التحقيق والإيضاح لكثير من مسائل الحج والعمرة والزيارة على ضوء الكتاب والسنة
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்
அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹஜ், உம்ரா மற்றும் சியாரா தொடர்பான பல விடயங்களின் ஆய்வும் விளக்கமும்
மதிப்பிற்குரிய பேரறிஞர் அஷ்ஷெய்க்
அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ்
முன்னுரை
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்;)
புகழ் அனைத்தும் அனைத்துலக இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது. நல்ல முடிவு பயபக்தியுடையோருக்குரியதாகும். சாந்தியும், சமாதானமும் அவனது அடியாரும் தூதருமான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.
அல்லாஹ்வைப்போற்றி புகழ்ந்ததன் பின்னால்
இது ஹஜ் பற்றிய சுருக்கமான ஒரு வழிகாட்டி நூலாகும், ஹஜ்ஜுடைய சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை இது விளக்குகிறது, ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு தேவையானவற்றை கூறுகிறது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய பல முக்கியமான விடயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. இதில் அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன், இது முஸ்லிம்களுக்கு ஒரு அறிவுரையாகவும், அல்லாஹ்வின் பின்வரும் கூற்றுக்கு ஏற்பவும் தொகுத்துள்ளேன். இன்னும், (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.[55] (அத்ஸாரியாத் : 55). மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : “வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் அ(ந்த வேதத்)தை மக்களுக்கு நிச்சயம் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்; இன்னும், அதை நீங்கள் மறைக்க மாட்டீர்கள்’’ என்று உறுதிமொழியை அல்லாஹ் வாங்கிய அந்த நேரத்தை நினைவுகூறுங்கள் (ஆல இம்ரான் : 187) (அவ்வசனத்தை முழுமையாகப் படிக்கவும்) மேலும் அல்லாஹ் கூறுகிறான் நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். (அல்மாஇதா : 2).
ஆதாரபூர்வமான ஸஹீஹான ஹதீஸில் பின்வருமாறு பதிவாகியுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்'' என்று மூன்று முறை கூறியபோது, “யாருக்கு நலன் நாட வேண்டும்? அல்லாஹ்வின் தூதரே!” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்: "அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்திற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும்'' எனக் கூறினார்கள்.[1] (1) ஆதாரம்: முஸ்லிம் 55.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்ததை தபரானி அறிவிக்கிறார்கள் : யார் முஸ்லிம்களின் நலனில் அக்கறை காட்டவில்லையோ, அவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர். யார் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கும், அவனது நூலுக்கும், அவனது தலைவருக்கும், பொதுவான முஸ்லிம்களுக்கும் உண்மையாக நலவுநாடியவராக இரவு பகலாக இருக்கவில்லையோ அவரும் எம்மைச் சார்ந்தவர் அல்லர்." [2] (2) ஆதாரம் : அல்முஃஜமுல் அவ்ஸத், தபரானி (7469).
இது எனக்கும் முஸ்லிம்களுக்கும் பயனளிக்கவும், இப்பணியை அல்லாஹ்வின் திருமுகம் நாடி செய்யப்படுவதாக்கவும், சுவன பூங்காக்களில் வெற்றிக்கான காரணமாக அமையவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். அவன் அனைத்தையும் செவியேற்பவன், எங்களுக்குப் போதுமானவன், சிறந்த பாதுகாவலன்.
பிரிவு.
ஹஜ் மற்றும் உம்ரா என்பன கடமை என்பதையும், அவற்றை நிறைவேற்றுவதைத் துரிதப்படுத்தவேண்டும் என்பதையும் உணர்த்தும் ஆதாரங்கள்
இதைப் புரிந்துகொண்ட பின்னர், அறிந்துகொள்ளுங்கள், - அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் உண்மையை அறிந்து அதனைப் பின்பற்ற உதவுவானாக! - அல்லாஹ் தனது அடியார்களுக்கு புனித ஆலயமான கஃபாவுக்கு ஹஜ் செய்வதைக் கடமையாக்கி, அதை இஸ்லாத்தின் ஒரு தூணாக ஆக்கியுள்ளான். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான்: அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான். (ஆல இம்ரான் 97)
புகாரி, முஸ்லிம் ஆகியோரின் அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல், தொழுகையை நிறைவேற்றுதல், ஸகாத் வழங்குதல், ரமழானில் நோன்பு நோற்றல், அல்லாஹ்வின் புனித இல்லத்திற்குச் ஹஜ் செய்தல்" [3]. (3) ஆதாரம் : புஹாரி (8), முஸ்லிம் (16).
உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் என்று சயீத் அவர்கள் தமது சுனனில் இவ்வாறு அறிவிக்கிறார்கள் : நான் இந்த நகரங்களுக்கு சிலரை அனுப்பி, யாருக்கு ஹஜ் செய்யும் வாய்ப்பு (4) இருந்தும் ஹஜ் செய்யவில்லையோ அவர்களிடம் வரி விதிக்குமாறு கட்டளையிட எண்ணினேன். அவர்கள் முஸ்லிம்களல்ல, அவர்கள் முஸ்லிம்களல்ல"(5) (4) அதாவது: செல்வத்தில் வசதி (5) ஜாமிஉல்அஹாதீஸ்ஸில் ஹதீஸ் எண் (31221) ல், ஸுனன் ஸயீது இப்னு மன்சூரில் இந்த ஹதீஸ் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் எனக்கு கிடைத்த பதிப்பில் இதனை காணவில்லை.
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் என்று இவ்வாறு அறிவிக்கப்படுகிறது : ஹஜ் செய்ய சக்தி பெற்றவர் அதை செய்யாமல் விட்டுவிட்டால், அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ மரணிப்பதில் எந்தவொன்றும் இல்லை." [6] (6) ஆதாரம் : திர்மிதி 812.
ஹஜ் செய்ய சக்தியிருந்தும் அதனை நிறைவேற்றாதவர் உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும்; நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : «ஹஜ்ஜை - அதாவது: கடமையான ஹஜ்ஜை - விரைவாக செய்யுங்கள். ஏனெனில் உங்களில் யாரும், தனக்கு என்ன நிகழும் என்பதை அறியமாட்டார் [7] » . (7) ஆதாரம் : அபூதாவூத் (1732).
மேலும், ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு சக்தியுடையவர் அதனை உடனடியாக நிறைவேற்றுவது கடமையாகும். பின்வரும் வசனம் வெளிப்படையாக அதையே அறிவிக்கின்றது : அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான். (ஆல இம்ரான் : 97). நபி (ஸல்) அவர்கள் தனது குத்பாவில் கூறினார்கள் : மனிதர்களே, அல்லாஹ் உங்களுக்கு ஹஜ்ஜை கடமையாக்கியுள்ளான்: எனவே ஹஜ் செய்யுங்கள்" [8]. (8) ஆதாரம் : முஸ்லிம் 1337.
உம்ராவும் கடமை என்பதை அறிவிக்கும் ஹதீஸ்களும் பல உள்ளன. உதாரணமாக,
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் பற்றிக் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதில் அளித்தார்கள் : இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ஹஜ் மற்றும் உம்ரா செய்வது, ஜனாபத்திலிருந்து குளித்தல், முழுமையாக وضوء (வுழூ) செய்வது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது என்பனவாகும். [9] உமர் பினுல் கத்தாப் (ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் இந்த ஹதீஸை இப்னு குஸைமா மற்றும் தாரகுத்னீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். தாரகுத்னீ அவர்கள்: இது உறுதியான ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் என்று கூறியுள்ளார். (9) ஆதாரம் : இப்னு குஸைமா (1).
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தாம் பின்வருமாறு கூறியதாக அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ்வின் தூதரே! பெண்களுக்கு ஜிஹாத் ஏதும் உண்டா?” அதற்கு நபியவர்கள், “அவர்களுக்கு போரிடுதல் இல்லாத ஜிஹாத் உண்டு: அதாவது ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும்” என்று கூறினார்கள். (10) இந்த ஹதீஸ் அஹ்மத், இப்னு மாஜா ஆகிய கிரந்தங்களில் ஆதாரப் பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (10) ஆதாரம் : புஹாரி 1520.
ஹஜ் மற்றும் உம்ரா வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கடமையாகும். ஸஹீஹான ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஹஜ் ஒரு முறையே கடமை, மேலதிகமாக செய்வது ஸுன்னத்தாகும்" [11] . (11) (அந்நஸாயீ : 2620).
ஹஜ் மற்றும் உம்ராவை அதிகம் செய்வது ஸுன்னத்தாகும்; ஏனெனில் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு உம்ரா மற்றொரு உம்ராவிற்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவனத்தைத் தவிர கூலி கிடையாது.” (12) (12) ஆதாரம் : புஹாரி 1773, முஸ்லிம் 1349.
பிரிவு.
பாவங்களிலிருந்து தவ்பா செய்வதும் அநியாயங்களிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்வதும் அவசியமாகும்.
ஒரு முஸ்லிம் ஹஜ் அல்லது உம்ரா பயணத்திற்கு செல்ல முடிவெடுத்தால்: அவர் தனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்குவது விரும்பத்தக்கதாகும், அதாவது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுமாறும், தடுத்தவிடயங்களை தவிர்க்குமாறும் உபதேசிப்பதாகும்.
தனக்கு வரவேண்டிய, தான் கொடுக்கவேண்டிய கடன்களை எழுதுவதும், அதற்கு சாட்சியம் வைப்பதும் அவசியமாகும். மேலும் அவன் அனைத்துப் பாவங்களிலிருந்தும் தூய்மையாக பாவமீட்சிபெறவேண்டும்; அல்லாஹ் கூறுகிறான்: இன்னும், நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி திரும்பி விடுங்கள். (அந்நூர் : 31).
தௌபாவின் உண்மையான நிலை: பாவங்களை முற்றிலும் கைவிடுதல் மற்றும் அவற்றிலிருந்து விலகுதல், கடந்த கால பாவங்களுக்காக வருந்துதல், மீண்டும் அவற்றில் ஈடுபடமாட்டேன் என உறுதி கொள்ளுதல். அவன் மனிதர்களுக்கு உயிர், செல்வம் அல்லது மானம் போன்றவற்றில் அநியாயங்கள் இழைத்திருந்தால், அவற்றை அவர்களுக்கு திருப்பி அளிக்கவோ அல்லது அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவோ செய்ய வேண்டும்; ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது, தனது சகோதரனுக்கு செல்வம் அல்லது மானத்தில் ஏதேனும் அநியாயம் செய்திருந்தால், தீனாரோ, திர்ஹமோ இல்லாத (மறுமையுடைய) நிலை வரும் முன்னர், இன்றே அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளட்டும். (அந்நாளில்,) அவரிடம் நல்ல செயல்கள் இருந்தால், அவற்றிலிருந்து அவர் செய்த அநியாயத்தின் அளவிற்கு எடுத்துக் கொள்ளப்படும். அவரிடம் நல்ல செயல்கள் இல்லாவிட்டால், அவனது சகோதரனின் பாவங்கள் எடுக்கப்பட்டு, அவனின் மீது சுமத்தப்படும்." (13) (13) ஆதாரம்: புஹாரி 2449.
ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்காக ஹலாலான சொத்தில் இருந்து, நற்சம்பாத்தியத்தைத் தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூயவன், அவன் தூய்மையானதையே ஏற்றுக் கொள்வான்" (14) (14) ஆதாரம் : முஸ்லிம் 1015.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை தபரானி பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: ஒருவர் நல்ல செலவினை எடுத்துக்கொண்டு ஹஜ் செய்ய புறப்பட்டு, தனது கால்களை வண்டியில் வைத்தபோது 'லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்' என்று கூறினால், வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் 'லப்பைக் வஸஅதைக், உனது செலவு ஹலால், உனது வண்டி ஹலால், உனது ஹஜ் குற்றமற்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.' என்று கூறுவார். ஆனால் ஒருவர் தீய செலவினை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, தனது கால்களை வண்டியில் வைத்தபோது 'லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்' என்று கூறினால், வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் 'லா லப்பைக்; வலா ஸஅதைக், உனது செலவு ஹராம், உனது வண்டி ஹராம், உனது ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படாததாகும்' என்று கூறுவார். (15) (15) ஆதாரம்: தபரானி-அல் கபீர் 2989.
ஹஜ் செய்பவர் மக்களிடமுள்ளவற்றை விட்டும் தன்னிறைவோடு இருக்கவும், அவர்களிடம் யாசகம் கேட்பதை தவிர்க்கவும் வேண்டும்; இதனை பின்வரும் நபிமொழி சுட்டிக்காட்டுகிறது : ''யார் தன்மானத்துடன் வாழ முயலுகிறானோ, அல்லாஹ் அவனைத் தன்மானத்துடன் வாழவைத்திடுவான். மேலும் யார் தன்னிறைவை நாடுகிறானோ, அல்லாஹ் அவனைத் தன்னிறைவுடன் வாழவைத்திடுவான்''. (16). (16) ஆதாரம் : புஹாரி, ஹதீஸ் எண் : 1427, முஸ்லிம் ஹதீஸ் எண் 1035.
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : ஒருவர் மக்களிடம் (தர்மம்) கேட்டு கொண்டே இருப்பார். மறுமை நாளில் அவர் முகத்தில் (மீதி) ஒரு துளி மாமிசம் கூட இருக்காது". (17) (17) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 1474, முஸ்லிம் ஹதீஸ் எண் 4040.
ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர் அல்லாஹ்வின் திருப்தியையும், மறுமை வாழ்வையும் தனது நோக்கமாக கொண்டிருப்பதோடு, அந்த புனித இடங்களில் அல்லாஹ்வை திருப்திபடுத்தும் சொற்களையும் செயல்களையும் கடைப்பிடித்து அவனை நெருங்குதல் வேண்டும். ஹஜ் செய்வதன் மூலம் உலகியலான லாபங்களையோ, புகழையோ, பெருமையையோ நோக்கமாகக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஏனெனில் இவை மிகவும் கேவலமான சில நோக்கங்களாகும். மேலும் இவை அமல்கள் அழிந்து போகவும், ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கவும் காரணமாக இருக்கும். அல்லாஹ் கூறுகின்றான்: எவர்கள் (தங்களது நற்செயல்களுக்கு கூலியாக மறுமையை நாடாமல்) உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் நற்செயல்களுக்கு முழுமையாக கூலி தந்து விடுவோம். இன்னும், அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள். [15] அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர மறுமையில் (வேறொன்றும்) இல்லை. இன்னும், அவர்கள் இ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்து விடும். இன்னும், அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்தவை (அனைத்தும்) வீணானவையே. [16] (ஹூத் : 15-16).
மேலும் அல்லாஹ் கூறுகிறான் : எவர், (அவசரமான) இம்மை (வாழ்க்கை)யை (மட்டும்) நாடுகின்றவராக இருப்பாரோ (அப்படிப்பட்டவர்களில்) நாம் நாடுபவருக்கு (உலக செல்வத்தில்) நாம் நாடுவதை (மட்டும்) அதில் முற்படுத்திக் கொடுப்போம். பிறகு, அவருக்கு நரகத்தை (தங்குமிடமாக) ஆக்குவோம். அவர் இகழப்பட்டவராக, (நம் அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக (கேவலமாக தள்ளப்பட்டு) அதில் நுழை(ந்து எரிந்து பொசுங்கு)வார். மற்றும், யார் மறுமை வாழ்வை நாடி, அதற்காக (தேவையான) முயற்சியை மேற்கொள்கிறாரோ, மேலும் அவன் ஒரு ஈமான் கொண்டவனாக இருக்கிறானோ, அவர்களின் முயற்சி பாராட்டப்படும். (அல்இஸ்ராஃ : 18,19).
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் பதிவாகியுள்ளதாவது: 'வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.' (18) (18) ஆதாரம்: முஸ்லிம் 2985.
அவர் தனது பயணத்தில் இறை உணர்வும், இறையச்சமும், மார்க்க அறிவும் மிக்க நல்லோர்களுடன் தோழமை கொள்ள வேண்டும். அறிவில்லாத மூடர்கள், மற்றும் தீயவர்களுடன் தோழமை கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
அவர் தன் ஹஜ் மற்றும் உம்ராவில் தனக்கு விதிக்கப்பட்டுள்ளவற்றை அறிந்து கொள்ளவும், அதில் விளக்கம் பெறவும், தனக்கு குழப்பமாக உள்ளவற்றை கேட்டு தெளிவுபெறவும் வேண்டும்; அப்போது தான் அவர் தெளிவுடன் இருக்க முடியும். அவர் தன் வாகனமாகிய, கார், விமானம் அல்லது பிற வாகனங்களில் ஏறும்போது அல்லாஹ்வின் நாமத்தைச் சொல்லி, அவனைப் புகழ்ந்து, பின்னர் மூன்று முறை அல்லாஹு அக்பர் என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறுவதும் விரும்பத்தக்கதாகும். ﴿...سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ(பொருள்: இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.) وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ(பொருள்: “இன்னும், நிச்சயமாக நாங்கள் (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்”) (அஸ்ஸுஃக்ருப் : 13-14).
«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا البِرَّ وَالتَّقْوَى، وَمِنَ العَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالخَلِيفَةُ فِي الأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ المَنْظَرِ، وَسُوءِ المُنْقَلَبِ فِي المَالِ وَالأَهْلِ»(பொருள் யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லவற்றையும் உன்னிடம் வேண்டுகிறேன். யா அல்லாஹ்!! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு இலகுபடுத்திடுவாயாக! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடுவாயாக! (இதன் தூரத்தை இலகுவாக கடக்கக்கூடியதாக ஆக்கிடுவாயாக!) யா அல்லாஹ்!! நீயே பயணத்தில் தோழனாகவும் எமது குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறாய், யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான காட்சிகளிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (19) இதனை இமாம் முஸ்லிம் அவர்கள் தமது ஆதாரப்பூர்வமான கிரந்தத்தில் இப்னு உமர் (ரலி) அவர்களின் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பதிவு செய்துள்ளார்கள். [19] ஆதாரம் : முஸ்லிம் 1342.
தமது பயணங்களில் திக்ரிலும், இஸ்திக்பாரிலும், அல்லாஹ்விடம் துஆ செய்வதிலும், இறைவனிடம் தாழ்மையுடன் வேண்டுவதிலும், குர்ஆனை ஓதுவதிலும், அதன் அர்த்தங்களை சிந்திப்பதிலும் அதிகம் ஈடுபடுவார். தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதில் பேணிப்பாக இருப்பதுடன், அதிகமாகப் பேசுவதையும், தனக்குத் தேவையற்ற விவகாரங்களில் ஈடுபடுவதையும், மிகுதியான நகைச்சுவையையும் தவிர்த்துக் கொள்வார். மேலும், பொய் கூறுதல், புறம் பேசுதல், கோள் மூட்டல், தனது தோழர்களையும், மற்ற முஸ்லிம் சகோதரர்களையும் கேலி செய்தல் போன்றவற்றை விட்டும் தனது நாவைப் பாதுகாத்துக்கொள்வார்.
அவர் தனது நண்பர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வதும், அவர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பதும் அவசியமாக இருப்பதோடு, சக்திக்கு உட்பட்ட விதத்தில், மதிநுட்பத்துடனும், நல்லுபதேசம் கொண்டும் அவர்களுக்கு நன்மையை ஏவித், தீமையைத் தடுக்கவும் வேண்டும்.
பிரிவு.
மீகாத் சென்றடையும் போது ஹாஜி செய்ய வேண்டியவை
மீகாத்துக்குச் சென்றவுடன் குளித்து நறுமணம் பூசிக்கொள்வது விரும்பத்தக்கதாகும்; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஹ்ராம் கட்டும் போது தையல் செய்யப்பட்ட ஆடைகளை கழற்றி குளித்தார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸஹீஹுல் புஹாரி மற்றும் முஸ்லிமில் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு பதிவாகியுள்ளது: “நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இஹ்ராம் அணியும்முன் வாசனைத் திரவியத்தை பூசினேன், மேலும் அவர்கள் இஹ்ராமில் இருந்து விடுபட்டதும், கஅபாவை தவாப் செய்ய முன் அதை பூசினேன். [20]” ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் உம்ராவுக்காக நிய்யத் வைத்த நிலையில் மாதவிடாய் ஏற்பட்டபோது, நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் குளித்து ஹஜ்ஜுக்காக (நிய்யத்) நாடிக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களுக்கு துல் ஹுலைபாவில் குழந்தை பிறந்தபோது குளித்து சுத்தமாகி ஒரு துணியினால் கட்டிக்கொள்ளுமாறும், ஹஜ் செய்வதற்கான நிய்யத்தை வைத்துக்கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.(21) எனவே, ஒரு பெண் மீகாத்தை அடையும் போது மாதவிலக்கோ அல்லது பிரசவ இரத்தமோ ஏற்பட்டிருந்தால், குளித்து, ஏனையோரைப் போன்று இஹ்ராம் நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும். ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்ய வேண்டும், தவாப் மாத்திரமே செய்ய முடியாது. நபி (ஸல்) அவர்கள் ஆஇஷா மற்றும் அஸ்மா (ரழி) அவர்களுக்கு அவ்வாறுதான் கட்டளையிட்டார்கள். (20) ஆதாரம் : புஹாரி (1539), முஸ்லிம் (1189). (21) ஆதாரம் : முஸ்லிம் 1218.
