்வருமாறு செய்துகொள்ள வேண்டும்:

1. குளித்தல்: இது ஆண்கள் பெண்கள் (மாதவிடாய், பிரசவ இரத்தம் ஏற்படும் பெண்கள் உட்பட) அனைவருக்குமான வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.

2. ஆண்கள் தலையிலும் தாடியிலும் வாசணைத் திரவியங்கள் பூசுதல: இஹ்ராம் ஆடை அணிந்த பிறகும் வாசணை நீடித்திருப்பது உம்ராவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், பெண்களைப் பொருத்த வரையில் அந்நிய ஆண்களுக்கு வாசணை தெரியக்கூடாது என்பதால் நறுமணம் பூசுவது அவர்களுக்கு அனுமதிக்கப்படாது.

3. இஹ்ராம் ஆடைகளை அணிதல்: ஆண்கள் வேட்டியும், மேலாடையும் அணிய வேண்டும். அவை வெண்மையான, சுத்தமான அல்லது புதிய ஆடையாக இருப்பது ஸுன்னத் ஆகும். பெண்கள் முகத்தையும், மணிக்கட்டு வரை இரு கைகளையும் தவிர உடலின் ஏனைய பகுதிகளை மறைக்கும் அலங்காரமற்ற எந்த ஆடைகளையும் அணியலாம். அந்நிய ஆண்கள் பார்ப்பார்கள் என்ற பயம் இருந்தால் நிகாப், கையுறை போன்ற தோலோடு உரசிக்கொண்டிருக்கும் ஆடைகள் தவிர்ந்த வேறு எதையாவது கொண்டு முகம், கைகளை மூடிக்கொள்ள முடியும்.

4. கடமையான அல்லது உபரியான தொழுகைகளுக்குப் பிறகு இஹ்ராமுக்கான நிய்யத் வைப்பது சுன்னத்தாகும்.

தனக்காக உம்ரா செய்பவரானால், لَبَّيْكَ اللَّهُمَّ عُمرَة "லப்பைக்கல்லாஹும்ம உம்ரதன்" என வாயால் மொழிந்து நிய்யத் வைக்க வேண்டும். பிறருக்கு உம்ரா செய்பவரானால், لَبَّيْكَ اللَّهُمَّ عُمرَةً عَن فُلان "லப்பைக்கல்லாஹும்ம உம்ரதன் அன் ஃபுலான்" என வாயால் மொழிந்து நிய்யத் வைக்க வேண்டும். இங்கு "ஃபுலான்" எனக் குறிப்பிடும் இடத்தில் குறித்த நபரின் பெயரைக் கூற வேண்டும்.

நிய்யத் வைக்கும் போது தனது உம்ராவில் ஏதும் தடைகள் ஏற்படும் என அஞ்சினால், முன் நிபந்தனை கூறி நிய்யத் வைக்க வேண்டும். لَبَّيْكَ اللَّهُمَّ عُمْرَةً، وَإِنْ حَبَسَنِي حَابِسٌ فَمَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي "லப்பைக்கல்லாஹும்ம உம்ரதன், வஇன் ஹபஸத்னீ ஹாபிஸுன் ஃபமஹல்லீ ஹைஸு ஹபஸத்னீ" இதன் பொருள்: இறைவா! உம்ராவுக்காக நான் உன்னிடத்தில் வந்துவிட்டேன். நீ எந்த இடத்தில் (உம்ரா கடமையை செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அது தான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும். எனக் கூறி நிய்யத் வைக்க வேண்டும். இவ்வாறு நிபந்தனை கூறி, தமது உம்ரா கடமை நிறைவேற்றுவதில் தடை ஏற்பட்டால், அவர் உம்ராவிலிருந்து விடுபடலாம். உம்ராவை விட்டதற்காக அவர் எவ்வித குற்றப்பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

பின்னர் தல்பியாவை அதிகமாகக் கூற வேண்டும். لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لا شَرِيكَ لَكَ (லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக லா ஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க், லா ஷரீக லக்) 11 பொருள்: “வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.” ஆண்கள் தங்கள் குரலை உயர்த்தி சப்தமாக இதனைச் சொல்ல வேண்டும், அந்நிய ஆண்கள் அருகில் இல்லாத போது பெண்களும் இதனை சப்தமாக சொல்ல வேண்டும். அந்நிய ஆண்கள் இருந்தால் சப்தத்தை உயர்த்தாது கூறிக்கொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டியவர் தல்பியாவை அதிகமாகச் சொல்ல வேண்டும். குறிப்பாக உயரமான இடங்களில் ஏறுதல், தாழ்வான இடங்களில் இறங்குதல், இரவு பகல் வருதல் போன்ற நிலைமைகள், பருவங்கள் மாறும் போது தல்பியாவை அதிகம் கூறிக்கொள்ள வேண்டும். [11] 'லப்பைக்' என்பதன் அர்த்தம்: 'மீண்டும் மீண்டும் உன் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன், இறைவா!' என்பதாகும். இதன் பொருள்: மனிதன் தனது இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவனை வணங்கி வழிபடுவதில் நிலைத்திருப்பதாகும். 'இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க்' - இதில் 'ஹம்து' என்பது: புகழுக்குரியவனை அன்புடனும், மதிப்புடனும் முழுமையாகப் புகழ்வது. இதனை மீண்டும் மீண்டும் கூறுவது நன்றியுடன் புகழ்வதைக் குறிக்கும். "நிஃமத்" என்பது: அல்லாஹ் தனது அடியார்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், தீங்குகளைத் தடுப்பதுமாகும். 'முல்க்' என்பது: அல்லாஹ்வின் ஆட்சியைக் குறிக்கும். அல்லாஹ் ஒருவனுக்கே ஆட்சி அதிகாரம் அனைத்தும் சொந்தமானவை. 'லாஷரீக லக' என்பது: அல்லாஹ்வின் முழுமையான பண்புகளிலும், நிர்வாகத்திலும், இறைமையிலும் அவனுக்கு இணையாக எவரும் இல்லை எனக் கூறுவதாகும். பார்க்க: மஜ்மூஉ ஃபதாவா வ ரஸாஇலில் உதைமீன் (22/ 96) -சுருக்கமாக-.

உம்ராவுக்காக நிய்யத் வைத்ததிலிருந்து தவாஃபை ஆரம்பிக்கும் வரை தல்பியாவை கூற வேண்டும்.

இஹ்ராம் நிப்யத் வைத்தவர் தமது இஹ்ராமிலிருந்து விடுபடும்வரை இஹ்ராமில் தடைசெய்யப்பட்ட விடயங்களில் ஏதாவது ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

03. தவாஃப் செய்யும் முறை

இஹ்ராம் நிய்யத் வைத்தவர் மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்ததும், வலது காலை முன்வைத்து, ஏனைய பள்ளிவாயில்களுக்குள் நுழையும் போது ஓதும் துஆவைக் கூற வேண்டும்: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ அல்லாஹும்ம இஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக பொருள்: “அல்லாஹ்வே! எனக்காக உமது கருணையின் கதவுகளைத் திறந்து விடுவாயாக.”

தவாப் செய்ய ஆரம்பித்துவிட்டால் தல்பியா கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தவாஃபின் போது ஆண்கள் எல்லா சுற்றுக்களிலும், இழ்திபாஃ அணியவேண்டும். மேலாடையின் நடுஓரப் பகுதியை தமது வலது கையின் அக்குளுக்கு கீழ் வைத்து, இரு ஓரப் பகுதிகளையும் இடது கை தோல் புயத்திற்கு மேல் போட வேண்டும். தவாஃ முடிந்ததும் ஆரம்பத்தில் இருந்தது போன்று மேலாடையை சரிசெய்துகொள்ள வேண்டும். இழ்திபாஃ என்பது தவாஃபுக்கு மாத்திரம் உரிய ஆடை ஒழுங்கு முறையாகும்.