இஹ்ராம் நிய்யத் வைக்கவிரும்புபவர், தமது மீசை, நகங்கள், மருமஸ்தான முடி, அக்குள் முடி ஆகியவற்றைப் பார்த்து, அவற்றில் தேவையான அளவு நீக்கிக்கொள்ளவேண்டும். இஹ்ராம் நிய்யத் வைத்த பின்னர், இஹ்ராமுடன் உள்ள நிலையில் அவற்றை நீக்கவேண்டிய நிலை ஏற்படாமல் இருக்கவே அவ்வாறு ஏவப்பட்டுள்ளது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இவை அனைத்தையும் எப்போதும் கண்காணித்துக்கொள்ளவேண்டும் என ஏவியுள்ளார்கள். புகாரி, முஸ்லிமின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களைத் தொட்டும், அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்". (22) (22) ஆதாரம் : புஹாரி (5891), முஸ்லிம் (257).
ஸஹீஹ் முஸ்லிம் நூலில், அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மீசையைக் கத்தரித்தல், நகம் வெட்டுதல், அக்குள் முடியைப் பிடுங்குதல், மருமஸ்தான முடிகளை சிரைத்தல் ஆகியவற்றில் நாற்பது நாற்களை விடவும் அதிகமாக நாம் விட்டு வைக்கக் கூடாதென நமக்கு காலம் குறித்துத் தரப்பட்டுள்ளது. (23) (23) ஆதாரம் : முஸ்லிம் (258)
நஸாஈ அவர்கள் பின்வரும் வாசகத்துடன் பதிவு செய்துள்ளார்கள்: «நபி (ஸல்) அவர்கள் எமக்கு காலத்தை நிர்ணயித்தார்கள்»[24], நஸாஈயின் வாசகத்தையே அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி ஆகியோரும் பதிவு செய்துள்ளனர். இஹ்ராமுக்கு முன்னர் ஆண்களோ பெண்களோ தலையிலிருந்து முடியை நீக்குமாறு மார்க்கம் கூறவில்லை. (24) ஆதாரம் : நஸாஈ: 14.
தாடியைப் பொறுத்தவரை, அதை வழிப்பதோ, சற்றேனும் குறைப்பதோ எல்லா நேரங்களிலும் ஹராமாகும். மாறாக அதனை நிரப்பமாக வளர்ப்பது கடமையாகும். புகாரி, முஸ்லிமின் அறிவிப்பில், இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஷ்ரிகீன்களுக்கு மாறு செய்யுங்கள், தாடியை வளர விடுங்கள், மீசையைக் கத்தரியுங்கள்" (25). முஸ்லிமின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: மீசையை நன்கு வெட்டுங்கள், தாடியை வளர விடுங்கள், மஜூசிகளுக்கு மாறாக நடந்து கொள்ளுங்கள் (26). (25) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 2892, முஸ்லிம் ஹதீஸ் எண் 259. (26) ஆதாரம் : முஸ்லிம் 260
இந்த யுகத்தில் இந்தப் பிரச்சனை பாரதூரமடைந்துள்ளது. பலர் இந்த ஸுன்னாவிற்கு மாறுசெய்து, தாடியை எதிர்த்து, காபிர்களுக்கும், பெண்களுக்கும் ஒப்பாகுவதில் திருப்தி காண்கின்றனர். குறிப்பாக கல்வி மற்றும் கற்பித்தலுடன் தொடர்புடையவர்களிடமிருந்து இது நிகழ்கின்றது. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரித்தவர்கள், அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். எங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் ஸுன்னாவிற்கு ஏற்ப வாழவும், அதனைப் பற்றிக்கொள்வதற்கும், அதற்காக அழைப்பதற்கும், பலர் அதனை விரும்பாவிட்டாலும், அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்,. அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன், அவனே சிறந்த பாதுகாவலன், உயர்ந்தவனான அல்லாஹ்வைத் தவிர எங்களுக்குத் துணை இல்லை.
பின்பு ஆண்கள் இஹ்ராம் வேட்டி மற்றும் போர்வையை அணிய வேண்டும். அவை வெள்ளையாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்பது ஸுன்னத்தாகும். மேலும், இரண்டு காலணிகளுடன் இஹ்ராம் நிய்யத் வைப்பது ஸுன்னத்தாகும். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் : «உங்களில் ஒருவர் இஸாரும் (கீழ் துணி) ரிதாயும் (மேல் துணி) காலணிகளும் அணிந்து இஹ்ராம் நிய்யத் வைக்கட்டும். காலணிகள் கிடைக்காவிட்டால், காலுறைகளை அணிந்து அவற்றை கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்துக்கொள்ள வேண்டும் [27]» இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இதனை அறிவித்துள்ளார்கள். (27) ஆதாரம்: முஸ்லிம் 1177.
பெண்கள் கருப்பு அல்லது பச்சை அல்லது வேறு எந்த நிறத்திலும் இஹ்ராம் அணியலாம். ஆனால் ஆண்களின் ஆடைகளை ஒத்தவாறு அணியாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். எனினும், இஹ்ராம் நிலையில் 'நிகாப்' மற்றும் கையுறைகளை அணியக்கூடாது, ஆனால் முகத்தையும் கைகளையும் 'நிகாப்' மற்றும் கையுறைகள் அல்லாதவற்றால் மூடிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இஹ்ராம் அணிந்த பெண்கள் 'நிகாப்' மற்றும் கையுறைகளை அணியக் கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். பொதுவாக சிலர் பெண்களின் இஹ்ராமை பச்சை அல்லது கருப்பு நிறத்திலேயே இருக்க வேண்டும் என்று கூறுவது எந்த ஆதாரமும் இல்லாதது.
குளித்து, சுத்தம் செய்து, இஹ்ராம் ஆடைகளை அணிந்த பின், நபி (ஸல்) அவர்கள் கூறியதுபோல, தாம் செய்ய விரும்பும் ஹஜ் அல்லது உம்ரா வணக்கத்தில் நுழைவதாக மனதில் நிய்யத் வைக்கவேண்டும்: “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்”. [28]. (28) ஆதாரம் : புஹாரி (1), முஸ்லிம் (1907).
தனது நிய்யத்தை வாயால் கூறுவது ஸுன்னத்தாகும். உம்ராவுடைய நிய்யத் எனில் "லப்பை உம்ரதன்" அல்லது "அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்" எனக் கூற வேண்டும். ஹஜ்ஜுடைய நிய்யத் எனில் "லப்பைக ஹஜ்ஜன்" அல்லது "அல்லாஹும்ம லப்பைக ஹஜ்ஜன்" எனக் கூற வேண்டும்; நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்தார்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய நாடினால், "அல்லாஹும்ம லப்பைக உம்ரதன் வஹஜ்ஜன்" எனக் கூற வேண்டும். இதை வாகனத்தின் மீது அமர்ந்த பின் கூறுவது சிறந்தது; ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது அமர்ந்து, மீகாத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த பின் இதனைச் செய்தார்கள். இதுவே அறிஞர்களின் கருத்துகளில் மிகச் சரியானதாகும்.
தனது நிய்யத்தை நாவினால் வெளிப்படுத்த, இஹ்ராமில் மாத்திரமே அவருக்கு அனுமதியுள்ளது. ஏனெனில் நபியவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்.
இதுவல்லாமல், தொழுகை, தவாஃப் மற்றும் இதர அமல்களில் நிய்யத்தை வாயினால் மொழியக் கூடாது. 'நான் இவ்வாறு தொழுகை செய்ய நிய்யத் செய்தேன்' அல்லது 'நான் இவ்வாறு தவாஃப் செய்ய நிய்யத் செய்தேன்' என்று கூறக் கூடாது. இதனை வாயினால் கூறுவது புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத் ஆகும், இதனை பகிரங்கப்படுத்திச் சொல்வது மிக மோசமானதும், மிகப் பெரிய பாவமுமாகும். நிய்யத்தை வாயினால் கூறுவது மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால், நபி (ஸல்) அவர்கள் இதனை விளக்கி, தமது செயல்களால் அல்லது சொற்களால் தெளிவாகக் கூறியிருப்பார்கள், மேலும் இதனை ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் முந்திக்கொண்டு செய்திருப்பார்கள்.
அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லது அவர்களின் தோழர்கள் (ரழி) யாரும் செய்ததாக அறிவிக்கப்படாத காரணத்தினால், அது பித்அத்தாகும் என அறியப்படுகிறது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “விடயங்களில் மிக மோசமானது மார்க்கத்தின் பெயரில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களாகும், அனைத்து நூதன வழி முறைகளும் வழிகேடாகும்”[29] இமாம் முஸ்லிம் அவர்கள் தனது ஸஹீஹில் இதனை பதிவு செய்துள்ளார்கள் மேலும் கூறினார்கள், 'எமது இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்' [30] ஆதாரம் : புகாரி, முஸ்லிம். முஸ்லிமின் அறிவிப்பில் இவ்வாறு உள்ளது: எவரேனும் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்வாராயின் அது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்" (31). (29) ஆதாரம்: முஸ்லிம் 867. (30) ஆதாரம்: புஹாரி 2697, முஸ்லிம் 1718. (31) ஆதாரம்: புஹாரி 2550, முஸ்லிம் 1718.
பிரிவு. நிய்யத் வைக்கும் இடங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள்
நிய்யத் வைக்கும் எல்லைகள் ஐந்தாகும்:
முதலாவது: துல்ஹுலைஃபா. இது மதீனாவாசிகளின் மீகாத் ஆகும், இது இன்றைய மக்களிடையே "அப்யார் அலீ" என்று அழைக்கப்படுகிறது.
இரண்டாவது: அல்-ஜுஹ்ஃபா, இது ஷாம் (தற்போதைய சிரியா, ஜோர்தான், பலஸ்தீன்) தேசத்தவர்களின் மீகாத் ஆகும். இது ராபிஃக்கு அடுத்துள்ள ஒரு அழிந்த கிராமமாகும். மக்கள் இன்று ராபிஃ நகரத்தில் இருந்து ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளுக்கான இஹ்ராம் ஆடை அணிந்து நிய்யத்தை, வைத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் ராபிஃ, அல்-ஜுஹ்ஃபாவிற்கு சற்று முன்பாக உள்ளது.
மூன்றாவது: கர்ன் அல்மனாஸில், இது நஜ்த் வாசிகளின் மீகாத் ஆகும், இது இன்றைய காலத்தில் 'அஸ்ஸைல்' என அழைக்கப்படுகிறது.
நான்காவது: யலம்லம். இது யமன் வாசிகளின் மீகாத் ஆகும்.
ஐந்தாவது: ஸாது(தாது)இர்க். இது இராக் வாசிகளின் மீகாதாகும்.
நபி (ஸல்) அவர்கள் இந்த எல்லைகளை, நாம் கூறியோருக்கும், ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பி இவற்றின் வழியாக நுழைகிற மற்றவர்களுக்காகவும் நிர்ணயித்துள்ளார்கள்.
மக்காவை நோக்கி ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பி வரும் ஒருவர், நிலப் பாதையிலோ அல்லது வான்பாதையிலோ இவற்றின் வழியாகச் செல்லும் போது அவற்றைத் தாண்டாமல் அவற்றிலிருந்து நிய்யத் வைக்க வேண்டும். ஏனெனில், நபியவர்கள் இம்மீகாத்துகளை வரையறுத்த போது பின்வருமாறு பொதுவாகவே கூறினார்கள்: அவை அவர்களுக்கும், அங்கு வசிக்காதவர்களில் ஹஜ் மற்றும் உம்ரா செய்ய நாடி, அவ்வழியே வருபவர்களுக்கும் உரியது. [32] (32) ஆதாரம்: புஹாரி 1524, முஸ்லிம் 1181.
ஹஜ் அல்லது உம்ரா செய்ய, மக்காவுக்குச் செல்லும் விமானப் பயணிகள் விமானத்தில் ஏற முன்னர் குளித்து தயாராகிக் கொள்ள வேண்டும். பின்னர், எல்லையை நெருங்கும் போது இஹ்ராம் வேட்டி, போர்வையை அணிந்து, (உம்ரா செய்வதற்குப்) போதுமான நேரம் இருந்தால் உம்ராவுக்காக நிய்யத் வைத்து தல்பியாக் கூற வேண்டும். நேரம் குறைவாக இருந்தால் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்க வேண்டும். இஹ்ராம் வேட்டி, போர்வையை விமானத்தில் ஏறுவதற்கு முன் அல்லது எல்லையை நெருங்குவதற்கு முன் அணிந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் எல்லையை நெருங்கும் போது அல்லது அதற்கு நேராகப் பயணிக்கும் போது மட்டுமே நிய்யத் வைக்கவும் தல்பியா கூறவும் செய்ய வேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லையிலேயே இஹ்ராம் நிய்யத் வைத்தார்கள். எனவே, இதிலும், ஏனையவற்றிலும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றுவது உம்மத்தினரின் கடமையாகும்; அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா கூறுகின்றான் : "அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு - திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது." (அல் அஹ்ஜாப் : 21). மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் இவ்வாறு கூறினார்கள்: “நீங்கள் உங்கள் வழிபாட்டு முறைகளை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” (33). (33) ஆதாரம் : முஸ்லிம் 1297.
ஹஜ் அல்லது உம்ரா செய்யும் நோக்கம் இன்றி மக்காவுக்கு வருகை தரும் வியாபாரி, மரவெட்டி, தபால்காரர் போன்றவர்களுக்கு இஹ்ராம் கட்டாயமில்லை; ஆனால் அவர்கள் விரும்பினால் நிய்யத் வைக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், மீக்காத் பற்றிய முந்தைய நபிமொழியில் இவ்வாறு கூறினார்கள்: "அவை அவர்களுக்கும், அங்கு வசிக்காதவர்களில் ஹஜ் மற்றும் உம்ரா செய்ய விரும்பி அவ்விடங்கள் வழியாக வருபவர்களுக்கும் உரியது." (34) எனவே, யாரேனும் ஹஜ் அல்லது உம்ரா செய்ய எண்ணமின்றி எல்லைகளை கடந்து சென்றால் அவருக்கு இஹ்ராம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதையே இது அறிவிக்கின்றது. [34] ஆதாரம் முன்னர் விளக்கப்பட்டுள்ளது
இது அல்லாஹ் அடியார்கள் மீது காட்டும் கருணையையும், அவர்களுக்கு எளிதாக்கியுள்ளதையும் காட்டுகிறது. இதற்காக அவனுக்கே புகழும் நன்றியும் உரியது. இதற்கு ஆதாரமாக, நபி ﷺ அவர்கள் மக்காவெற்றிக்கு சென்ற போது இஹ்ராம் கட்டவில்லை, மாறாக அவர்கள் தலையில் போர்க்கவசம் அணிந்திருந்தார்கள்; ஏனெனில் அப்போது அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடவில்லை. மாறாக அதை வெற்றிகொண்டு அதிலிருந்த இணைவைப்பை அகற்ற விரும்பினார்கள்.
மீக்காத்துகளுக்குள் வசிப்போர், உதாரணமாக ஜித்தா, உம் அஸ்ஸலாம், பஹ்ரா, அஷ்ஷராயிஃ, பத்ர், மஸ்தூரா போன்ற இடங்களில் வசிப்போர், முன்னர் குறிப்பிடப்பட்ட ஐந்து மீக்காத்துகளில் எந்தவொன்றுக்கும் செல்ல வேண்டியதில்லை. அவர்களின் இருப்பிடமே அவர்களுக்கான மீக்காத்தாகும். அங்கிருந்து ஹஜ் அல்லது உம்ராவுக்காக நிய்யத் வைக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு மீக்காத்துக்கு வெளியே வேறு ஒரு இருப்பிடம் இருந்தால், அவர்கள் விரும்பினால் மீக்காத்திலிருந்து அல்லது மக்காவிற்கு மிக அருகில் உள்ள தமது இருப்பிடத்திலிருந்து நிய்யத் வைக்கலாம். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் மீக்காத்துகளை குறிப்பிடும்போது கூறிய பொதுவான விதிமுறை அவ்வாறே உணர்த்துகின்றது: எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் தமது இருப்பிடங்களில் இருந்து நிய்யத் வைக்க வேண்டும்(35). அதேபோல மக்கா வாசிகள் மக்காவிலிருந்தே நிய்யத் வைக்க வேண்டும்.(36) (புஹாரி, முஸ்லிம்) (35) அதாவது தாம் இஹ்ராம் கட்டிய இடத்திலிருந்து தல்பியா கூறி ஹஜ் அல்லது உம்ரா செய்யத் தொடங்குதல். (36) முன் குறிப்பிடப்பட்ட ஹதீஸின் பகுதி.
ஆனால் மக்கா ஹரமில் இருக்கும் ஒருவர் உம்ரா செய்ய விரும்பினால், அவர் ஹரமின் எல்லைக்குச் சென்று அங்கிருந்து உம்ராவுக்காக நிய்யத் செய்ய வேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உம்ரா செய்ய வேண்டுமென கேட்டபோது, அவருடைய சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களை அவருடன் ஹரமின் வெளியில் கொண்டு சென்று அங்கிருந்து உம்ராவுக்காக நிய்யத் வைக்குமாறு உத்தரவிட்டார்கள். இதனால், உம்ரா செய்ய விரும்புபவர் ஹரமில் இருந்து நிய்யத் வைக்கக்கூடாது, மாறாக, ஹரமின் வெளியில் இருந்து நிய்யத் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களது முந்தைய ஹதீஸை இந்த ஹதீஸ் வரையறுத்துக் காட்டுகிறது, மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின், மக்கா வாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் கட்ட வேண்டும்" [37] என்ற கூற்றின் நோக்கம், ஹஜ்ஜுக்கான நிய்யத்தே தவிர, உம்ராவிற்கானது அல்ல என்பதையும் உணர்த்துகின்றது. ஏனெனில், உம்ராவிற்கான நிய்யத்தை ஹரமிலிருந்து வைக்க அனுமதிக்கப்பட்டிருந்தால், ஆஇஷா (ரலி) அவர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கியிருப்பார்கள். அவர்களை ஹரமுக்கு வெளியே செல்லுமாறு கட்டாயப்படுத்தியும் இருக்கமாட்டார்கள். இது தெளிவான விஷயம். மேலும் பெரும்பாலான அறிஞர்களின் (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக) கருத்தும் இதுவே. ஈமான் கொண்டவருக்கு இதுவே மிகுந்த பேணிப்பானது. ஏனெனில் இங்கு இரு ஹதீஸ்களும் செயல்படுத்தப்படுகின்றது. அல்லாஹ்வே வழிகாட்டுபவன். (37)ஆதார நூல் முன் குறிப்பிடப்பட்டுள்ளது .
ஏற்கனவே ஹஜ்ஜுக்கு முன்னர் உம்ரா செய்தவர்கள், ஹஜ்ஜுக்குப் பின் தன்ஈம் அல்லது ஜுஅரானா அல்லது வேறு இடங்களில் இருந்து அதிகமாக உம்ரா செய்வது ஆதாரம் அற்ற ஒன்றாகும். அவ்வாறு செய்யாமல் இருப்பது சிறந்தது என்பதற்கான ஆதாரங்களே உள்ளன. ஏனெனில் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (ரலி) ஹஜ்ஜுக்குப் பின் உம்ரா செய்யவில்லை. ஆஇஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் காரணமாக மக்களுடன் சேர்ந்து மக்காவிற்குள் நுழையும்போது உம்ரா செய்யவில்லை என்பதற்காகவே, அதற்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களிடம் உம்ரா செய்ய அனுமதி கேட்டு, அவர்கள் அனுமதி அளித்த போது, தன்ஈமில் இருந்து உம்ரா செய்தார்கள். இதனால் அவர்களுக்கு இரண்டு உம்ராக்கள் கிடைத்தன: ஹஜ்ஜுடன் இணைந்த உம்ரா மற்றும் தனித்த இந்த உம்ரா. அனைத்து ஆதாரங்களையும் கருத்தில் கொண்டும், முஸ்லிம்களுக்கு இழகுபடுத்தும் அமைப்பிலும், ஆஇஷா (ரலி) போன்ற நிலைமையில் இருப்பவர்கள் ஹஜ்ஜுக்குப் பின் உம்ரா செய்யலாம்.
ஹாஜிகள் மக்காவில் நுழைந்தவுடன் செய்யும் உம்ராவைத் தவிர, ஹஜ்ஜை முடித்தவுடன் மேலும் உம்ராக்களை செய்வது, அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, சனநெரிசல் மற்றும் விபத்துக்களுக்கும் காரணமாக அமையும். அத்துடன், அது நபியவர்களின் வழிமுறைக்கும் முரணானதாகும். அல்லாஹ்வே அருள்புரிபவன்.
பிரிவு.
ஹஜ் மாதங்கள் அல்லாத காலங்களில் மீகாத் எல்லையை அடைந்தவரின் மார்க்க சட்டநிலை
அறிந்துகொள்ளுங்கள் ! மீகாத்தை அடையும் ஒருவருக்கு இரண்டு நிலைகள் காணப்படுகின்றன:
ஹஜ்ஜின் மாதங்களல்லாத ரமழான் மற்றும் ஷஅபான் போன்ற மாதங்களில் உம்ரா செய்வது. இவரது விடயத்தில் ஸுன்னா என்னவென்றால், அவர் உம்ரா செய்யும் எண்ணத்துடன் இஹ்ராம் கட்டி, மனதில் நினைத்து, நாவால் "லப்பைக உம்ரதன்" அல்லது "அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்" என கூற வேண்டும். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பின்வரும் தல்பியாவைக் கூற வேண்டும். ((லெப்பைக், அல்லாஹும்ம லெப்பைக், லெப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக)) இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! யா அல்லாஹ்! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு நிகரானவர் எவருமில்லை.)) (38) கஃபதுல்லாஹ்வை அடையும் வரை, இந்தத் தல்பியாவையும், அல்லாஹ்வை நினைவு கூறுவதையும் அதிகப்படுத்தவேண்டும். கஃபதுல்லாஹ்வை அடைந்ததும் தல்பியாவை நிறுத்தி, கஃபதுல்லாஹ்வை ஏழு முறை சுற்றி, மகாமிற்குப் பின் இரு ரக்அத்களைத் தொழ வேண்டும். பின்னர் ஸபாவிற்குச் சென்று, ஸபா மற்றும் மர்வா இடையே ஏழு முறை சுற்றி, தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும். அதன் மூலம் அவருடைய உம்ரா நிறைவடைந்துவிடும். இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு அனுமதிக்கப்படும். (38) ஆதாரம்: புஹாரி 1549, முஸ்லிம் 1184.