பின்னர் ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். சனநெறிசல் ஏற்பட்டு, மக்களுக்கு சிரமம் ஏற்படாது என்றிருந்தால் அதன் முன் நின்று, வலது கையால் அதைத் தடவ வேண்டும். முடியுமானால் அதற்கு முத்தம் கொடுக்க வேண்டும். முத்தமிட முடியாமல் போனால் தனது கை, கைத்தடி போன்றவற்றால் அதைத் தொட வேண்டும். பின்பு எதைக்கொண்டு தொட்டாரோ அதை முத்தமிட்டுக்கொள்ளவேண்டும். அவ்வாறும் தொட முடியாமல் போனால் அது இருக்கும் திசையை நோக்கி கைக்கு முத்தமிடாமல் கையசைக்க வேண்டும். குறிப்பாக மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹஜருல் அஸ்வதைத் தொடும் போது அல்லது அதை நோக்கி சைகினை செய்யும் போது, "அல்லாஹு அக்பர்" எனக் கூற வேண்டும்.

பின்னர் கஃபாவை தனது இடது பக்க திசையில் வைத்து தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். கஃபாவின் நான்காவது மூலையான, ருக்னுல் யமானியை அடைந்ததும், முடியுமானால் முத்தமிடால் அதைத் தொட வேண்டும். சனநெரிசல் காரணமாக முடியாமல் போனால் அதற்கு சைகையோ எதுவுமோ செய்யாமல் நகர்ந்து செல்ல வேண்டும்.

ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத் இருக்கும் மூலைக்கும் இடையில் செல்லும் போது, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ "ரப்பனா ஆதினா ஃபித் துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன் நார்" எனக் கூற வேண்டும். பொருள்: எங்கள் இறைவா! இவ்வுலகத்திலும், மறுமையிலும் அழகானதை எங்களுக்கு நல்குவாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!

ஒவ்வொரு தடவை ஹஜருல் அஸ்வதை கடக்கும் போது வலது கையால் சைகை செய்து, "அல்லாஹு அக்பர்" எனக் கூற வேண்டும்.

தவாஃபின் மற்றைய நேரங்களில் தான் விரும்பிய துஆக்கள், திக்ருகளில் ஈடுபடலாம். அல்குர்ஆன் ஓதிக்கொள்ளலாம்.

ஆண்கள் தவாஃபின் முதல் மூன்று சுற்றுகளிலும் ரமல் செய்ய வேண்டும். ரமல் என்பது கால் எட்டுக்களை அருகருகில் வைத்து விரைவாக நடப்பதாகும். நான்காம் சுற்றிலிருந்து மற்றைய சுற்றுக்களில் சாதாரணமாகவே நடக்க வேண்டும்.

தவாஃப் முடிந்ததும், மகாமு இப்றாஹீம் அருகே சென்று, وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبْرَٰهِيمَ مُصَلًّى "வத்தஹிதூ மின் மகாமி இப்றாஹீம முஸல்லா" எனும் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்கொள்ள வேண்டும். பொருள்: இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). (அல்குர்ஆன் 02: 125) முடிந்தால் மகாமு இப்றாஹீமிற்கு பின் நின்று இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். முடியாவிட்டால் பள்ளியின் எப்பகுதியில் இருந்தும் இரண்டு ரக்அத்களை தொழுதுகொள்ளலாம். அதில் முதல் ரக்அத்தில் சூறதுல் ஃபாதிஹாவிற்குப் பின், قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ "குல்யா அய்யுஹல் காஃபிரூன்" என ஆரம்பிக்கும் சூறதுல் காஃபிரூனையும், (அல்குர்ஆன் 109 : 1 - 6) இரண்டாம் ரக்அத்தில் சூறதுல் ஃபாதிஹாவிற்குப் பின், قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ "குல்ஹுவல்லாஹு அஹத்" என ஆரம்பிக்கும் சூறதுல் இஹ்லாஸையும் ஓத வேண்டும். (அல்குர்ஆன் 112 : 1 - 4)

04. ஸஃயு செய்யும் முறை

தவாஃபை முடித்து, இரண்டு ரக்அத் தொழுது முடிந்ததும் ஸஃயு செய்யும் இடமான ஸபா நோக்கி செல்வார் அதனை நெருங்கியதும் : إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ "இன்னஸ் ஸஃபா மல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்" எனக் கூற வேண்டும். பொருள்: நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளவையாகும். (அல்குர்ஆன் 02: 158) பின்பு, أَبْدَأُ ‌بِمَا ‌بَدَأَ اللهُ بِهِ "அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி" எனும் துஆவை ஓதிக்கொள்ள வேண்டும். பொருள்: 'அல்லாஹ் ஆரம்பித்ததைக் கொண்டு நான் ஆரம்பிக்கிறேன்' [12]. [12] ஆதாரம் : முஸ்லிம், 1218.

பின்பு முடியுமானால் கஃபா தெரியும் அளவுக்கு ஸஃபாவில் ஏறி, அதன் திசையை நோக்கி தக்பீர் கூறி, பின்வரும் துஆவையும் கூற வேண்டும். لَا إِلَـٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَـٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ "லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஃதஹு, வநஸர அப்தஹு, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு. " பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக்குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான். இதை ஓதிவிட்டு, இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். மீண்டும் மேற்கூறப்பட்ட துஆவை ஓதி பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். (13) (13) ஆதாரம் : முஸ்லிம் 1218.

பின்பு அங்கிருந்து மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் போது இடையில் காணப்படும் பச்சை நிற மின்விளக்குப் பகுதியை அடைந்ததும், அடுத்த பச்சை நிற மின்விளக்குப் பகுதியை அடையும் வரை ஆண்கள் சற்று விரைந்து செல்லவேண்டும். அதைக் கடந்ததும் வழமை போல் நடக்க வேண்டும். பெண்கள் இவ்வாறு விரைந்து செல்லக் கூடாது.

மர்வாவை வந்தடைந்ததும், ஸஃபாவில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும் (பந்தி எண் 2).

பின்பு மர்வாவில் இருந்து இறங்கி ஸஃபா நோக்கி நடக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் போது இடையில் காணப்படும் பச்சை நிற மின்விளக்குப் பகுதியை அடைந்ததும், அடுத்த பச்சை நிற மின்விளக்குப் பகுதியை அடையும் வரை ஆண்கள் சற்று விரைந்து செல்லவேண்டும். அதைக் கடந்ததும் வழமை போல் நடக்க வேண்டும். பெண்கள் இவ்வாறு விரைந்து செல்லக் கூடாது.

இவ்வாறு ஸஃபாவிலிருந்து மர்வாவிற்கு செல்வது ஒரு சுற்றாகவும், மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு வருவது இரண்டாவது சுற்றாகவும் கருதப்படும். இவ்வாறு ஏழு சுற்றுகள் செய்ய வேண்டும்.

ஸஃயு செய்யும் போது தான் விரும்பிய துஆக்களையும், திக்ருகளையும் ஓதிக்கொள்ள முடியும்.

05. முடியை குறைக்கும் அல்லது மழிக்கும் முறை:

உம்ரா செய்பவர் தனது தவாஃபையும், ஸஃயையும் முடித்த பிறகு ஆண்களாக இருந்தால் தலை முடியை குறைப்பதோ அல்லது மழிப்பதோ கடமையாகும். தலை முடியை மழிக்கும் போதும், குறைக்கும் போதும் தலை பூராகவும் செய்வதே சுன்னத்தாகும்.

தலை முடியை குறைப்பதை விட மழிப்பதே மிகவும் சிறந்தது. உம்ரா செய்துவிட்டு ஹஜ் செய்ய இருப்பவராக இருந்தால் தலை முடி முளைப்பதில் தாமதம் ஏற்படுவதைக் கருதி குறைத்துக்கொள்ளலாம்.

பெண்களைப் பொருத்தவரை, தங்களது முடியின் இறுதிப் பகுதியை ஒன்று சேர்த்து, விரல் நுனியளவோ, அல்லது அதைவிடக் குறைவாகவோ முடிகளை வெட்டிக் கொள்ள வேண்டும்.