இரண்டாவது: ஷவ்வால், துல் கஅதா, துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள் ஆகிய ஹஜ் மாதங்களில் மீகாத்தை அடைவது.
இவ்வாறானவருக்கு மூன்று தெரிவுகள் உண்டு. அதாவது, ஹஜ் மட்டும் செய்தல், உம்ரா மட்டும் செய்தல், இரண்டையும் சேர்த்து நிறைவேற்றுவது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல்கஅதா மாதத்தில் ஹஜ்ஜதுல் வதாஉ செய்யும் போது மீகாத்தில் தமது தோழர்களுக்கு இந்த மூன்று வழிபாடுகளில் தேர்வு செய்ய அனுமதி அளித்தார்கள். ஆனால், இதுபோன்றவர்கள் ஹத்யு கொண்டுவந்திருக்காவிட்டால், உம்ராவுக்காக நிய்யத் வைத்து, ஹஜ் மாதங்கள் அல்லாத காலங்களில் மீகாத்தை அடைந்தவர் செய்யவேண்டியவை என நாம் முன்பு கூறியதை செய்வதே ஸுன்னாவாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்கள் மக்காவிற்கு அருகில் வந்தபோது அவர்களின் இஹ்ராமை உம்ராவாக மாற்றுமாறு கட்டளையிட்டார்கள். மேலும், மக்காவில் அவர்களுக்கு அதனை வலியுறுத்தினார்கள். அதன்படி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை நிறைவேற்றி, தவாப் செய்து, ஸஈ செய்து, தலைமுடியை கத்தரித்து, விடுபட்டார்கள். ஆனால், பலிப்பிராணி கொண்டிருந்தவர்கள் மட்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையின்படி துல்ஹஜ் பத்தாம் நாள் வரை தமது இஹ்ராமில் நிலைத்திருந்தார்கள். பலிப்பிராணியை கொண்டு சென்றவர் ஹஜ்ஜும் உம்ராவும் இரண்டையும் ஒரே நேரத்தில் நிய்யத் செய்ய வேண்டும் என்பது சுன்னத் ஆகும்; ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தான் செய்தார்கள். அவர்கள் பலிப்பிராணியை கொண்டுவந்திருந்தார்கள். மேலும் பலிப்பிராணியை கொண்டுவந்திருந்த அவருடைய தோழர்கள் உம்ராவுக்காக நிய்யத் செய்திருந்தால், உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் நிய்யத் செய்யுமாறு உத்தரவிட்டார்கள், மேலும் துல்ஹஜ் பத்தாம் தினத்தில் இரண்டிலிருந்தும் விடுபடும் வரை, விடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்கள். பலிப்பிராணியை கொண்டு சென்றவர் ஹஜ்ஜுக்காக மட்டும் நிய்யத் செய்திருந்தால், கிரான் செய்பவரைப் போல, துல்ஹஜ் பத்தாம் தினம் வரை தனது இஹ்ராமில் நிலைத்திருக்க வேண்டும்.
இதன் மூலம் அறியப்படுவது: ஹஜ்ஜுக்காக மாத்திரம், அல்லது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் இணைத்து இஹ்ராம் நிய்யத் வைத்தவர், அவரிடம் ஹத்யு இல்லையெனில், அவர் தனது இஹ்ராமில் நீடிக்கக் கூடாது. மாறாக, நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஹத்யு இல்லாதவர்களுக்கு உம்ராவாக மாற்றி, தவாப் செய்து, ஸஈயும் செய்து, தலைமுடியை மழித்து இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபியவர்கள் உத்தரவிட்டது போல, அவரும் அவ்வாறு செய்ய வேண்டும். ஆனால், தாமதித்து வந்த காரணத்தினால், ஹஜ்ஜை இழக்கக் கூடும் என்ற அச்சம் இருப்பின், அவர் தனது இஹ்ராமில் நீடிக்கலாம். அல்லாஹ் மிகச் சிறந்த அறிவுடையவன்.
இஹ்ராம் நிய்யத்துடன் இருப்பவர் நோயாளி, எதிரியின் அச்சத்தில் இருப்பவர் போன்ற ஒருவராக இருக்கும் காரணத்தினால், தமது வணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போகுமோ என அஞ்சினால், அவர் இஹ்ராம் நிய்யத் வைக்கும் போது, 'எனக்கு ஏதும் தடைகள் ஏற்பட்டால் எங்கு தடை ஏற்படுகின்றதோ அங்கேயே நான் நீங்கிக் கொள்வேன்' என்று கூறுவது விரும்பத்தக்கது. இதற்கு ஆதாரம், துபாஆ பிந்த் அஸ்ஸுபைர் (ரழி) அவர்களது ஹதீஸ் ஆகும். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம்: ‘அல்லாஹ்வின் தூதரே, நான் ஹஜ்ஜு செய்ய விரும்புகிறேன் ஆனால் நான் நோயுற்றவளாக இருக்கிறேன்’ என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘‘ஹஜ் செய்யுங்கள், எனினும் என்னுடைய இடம், நீ என்னைத் தடுக்கும் இடமே என நிபந்தனையும் இட்டுக்கொள்ளுங்கள்’’ (39) என்று கூறினார்கள இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர். (39) புஹாரி ஹதீஸ் எண் 5089 முஸ்லிம் ஹதீஸ் எண் 1207
இந்த நிபந்தனையின் பயன்: நோய் அல்லது பகைவரால் தடுக்கப்படல் போன்ற தடைகள் ஏற்பட்டு ஒருவருக்கு ஹஜ்ஜை முழுமைப்படுத்த முடியாமல் போகும் பட்சத்தில், அவர் அதிலிருந்து விடுபடலாம், அதற்காக அவருக்கு எந்தப் பாவமும் இல்லை.
பிரிவு.
சிறுபிள்ளை ஹஜ் செய்வதன் சட்டம், அது கடமையான ஹஜ்ஜாகக் கருதப்படுமா?
சிறிய ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் செய்யும் ஹஜ் செல்லுபடியாகும். முஸ்லிமின் அறிவிப்பில், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு சிறுவனை தூக்கி காட்டி, "இவருக்கு ஹஜ் உண்டா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: ஆம், உமக்கு நன்மை உண்டு" (40). என்று கூறினார்கள (40) ஆதாரம்: முஸ்லிம் 1336.
புகாரியின் அறிவிப்பில், அஸ்ஸாஇப் இப்னு யசீத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஏழு வயதில் இருக்கும் போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து ஹஜ்ஜை நிறைவேற்ற அழைத்து செல்லப்பட்டேன்" [41]. ஆனால் இந்த ஹஜ், கடமையான கடமையாக ஹஜ்ஜாக நிறைவேறமாட்டாது. (41) ஆதாரம்: புஹாரி 1858.
அதுபோன்றுதான், அடிமையான ஆண் மற்றும் அடிமையான பெண் செய்யும் ஹஜ்ஜும் நிறைவேறும். ஆனால் அது (கடமையான) இஸ்லாமிய ஹஜ்ஜாக மாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எந்த சிறுவனும் ஹஜ் செய்து, பின்னர் பருவ வயதுக்கு வந்தால், அவன் மீண்டும் ஹஜ் செய்ய வேண்டும். எந்த அடிமையும் ஹஜ் செய்து, பின்னர் உரிமையிடப்பட்டால், அவனும் மீண்டும் ஹஜ் செய்ய வேண்டும்.” (42) இந்த ஹதீஸ் இப்னு அபீ ஷைபா மற்றும் பைஹகி ஆகியோரால் நம்பகமான அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (42) ஆதாரம் : இப்னு அபீ ஷைபா (பாகம் 4/ பக்கம் 444).
பின்னர், சிறுவன் பிரித்தறியும் பருவத்தை அடையாதவனாக இருந்தால் அவனுக்காக அவனின் பாதுகாவலர் இஹ்ராம் நிய்யத் வைக்க வேண்டும், அவனை தைத்த ஆடையிலிருந்து விலக்கி, அவனுக்காக தல்பியாக் கூற வேண்டும். இதன் மூலம், சிறுவன் இஹ்ராம் நிய்யத் வைத்தவராக மாறுவார், பெரியவர்கள் இஹ்ராம் நிய்யத் வைத்தால் தடை செய்யப்படும் அனைத்தும், அவனுக்கும் தடை செய்யப்படும். அதேபோல பிரித்தறியும் பருவத்தை அடையாத சிறுமிக்கும் அவளின் பாதுகாவலர் இஹ்ராம் நிய்யத் வைக்க வேண்டும், அவளுக்காக தல்பியாக் கூற வேண்டும். இதன் மூலம் அச்சிறுமி இஹ்ராம் நிய்யத் வைத்தவராக மாறுவாள். பெரிய பெண்கள் இஹ்ராம் நிய்யத் வைத்தால் தடை செய்யப்படும் அனைத்தும் அவளுக்கும் தடை செய்யப்படும். தவாப் செய்யும் போது இருவரது ஆடையும், உடலும் தூமையாக இருக்கவேண்டும்; ஏனெனில் தவாப் தொழுகையைப் போன்றது, தூய்மையாக இருப்பது, தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும்.
அந்த சிறுவன் மற்றும் சிறுமி பிரித்தறியும் பருவத்தில் இருந்தால், அவர்கள் தங்கள் பொறுப்புதாரரின் அனுமதியுடன் இஹ்ராம் நிய்யத் வைப்பர். மேலும் இஹ்ராம் நிய்யத் வைக்கும் போது, பெரியவர்கள் செய்வது போன்று குளித்து, நறுமணம் பூசிக்கொள்வர். அவர்களின் பொறுப்புதாரர், அவர்களின் பொறுப்புகளை மேற்கொள்பவராகவும், அவர்களின் நலன்களை காப்பவராகவும் இருப்பார். அது அவர்களின் தந்தையோ அல்லது தாயோ அல்லது வேறு யாருமாகவோ இருக்கலாம். அவர்களால் செய்ய முடியாத, ரம்ய் (கல்லெறிதல்) போன்றவற்றை பொறுப்புதாரியே செய்வார். மற்ற வணக்கங்களான, அரஃபாவில் நிற்றல், மினா மற்றும் முஸ்தலிஃபாவில் இரவில் தங்குதல், தவாஃப் மற்றும் சயீ செய்தல் போன்றவற்றை அவர்களாகவே செய்ய வேண்டும். அவர்களால் தவாப் மற்றும் ஸஈ செய்ய இயலாத பட்சத்தில், அவர்களை சுமந்துகொண்டு அவற்றைச் செய்ய வேண்டும். அவர்களைத் தூக்குபவர், தமக்காகவும் அவர்களுக்காகவும் தவாப் மற்றும் ஸஈ ஒன்றாகச் செய்யாமல், அவர்களுக்காகத் தனியாக தவாப் மற்றும் ஸஈ செய்வது சிறந்தது. பின்னர் தமக்காகத் தனியாக தவாப் மற்றும் ஸஈ செய்ய வேண்டும். இது வணக்கத்தில் பேணுதல் எடுத்துக் கொள்வதாகவும் பின்வரும் கண்ணியமிகு ஹதீஸை நடைமுறைப்படுத்துவதாகவும் இருக்கும்: உனக்கு சந்தேகம் தருவதை விட்டுவிட்டு, சந்தேகம் தராதவற்றை நோக்கிச் செல் [43]. ஒரு கர்ப்பிணி தனக்காகவும், தன் சிசுவுக்காகவும் தவாப் செய்ய எண்ணினால், மிகச் சரியான கருத்தின் படி, அது நிறைவேறும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடம் குழந்தையின் ஹஜ் குறித்து வினவியவருக்கு தனியாக அதற்காக மாத்திரம் தவாப் செய்யுமாறு கூறவில்லை. அது கடமை எனில் நபி (ஸல்) அவர்கள் அதனை விளக்கி கூறியிருப்பார்கள். அல்லாஹ்வே அருள் புரிபவன். (43) ஆதாரம் : திர்மிதி (2518).
இஹ்ராம் நிய்யத் வைக்கும் பெரியவர்களுக்குப் போலவே, தவாப் செய்வதற்கு முன், பிரித்தறியும் பருவத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமியர் தூய்மையாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறார்கள். சிறிய சிறுவன் மற்றும் சிறிய சிறுமிக்காக இஹ்ராம் நிய்யத் வைப்பது அவர்களின் பொறுப்புதாரிகளுக்குக் கட்டாயமல்ல, மாறாக, அது ஒரு நபிலாகும். இதைச் செய்தால் அவருக்கு நன்மை கிடைக்கும், அதை விட்டுவிட்டால் அவருக்கு குற்றமில்லை. அல்லாஹ் நன்கறிவான்.
பிரிவு.
இஹ்ராமின் போது தடைசெய்யப்பட்டவைகள் மற்றும் இஹ்ராம் கட்டியவருக்கு அனுமதிக்கப்பட்ட செயல்கள் பற்றிய விளக்கம்
இஹ்ராம் நிய்யத் வைத்த பின்னர் - ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் - தமது உடல் ரோமங்களை அல்லது நகங்களை வெட்டுவது அல்லது சுகந்தம் பூசுவது அனுமதிக்கப்படாது.
ஆண்கள் குறிப்பாக முழுமையாக தையலான ஆடைகளை, அதாவது சட்டை போன்ற முழு உடல் அமைப்புக்கும் பொருத்தமாகத் தைக்கப்பட்ட ஆடைகளை அல்லது பேனியன், பைஜாமா, காலுறைகள் போன்ற உடலின் சில பகுதிகளுக்குப் பொருத்தமாகத் தைக்கப்பட்ட ஆடைகளை அணிவது அனுமதிக்கப்படாது. ஆனால், வேட்டி கிடைக்காதபோது பைஜாமா அணிய அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, செருப்பு கிடைக்காதபோது காலுறைகளை வெட்டாமல் அணிய அனுமதிக்கப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் பின்வரும் ஹதீஸ் உள்ளது. யாருக்கு இரண்டு காலணிகள் கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும், யாருக்குக் கீழங்கி கிடைக்கவில்லையோ அவர் முழுக்கால் சட்டைகளை அணியட்டும்!" (44) (44) புஹாரி ஹதீஸ் எண் (1841), முஸ்லிம் ஹதீஸ் எண் (1179)
பாதணிகள் இல்லாதபோது காலுறைகளை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவற்றை வெட்ட வேண்டும் என, இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து வந்துள்ள ஹதீஸானது மன்ஸுஹாகும். –மாற்றப்பட்டது-. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் இருக்கும் போது, இஹ்ராமில் உள்ளவர் அணியக்கூடிய ஆடைகள் குறித்து கேட்கப்பட்டபோது இதனை கட்டளையிட்டார்கள். பின்னர் அவர்கள் அரஃபாத்தினத்தில் மக்கள் முன் குத்பா செய்யும் போது, பாதணிகள் இல்லாதபோது காலுறைகளை அணிய அனுமதித்தார்கள். அவற்றை வெட்ட வேண்டும் எனக் கூறவில்லை. இந்த குத்பாவை, மதீனாவில் அவர்களின் பதிலை கேட்காதவர்களும் கேட்டார்கள். தேவையான நேரத்தில் விளக்கம் வழங்காமல் தாமதிப்பது அனுமதிக்கப்படாதது என்பது, ஹதீஸ் மற்றும் பிக்ஹு கலைகளின் அடிப்படைகளில் அறியப்பட்ட ஒரு விதியாகும். எனவே, வெட்டுமாறு வந்த கட்டளை மாற்றப்பட்டது என்பது உறுதியாகிறது. அது கட்டாயமானதாக இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை விளக்கியிருப்பார்கள். அல்லாஹ் மிகச்சிறந்த அறிவாளன்.
இஹ்ராமுடன் இருப்பவர், கணுக்காலுக்கு கீழ் இருக்கும் பாதணிகளை அணிவது அனுமதிக்கப்படும்; ஏனெனில் அவை செருப்பின் வகையைச் சேர்ந்தவை.
தடுக்கும் விதமான ஆதாரம் எதுவும் இல்லாததால், இஹ்ராம் வேட்டியை நூலினால் அல்லது கயிற்றினால் கட்டி அணிய முடியும்.
இஹ்ராமில் உள்ளவர், தேவைப்படும் போது மிகவும் மென்மையாகவும் எளிதாகவும், தலையைத் தேய்த்துக் கழுவவும், குளிக்கவும் அனுமதிக்கப்படுவர். இதனால் தலையில் இருந்து ஏதாவது விழுந்தால் அதில் குற்றமில்லை.
இஹ்ராமுடன் உள்ள பெண்கள், தமது முகத்தில், தைக்கப்பட்ட ஆடைகளான, புர்கா, நிகாப் போன்றவற்றையோ கைகளில் கையுறைகள் போன்றவற்றையோ அணிவது ஹராமாகும். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்: இஹ்ராமில் இருக்கும் பெண் நிகாபோ கையுறைகளையோ அணியக் கூடாது.[45] (ஆதாரம் : புஹாரி). 'குப்ஃபாஸ்' என்பது: கைகளின் அளவிற்கு, கம்பளி அல்லது பருத்தி போன்றவற்றால் நெய்யப்பட்ட, அல்லது தையலிடப்பட்டவையாகும். (45) ஆதாரம்: புஹாரி 1838.
தைக்கப்பட்ட ஆடைகளில் அதனைத் தவிர உள்ள, சட்டை, பிஜாமாக்கள், பாதணிகள், காலுறைகள் போன்றவற்றை அணிவது அவர்களுக்கு அனுமதிக்கப்படும்.
அதேபோல அவளுக்கு அவசியம் ஏற்பட்டால் தலையில் போட்டிருக்கும் ஹிஜாபின் ஓரத்தால், கட்டாமல் முகத்தை மூடிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது, அந்த ஹிஜாப் முகத்தை தொடும் பட்சத்தில் அவளுக்கு எந்த குற்றமும் இல்லை; ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராமுடைய நிலையில் இருந்தபோது, பிரயாண கூட்டம் எங்களை கடந்து சென்றார்கள். அவர்கள் எங்களை அண்மித்தபோது, எங்களில் ஒருவர் தன் தலைமூடியை (ஹிஜாபை) தலையிலிருந்து முகத்திற்கு இறக்குவாள். அவர்கள் எங்களைத் தாண்டிச் சென்றபின், அதை மீண்டும் திறந்துவிடுவோம். [46] ஆதாரம் : அபூதாவூத், இப்னு மாஜா. மேலும் தாருகுத்னி அவர்கள் உம்மு ஸலமா அவர்களைத் தொட்டும் இது போன்ற ஒரு ஹதீஸை அறிவித்துள்ளார்கள் (46)அபூதாவூத் (1833).
அவ்வாறே, தன் கைகளை ஆடையால் அல்லது வேறு எதனாலும் மூடுவதில் குறை இல்லை. அண்ணிய ஆண்கள் முன்னிலையில் அவள் முகத்தையும் கைகளையும் மறைப்பது அவசியமாகும்; ஏனெனில் அவை அவ்ரத் ஆகும்; அல்லாஹ் ஸுப்ஹானஹூ வ தஆலா கூறுகின்றான்: தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கே தவிர (அந்நூர் : 31). முகமும் உள்ளங்கைகளும் மிகப் பெரும் அலங்காரங்களில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
மேலும், அதில் முகம் மிகவும் கடுமையானது மற்றும் பாரதூரமானதுமாகும், மேலும் அல்லாஹ் கூறுகிறான் : நீங்கள் அவர்களிடம் (-நபியின் மனைவிகளிடம் ஏதேனும்) ஒரு பொருளைக் கேட்டால் திரைக்குப் பின்னால் இருந்து அவர்களிடம் கேளுங்கள். அதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மையானதாகும். (அல்அஹ்ஸாப் : 53).
பல பெண்கள் தங்கள் முந்தானையை முகத்தை விட்டும் உயர்த்தி வைப்பதற்காக, முந்தானையின் கீழ் துணியை வைத்து உயர்த்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பதற்கு, நாம் அறிந்த அளவில் ஷரீஅத்தில் எந்த அடிப்படையும் இல்லை. அது மார்க்கத்தில் உள்ள ஒன்றாக இருந்தால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உம்மத்துக்கு அதை விளக்கி இருக்க வேண்டும், அதைப் பற்றி மௌனம் காக்க அவருக்கு அனுமதி இருக்காது.
இஹ்ராமுடன் உள்ள ஆண்களும் பெண்களும் தங்களது இஹ்ராம் ஆடைகளை, அழுக்குப் படிந்தாலோ அல்லது இதர காரணங்களுக்காகவோ துவைத்துக் கொள்ளலாம். மேலும் வேறு ஆடைகளை மாற்றிக் கொள்ளவும் அனுமதியுள்ளது.
குங்குமப்பூ அல்லது மஞ்சள் பூசிய எந்த ஆடைகளையும் அவர் அணியக்கூடாது. ஏனெனில், இப்னு உமர் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற்றைத் தடைசெய்துள்ளார்கள்.
இஹ்ராம் கட்டியவர் உடலுறவு, தீய வார்த்தைகள் மற்றும் குதர்க்கங்கள் ஆகியவற்றை விட்டு விடுவது அவசியமாகும்؛ அல்லாஹ் கூறுகின்றான் : ஹஜ்ஜு(க்காக இஹ்ராம் கட்ட வேண்டிய காலம் ஷவ்வால், துல் கஅதா, துல் ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்கள் ஆகிய) அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவர் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கினாரோ அவர் ஹஜ்ஜில் (இஹ்ராமில் இருக்கும்போது) தாம்பத்திய உறவு அறவே செய்யக் கூடாது; தீச்சொல் பேசுதல் அறவே கூடாது; தர்க்கம் செய்வது அறவே கூடாது... (அல் பகரா : 197).
ஆதாரப்பூர்வமான ஓர் அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : “உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் யாரேனும் ஹஜ் செய்தால், அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புவார்.” [47] (ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள) ரபஸ் என்பது: உடலுறவு, தீய வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும். புஸூக் என்பது: பாவகாரியங்கள் ஆகும். தர்க்கம் என்பது, அசத்தியத்தில் வாதாடுதல் அல்லது பயனற்ற விஷயங்களில் வாதாடுதல் ஆகும். எனவே, அழகிய முறையில், சத்தியத்தை வெளிப்படுத்தவும் அசத்தியத்தை மறுக்கவும் வாதம் செய்வதில் தவறில்லை, உண்மையில், அது கட்டளையிடப்பட்டுள்ள ஒன்றாகும்; அல்லாஹ் கூறுகின்றான். (நபியே!) ஞானம்; இன்னும், அழகிய உபதேசத்தின் மூலம் உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மேலும், மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! (அந்நஹ்ல் : 125). (47) புஹாரி ஹதீஸ் எண் 1521, முஸ்லிம் ஹதீஸ் எண் 1350. அறிவிப்பவர் : அபூஹூறைரா (ரழி) அவர்கள்.
இஹ்ராம் அணிந்த ஆண், தொப்பி, குத்ரா, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையைத் தொடும் வகையில் தலையை மூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது; அதேபோல முகத்தையும் மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அரஃபா நாளில் தனது வாகனத்திலிருந்து விழுந்து, இறந்தவரைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: “அவரை நீராலும் இலந்தையாலும் கழுவுங்கள், அவரை அவரது இரண்டு ஆடைகளில் கஃபன் செய்யுங்கள். அவரது தலையையும் முகத்தையும் மூடாதீர்கள்; நிச்சயமாக அவர் மறுமை நாளில் தல்பியா கூறிய நிலையில் எழுப்பப்படுவார்.” (48) புஹாரி,முஸ்லிம் இருவரும் அறிவித்துள்ளார்கள், மேலும் இந்த வாசகம் முஸ்லிமுக்குரியது. (48) ஆதாரம் : புஹாரி 1521, முஸ்லிம் 1350.
அவரது வாகனத்தின் கூரை அல்லது குடை போன்றவற்றின் நிழலில் இருப்பதில் எந்தத் தடையும் இல்லை; கூடாரங்கள் மற்றும் மரங்களின் நிழலில் இருப்பதும் அவ்வாறுதான். நபி (ஸல்) அவர்கள் ஜம்ரா அகபாவில் கல்எறிந்தபோது அவர்களுக்கு ஒரு துணியால் நிழல் கொடுக்கப்பட்டது என்பது ஸஹீஹான ஹதீஸில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நபி (ஸல்) அவர்களுக்கு நமிராவில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு, அதில் சூரியன் மறையும் வரை அரஃபா நாளில் தங்கியிருந்தார்கள் என்பதும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இஹ்ராமுடன் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விலங்குகளை வேட்டையாடவோ, அதற்கு உதவவோ, அவற்றை அதன் இடத்திலிருந்து விரட்டவோ கூடாது. மேலும் திருமண ஒப்பந்தம் செய்தல், உடலுறவு கொள்ளல், திருமணம் பேசுதல், மனைவியரை இச்சையோடு கட்டியணைத்தல் போன்றனவும் தடைசெய்யப்பட்டுள்ளன. உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தொட்டும் கூறுகின்றார்கள்: ''இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, திருமணம் செய்து வைக்கக் கூடாது, திருமண நிச்சயதார்த்தம் செய்யக் கூடாது'' (49) இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள். (49) ஆதாரம் : முஸ்லிம் 1409.
இஹ்ராம் நிலையில் உள்ள ஒருவர், மறதியாகவோ, அறியாமலோ, தையல் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்தாலோ, தலையை மூடினாலோ, மணம் பூசினாலோ அவரின் மீது எந்தக் குற்றப் பரிகாரமும் கடமையாக இல்லை. அவர் நினைவுபடுத்திக்கொண்டவுடன், அல்லது அறிந்தவுடன் அவற்றை நீக்க வேண்டும். அதேபோன்றுதான், மறதியாகவோ, அறியாமலோ, தலையை மழித்தாலோ, முடியை வெட்டினாலோ, நகங்களை வெட்டினாலோ அவரின் மீதும் சரியான கருத்தின் படி, எந்தக் குற்றப் பரிகாரமும் கடமையாக இல்லை.
ஒரு முஸ்லிம் - இஹ்ராம் அணிந்தவராகவோ அல்லது அணியாதவராகவோ, ஆணாகவோ பெண்ணாகவோ யாராக இருந்தாலும் - ஹரம் எல்லைக்குள் வேட்டையாடி, மிருகங்களைக் கொல்லவோ அல்லது ஓர் ஆயுதம் அல்லது சைக்கினை போன்றவை மூலம் அதை கொல்ல உதவவோ கூடாது.
(வேட்டையாடுவதற்காக) அதன் இருப்பிடத்திலிருந்து அதை விரட்டிச் செலவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஹரமின் மரங்களையும் பசுமையான செடிகளையும் வெட்டுதலும் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு கைவிடப்பட்டுள்ள பொருட்களை, அவற்றை அறிவித்துக்கொடுப்பவர்கள் மாத்திரமே எடுக்க அனுமதி உண்டு; நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: “இந்த ஊர் - அதாவது மக்கா - அல்லாஹ் ஹராமாக்கியதன் மூலம் மறுமை நாள் வரை ஹராமானதாகவே (புனிதமானதாகவே) இருக்கும். அங்குள்ள எந்தவொரு முள்ளும் பிடுங்கப்படவோ, அங்குள்ள பிராணிகள் விரட்டிச் செல்லப்படவோ, கண்டெடுக்கப்பட்ட பொருளை அறிவிப்பதற்காகவே அன்றி எடுக்கவோ, மேலும் அங்குள்ள மரங்களை பிடுங்கவோ கூடாது.” [50] இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர். (50) ஆதாரம்: புஹாரி 1834, முஸ்லிம் 1353.
முன்ஷித்: அறிவிப்பவர், கலா: பசுமையான புல். மினா மற்றும் முஸ்தலிபா ஹரமுக்குள் உள்ளவை, ஆனால் அரபா, ஹில் (ஹரமுக்கு வெளியே உள்ள) பகுதியில் அடங்கும்.
பிரிவு.
மக்காவில் நுழையும் போது ஹாஜிகள் செய்ய வேண்டியவை மற்றும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்த பின் செய்ய வேண்டிய தவாப் மற்றும் அதன் முறைகள்:
இஹ்ராம் நிலையில் உள்ளவர் மக்காவிற்கு வந்தால், அதனுள் நுழைவதற்கு முன் குளித்துக்கொள்வது விரும்பத்தக்கது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். பின் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தவுடன் வலது காலால் நுழைவது சுன்னத் ஆகும், மேலும் 'பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ், அஊதுபில்லாஹில் அஸீம் வபிவஜ்ஹிகில் கரீம் வபிஸுல்தானிகில் கதீம் மினஷ்ஷைதானிர் ரஜீம், அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூற வேண்டும். இதனை மற்ற மஸ்ஜித்களில் நுழையும் போதும் கூற வேண்டும். மஸ்ஜிதுல் ஹராமிற்குள் நுழைவதற்கான தனிப்பட்ட திக்ர் எதுவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து எனக்குத் தெரிந்தவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
கஃபாவை அடைந்ததும், தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவராகவோ அல்லது உம்ரா செய்பவராகவோ இருந்தால், தவாப் ஆரம்பிக்கும்முன் தல்பியாவை நிறுத்த வேண்டும். பின்னர் ஹஜருல் அஸ்வதிற்கு சென்று, அதனை எதிர்கொண்டு, வலது கையால் தொட வேண்டும். முடியுமானால் முத்தமிடவும், ஆனால் பிறரைத் தள்ளி நெருக்கடிக்குள்ளாக்கக்கூடாது. தொடும்போது "பிஸ்மில்லாஹ் வல்லாஹு அக்பர்" அல்லது "அல்லாஹு அக்பர்" என்று கூற வேண்டும். அதை முத்தமிடுவது கடினமாக இருந்தால், அதை தனது கையால் அல்லது குச்சியால் அல்லது அதற்கு இணையானவற்றால் தொட்டு, பின்பு அதை முத்தமிட வேண்டும். அதை தொடுவது கடினமாக இருந்தால், அதன் திசையில் கையினால் சுட்டிக்காட்டி, 'அல்லாஹு அக்பர்' என்று கூற வேண்டும், ஆனால் அதை முத்தமிடக் கூடாது. தவாப் செய்யும் போது, சிறிய மற்றும் பெரிய தொடக்குகளிலிருந்து தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பது தவாபின் நிபந்தனையாகும். ஏனெனில் தவாப் தொழுகையைப் போன்றது, ஆனால் இதில் பேசுவதற்கு அனுமதி உண்டு. தவாபின் போது கஃபாவை இடப்பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். தவாபின் ஆரம்பத்தில் «அல்லாஹும்மா ஈமானன் பிக, வதஸ்தீகன் பிகிதாபிக, வவபாஅன் பிஅஹ்திக, வத்திபாஅன் லிஸுன்னதி நபியிக முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்» என்று கூறினால் அது நன்றாகும். ஏனெனில் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு சுற்றுக்கள் செய்ய வேண்டும். முதல் தவாபின், அதாவது, மக்காவிற்கு முதன்முதலில் வருகை தரும் போது செய்யப்படும் தவாபின், முதல் மூன்று சுற்றுகளில் ரமல் செய்ய வேண்டும். (அதாவது, சற்று உடலை உசுப்பி, வேகமாக நடத்தல்) அவர் உம்ரா செய்யும் ஒருவராக இருந்தாலும், தமத்துஃ முறையில் ஹஜ் செய்வோராக இருந்தாலும், ஹஜ் மட்டும் செய்யும் ஒருவராக இருந்தாலும், அல்லது ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்து செய்யும் ஒருவராக இருந்தாலும் சரியே. மீதமுள்ள நான்கு சுற்றுகளில் நடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு சுற்றையும் ஹஜருல் அஸ்வத் கல்லிலிருந்து ஆரம்பித்து அதனுடன் முடிக்க வேண்டும்.
ரமல்: என்பது எட்டுக்களை நெருக்கமாக வைத்து, வேகமாக நடப்பதாகும். மேலும் ஏனைய தவாபுகள் அல்லாமல், இந்த தவாபில் மாத்திரம் முழுவதும் இழ்திபாஉ செய்வது விரும்பத்தக்கது. இல்திபா உ என்பது : ஆடையின் நடுவை வலது தோளின் கீழ் வைத்து, அதன் இரு முனைகளையும் இடது தோளின் மீது போட வேண்டும்.
தவாஃப் செய்யும் சுற்றுகளின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் உறுதியான எண்ணிக்கையான, குறைவான எண்ணிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று சுற்றுகளா அல்லது நான்கு சுற்றுகளா என சந்தேகம் ஏற்பட்டால் மூன்று சுற்றுகள் என எடுத்துக்கொள்ள வேண்டும்; இதேபோல சஈயிலும் செய்ய வேண்டும்.
இந்த தவாஃப் முடிந்ததும், தனது போர்வையைத் தோள்களில் போர்த்திக் கொண்டு, அதன் இரு முனைகளையும் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு, தவாஃபுக்கான இரு ரக்அத்களைத் தொழ வேண்டும்.
பெண்களுக்கு எச்சரிக்கவும், கண்டிக்கவும் வேண்டிய முக்கிய ஒன்று, அவர்கள் அலங்காரங்களையும், நறுமணத்தையும் வெளிப்படுத்தி, முறைப்படி மறைக்காமல் தவாப் செய்வதாகும். அவர்கள் மறைக்கப்படவேண்டியவர்கள். எனவே, தவாப் போன்ற ஆண், பெண் கலப்புள்ள சூழ்நிலைகளில் பெண்கள் தங்களின் மறைக்கப்படவேண்டிய அலங்காரங்களை வெளிக்காட்டாமல், மறைத்துக்கொள்வது அவசியமாகும். ஏனெனில் அவர்கள் அவ்ரத்தாகவும், சோதனையாகவும் இருக்கின்றனர். பெண்களின் முகம் அவளின் மிகப்பெரிய அழகாகும், எனவே அது அவளின் நெருங்கிய உறவினர்களைத் தவிர மற்றவர்களுக்கு காட்டப்படக்கூடாது; அல்லாஹ் கூறியுள்ளான்: தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கே அன்றி (அந்நூர்: 31), ஆண்கள் பார்க்கக்கூடிய இடத்தில் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடும் போது பெண்கள் தமது முகத்தை வெளிப்படுத்தமுடியாது. ஹஜருல் அஸ்வத் கல்லை தொடுவதற்கும் முத்தமிடுவதற்கும் இடம் கிடைக்காவிட்டால், பெண்கள் ஆண்களுடன் மோதிக்கொள்ளக் கூடாது. மாறாக, அவர்கள் ஆண்களின் பின்னால் வலம் வர வேண்டும். இதுவே, கஃபாவுக்கு அருகில் ஆண்களுடன் மோதிக்கொண்டு வலம் வருவதைக் காட்டிலும் அதிக நன்மையைப் பெற்றுத்தரக்கூடியதாகவும், சிறந்ததாகவும் உள்ளது. இந்த தவாப் தவிர மற்ற தவாப்களில், அல்லது மஸ்ஆவில் ரமல் மற்றும் இழ்திபாஃ செய்யவேண்டியதில்லை. ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் மக்காவிற்கு வருகை தந்தபோது செய்த முதல் தவாபில் மட்டுமே ரமல் மற்றும் இழ்திபாஃ செய்தார்கள். பெண்கள் அவ்விரண்டு செயல்களையும் செய்யவேண்டியதில்லை. தவாபின் போது தொடக்குகள் மற்றும் அழுக்குகளை விட்டும் தூய்மையாகவும், தமது இறைவனுக்கு பணிவாகவும், தாழ்மையாகவும் இருக்க வேண்டும்.
தவாபில் அல்லாஹ்வை திக்ர் செய்வதிலும், துஆ செய்வதிலும் அதிகமதிகம் ஈடுபடுவது விரும்பத்தக்கதாகும். அதில் குர்ஆனை ஓதினால் அதுவும் நன்றாகும். இந்தத் தவாபிலோ, மற்ற தவாபுகளிலோ, அல்லது சஈயிலோ கட்டயாமான குறிப்பிட்ட திக்ர் அல்லது துஆக்கள் எதுவும் கிடையாது.
சிலர் தவாப் அல்லது ஸஈயின் ஒவ்வொரு சுற்றிற்கும் பிரத்தியேகமான திக்ருகள் அல்லது துஆக்களை புதிதாக உண்டாக்கியிருப்பது அடிப்படையற்றதாகும். மாறாக, அவரால் முடியுமான திக்ருகளையும், துஆக்களையும் ஓதிக்கொள்வதே போதும். ருக்னுல் யமானியை அடைந்தவுடன் அதை வலது கையால் தொட்டு 'பிஸ்மில்லாஹ் வல்லாஹு அக்பர் ' என்று கூற வேண்டும். முத்தமிடக் கூடாது. அதை தொடுவது கடினமாக இருந்தால், அதை விட்டுவிட்டு தனது தவாபை தொடர வேண்டும். அதனை நோக்கி சைகை செய்யவோ அல்லது தக்பீர் கூறவோ கூடாது; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைச் செய்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. ருக்னுல் யமானி மற்றும் ஹஜருல் அஸ்வத் இடையே பின்வருமாறு கூறுவது சுன்னாவாகும்: ﴿...رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 201﴾ (பொருள் :எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துக்கொள் (அல் பகரா : 201) ஹஜருல் அஸ்வதிற்கு நேராக வரும் போது அதைத் தொட்டு, முத்தமிட்டுவிட்டு, 'அல்லாஹு அக்பர்' என்று கூறவும். அதைத் தொடவோ முத்தமிடவோ முடியாவிட்டால், அதற்கு நேராக வரும்போது அதை நோக்கி சைகை செய்து தக்பீர் கூறவும்.
மேலும் ஜம்ஜம் கிணறு மற்றும் மகாமிற்குப் பின் தவாப் செய்வதில், குறிப்பாக கூட்டம் மிகுந்த நேரங்களில் எந்தத் தவறும் இல்லை. பள்ளியின் அனைத்து பகுதிகளும் தவாபுக்குப் பொருத்தமானவையே. பள்ளியின் வெளிப்பகுதிகளில் தவாப் செய்தாலும் அதுவும் போதுமானதாகும். ஆனால் கஃபாவிற்கு அருகில் தவாப் செய்வது சாத்தியமானால் அதுவே மிகச் சிறந்ததாகும்.
தவாஃப் முடிந்ததும், மக்காம் இப்ராஹீமின் பின்புறம் - சாத்தியமானால் - இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். சன நெருக்கடிபோன்ற காரணங்களால், அது சாத்தியமற்றதாக இருந்தால், மஸ்ஜிதுல் ஹராமின் எந்த இடத்திலும் தொழலாம். அவற்றில் ஸூரத்துல் பாத்திஹாவுக்குப் பின், ஸுரதுல் காபிரூனை (அல்காபிரூன் : 1) முதலாம் ரக்அத்தில் ஓதுவதும், "قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ" ஸூராவை (அல்இஹ்லாஸ் : 1) இரண்டாவது ரக்அத்திலும் ஓதுவது ஸுன்னாவாகும். இதுவே மிகச் சிறந்தது; ஆனால் வேறு ஏதேனும் ஸூராக்களை ஓதினாலும் தவறில்லை. பின்னர், சாத்தியப்படும் சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்ததைப் பின்பற்றி, ஹஜருல் அஸ்வத் கல்லை வலது கையால் தொடுவதற்கு முயல வேண்டும்.
பிறகு ஸஃபா மலைக்குச் சென்று அதன் வாயிலின் வழியாக மேலே ஏறுவார். அல்லது அதற்கருகில் நிற்பார். ஸஃபா மலைக்கு மேலே ஏறுவது சாத்தியமானால் அவ்வாறு ஏறுவது சிறந்தது. முதல் சுற்றின் தொடக்கத்தில் பின்வரும் அல்லாஹ்வின் வசனத்தை ஓதுவார்: நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை ஆகும்... (அல்பகரா: 158)
ஸபா மலை மீது நின்று கிப்லாவை நோக்கி அல்லாஹ்வை புகழ்ந்து, அல்லாஹு அக்பர் என்று கூறி, 'லாஇலாஹ இல்லல்லாஹு, அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யி வ யுமீது வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ, அந்ஜஸ வஃதஹு, வநஸர அப்தஹு, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு' என்று கூறுவது விரும்பத்தக்கது. பின், கைகளை உயர்த்தி, தமது வசதிக்கேற்ப துஆ கேட்கவேண்டும். இந்த திக்ர் மற்றும் துஆவை (மூன்று முறை) மீண்டும் மீண்டும் ஓத வேண்டும். பின் இறங்கி மர்வாவை நோக்கி நடக்கவேண்டும். முதல் அடையாளத்தை அடைந்தவுடன், அங்கிருந்து இரண்டாம் அடையாளம் வரை ஆண்கள் வேகமாக நடக்க வேண்டும். ஆனால் பெண், அவள் அவ்ரத்தாக இருப்பதால், இந்த இரு அடையாளங்களுக்கிடையே வேகமாக நடக்க வேண்டிய அவசியமில்லை; அவளுக்கு ஸஈ முழுவதும் சாதாரணமாக நடப்பதே முறையாகும். அவ்வாறு நடந்து சென்று மர்வாவில் ஏறவேண்டும். அல்லது அதற்கருகாமையில் நிற்கவேண்டும். முடிந்தால் அதன் மீது ஏறி துஆ செய்வது சிறந்தது. ஸபாவில் செய்த விடயங்களையே மர்வாவிலும் செய்வார். ஆனால் பின்வரும் அல் குர்ஆன் வசனத்தை ஓதுவதை தவிர : நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை ஆகும்... (அல்பகரா : 158) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையின் பிரகாரம், முதல் சுற்றில் ஸபா குன்றின் மீது ஏறும்போது மட்டுமே இந்த வசனம் ஓதப்படும். பின்னர், அதிலிருந்து இறங்கி, நடக்க வேண்டிய இடத்தில் நடந்தும், விரைவாகச் செல்ல வேண்டிய இடத்தில் விரைந்தும், ஸபாவை அடைவார். இந்த அமைப்பில் ஏழு முறை செய்வார்; செல்வது ஒரு சுற்றாகவும் திரும்புவது இன்னொரு சுற்றாகவும் கருதப்படும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த அமைப்பில் தான் செய்துள்ளார்கள், மேலும் கூறினார்கள்: நீங்கள் உங்கள் வழிபாட்டு முறைகளை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்" (51). ஸஈ செய்யும் போது அதிகமாக திக்ர் மற்றும் துஆ செய்வது விரும்பத்தக்கதாகும். மேலும் பெரிய, சிறிய தொடக்கிலிருந்து தூய்மையாக இருப்பதும் விரும்பத்தக்கதாகும். ஆனால் தூய்மையில்லாமல் (வுழூ) ஸஈ செய்தாலும் அது ஆகுமாகும். இதேபோல் ஒரு பெண்ணுக்கு தவாப் முடிந்த பின் மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் ஏற்பட்டாலும் அவள் ஸஈ செய்வாள். ஏனெனில், சுத்தம், ஸஈயுடைய ஒரு நிபந்தனை அல்ல; மாறாக, ஏற்கனவே கூறப்பட்டது போன்று, அது விரும்பத்தக்கதாகும். (51) இதன் மேற்கோள் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது
சயீயை நிறைவு செய்துவிட்டால், அவர் தலைமுடியை சிரைக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும். ஆண்களுக்கு சிரைப்பது சிறந்ததாகும். ஆனால், ஹஜ்ஜுக்காக சிரைக்காமல் விட்டு, குறைத்தால் அது நன்றாகும். மேலும், அவர் மக்காவிற்கு வருகை தரும் போது ஹஜ்ஜின் காலப்பகுதிக்கு அருகில் இருந்தால், அவர் தலைமுடியைக் குறைப்பதே சிறந்ததாகும். அப்போதுதான், ஹஜ்ஜின் போது தலைமுடியின் மீதியை சிரைக்க முடியும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் துல் ஹஜ்ஜின் நான்காம் நாளில் மக்காவிற்கு வந்த போது, ஹதீயை(பலிப்பிராணி) கொண்டு வராதவர்களுக்கு இஹ்ராமை முடித்து, தலைமுடியைக் குறைக்குமாறு கட்டளையிட்டார்கள்; சிரைக்குமாறு கட்டளையிடவில்லை. மேலும், தலைமுடியைக் குறைக்கும் போது முழுத் தலையில் இருந்தும் குறைக்க வேண்டும். எவ்வாறு, ஒரு பகுதியை மட்டும் சிரைப்பது போதுமானதல்லவோ, அதேபோல் ஒரு பகுதியை மட்டும் குறைப்பதும் போதுமானதல்ல. பெண்களுக்கு சிரைக்க அனுமதி இல்லை, அவர்களுக்கு தலைமுடியைக் குறைப்பது மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கூந்தலிலிருந்து ஒரு விரல் நுனி அளவிற்கு குறைக்க வேண்டும், அதற்கு மேல் குறைக்கக் கூடாது.