இஹ்ராமின் போது தடைசெய்யப்பட்டவைகள்

இஹ்ராம் நிய்யத் வைத்த பின் பின்வருபவைகள் தடைசெய்யப்படுகின்றன:

1. தலைமுடியையும் உடம்பின் ஏனைய பகுதிகளில் உள்ள முடிகளையும் மழித்தல், குறைத்தல், பிடுங்குதல்.

2. கைகள், கால்களில் உள்ள நகங்களை முழுமையாகவோ, சிறு துண்டாகவோ வெட்டுதல், அல்லது பிடுங்கியெடுத்தல்.

3. தொப்பி, குத்ரா, தலைப்பாகை, போர்வை, டிஷூ, காட்போட் ஆகிய பொருட்களால் அல்லது தலையை மறைக்க உதவும் பிற பொருட்களால் தலையை ஒட்டியவாறு மறைத்தல். இது ஆண்களுக்கு மாத்திரமான குறிப்பான சட்டமாகும். பெண்கள் தலையை ஒட்டியவாறு மறைக்கலாம்.

4- உடலின் அளவுக்கு ஏற்ப தைக்கப்பட்ட ஆடைகள், பைஜாமா, சட்டை, காலுறைகள், கையுறைகள் போன்ற தைக்கப்பட்ட ஆடைகளை அணிதல். இது ஆண்களுக்கு மாத்திரமான குறிப்பான சட்டமாகும். பெண்களைப் பொருத்த வரை அவர்களுக்கு பின்வரும் ஆடைகளை அணிவது தடுக்கப்பட்டுள்ளது:

அ. நிகாப், புர்கா அல்லது அவற்றுக்கு ஒப்பாக முகத்தை மறைக்கும் துணி ஆகியவற்றைப் பயன்படுத்துவது இஹ்ராம் நிய்யத்தின் போது தடுக்கப்பட்டுள்ளது. அந்நிய ஆண்கள் பார்த்துவிடுவார்கள் எனும் அச்சம் இருந்தால் வழமையாக முகத்தை மறைக்கும் முகக் கவசங்களால் முகத்தை மறைப்பது கட்டாயமாகும். இதற்காக முகமூடி முகத்தைத் தொடாமல் இருக்க தலைக்கு கட்டு அல்லது அதற்கு இணையானதை வைத்து முகத்தை மறைப்பது அனுமதிக்கப்படவில்லை.

ஆ. கைக்கு கையுறை அணிதல். அந்நிய ஆண்கள் பார்த்துவிடுவார்கள் எனும் அச்சம் ஏற்பட்டால் கையை மறைக்க தனது அபாயாவின் உற்பகுதிக்குள் கையை நுழைத்துக்கொள்வது அவசியமாகும்.

5. உடலிலோ, இஹ்ராம் ஆடையிலோ நறுமணம் பூசுதல்.

6. தரை வாழ் பிராணிகளை வேட்டையாடுதல், அல்லது கொல்லுதல்.

7. தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசுதல்.

8. திருமண ஒப்பந்தம் செய்தல்.

9- பிறப்புறுப்புக்கள் சேராமல் தனது துணையை முத்தமிடுதல், காமத்துடன் தொடுதல்.

10. துணையின் பிறப்புறுப்பில் உடலுறவு கொள்ளல்.

உம்ராவில் செய்ய வேண்டியவற்றின் சுருக்கம்:

1- குளித்தல்.

2- நறுமணம் பூசுதல்.

3. இஹ்ராம் ஆடைகளை அணிதல்.

4- உம்ரா வணக்கத்தில் நுழைவதற்காக இஹ்ராம் நிய்யத் வைத்தல்.

5. தல்பிய்யா கூறுதல்.

6- கஃபாவை தவாஃப் செய்தல்.

7. மகாமு இப்றாஹீமிற்குப் பின்னால் இரண்டு ரக்அத்துக்களை தொழுதல்.

8- ஸஃபா மர்வாவுக்கு இடையில் ஸஃயு செய்தல்.

9. தலைமுடியை மழித்தல், அல்லது குறைத்தல். அல்லாஹ்வே மிக அறிந்தவன். அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் முஹம்மத் ﷺ அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள் என அனைவருக்கும் உண்டாவதாக.