இஹ்ராம் அணிந்தவர் மேற்கூறியவற்றை நிறைவேற்றினால், அவரது உம்ரா நிறைவடைந்து விடுகின்றது. இஹ்ராத்தின் போது ஏற்கனவே தடுக்கப்பட்டிருந்த அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது. ஆனால், ஹரமிற்கு வெளியே இருந்து பலிப்பிராணியை அழைத்துச் சென்றிருந்தால், அவர் ஹஜ்ஜும் உம்ராவும் முடியும் வரை தனது இஹ்ராமில் தொடர வேண்டும்.
ஹஜ்ஜுக்காக மட்டும் அல்லது ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர், தமது இஹ்ராமை உம்ராவாக மாற்றி, தமத்துஃ முறையில் செய்பவரைப் போலவே செய்துகொள்ளலாம். ஆனால் பலிப்பிராணியை அழைத்துச் சென்றிருந்தால் அவ்வாறு செய்யக்கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அவ்வாறு செய்யுமாறு உத்தரவிட்டார்கள், மேலும் கூறினார்கள்: நான் ஹத்ய் (பலி) பிராணியை கொண்டு வந்திருக்காவிட்டால், நானும் உங்களுடன் இஹ்ராமை கலைந்திருப்பேன். (52) (52) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 1568.
ஒரு பெண் உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த பின் மாதவிடாய் அல்லது பிரசவ நிபாஸ் ஏற்பட்டால், அவள் தூய்மையடையும் வரை கஃபாவை வலம் வரவோ, ஸபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையில் ஸஈ செய்யவோ கூடாது. தூய்மையடைந்த பின் அவள் கஃபாவை வலம் வந்து, ஸஈ செய்து, தலைமுடியைச் சற்று வெட்டி, உம்ராவை நிறைவேற்ற வேண்டும். தர்வியா (துல்ஹஜ்8) நாளுக்கு முன் தூய்மையடையாவிட்டால், அவள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்து, மற்றவர்களுடன் மினாவிற்கு செல்ல வேண்டும். இதனால் அவள் ஹஜ்ஜும் உம்ராவும் ஒன்றாக இணைந்த கிரான் முறைக்கு மாறி விடுவாள். ஹாஜிகள் செய்யும் அரபா, முஸ்தலிபாவில் தங்குதல், மற்றும் மினாவில் தங்குதல், கல்லெறிதல், ஹதீயை அறுத்தல், தலைமுடி வெட்டுதல் போன்றவற்றை அவளும் செய்ய வேண்டும். தூய்மையடைந்த பின் கஃபாவை வலம் வந்து, ஸபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையில் தவாப் மற்றும் ஸஈயை செய்தால் அவளின் ஹஜ்ஜும் உம்ராவும் நிறைவேறும்; ஏனெனில் ஆஇஷா (ரழி) அவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த பின் மாதவிலக்குக்கு உள்ளான போது, நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு இவ்வாறு கூறினார்கள்: “ஹாஜிகள் செய்யும் கிரியைகளை செய்வீராக. ஆனால் சுத்தமாகும்வரையில் தவாப் செய்ய வேண்டாம்" (53) இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர். (53) ஆதாரம் : புஹாரி (305), முஸ்லிம் (1211)
மாதவிடாய் அல்லது பிரசவத்தீட்டுக்கு உள்ளான பெண் பத்தாவது நாளில் ஜம்ராவில் கல்லெறிந்து முடியையும் கத்தரித்தால் இஹ்ராம் காரணமாக தடை செய்யப்பட்ட விடயங்கள் அனைத்தும் அவளுக்கு அனுமதிக்கப்படும். ஆனால், அவள் தூய்மையடைந்து ஹஜ்ஜின் கிரியைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை கணவனுடன் சேர்வது மட்டும் அனுமதிக்கப்படமாட்டாது. தூய்மையடைந்த பின் தவாப் செய்து ஸஈ யை நிறைவேற்றினால் கணவனுடன் சேர்வது அவளுக்கு அனுமதிக்கப்படும்.
பிரிவு.
துல் ஹஜ் மாதத்தின் எட்டாம் நாள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைப்பது மற்றும் மினாவிற்குச் செல்வது பற்றிய சட்டதிட்டங்கள்
துல் ஹஜ் மாதத்தின் எட்டாம் நாள் தர்விய்யா தினம் வரும்போது, மக்காவில் ஹஜ்ஜுக்காக தங்கியிருப்போர், மற்றும் அங்கு வசிப்போரில் ஹஜ் செய்ய விரும்புவோர் தங்கள் இருப்பிடத்திலேயே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைப்பது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் 'அப்தஹ்' என்ற இடத்தில் தங்கியிருந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவின்படி தர்விய்யா நாளில் அங்கிருந்து ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினர். அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபா அல்லது மீசாப் அருகே சென்று இஹ்ராம் நிய்யத் வைக்குமாறு உத்தரவிடவில்லை. மேலும் மினாவிற்கு புறப்படும் போது தவாபுல் வதாஃ செய்யுமாறும் உத்தரவிடவில்லை. அது கடமையாக இருந்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு அறிவித்திருப்பார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களின் தோழர்களையும் (ரழியல்லாஹு அன்ஹும்) பின்பற்றுவதிலேதான் முழுமையான நன்மை உள்ளது.
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைக்கும் போது குளித்து, சுத்தமாகி, நறுமணமிடுவது (ஸுன்னத்தாகும்) விரும்பத்தக்கதாகும். மீகாத்திலே இஹ்ராம் நிய்யத் வைப்பது போன்று, இங்கும் செய்ய வேண்டும். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த பின்னர், தர்விய்யா தினத்தில் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன்னரோ, அல்லது பின்னரோ மினாவிற்குச் செல்வது சுன்னத் ஆகும். ஜம்ரதுல் அகபாவிற்கு கல்லெறியும்வரை தல்பியாவை அதிகமாகச் சொல்ல வேண்டும். மினாவில் ளுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ரு ஆகிய தொழுகைகளை தொழவேண்டும். ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரங்களில், சேர்க்காமல் சுருக்கித் தொழுவதே ஸுன்னாவாகும். மஃரிப், பஜ்ரு ஆகிய தொழுகைகளை சுருக்கக் கூடாது.
மக்காவாசிகளுக்கும், பிறருக்கும் இடையில் வேறுபாடு இல்லை; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மக்காவாசிகள் உட்பட அனைவருக்குமாக மினா, அரபா, முஸ்தலிபா ஆகிய இடங்களில் தொழுகையை சுருக்கியே தொழுவித்தார்கள்; மக்காவாசிகள் முழுமையாகத் தொழவேண்டும் என கட்டளையிடவில்லை. அது அவர்களுக்கு கடமையாக இருந்தால், நபியவர்கள் அதனை தெளிவுபடுத்தியிருப்பார்கள்.
பின்பு, அரபா தினம் சூரியன் உதயமானதும் ஹாஜிகள் மினாவிலிருந்து அரபாவிற்குச் செல்ல வேண்டும். சூரியன் உச்சியில் இருந்து சாயும் வரை, நமிரா எனும் இடத்தில் தங்க முடியுமாக இருப்பின், அவ்வாறு செய்வது ஸுன்னாவாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்.
சூரியன் உச்சத்திலிருந்து நீங்கியதும், தலைவர் அல்லது அவரின் பிரதிநிதி மக்களுக்கு நிலைமைக்கு ஏற்ப உரையாற்றுவது சுன்னத் ஆகும். அதில் ஹாஜிகள் அன்றைய தினமும் அதற்குப் பின்னரும் செய்ய வேண்டியவற்றை விளக்க வேண்டும். அல்லாஹ்வை அஞ்சி அடிபணிவது, அவனை ஒரே இறைவனாக ஏற்றுக்கொள்வது, அனைத்து செயல்களிலும் மனத்தூய்மையுடன் நடந்து கொள்வது போன்றவற்றைக் கொண்டு அவர்களை ஏவுவதோடு, அவன் தடுத்தவற்றிலிருந்து எச்சரிக்க வேண்டும். அல்லாஹ்வின் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றும் படியும் வலியுறுத்த வேண்டும். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி, அவற்றின் அடிப்படையில் தீர்ப்பளிக்கவும், அனைத்து விஷயங்களிலும் அவற்றை அடிப்படையாகக் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். பின்னர் அவர்கள் (ஹாஜிகள்) லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை சுருக்கி, ஒன்றாக, லுஹர் தொழுகையின் நேரத்தில், ஒரே அதானுடன், இரண்டு இகாமத்துடன் தொழ வேண்டும். இதுவே நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். இதனை இமாம் முஸ்லிம் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸ் வாயிலாக அறிவிக்கின்றனர்.
பின்பு மக்கள் அரபாவில் தரித்து நிற்க வேண்டும். உரனா பள்ளத்தாக்கை தவிர அரபா முழுவதுமே தரிப்பதற்குரிய இடமாகும். முடியுமாக இருந்தால், கிப்லாவையும், ஜபல் ரஹ்மா மலையையும் முன்னோக்கி நிற்பது ஸுன்னத்தாகும். மலையை முன்னோக்குவது சாத்தியமில்லையெனில் கிப்லாவை நோக்கி நிற்க வேண்டும். அரபா மைதானத்தில் ஹாஜிகள் அல்லாஹ்வை திக்ர் செய்வதிலும், துஆக் கேட்பதிலும், அவனிடம் கெஞ்சி, மனமுருகி வேண்டுவதிலும் முயற்சி செய்ய வேண்டும். துஆ செய்யும் போது தனது கைகளை உயர்த்த வேண்டும். தல்பியா கூறினால், அல்லது அல் குர்ஆனின் ஏதாவது வசனங்களை ஓதினால் அதுவும் சிறந்ததாகும். மேலும் "லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, லஹூல்முல்கு வலஹூல்ஹம்து, யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்" என்று அதிகமாக கூறுவது சுன்னத் ஆகும்; ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்வருமாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ((துஆக்களில் மிகச் சிறந்தது அரஃபா நாளில் கேட்கும் துஆவாகும். நானும் எனக்கு முன்னர் சென்ற நபிமார்களும் கூறிய மிகச் சிறந்த வார்த்தை 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வ யுமீது வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' ஆகும்.)) (54) மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் பதிவாகியுள்ளதாவது: 'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), 'அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), 'லாஇலாஹ இல்லல்லாஹு' (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்கு உரியவைகளாகும் [55]. (54) ஆதாரம் : திர்மிதி 3585. (55) ஆதாரம்: முஸ்லிம் 2137.
இந்த திக்ரை, உள்ளச்சத்துடனும், மன ஒருமைப்பாட்டுடனும் மீண்டும் மீண்டும் கூற வேண்டும். மேலும், மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள ஆதாரபூர்வமான திக்ருகள் மற்றும் துஆக்களை எல்லா நேரங்களிலும், குறிப்பாக இந்த மகத்தான நாளில், இந்த இடத்தில் அதிகம் செய்ய வேண்டும். கருத்துச் செறிவு கொண்ட திக்ர் மற்றும் துஆக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக:
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيمِ، (பொருள்: அல்லாஹ்வை நான் புகழ்ந்து தூய்மைப் படுத்துகிறேன்; மகத்தான அல்லாஹ்வை தூய்மைப் படுத்துகிறேன்) 347﴿...لَا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ 87﴾(பொருள் : நிச்சயமாக உன்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் இருக்கிறேன்.) (அல்அன்பியாஃ : 87).
لَا إِلَـهَ إِلَّا اللهُ، وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لَا إِلَـهَ إِلَّا اللهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ.(பொருள் : உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவனைத் தவிர வேறு எவரையும் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் யாவும் அவனுக்கே உரியன. சிறப்பும் அவனுக்கே உரியது. அழகிய புகழும் பாராட்டும் அவனுக்கே உரியது. உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, காபிர்கள் வெறுத்த போதிலும் மார்க்கத்தை அவனுக்கே தூய்மையாக செய்கிறோம்.)
* 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' (56) (பொருள்: தீமையை விட்டு விலகுவதற்கான ஆற்றல் பெறுவதும் நன்மை செய்ய சக்தி பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர வேறில்லை.) (56) முஸ்லிமில் இப்னு அல்-சுபைர் (ரழி) அவர்களிடமிருந்து ஹதீஸ் எண் 594 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ(பொருள் : எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துவிடு) (அல் பகரா : 201)
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِيَ الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَالمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ (பொருள் : யா அல்லாஹ்! என் கருமங்களின் பிடிகயிறாகிய எனது தீனை சீர்படுத்தி வைப்பாயாக. எனது வாழ்க்கைக்குரிய இவ்வுலக வாழ்க்கையை எனக்கு நீ சீர்படுத்தி வைப்பாயாக. எனது மீள்ச்சிக்குரிய இடமாகிய எனது மறுமையை சீர்படுத்தி வைப்பாயாக. நல்லவைகள் அனைத்திலும் அதிகமாகத் தேடிக் கொள்ள எனது வாழ்க்கையை அமைத்து தருவாயாக. அனைத்து தீங்குகளிலிருந்தும் எனக்கு நிம்மதி தரக்கூடியதாக எனது மௌத்தை அமைத்து வைப்பாயாக.(57) (57) முஸ்லிமில் ஹதீஸ் எண் 2720 ல் அபூஹூறைரா (ரழி) அவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
أَعُوذُ بِاللَّهِ مِنْ جَهْدِ البَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ யா அல்லாஹ்! தாங்கமுடியாத பாரிய கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும், தீயமுடிவுகளை விட்டும், எதிரிகளின் நகைப்பை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் (58) (58) புகாரியில் அபூஹூறைரா (ரழி) அவர்கள் மூலம் ஹதீஸ் எண் 6347ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ وَالبُخْلِ، وَمِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ (பொருள் : யா அல்லாஹ்! கவலை, துக்கம் ஆகியவற்றிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். மேலும் இயலாமை, சோம்பல் ஆகியவற்றிலிருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். மேலும் கோழைத்தனம், கஞ்சத்தனம், பாவச்செயல், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் (அடக்குமுறை) ஆகியவற்றிலிருந்தும் உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.)(59) (59) அபூ தாவூதில் அபூ உமாமா அல் அன்சாரியிடமிருந்து (பாவச்செயல், கடன் சுமை) என்ற சொற்களை தவிர்த்து இந்த வாசகத்துடன் ஹதீஸ் எண் 1554 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ وَالجُنُونِ وَالجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ((பொருள் : யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் பிற தீயநோய்கள் ஆகிய அனைத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)) (60) (60) அபூதாவூதில் அனஸ் (ரழி) அவர்களிடமிருந்து ஹதீஸ் எண் 1554 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ العَفْوَ وَالعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ.(பொருள் : யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பையும், ஈடேற்றத்தையும் உன்னிடம் கேட்கிறேன்).
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ العَفْوَ وَالعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي.(பொருள் : யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் மன்னிப்பையும் ஈடேற்றத்தையும் உன்னிடம் கேட்கின்றேன்.)
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي(பொருள் : யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும், எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனது கீழப்புறத்திலிருந்து ஏற்படும் எதிர்பாராத தண்டனையை விட்டும் உன் மகத்துவத்தைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் (61). (61) அபூதாவூதில், இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து ஹதீஸ் எண் 5074 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ اغْفِرْ لِي جِدِّي وَهَزْلِي، وَخَطَئِي وَعَمْدِي، وَكُلَّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(பொருள்: யா அல்லாஹ்! எனது தீவிர நிலையையும், மந்த நிலையையும், எனது தவறுகளையும், வேண்டுமென்றே செய்தவற்றையும் நீ மன்னித்தருள்வாயாக. அவையனைத்தும் என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முந்திச் செய்தவைகளையும் பிந்திச் செய்தவைகளையும், இரகசியமாகச் செய்தவைகளையும் பகிரங்கமாகச் செய்தவைகளையும், மேலும் என்னை விடவும் நீ அறிந்திருக்கும் எனது ஏனைய தவறுகளையும் நீ மன்னித்தருள்வாயாக. நீ (நாடியதையும் நாடுபவர்களையும்) முற்படுத்துபவன், நீ (நாடியதையும் நாடுபவர்களையும்) பிற்படுத்துபவன். நீயே எல்லாவற்றையும் செய்ய வல்லவன். (62) (62) அபூமூசா அஷ்அரீ (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸின் ஒரு பகுதி. முஸ்லிமில் ஹதீஸ் எண் 2719 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ وَالعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا وَلِسَانًا صَادِقًا، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ عَلَّامُ الغُيُوبِ ((பொருள்: யா அல்லாஹ்! மார்க்க விடயத்தில் ஸ்திரத்தன்மையையும் நல்ல விடயங்களில் மன உறுதியையும் உன்னிடம் கேட்கிறேன். உனது அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும் நல்ல முறையில் வணங்கிடவும் உன்னிடம் உதவி கேட்கிறேன். மேலும் சீரான உள்ளத்தையும் உண்மை பேசும் நாவையும் தந்தருளுமாறு கேட்கிறேன். நீ அறிந்தவற்றில் சிறந்ததை கேட்கிறேன். நீ அறிந்த தீயவைகளிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறும் கேட்கிறேன். நீ அறிய நான் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கோருகிறேன். நீயே மறைவான யாவற்றையும் மிக அறிந்தவானாய் உள்ளாய் )) [63] (63) திர்மிதியில், ஷத்தாத் பின் அவ்ஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து ஹதீஸ் எண் 3407 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ رَبَّ النَّبِيِّ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، اغْفِرْ لِي ذَنْبِي، وَأَذْهِبْ غَيْظَ قَلْبِي وَأَجِرْنِي مِنْ مُضِلَّاتِ الفِتَنِ مَا أَحْيَيْتَنَا(பொருள்: நபி முஹம்மது அலைஹி ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் இறைவனே! எனது பாவங்களை மன்னித்து எனது உள்ளத்தின் கோபத்தை நீக்கிவிடுவாயாக! மேலும் சோதனைகளில் அழிவிற்குற்படுத்துபவற்றிலிருந்து, வாழும் காலமெல்லாம் என்னை பாதுகாப்பாயாக! (64) (64) ஆதாரம் : அஹ்மத் (6/301) அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரழி) அவர்கள்
اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ العَرْشِ العَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ البَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الفَقْرِ((பொருள்: யாஅல்லாஹ்! வானங்களின் இரட்சகனே! பூமியின் இரட்சகனே! மகத்தான அர்ஷின் இரட்சகனே! எங்கள் இரட்சகனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனே! வித்தையும் விதையையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை இறக்கியவனே! அனைத்துப் பொருட்களினதும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன், நீயே அனைத்து படைப்பினங்களினதும் முன்நெற்றியைப்பிடித்து அதிகாரம் செலுத்தக் கூடியவன், யா அல்லாஹ்! நீயே ஆரம்பமானவன் உனக்கு முன்னர் எதுவுமில்லை, நீயே இறுதியானவன் உனக்கு பின்னர் எதுவுமில்லை, நீயே மேலானவன் உனக்குமேல் எதுவுமில்லை, நீயே இப்பிரபஞ்சத்தின் கீழுள்ளவற்றிற்கும் அதிகாரம் படைத்தவன் உனக்கு கீழ் எதுவுமில்லை, எங்களுடைய கடனை நிறைவேற்றிவைப்பாயாக! மேலும் வறுமையை விட்டும் எம்மை பாதுகாத்து தன் நிறைவானவர்களாக ஆக்கிவிடுவாயாக)) (65) (65) முஸ்லிமில் ஹதீஸ் எண் 2713 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அபூஹூறைரா (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
اللَّهُمَّ أَعْطِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ وَالهَرَمِ وَالبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ(பொருள் : யா அல்லாஹ்! எனது உள்ளத்தை தூய்மைப்படுத்தி பயபக்தியை தந்தருள்வாயாக! நீயே உள்ளத்தை தூய்மைப்படுத்துவோரில் மிகச்சிறந்தவனும் அதன் பொறுப்பாளானும் உரிமையாளனுமாக உள்ளாய். யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிபம், கஞ்சத்தனம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்) ([66]). (66) இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 2722 ல், ஸஹாபி ஸைத் பின் அர்கம் (ரழி) அவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، أَعُوذُ بِعِزَّتِكَ أَنْ تُضِلَّنِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ الحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ(பொருள்: யாஅல்லாஹ்! நான் உனக்கே அடிபணிந்துள்ளேன், உன்னையே விசுவாசித்துள்ளேன்; உன் மீதே எனது பொறுப்புக்கள் யாவற்றையும் ஒப்படைத்துள்ளேன், உன்பக்கமே மீண்டுள்ளேன், உனக்காகவே போராடுகிறேன். நான் வழிதவறிச் சென்றுவிடாதிருக்க நிச்சயமாக உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் உன்னிடமே பாதுகாவல் தேடுகிறேன். உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறுயாருமில்லை. மனித, ஜின் இனத்தினர் மரணித்துவிடுபவர்களாய் இருக்கும் நிலையில், நீயே மரணிக்காத நித்திய ஜீவனாவாய்.) (67) (67) முஸ்லிமில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் ஹதீஸ் எண் 2717 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَاயாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியை விட்டும் (உனக்குப்) பயப்படாத உள்ளத்தை விட்டும், திருப்தி அடையாத மனதை விட்டும், ஏற்கப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் (68) [68] இது ஸைத் பின் அர்கம் (ரழி) அவர்களின் ஹதீஸின் ஒரு பகுதி, இது முன்பு ஹதீஸ் எண் (2722) இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
اللَّهُمَّ جَنِّبْنِي مُنْكَرَاتِ الأَخْلَاقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَالأَدْوَاءِ((யாஅல்லாஹ்! துர்குணங்கள், தீச்செயல்கள், மனோஇச்சைகள், பயங்கரமான நோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காத்தருள்வாயாக)) (69) (69) திர்மிதியில் ஹதீஸ் எண் 3591 ல், ஸியாத் பின் அலாகா அவர்கள் தமது சிறிய தந்தை மூலம் இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள்.
اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي، وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِيயாஅல்லாஹ்! எனக்கு நேரான பாதையை மனதில் உதிக்கச் செய்வாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னை பாதுகாப்பாயாக! (70) (70) ஆதாரம் : திர்மிதி (ரழி). ஹதீஸ் எண் (3483). அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ((பொருள்: யா அல்லாஹ்! உன்னால் விலக்கப்பட்டவற்றை விட்டும் தவிர்ந்து உன்னால் ஆகுமாக்கப்பட்டவற்றை மாத்திரம் எனக்கு போதுமாக்கிவைப்பாயாக! மேலும் உனது அருளின் மூலம் உன்னைத் தவிர உள்ள அனைத்தைவிட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்கிவிடுவாயாக!)) (71) (71) திர்மிதியில் அலி (ரழி) அவர்களிடமிருந்து ஹதீஸ் எண் 3563ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الهُدَى وَالتُّقَى وَالعَفَافَ وَالغِنَى(பொருள்: யாஅல்லாஹ்! நேர்வழியையும், உள்ளச்சத்தையும், கற்பொழுக்கத்தையும், போதுமென்ற மனதையும் தருமாறு நான் உன்னிடம் கேட்கிறேன்) (72) (72) முஸ்லிமில் ஹதீஸ் எண் 2721 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الهُدَى وَالسَّدَادَ ((பொருள்: யாஅல்லாஹ்! நேர்வழியையும் அதில் உறுதியாக நிற்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்)) (73) (73) இந்த ஹதீஸ் அலி (ரழி) அவர்களிடமிருந்து முஸ்லிமில் ஹதீஸ் எண் 2725 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ مُحَمَّدٌ ﷺ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ مُحَمَّدٌ ﷺ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا(பொருள்: யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற, நான் அறியாத அனைத்து நன்மையானவற்றையும் இவ்வுலகிலும் மறுமையிலும் தருமாறு உன்னிடம் கேட்கிறேன். மேலும் நான் அறிந்திருக்கின்ற, நான் அறியாத அனைத்து தீமைகளிலிருந்தும் இவ்வுலகிலும் மறுமையிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்னுடைய அடியாரும் நபியுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னிடம் வேண்டிய நன்மைகளில் சிறந்தவற்றை நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னுடைய அடியாரும் நபியுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னிடம் (பாதுகாப்புத் தேடிய) தீமைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! நான் சுவனத்தையும் அதன்பால் நெருக்கிவைக்கும் சொல்லையும் செயலையும் கேட்கிறேன். மேலும் நான் உன்னிடம் நரகிலிருந்தும் அதன்பால் நெருக்கி வைக்கும் சொல் செயல்களை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் எனக்கு நீ நிர்ணயித்துள்ள விதிகள் அனைத்தையும் நல்லதாக்கி தருமாறும் உன்னிடம் கேட்கிறேன். (74) (74) இப்னு மாஜாஹ்வில் ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து ஹதீஸ் எண் 3846 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ بِيَدِهِ الخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ العَلِيِّ العَظِيمِ((பொருள்: உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை, அவனுக்கு எந்த இணையாளரும் இல்லை, ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவனே உயிரளித்து மரணிக்கவும் செய்கிறான், அவன் கரத்திலேயே அனைத்து நலவுகளும் இருக்கின்றன, மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன். அல்லாஹ் தூயவன், புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ் மிகப் பெரியவன், உயர்ந்தோனும் மகத்துவமிக்கவனுமாகிய அல்லாஹ்வின் நாட்டமும் வல்லமையுமின்றி எதுவொன்றும் அசையவும் முடியாது, எதற்கும் எந்த சக்தியும் கிடையாது.))(75) (75) ஆதாரம் : புஹாரி, அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் (ரழி) அவர்கள். ஹதீஸ் எண் : 1154.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ((பொருள்: யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிந்தது போல், முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள்புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன். யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உன் அருள்வளத்தையும் செழிப்பையும் அள்ளிப் பொழிந்தது போல், முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உன் அருள்வளத்தையும் செழிப்பையும் பொழிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன்)) (76) (76) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 3370. இது கஅப் பின் உஜ்ரா (ரழி) அவர்களால் அறிவிக்கபட்ட ஹதீஸாகும்.
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ(பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துவிடுவாயாக) (அல் பகரா : 201)
இந்த மகத்தான தருணத்தில் ஹாஜிகள் முன்னர் கூறிய திக்ர்களையும், பிரார்த்தனைகளையும், அவற்றின் பொருளில் உள்ள வேறு பல திக்ர், பிரார்த்தனையும் கூறுவதோடு, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஸலவாத்தும் கூறுவது விரும்பத்தக்கதாகும். பிரார்த்தனையில் தீவிரமாக ஈடுபட்டு, தன் இறைவனிடம் இம்மையும் மறுமையும் சார்ந்த நன்மைகளை வேண்டிக் கொள்ள வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது மூன்று தடவைகள் அதனை மீண்டும் மீண்டும் கூறுவார்கள். எனவே அதில் அவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.
முஸ்லிம் இந்த இடத்தில் தனது இறைவனுக்காக பணிவுடன், தாழ்மையுடன், அவனது முன் அடிபணிந்து, அவனது கருணையையும் மன்னிப்பையும் நாடி, அவனது தண்டனையையும் கோபத்தையும் பயந்து, தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொண்டும், தூய்மையான பாவமன்னிப்பை புதுப்பித்துக்கொண்டும் இருக்கவேண்டும். ஏனெனில் இது ஒரு மகத்தான நாளாகவும், பெரும் ஒன்றுகூடலாகவும் உள்ளது. இதில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு அருள்புரிந்து, அவர்களைப் பற்றி தனது மலக்குகளிடம் பெருமைபேசவும், நரகத்திலிருந்து அதிகமாக விடுதலை செய்யவும் செய்கின்றான். ஷைத்தான், பத்ர் தினத்தில் காணப்பட்டதற்கு பின்னர், இந்த நாளில் தான் மிகவும் இழிவடைந்தவனாகவும் , மிகத்தாழ்ந்தவனாகவும், மிகவும் சிறுமையடைந்தவனாகவும் காணப்படுவான், அரஃபா நாளில் அல்லாஹ்வின் அருளையும், அவனது அடியார்களுக்கு அவன் செய்யும் நன்மைகளையும், அதிகமான நரக விடுதலையையும், மன்னிப்பையும் காண்பதால், அவனுக்கு இந்நிலை ஏற்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிம் கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது: அல்லாஹ், ஏனைய நாட்களை விட, அரஃபா நாளிலேயே அடியார்களை நரகிலிருந்து அதிகம் விடுவிக்கிறான். அவன் (அடியார்களை) நெருங்கி, அவர்களைப் பற்றிப் பெருமைப்படுத்தி, தனது வானவர்களிடம் 'இவர்கள் என்ன விரும்புகிறார்கள்?' என்று கேட்கிறான். (77) (77) முஸ்லிமில் ஹதீஸ் எண் 1348 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆயிஷா (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முஸ்லிம்கள் தமது புறத்தில் இருந்து அல்லாஹ்வுக்கு நன்மைகளையே காட்டவேண்டும். மேலும், தங்கள் எதிரியான ஷைத்தானை இழிவுபடுத்தி, திக்ர், துஆ, அனைத்து பாவங்களில் இருந்தும் மன்னிப்புக் கேட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டு அவனை கவலைக்குட்படுத்தவேண்டும். இந்த நிலையில் ஹாஜிகள் சூரியன் அஸ்தமிக்கும் வரை திக்ர், துஆக்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சூரியன் அஸ்தமித்ததும் அவர்கள் முஸ்தலிபாவிற்கு அமைதியுடனும் கண்ணியமாகவும் புறப்பட வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததைப் போலவே அதிகமாக தல்பியா கூறி, இடம் கிடைக்கும் போது வேகமாக செல்ல வேண்டும். சூரியன் அஸ்தமிக்கும் முன் புறப்படக் கூடாது, ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன் அஸ்தமிக்கும் வரை நின்றுள்ளார்கள், மேலும் கூறினார்கள் : “நீங்கள் உங்கள் வழிபாட்டு முறைகளை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” (78). (78) ஆதாரம் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் முஸ்தலிஃபாவை சென்றடைந்ததும், நபியவர்களைப் பின்பற்றி, அங்கு மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாகவும், இஷா தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும், ஒரு அதான் மற்றும் இரண்டு இகாமத்துடன் சேர்த்து தொழ வேண்டும். அவர்கள் முஸ்தலிஃபாவிற்கு மஃரிப் நேரத்தில் சென்றடைந்தாலும் அல்லது இஷா நேரம் வந்த பின்பும் சென்றடைந்தாலும் சரியே.
சில பொதுமக்கள் முஸ்தலிபாவிற்கு வந்தவுடன் தொழுகைக்கு முன் ஜம்ராவுக்கான கற்களை பொறுக்குவதும், அதனை மார்க்கத்தில் உள்ள ஒன்றாகக் கருதுவதும் அடிப்படையற்ற ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள், முஸ்தலிபாவில் இருந்து மினாவிற்கு திரும்பிய பிறகே கற்களை பொறுக்குமாறு கூறினார்கள். எந்த இடத்திலிருந்து கற்களைப் பொறுக்கினாலும் அது ஆகுமானது. முஸ்தலிபாவிலேயே பொறுக்க வேண்டியதில்லை, மினாவிலும் பொறுக்கலாம். இந்த நாளில், நபியவர்களைப் பின்பற்றி, ஏழு கற்களைப் பொறுக்கி ஜம்ரதுல் அகபாவிற்கு எரிவதே ஸுன்னாவாகும். அடுத்த மூன்று நாட்களிலும் மினாவில் இருந்து ஒவ்வொரு நாளும் இருபத்து ஒன்று கற்களைப் பொறுக்கி மூன்று ஜம்ராக்களுக்கும் எறிய வேண்டும்.
கற்களை கழுவுவது விரும்பத்தக்கதல்ல, அதனை கழுவாமல் எறிய வேண்டும்; ஏனெனில் நபி (ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோ, அவர்களது தோழர்களோ இவ்வாறு செய்ததாக அறிவிக்கப்படவில்லை. மேலும், ஏற்கனவே எறியப்பட்ட கற்களை எறியக் கூடாது.
இந்த இரவில் ஹாஜிகள் முஸ்தலிபாவில் தங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் போன்ற பலவீனமானவர்கள், ஆயிஷா (ரழி) மற்றும் உம்மு ஸலமா (ரழி) ஆகியோரின் ஹதீஸின் அடிப்படையில், இரவின் நடு நிசிக்குப்பின் மினாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் மற்ற ஹாஜிமார்கள் பஜ்ர் தொழுகையை நிறைவேற்றும் வரை அங்கு தங்குவது கடமையாகும். பின்பு மஷ்அருல் ஹராமில் கிப்லாவை நோக்கி நின்று, நான்கு வெளிச்சம் வரும் வரை, அதிகமாக அல்லாஹ்வை திக்ர் செய்வதிலும், தக்பீர் கூறுவதிலும், துஆக் கேட்பதிலும் ஈடுபட வேண்டும். இங்கு பிரார்த்தனை செய்யும் போது கைகளை உயர்த்துவது (முஸ்தஹப்) விரும்பத்தக்கதாகும். முஸ்தலிஃபாவில் எங்கு நின்றாலும் அது போதுமானதாகும். மஷ்அருக்கு அருகில் செல்வது அல்லது அதில் ஏறுவது அவசியமில்லை; நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: «நான் இங்கு தரித்தேன் - அதாவது மஷ்அருல் ஹராமில் - மற்றும் ஜம்உ (முஸ்தலிபாவில்) எங்கும் தங்கலாம்» (79) இதனை முஸ்லிம் அவர்கள் தனது ஸஹீஹில் பதிவு செய்துள்ளார்கள். ஜம்உ என்பது முஸ்தலிஃபாவாகும். (79) முஸ்லிமில் ஹதீஸ் எண் 1218 ல் ஜாபிர் (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வெளிச்சம் நன்றாகத் தென்படத் தொடங்கியதும், சூரியன் உதயமாவதற்கு முன் மினாவிற்கு திரும்பிச் செல்வார்கள். தங்கள் பயணத்தில் அதிகமாக தல்பிய்யா சொல்லிக்கொண்டிருப்பார்கள். 'வாதி முஹஸ்ஸிர்' பள்ளத்தாக்கை அடைந்ததும், சிறிது விரைவாகச் செல்வது விரும்பத்தக்கதாகும்.
மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபா அருகே தல்பியாவை நிறுத்தி, அங்கு ஏழு சிறு கற்களை தொடர்ந்து எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது கையை உயர்த்தி 'அல்லாஹு அக்பர்' என்று கூற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் செய்ததுபோல, கல்லை பத்னுல் வாதி பக்கத்திலிருந்து, கஃபாவை இடப்புறமாகவும், மினாவை வலப்புறமாகவும் வைத்து எறிவது ஸுன்னாவாகும். மற்ற பக்கங்களில் இருந்து எறிந்தாலும், கற்கள் குறித்த இடத்தில் விழுந்தால் போதும். கற்கள் அங்கு நிலைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, விழுந்தாலே போதும். கற்கள் விழுந்து, பின் வெளியே வந்தாலும் அதுவும் நிறைவேறும் என்பதே அறிஞர்களின் கருத்திலிருந்து புரியமுடியுமான ஒன்றாக உள்ளது. இதை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் (ஷர்ஹ் அல்-முஹத்தப்) இல் தெளிவாகக் கூறியுள்ளார்கள். ஜம்ராக்களுக்கு, கடலை விதைகளைப் போன்றவற்றை விட சற்று பெரிய கற்களை எரிய வேண்டும்.
பின்னர் கல்லெறிந்த பின், தன்னுடைய பலியிடும் பிராணியை அறுக்க வேண்டும். அதனை அறுக்கும் போது அல்லது பலியிடும் போது, "பிஸ்மில்லாஹ் வல்லாஹு அக்பர், அல்லாஹும்ம ஹாஸா மின்க வ லக" என்று கூறுவது விரும்பத்தக்கது. அதை கிப்லாவை நோக்கி திருப்பி வைப்பது சுன்னாவாகும். ஒட்டகங்களை நிற்கவைத்து அதன் இடது முன்னங்கால்களை கட்டி அறுக்க வேண்டும், மாடுகளையும் ஆடுகளையும் அதன் இடது பக்கமாகக் கிடத்தி அறுக்க வேண்டும். கிப்லாவை நோக்காமல் அறுத்தால், சுன்னா விடுபடும். ஆனால் அந்த ஹத்யு செல்லுபடியாகும்; ஏனெனில் அறுக்கும் போது கிப்லாவை நோக்கி திருப்புவது சுன்னாவே தவிர, கட்டாயமல்ல. தான் அறுத்த பிராணியிலிருந்து உண்ணுவது, பிறருக்கு அன்பளிப்பாக வழங்குவது, மற்றும் தர்மம் கொடுப்பது விரும்பத்தக்கதாகும்; அல்லாஹ் கூறுகிறான்; அவற்றிலிருந்து புசியுங்கள். இன்னும், வறியவருக்கும் ஏழைக்கும் (அவற்றிலிருந்து) உணவளியுங்கள். (அல் ஹஜ் : 28) அறுப்பதற்கான காலம் நஹ்ர் தினத்திலிருந்து (10ஆம் நாள்) அடுத்த மூன்று "அய்யாமுத் தஷ்ரீக்" நாட்களின் சூரிய அஸ்தமனம் வரை நீடிக்கிறது என்பது அறிஞர்களின் மிகச் சரியான கருத்தாகும். எனவே, அறுத்துப் பலியிடும் காலம் நஹ்ர் தினம் மற்றும் அதற்குப் பிறகு மூன்று நாட்களாகும்.
பின்னர் ஹத்ய் பிராணியை அறுத்த பின் அவர் தலைமுடியை சிரைக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும், சிரைத்தலே சிறந்தது; ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரைத்தவர்களுக்கு (மூன்று முறை) அருள் மற்றும் மன்னிப்பு வேண்டி பிரார்தித்தார்கள், ஆனால் குறைத்தவர்களுக்கு ஒருமுறையே பிரார்த்தணை செய்தார்கள். தலையில் ஒரு பகுதியை மட்டும் குறைப்பது போதுமானதல்ல, மாறாக, சிரைத்தலைப் போலவே, முழுவதையும் குறைக்க வேண்டும். பெண்கள் ஒவ்வொரு சிகை முடியிலிருந்தும் ஒரு விரல் நுனி அளவிற்கு குறைக்க வேண்டும்.
ஜம்ராவில் கல்லெறிந்து முடித்து, தலைமுடியை கத்தரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்த பின், இஹ்ராம் அணிந்தவருக்கு பெண்களைத் தவிர, இஹ்ராமின் போது தடை செய்யப்பட்ட அனைத்தும் அனுமதிக்கப்படும். இதனைத் தஹல்லுல் அவ்வல் என அழைக்கின்றனர். இதன் பின், மணம் பூசிக்கொண்டு, மக்காவிற்கு சென்று தவாபுல் இபாழாவை நிறைவேற்றுவது சுன்னத் ஆகும். இதற்கு ஆதாரமாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய ஹதீஸ் உள்ளது: “நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இஹ்ராம் அணியும்முன் நறுமணம் பூசினேன், மேலும் அவர்கள் இஹ்ராமில் இருந்து விடுபட்டதும், கஅபாவை தவாப் செய்ய முன் அதை பூசினேன். [80]” (புஹாரி, முஸ்லிம்) (80) ஆதாரம் : புஹாரி (1539), முஸ்லிம் (1189).
இந்த தவாப் 'தவாபுல் இபாழா' என்றும் 'தவாபுல் ஜியாரா' என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹஜ்ஜின் ஒரு ருக்னாகும், இதைச் செய்யாமல் ஹஜ் நிறைவேறாது. இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: பிறகு, அவர்கள் தங்களது (உடல்களில் இருந்து) அழுக்குகளை நீக்கிக் கொள்ளட்டும். இன்னும், தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். இன்னும், மிகப் பழமையான இறையாலத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும். (அல் ஹஜ் : 29).
பின்னர் தவாப் செய்து முடிந்தும் , மக்காம் இப்ராஹீமின் பின்புறம் இரு ரக்அத் தொழுகையை நிறைவேற்றிய பின், தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர் ஸபா மர்வாக்கிடையில் ஸஃயை செய்ய வேண்டும். இந்த ஸஃஈ ஹஜ்ஜுக்கானதாகும், முதல் ஸஃஈ உம்ராவுக்கானதாகும்.
ஒரு ஸஈ போதாது என்பது தான் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து. இதற்கு ஆதாரமாக உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அறிவித்த, ‘நாங்கள் நபி (ஸல்) உடன் புறப்பட்டோம்.. என்று வரும் ஹதீஸில், நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : ''யாரிடம் ஹதி (பலிப்பிராணி) இருக்கிறதோ அவர் உம்றாவுடன் ஹஜ்ஜை நிறைவேற்ற நிய்யத் வைக்கட்டும். பின்னர் இரண்டையும் முழுமையாக நிறைவேற்றிய பின் தான் இஹ்ராமை களைய வேண்டும்''. . . ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு கூறினார்கள் : உம்ராவுக்காக இஹ்ராம் பூண்டவர்கள், கஃபாவைச் சுற்றி தவாப் செய்து பின்னர் ஸஃபா மற்றும் மர்வாவைச் சுற்றி சஃஈ செய்த பின்னர் இஹ்ராமிலிருந்து வெளியேறினர். பின்னர் அவர்கள் மினாவிலிருந்து திரும்பிய பின், ஹஜ்ஜுக்காக மற்றொரு தவாஃப் செய்தனர். (81) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம். (81) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 1556, முஸ்லிம் ஹதீஸ் எண் 1211.
உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்களைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள், "பின்னர் அவர்கள் மினாவிலிருந்து திரும்பிய பின், ஹஜ்ஜுக்காக மற்றொரு தவாப் செய்தார்கள்" என்று கூறியதன் பொருள்: ஸஃபா மற்றும் மர்வா இடையே செய்யப்படும் சஈயாகும். இதனை தவாபுல் இபாழா என கூறுபவர்கள் தவறாகக் கூறுகின்றனர்; ஏனெனில் தவாபுல் இபாழா அனைவருக்கும் ருகுனாகும், அவர்கள் அதனை ஏற்கனவே செய்துவிட்டார்கள். இங்கு நாடப்படுவது, முதமத்திஃக்கு மாத்திரம் உரிய, மினாவிலிருந்து திரும்பிய பின், ஹஜ்ஜை நிறைவுசெய்வதற்காக ஸஃபா மற்றும் மர்வா இடையே செய்யப்படும் தவாப் (ஸஈ) ஆகும். இது அல்லாஹ்வின் அருளால் தெளிவாக உள்ளது, மேலும் இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கூற்றாகும்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம் ஹஜ்ஜின் தமத்துஃ முறையைப் பற்றி கேட்டபோது, பின்வருமாறு கூறியதாக புகாரி (ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹில் பதிந்துள்ளார்கள்: முஹாஜிரீன்களும் அன்ஸார்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரும் இறுதி ஹஜ்ஜில் இஹ்லால் (இஹ்ராம்) செய்தார்கள். நாங்களும் இஹ்லால் செய்தோம். பின் நாங்கள் மக்காவை வந்தடைந்த போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: 'உங்கள் இஹ்லாலை உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள், ஆனால் ஹத்ய் (பலி) கொண்டு வந்தவர்களைத் தவிர' என்று கூறினார்கள். நாங்கள் கஃபாவைத் தவாப் செய்தோம், சஃபா மர்வா மலைகளில் சஃஈ செய்தோம். பின்னர் பெண்களுடன் இணைந்தோம். ஆடைகளை அணிந்தோம். 'ஹத்ய் கொண்டு வந்தவர்கள் ஹத்ய் அதன் இடத்தை அடையும் வரை இஹ்ராமை களைய முடியாது' என்று நபியவர்கள் கூறினார்கள். பிறகு, தர்விய்யா நாளில் ஹஜ்ஜுக்காக இஹ்லால் செய்யுமாறு எமக்கு உத்தரவிட்டார்கள். கிரியைகளை முடித்த பிறகு, நாங்கள் கஃபாவைத் தவாப் செய்தோம், சஃபா மர்வா மலைகளில் சஃஈயும் செய்தோம். [82] தேவையான பகுதி நிறைவுபெற்றுவிட்டது. அதாவது சஃஈ இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதை இது தெளிவாக உணர்த்துகின்றது. அல்லாஹ் தான் நன்கு அறிந்தவன். (82) ஆதாரம்: புஹாரி 1572.
முஸ்லிம் அவர்கள் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் என்று கூறியதாவது: “நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்கள் ஸபா மற்றும் மர்வா இடையே ஒரு தவாப் மட்டுமே செய்தார்கள்.” (83), அது அவர்களது முதல் தவாபைக் குறிக்கின்றது. இது, நபித் தோழர்களில் ஹத்யு கொண்டுவந்தவர்களுக்கு உரியது. ஏனெனில் அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிலிருந்தும் பூரணமாக வெளியேறும் வரை இஹ்ராமில் இருந்தனர். நபியவர்களும் ஹஜ் மற்றும் உம்ராவிற்கும் சேர்த்தே இஹ்ராம் நிய்யத் வைத்தார்கள். மேலும் ஹத்ய் கொண்டு வந்தவர்களுக்கு ஹஜ்ஜோடு உம்ராவையும் சேர்த்து இஹ்ராம் நிய்யத் வைக்கும் படிக் கூறி, இரண்டையும் நிறைவு செய்யும் வரை இஹ்ராமை களையவேண்டாம் என்றும் உத்தரவிட்டார்கள்; ஹஜ்ஜும் உம்ராவும் ஒன்றாகச் செய்பவருக்கு(கிரான் முறையில்) ஒரு முறை ஸஃஈ செய்வது போதுமானது, ஏற்கனவே கூறப்பட்ட ஜாபிர் (ரழி) அவர்களின் ஹதீஸும் மற்ற நம்பகமான ஹதீஸ்களும் அதையே உணர்த்துகின்றன. [83] ஆதாரம் : முஸ்லிம், 1215.
இவ்வாறே, ஹஜ்ஜை தனித்து (இப்ராத் முறையில்) நிறைவேற்றி, பத்தாவது தினம் வரை தமது இஹ்ராமில் நிலைத்திருப்பவரும், ஒரு ஸஈ செய்தால் போதுமானதாகும். அதே போன்று வருகைக்கான தவாப் (தவாபுல் குதூம்) செய்த பின் கிரான் மற்றும் இப்ராத் செய்பவர்கள் ஸஃஈ செய்தால், அது தவாபுல் இபாழாவுக்குப் பின் செய்ய வேண்டிய ஸஈயிக்கும் சேர்த்து போதுமானதாகும். இதுவே ஆஇஷா (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ்களையும், ஜாபிர் (ரழி) அவர்களின் ஹதீஸையும் ஒருங்கிணைக்கும் வழியாகும். இதனால் முரண்பாடுகள் நீங்கும், அனைத்து ஹதீஸ்களும் செயல்படுத்தப்படும்.
இந்த இணக்கப்பாட்டை பலப்படுத்தும் இன்னுமொரு ஆதாரமாக, ஆயிஷா மற்றும் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் ஹதீஸ்களும் ஆதாரபூர்வமானதாக உள்ளன. மேலும் இவை தமத்துவு முறையில் ஹஜ் செய்யும் போது மேற்கொள்ளும் இரண்டாவது சஃஈயை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அறிவித்த ஹதீஸ் வெளிப்படையில் இதனை மறுக்கின்றது. மறுக்கும் அறிவிப்பை விட, உறுதிப்படுத்தும் அறிவிப்பே முன்னுரிமை பெறும் என்பது உஸூலுல் பிக்ஹ் மற்றும் உஸூலுல் ஹதீஸ் கலையின் நிபந்தனைகளில் உறுதியான ஒன்றாகும். அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு சரியான வழியை காட்டுவான். அல்லாஹ்வின் உதவியின்றி எதுவும் சாத்தியமில்லை.
பிரிவு.
பலியிடும் (நஹ்ர்) நாளில், ஒரு ஹாஜி செய்யும் மிகச் சிறந்த செயல்களை விளக்குதல்.
ஹஜ் செய்பவர் நஹ்ருடைய தினத்தில் இந்த நான்கு காரியங்களையும் பின்வருமாறு ஒழுங்குபடுத்துவது சிறந்தது: முதலில் ஜம்ரதுல் அகபாவிற்கு கல்லெறிய வேண்டும், பின் பிராணியை அறுத்துப்பலியிட வேண்டும், பின் தலை முடியை வழிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும், பின் பைத்துல்லாஹ்வை தவாப் செய்ய வேண்டும், பின் ஸஈயை செய்ய வேண்டும். இது தமத்துஉ முறையில் நிய்யத் வைத்தவரின் ஒழுங்காகும். அதே போன்று இப்ராத் மற்றும் கிரான் அடிப்படையில் ஹஜ் செய்பவர்களும், தவாபுல் குதூமுடன் ஸஈயை முற்படுத்தி செய்யவில்லையென்றால் அவர்களுக்கும் இது பொருந்தும்; மேலும் இந்த ஒழுங்கில் ஏதும் ஒன்றை முற்படுத்தவோ அல்லது பிற்படுத்தவோ முடியும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதற்கான அனுமதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குள் ஸஈயை தவாபுல் இபாழாவுக்கு முன்னதாகச் செய்வதும் அடங்கும்; ஏனெனில் இது நஹ்ருடைய தினத்தில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகும். ஏனெனில், அந்த நாளில் எதையாவது முன்னதாகவோ பின்னதாகவோ செய்வது பற்றி வினவிய போது, நபி (ஸல்) அவர்கள், செய்யுங்கள், எந்தத் தடையும் இல்லை" ([84])ன்றே கூறினார்கள். மேலும், இந்த விடயங்களிலே மறதி மற்றும் தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, இதிலே இலகும், வசதியும் இருப்பதனால், இந்த பொதுவான வார்த்தையில் இதுவும் உள்ளடங்கும். (84) ஆதாரம் : புஹாரி (83), முஸ்லிம் (1306).
ஆதாரப்பூர்வமான ஓர் அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், தவாப் செய்ய முன் ஸஃயு செய்தவர் குறித்து கேட்கப்பட்டபோது நபியவர்கள்: எந்தத் தடையும் இல்லை" என்று கூறினார்கள். [85] உசாமா பின் ஷரீக் (ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் இந்த ஹதீஸை அபூதாவூத் அவர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் மூலம் பதிவு செய்துள்ளார். எனவே, இதுவும் இந்தப் பொதுவான வார்த்தையில் உள்ளடங்கும் என்பது சந்தேகமின்றித் தெளிவாக விளங்குகின்றது. அல்லாஹ்வே அருள் புரிபவன். (85) ஆதாரம்: அபூதாவூத் 2015.
ஹஜ்ஜின் முழுமையான தஹல்லுல் (விடுதலை) மூன்று காரியங்களின் மூலம் ஏற்படுகின்றது. அவை: ஜம்ரதுல் அகபாவிற்கு கல்லெறிதல், தலைமுடியை வழித்தல் அல்லது குறைத்தல், மற்றும் முன்னர் குறிப்பிடப்பட்டதற்கேற்ப ஸஈயுடன் தவாபுல் இபாழாவை நிறைவேற்றுதல். இம்மூன்றையும் செய்தால், இஹ்ராத்தின் போது தடுக்கப்பட்டிருந்த பெண்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் பிற அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது. இதில் இரண்டையேனும் செய்தால், பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது. இதுவே "முதல் தஹல்லுல்" என அழைக்கப்படுகிறது.
ஹாஜிகள் ஸம்ஸம் நீரை நிறைவாகக் குடிப்பதும், முடியுமான விதத்தில் பயனுள்ள துஆகளைச் செய்வதும் விரும்பத்தக்கதாகும். ''ஸம்ஸம் நீர் எதற்காக அருந்தப்படுகிறதோ அது நிறைவேறும்.'' [86]. ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரின் சிறப்பை பற்றி பின்வருமாறு கூறினார்கள் என அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: «அது பசித்தவருக்கு உணவாகவுள்ளது» [87]. அதற்கு மேலதிகமாக அபூ தாவூத் அவர்கள், «மற்றும் நோய்க்கு மருந்தாகும்» (88). (86) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 3062 ல் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. (87) ஆதாரம்: முஸ்லிம் 2473. [88] அபூ தாவூத் அத்தயாலஸி அவர்கள் அபூதர் (ரழி) அவர்களின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வரலாறு சம்பந்தமான அதே ஹதீஸில் இதனை கொண்டுவந்துள்ளார்கள். முஸ்னத் அபூ தாவூத் அத்தயாலஸி ஹதீஸ் எண் 459 பார்க்கவும்.
தவாபுல் இஃபாலாவையும் மற்றும் ஸஈ கடமையுள்ளவர்கள் ஸஈயையும் நிறைவேற்றிய பின், மினாவிற்குத் திரும்பி, அங்கு மூன்று நாட்கள் இரவுகளுடன் கழிக்க வேண்டும். மூன்று நாட்களிலும் சூரியன் சாய்ந்த பின் மூன்று ஜம்ராக்களுக்கும் ஒழுங்குமுறைப்படி கல்லெறிய வேண்டும்.
முதலாவது ஜம்ராவைக்கொண்டு ஆரம்பிக்கவேண்டும். இது மஸ்ஜிதுல் கைஃப்பிற்கு அருகில் உள்ளது. அதில் ஏழு கற்களை தொடர்ந்து எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் கையை உயர்த்த வேண்டும். பின்னர் அதிலிருந்து சற்று விலகி அதை இடப்புறத்தில் வைத்து, கிப்லாவை நோக்கி கைகளை உயர்த்தி துஆக்களை அதிகமாக செய்ய வேண்டும்.
பிறகு முதல் ஜமரா போல் இரண்டாவது ஜமராவிலும் கல் எறிந்து, சற்று முன்னே சென்று அதை வலப்புறமாகக் கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நின்று, கைகளை உயர்த்தி அதிகம் துஆ செய்வது சுன்னத் ஆகும்.
பின்னர் மூன்றாம் ஜம்ராவில் எறிந்து, அதனருகே நின்று துஆ செய்யாமல் சென்றுவிட வேண்டும்.
பின் அய்யாமுத் தஷ்ரீக் இரண்டாம் நாளில், முதல் நாளில் எறிந்ததைப் போலவே, சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் கல்லெறிய வேண்டும், மேலும், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி, முதலாம் நாளில், முதல் இரு ஜம்ராக்களிலும் செய்ததைப் போலவே இரண்டாம் நாளிலும் செய்யவேண்டும்.
முதலிரண்டு அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் கல்லெறிதல் ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும். அதேபோல முதல் இரவும், இரண்டாம் இரவும் மினாவில் தங்குதலும் கடமையாகும். ஆனால் ஹாஜிகளுக்கு தண்ணீர் வழங்குபவர்கள், மந்தை மேய்ப்பவர்கள் போன்றவர்களுக்கு இது கடமையல்ல.
மேற்கூறிய இரண்டு நாட்களில் கல்லெறிந்து முடிந்ததும் விரும்பியவருக்கு சூரியன் அஸ்தமிக்க முன்னர் மினாவை விட்டுப் புறப்பட்டுச் செல்லலாம். ஒருவர் தாமதித்து மூன்றாம் இரவும் அங்கு தங்கி, மூன்றாம் நாள் கல்லெறிந்தால் அதுவே சிறந்ததும், அதிக நன்மையும் கொண்டதாகும், அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும், எண்ணப்பட்ட (11,12ஆகிய) நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, எவர் இரண்டு நாள்களில் (ஊர் திரும்ப வேண்டும் என்று) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் (மூன்றாவது நாளும் மினாவில் தங்குவதற்காக) தாமதித்தாரோ அவர் மீதும் அறவே குற்றமில்லை. (அதாவது,) அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு (அவர்கள் இந்த இரண்டில் எதை செய்தாலும் அவர்கள் மீது குற்றமில்லை). (அல் பகரா : 203) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களுக்கு முன் கூட்டியே புறப்படுவதற்கு அனுமதி அளித்தார்கள். ஆனால் அவர்களோ அவசரப்படவில்லை. மாறாக, மினாவில் தங்கியிருந்து 13ம் நாள் பகலில் சூரியன் சாய்ந்த பின் ஜம்ராக்களுக்கு கல்லெறிந்த பிறகு லுஹர் தொழுவதற்கு முன் புறப்பட்டுச் சென்றார்கள்.
சுயமாக கல்லெறிய முடியாத சிறுவனின் பாதுகாவலராக இருப்பவர், தமக்காக கல் எறிந்த பிறகு, அவனுக்காக ஜம்ரதுல் அகபா மற்றும் மற்ற ஜமராக்களில் கல் எறியலாம். இதேபோல் கல் எறிய இயலாத சிறுமிக்காக அவளின் பாதுகாவலராக இருப்பவர் கல் எறியலாம்; ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: 'நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ் செய்தோம். எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். குழந்தைகளுக்குப் பதிலாக நாங்கள் தல்பியா கூறினோம் மற்றும் அவர்களுக்குப் பதிலாக நாங்கள் கற்களை எறிந்தோம்.' [89] இது இப்னு மாஜாவில் பதியப்பட்டுள்ளது. (89) ஆதாரம் : திர்மிதி 927.
நோய் அல்லது முதுமை அல்லது கர்ப்பம் காரணமாக கல்லெறிய இயலாதவர் தமக்குப் பதிலாக மற்றொருவரை நியமிக்கலாம்; அல்லாஹ் கூறுகின்றான்: ஆக, நீங்கள் முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அத்தஃகாபுன் : 16). ஏனெனில் இவர்களுக்கு ஜம்ராத் அருகே மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத காரணத்தினாலும், கற்களை எறியும் நேரம் கடந்தால் அதனை களா செய்ய முடியாது என்பதனாலும், ஏனைய கிரியைகளைப் போலன்றி தமக்குப் பதிலாக மற்றவர்களை பொறுப்புச்சாட்ட முடியும். ஆனால், ஹஜ் அல்லது உம்ரா செய்ய இஹ்ராம் கட்டியவர், அது நபிலாக இருந்தாலும் கூட, ஏனையவற்றில் அவருக்குப் பதிலாக மற்றொருவரைச் செய்ய அனுமதிக்கக் கூடாது; மாறாக அவரே அவற்றை முழுமைப்படுத்தவேண்டும். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும், நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள்... (அல் பகரா : 196) தவாஃப் மற்றும் சஃஈயின் காலம் முடிவதில்லை, ஆனால் கல் எறிதலின் காலம் வரையறுக்கப்பட்டதாகும்.
அரபாவில் தரித்தல், முஸ்தலிபா மற்றும் மினாவில் இரவில் தங்குதல் ஆகியவற்றின் காலம் வரையறுக்கப்பட்டதாகும். அவை தவறிப்போவதில் சந்தேகமில்லை, ஆனால் இயலாதவர்கள் சிரமத்துடனாவது இவ்விடங்களுக்கு வரமுடியும். ஆனால் ஜம்ராவில் கல்லெறிதல் அவ்வாறல்ல. மேலும், அதில் நேரடியாக செய்ய முடியாத போது பிறரிடம் பொறுப்புச் சாட்ட முடியும் என்பது ஸலபுஸ்ஸாலிஹீன்களிடமிருந்து அறிவிக்கப்பட்டும் உள்ளது.
இறை வழிபாடுகள் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டவை, ஆதாரமின்றி யாரும் அதில் புதிதாக எதையும் சேர்க்கக் கூடாது. பொறுப்புச்சாட்டப்பட்டவர் தனது கல்லை முதலில் எறிந்து, பிறகு தன்னை நியமித்தவருக்காக மூன்று ஜமராக்களில் ஒவ்வொன்றாக ஒரே இடத்தில் இருந்து கல் எறியலாம். அறிஞர்களின் மிகச் சரியான கூற்றின் பிரகாரம், மூன்று ஜமராக்களையும் முழுமையாக எறிந்த பிறகு திரும்பி வந்து தன்னை நியமித்தவருக்காக எறிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஏனெனில் அதற்கான ஆதாரம் இல்லை. மேலும் அதில் சிரமமும், சங்கடமும் உள்ளது. அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) கூறுகின்றான்: ...உங்கள் மீது (உங்கள்) மார்க்கத்தில் எவ்வித நெருக்கடியையும் அவன் வைக்கவில்லை... (ஹஜ் : 78). நபி (ஸல்) கூறுகிறார்கள் : இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள் ([90]). மேலும், நபித்தோழர்கள் தங்கள் சிறார்களுக்காகவும், இயலாதவர்களுக்காகவும் எறிந்த போது இவ்வாறு செய்ததாக அறிவிக்கப்படவும் இல்லை. அவர்கள் அப்படிச் செய்திருந்தால், அது எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்; ஏனெனில் அதனை அறிவிக்க மனிதர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அல்லாஹ் மிகச் சிறந்த அறிவுடையவன். (90) ஆதாரம் : புஹாரி, ஹதீஸ் எண் (69) அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
பிரிவு.
தமத்துஃ மற்றும் கிரான் முறையில் இஹ்ராம் கட்டுபவர் மீது குர்பான் கடமையாதல்
ஹஜ் செய்பவர், தமத்துஃ முறையில் அல்லது கிரான் முறையில் ஹஜ் செய்பவராக இருந்தால் - ஹரமின் எல்லையில் வசிப்பவரல்லாவிட்டால் - ஒரு ஆடு அல்லது ஒரு மாட்டில் ஏழில் ஒன்று அல்லது ஒரு ஓட்டகத்தில் ஏழில் ஒன்று குர்பானாகக் கொடுக்கவேண்டும். அது ஹலாலான சம்பாத்தியத்திலிருந்து மற்றும் நல்ல வருமானத்திலிருந்து இருக்க வேண்டும்; ஏனெனில் அல்லாஹ் தூயவன், தூயதைத் தவிர ஏற்றுக்கொள்ளமாட்டான்.
ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ் பிறரிடம் கேட்காமல், தாமாகவே ஹத்யு கொடுப்பதற்கான வசதியை வழங்கியிருந்தால், ஆட்சியாளர்கள் உட்பட, எந்த மனிதர்களிடமும், ஹத்யையோ வேறு எதனையுமோ கேட்கக்கூடாது. ஏனெனில் யாசிப்பதை இழிந்துரைத்தும், அதை விட்டு விடுபவர்களைப் புகழ்ந்துரைத்தும் பல ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ளன.
தமத்துஃ முறையிலோ கிரான் முறையிலோ ஹஜ் செய்பவர், குர்பானி செய்ய இயலாதவராக இருந்தால், ஹஜ்ஜின் போது மூன்று நாட்களும், வீடு திரும்பிய பிறகு ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். அந்த மூன்று நாட்களை நோன்பு நோற்பதில் அவர் விருப்பம் கொண்டால் துல்ஹஜ் பத்தாம் தினத்திற்கு முன்பாகவும் அல்லது அய்யாமுத் தஷ்ரீக் என்னும் மூன்று நாட்களிலும் நோற்கலாம். அல்லாஹ் கூறினான்: எவர் உம்ரா செய்துவிட்டு (இஹ்ராமிலிருந்து வெளியேறி) ஹஜ்ஜு(க்கும் இஹ்ராம் கட்டுகின்ற) வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர் தனக்கு) இலகுவான பலிப் பிராணியை அறுக்கவும். எவர் (பலிப் பிராணியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள் (ஹஜ் முடித்து) திரும்பிய பின் ஏழு நாட்களும் நோன்பு வைக்க வேண்டும். அவை முழுமையான பத்து நாட்களாகும். (ஹஜ் தமத்துஃ செய்கின்ற அனுமதியாகிய) அது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் (-மக்காவில்) வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். (அல் பகரா : 196) மேற்கூறிய அல்குர்ஆன் வசனத்தைப் படிக்கவும்.
சஹீஹ் அல்-புகாரியில், ஆஇஷா (ரலி), மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹத்ய் (குர்பானி)செய்ய முடியாதவர்களைத் தவிர, வேறு யாருக்கும் அய்யாமுத்த ஷ்ரீகுடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதி அளிக்கப்படவில்லை (91) இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் மர்பூவான ஹதீஸின் சட்டத்தைப் பெருகிறது. அறபா தினத்துக்கு முன் மூன்று நாட்கள் நோன்பு நோற்றலே சிறந்ததாகும். அப்போது அவர் அரபா தினத்தில் நோன்பின்றி இருக்கலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறபா தினத்தில் நோன்பு நோற்றதில்லை, மேலும் அறபா தினத்தில், அரபாவில் நோன்பு நோற்றல் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் நோன்பை விடுவது திக்ர் மற்றும் துஆவில் அதிக உற்சாகத்தோடு ஈடுபட ஆற்றலை கொடுக்கும். குறிப்பிடப்பட்ட மூன்று நாட்களை தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளியுடனோ நோற்கலாம், அதேபோல ஏழு நாட்களையும் தொடர்ச்சியாக நோற்க வேண்டிய அவசியமில்லை, அவற்றை ஒன்றாகவோ அல்லது பிரித்தோ நோற்கலாம்; ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவற்றில் தொடர்ச்சியை விதியாக்கவில்லை, எனவே சிறந்தது, அவர் குடும்பத்தினரிடம் திரும்பிய பின் அந்த ஏழு நாட்களை நோற்பதாகும். அல்லாஹ் கூறுகின்றான்: ...ஏழு நாட்களும் நீங்கள் (ஹஜ் முடித்து) திரும்பிய பின்... (அல் பகரா : 196). (91) ஆதாரம்: புஹாரி 1998.
குர்பான் பிராணியை வாங்க இயலாதவர்கள் நோன்பு நோற்பதானது, அரசர்களிடமோ அல்லது பிறரிடமோ தமக்காக பலிப்பிராணியைக் கேட்டு அறுப்பதை விடச் சிறந்ததாகும். யாரேனும் யாசிக்காமலோ அல்லது ஆசைப்படாமலோ இருக்கும் நிலையில், குர்பானி போன்ற ஒன்றைப் பெற்றுக்கொண்டால், அதில் தவறில்லை. அவர் மற்றொருவருக்காக ஹஜ் செய்யும் போது கூட. அதாவது, அவருக்கு பணம் கொடுத்தவர்கள் பலிப்பிராணி வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்காவிட்டால். ஆனால் சிலர் அரசாங்கத்திடமோ அல்லது பிறரிடமோ குர்பான் பிராணி கேட்பதும், அதில் பொய்யாக இருப்பதும், நிச்சயமாகத் தடைசெய்யப்பட்டதாகும்; ஏனெனில் இது பொய்யின் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கு உதவுகிறது. அல்லாஹ் நம்மையும் முஸ்லிம்களையும் அதிலிருந்து காப்பாற்றுவானாக.
பிரிவு.
ஹஜ் பயணிகளுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையை ஏவுதல்
அல்லாஹ் தனது அல்குர்ஆனிலும், நபி (ஸல்) அவர்களின் வாயிலாகவும் உத்தரவிட்டுள்ளது போன்று, ஹஜ் பயணிகள் மற்றும் அவர்களல்லாத சாதாரண மக்களுக்கு மிக முக்கியமான கடமைகளில், நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதும், ஜமாஅத்துடன் ஐவேளைத் தொழுகைகளைப் பேணி நிறைவேற்றுதலும் அடங்குகின்றன.
மக்கா மற்றும் பிற இடங்களில் உள்ள பலர் வீடுகளில் தொழுகை நடத்தி, பள்ளிவாசல்களை செயலிழக்கச் செய்வது ஷரீஅத்துக்கு முரணான தவறாகும். எனவே, அதனைத் தடுக்க வேண்டும், மேலும் மக்கள் பள்ளிவாசல்களில் தொழுகையைப் பேணி தொழுமாறு உத்தரவிட வேண்டும். ஏனெனில் பார்வையற்றவராகவும் பள்ளிவாசலுக்கு தொலைவில் வசிப்பவராகவும் இருந்த இப்னு உம்மி மக்தூம் (ரழி) அவர்கள், நபியவர்களிடம் வீட்டிலேயே தொழுதுகொள்ள அனுமதி கோரியபோது, தொழுகை அறிவிப்பு (அதான்) சப்தம் உமக்குக் கேட்கிறதா?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். அப்போது நபியவர்கள், "அப்படியானால் நீர் அதற்கு பதிலளிப்பிராக!" என்று கூறினார்கள்(92) மற்றொரு அறிவிப்பில், உமக்கு எந்த சலுகையும் இல்லை" (93) என்று கூறினார்கள் மேலும் கூறினார்கள், நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டு, பிறகும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என்று எனது மனம் எண்ணியது" ([94]) நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் இப்னு மாஜா மற்றும் பிற ஹதீஸ் நூல்களில் ஹசன் என்ற தரத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளதாவது: «யார் அழைப்பை கேட்டும், நியாயமான காரணமின்றி தொழுகைக்கு வரவில்லையோ அவருக்கு தொழுகை கிடையாது. ([95]) », இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக, ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது: யார் நாளை மறுமையில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திக்க விரும்புகிறாரோ, அவர் தொழுகைகளை, அவற்றிற்காக அழைக்கப்பட்டவுடன் பேணித் தொழுதுவரட்டும். ஏனெனில், அல்லாஹ் உங்களது நபிக்கு நேரான வழிமுறைகளை வழங்கியுள்ளான். இதுவும் அவ்வாறான வழிமுறைகளில் ஒன்றாகும். எனவே நீங்கள் இதற்கு முரணாக உங்கள் வீட்டில் தொழுதால் உங்கள் நபியின் வழியை விட்டுவிட்டவராவீர்கள். உங்கள் நபியின் வழியை விட்டுவிட்டால், நீங்கள் வழிதவறுவீர்கள். எவரொருவர் வுழூவை சிறப்பாகச் செய்து, பின்னர் பள்ளிவாசல்களில் ஒன்றுக்குச் செல்வாரானால், அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்காகவும் அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மையை எழுதுவான், அவரின் அந்தஸ்தை உயர்த்துவான், ஒரு பாவத்தை அழிக்கின்றான். எம்மில் தெளிவாக நயவஞ்சகர்கள் என அறியப்பட்டவர்கள் மாத்திரமே ஜமாஅத் தொழுகைக்கு வராமல் பின்வாங்குவதை நான் பார்த்துள்ளேன். எந்தளவுக்கெனில், எங்களில் (நடக்கமுடியாத) ஒருவர் இரு மனிதர்களால் தாங்கிக் கொண்டுவரப்பட்டு வரிசையில் வைக்கப்படுவர். (96) (92) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 2420, முஸ்லிம் ஹதீஸ் எண் 651. (93) முஸ்லிமில் ஹதீஸ் எண் 653 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அபூஹூறைரா (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. (94) அபூதாவூத் ஹதீஸ் எண் 552 ல் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (95) ஆதாரம்: முஸ்லிம் 654. (96) அபூதாவூத் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து ஹதீஸ் எண் 551 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாஜிகளும் ஏனையோரும் அல்லாஹ் தடைசெய்தவற்றைத் தவிர்த்து, அவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அதாவது, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, திருட்டு, வட்டி உண்பது, அனாதையின் சொத்தை உட்கொள்வது, வணிகத்தில் மோசடி, நம்பிக்கைத்துரோகம், போதைப் பொருட்கள் மற்றும் புகைபிடித்தல், ஆடைகளை கரண்டைக்காலுக்கு கீழ் இழுத்தல், அகங்காரம், பொறாமை, கபடம், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், முஸ்லிம்களை இகழ்தல், இசைக்கருவிகளைப் பயன்படுத்துதல்; அதாவது, இசைத்தட்டு, யாழ், ரபாப், புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்துவது, பாடல்களை கேட்பது, வானொலி மற்றும் பிற இசைக்கருவிகள், நர்த் ,மற்றும் சதுரங்கம் விளையாடுதல், சூதாடுவது , மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் படங்களை உருவாக்குதல், அதனை அனுமதித்தல், இவை அனைத்தும் அல்லாஹ் தடைசெய்த தீய செயல்களாகும், அவற்றை ஹஜ் பயணிகள் மற்றும் புனித கஃபாவின் குடியிருப்பவர்கள் மற்றவர்களை விட அதிகம் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இந்த பாதுகாப்பான நகரத்தில் பாவங்கள் செய்வது மிகவும் கடுமையான தண்டனைக்குரியதாகும்.
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். எவர் அ(ந்த மஸ்ஜி)தில் அநியாயமாக பாவம் செய்ய நாடுவாரோ, துன்புறுத்துகின்ற தண்டனையை நாம் அவருக்கு சுவைக்க செய்வோம். (அல் ஹஜ் : 25) அல்லாஹ், அவனது புனித இடத்தில் அநியாயம் செய்ய நினைப்பவருக்கே கடும் தண்டனை உண்டென எச்சரித்திருக்கின்றான் என்றால், அதைச் செய்தவருக்கு கிடைக்கும் தண்டனை எப்படி இருக்கும்? அது மிகக் கடுமையாகவும், கோரமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே அதிலிருந்து மற்றும் பிற பாவங்களிலிருந்தும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.
ஹஜ் செய்பவர்கள் இந்த பாவங்களையும் அல்லாஹ் தடை செய்த பிற பாவங்களையும் தவிர்க்காவிட்டால், அவர்களுக்கு ஹஜ்ஜின் நன்மை மற்றும் பாவமன்னிப்பு கிடைக்காது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் யாரேனும் ஹஜ் செய்தால், அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புவார்.” [97]. (97) புகாரியில் ஹதீஸ் எண் 1521 லும், முஸ்லிமில் ஹதீஸ் எண் 1350 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பவர் : அபூஹூறைரா (ரழி) அவர்கள்.
இந்தக் குற்றங்களிலும் மிகக் கடுமையானதும் மிகப் பெரியதுமாவது, மரணித்தோரிடம் பிரார்த்தித்தும், பாதுகாப்புத் தேடியும், அவர்களுக்கு நேர்ச்சை செய்தும், அவர்களுக்காக அறுத்துப் பலியிட்டும், அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைக்க வேண்டும் எனவும், அல்லது அவர்களின் நோயை குணப்படுத்த வேண்டும் எனவும், அவர்களின் காணாமல் போனவர் திருப்பி வரவேண்டும் எனவும் எதிர்பார்ப்பதாகும்.
இது அல்லாஹ் ஹராமாக்கிய பெரிய இணைவைப்பாகும், இது ஜாஹிலிய்ய முஷ்ரிகீன்களின் மார்க்கமாகும். இதனைத் தான் கண்டித்தும், தடுத்தும் அல்லாஹ் தூதர்களை அனுப்பி, வேதங்களை அருளினான்.
ஆகவே ஹஜ் பயணிகள் மற்றும் ஏனைய அனைவரும் இதனைத் தவிர்க்க வேண்டும். இதற்கு முந்தைய காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி புதிய ஹஜ் செய்ய வேண்டும். ஏனெனில், பெரிய ஷிர்க் அனைத்து அமல்களையும் அழிக்கின்றது, அல்லாஹ் கூறுகிறான்: இன்னும், அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல் அன்ஆம் : 88)
சிறிய இணைவைப்பின் வகைகளில் ஒன்று: அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதாகும். உதாரணமாக நபியைக் கொண்டும், கஃபாவைக் கொண்டும், அமானிதத்தைக் கொண்டும் சத்தியம் செய்தல்.
முகஸ்துதி, கூறிக் காட்டுதல், 'மாஷாஅல்லாஹு வஷிஃத' (அல்லாஹ்வும் நீயும் நாடினால்) என்று கூறுவது, 'நீயும், அல்லாஹ்வும் இல்லாவிட்டால்' என்று கூறுவது, 'இது அல்லாஹ்விடமிருந்தும் உன்னிடமிருந்தும்' என்று கூறுவது போன்றவைகளும் அதனுள் அடங்கும்.
இந்த இணைவைப்பு ரீதியான பாவங்களை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும், அவற்றை விட்டு விடுமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொள்வதும் அவசியமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் நிராகரித்து விட்டார் அல்லது அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார்' [98]. இந்த ஹதீஸை அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ ஆகியோர் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் மூலம் பதிவு செய்துள்ளனர். (98) அபூதாவூத்: 3251.
புகாரியின் அறிவிப்பில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : யாராவது சத்தியம் செய்பவதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும், அல்லது மௌனித்திருக்கட்டும்.” [99] மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள் : “யார் அமானிதத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றாரோ, அவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல” ([100]). ஆதாரம் : அபூ தாவூத் (99) ஆதாரம்: அபூதாவூத் 3253. (100) ஆதாரம் : புஹாரி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரழி) (2679), முஸ்லிம் (1646).
மேலும் கூறினார்கள் : “உங்களிடம் நான் மிக அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பாகும்” பின்பு, அது குறித்து வினவப்பட்ட போது “முகஸ்துதி” எனக் கூறினார்கள்” [101]. மேலும் கூறினார்கள், “அல்லாஹ்வும் இன்னவரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னவரும் நாடினார் என்று கூறுங்கள்” [102] நஸாயி அவர்கள் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர், " யா ரஸூலல்லாஹ், அல்லாஹ்வும் நீங்களும் நாடியது" என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: «நீ என்னை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிவிட்டாயா? அல்லாஹ் ஒருவன் நாடியது மட்டுமே.» என்று கூறினார்கள். (103) (101) அஹ்மதில் பாகம் 5 பக்கம் 428ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. (102) ஆதாரம் : அபூதாவூத் 4980. (103) ஆதாரம்: இப்னுமாஜா 2117.
இந்த நபிமொழிகள், நபி(ஸல்)அவர்கள் ஓரிறைக் கொள்கையின் மகத்துவத்தை பாதுகாத்ததையும், தமது சமூகம் பெரிய, சிறிய இணைவைப்பில் விழுந்து விடாமல் எச்சரிக்கை விடுத்ததையும், மேலும் அவர்களின் ஈமானை பாதுகாத்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து விடுதலையுடனும் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறையாக இருந்ததையும் வெளிப்படுத்துகின்றன. இதற்காக அல்லாஹ் அவர்களுக்கு மிகப்பெரும் நன்மையை வழங்குவானாக. ஏனெனில் அவர்கள் எத்திவைத்தும், எச்சரித்தும், அல்லாஹ்விற்கும், அவனது அடியார்களுக்கும் நன்மை நாடினார்கள். நபி(ஸல்)அவர்கள் மீது நிலையான சாந்தியும், சமாதானமும் மறுமை வரை உண்டாகட்டும்.
அல்லாஹ்வின் பாதுகாப்பான புனித நகரமான மக்கா மற்றும் அவனது அன்பு தூதரின் நகரமான மதீனா ஆகியவற்றில் குடியிருப்பவர்களிலும், ஹஜ் பயணிகளிலும் உள்ள மார்க்க அறிஞர்கள், அல்லாஹ் விதித்துள்ள மார்க்க சட்டங்களை மக்களுக்கு அறிவிப்பதும், அல்லாஹ் தடை செய்துள்ள பல்வேறு வகையான ஷிர்க் மற்றும் பாவங்களில் இருந்து அவர்களை எச்சரிப்பதும் அவசியமாகும். இதனை ஆதாரங்களுடன் விரிவாகவும் தெளிவாகவும் விளக்க வேண்டும்; இதன் மூலம் மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், அல்லாஹ் அவர்கள் மீது விதித்துள்ள நன்மையை எத்திவைத்தல் மற்றும் தீமையை தடுத்தல் ஆகிய கடமைகளை நிறைவேற்றவும் வேண்டும். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா கூறுகிறான்: அந்த சமயத்தை நினைவு கூருங்கள்: “வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் உறுதிமொழியை அல்லாஹ் வாங்கினான். அதாவது, அ(ந்த வேதத்)தை மக்களுக்கு நிச்சயம் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்; இன்னும், அதை நீங்கள் மறைக்க மாட்டீர்கள்’’ என்று. (ஆல இம்ரான் : 187)
இதன் நோக்கமாவது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் அத்துமீறியவர்கள் மறுமையை விட இவ்வுலக வாழ்வுக்கு முன்னுரிமையளித்து, சத்திய மார்க்கத்தை மறைத்தது போன்ற வழியில் செல்வதை விட்டும் எச்சரிப்பதாகும். அல்லாஹ் கூறுகின்றான்: “தெளிவான சான்றுகள் இன்னும் நேர்வழியை நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னர் நிச்சயமாக எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள்.” எவர்கள் (தங்கள் தவறுகளிலிருந்து திருந்தினார்களோ), மன்னிப்புக்கோரினார்களோ, (தங்களை) சீர்திருத்திக் கொண்டார்களோ, (தாங்கள் மறைத்த உண்மைகளை மக்களுக்கு) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. ஆக, அவர்களுடைய தவ்பாவை நான் அங்கீகரிப்பேன். நான்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவேன். 160 (அல்பகரா: 159-160) அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுத்தல் மற்றும் மனிதர்களை அவர்கள் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தின்பால் வழிநடத்துதல் மிகச் சிறந்த வணக்கங்களிலும் முக்கியமான கடமைகளிலும் ஒன்றாகும் என்பதை குர்ஆன் வசனங்களும் நபிமார்களின் ஹதீஸ்களும் தெளிவுபடுத்துகின்றன. இது இறைத்தூதர்களின் மற்றும் மறுமை நாள்வரை அவர்களை பின்தொடர்பவர்களின் வழியாகும். அல்லாஹ் கூறுகின்றான்: யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்? (புஸ்ஸிலத் : 33)، மேலும் அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) கூறுவீராக: “(அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவது,) இதுதான் என் பாதையாகும். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்தவர்களாக அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.” (யூஸுஃப்: 108).
நபி (ஸல்) கூறுகிறார்கள் : ஒரு நலவின் பால் வழிகாட்டியவருக்கு அதைச் செய்தவரின் கூலியும் உண்டு" [104] 'அல்லாஹ் உன் மூலம் ஒருவரை நேர் வழி காட்டுவது, அது நீ சிவப்பு ஒட்டகங்களை வைத்திருப்பதை விட உமக்கு சிறந்ததாகும்' [105] இதே கருத்தில் அதிகமான திரு வசனங்களும் ஹதீஸ்களும் வந்துள்ளன. [104] ஆதாரம் : முஸ்லிம், 1893. (105) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 3009, முஸ்லிம் ஹதீஸ் எண் 2406.
அறிவும், ஈமானும் கொண்டவர்கள் தஃவா (அழைப்புப்) பணியில் தங்கள் முயற்சிகளைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். மேலும் அடியார்களுக்கு வெற்றிக்கான காரணிகளை எடுத்துரைப்பதோடு, அழிவுக்கான காரணங்களிலிருந்து எச்சரிக்கவும் வேண்டும். குறிப்பாக, ஆசைகள் மேலோங்கி, மோசமான கொள்கைகள் பரவலாகவும், வழிகேடான கோஷங்கள் அதிகமாகவும் காணப்படுகின்ற, நேர்வழி காட்டுபவர்கள் குறைந்து, நாத்திகமும், ஒழுக்கக்கேடுகளும் பரப்புபவர்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இது முக்கியத்துவம் பெறுகின்றது. அல்லாஹ்வே உதவியாளன்! அல்லாஹ் அல்லாதவரால் எதுவும் சாத்தியமில்லை.
பிரிவு.
வணக்கவழிபாடுகளில் அதிகம் ஈடுபடுவது விரும்பத்தக்கது
மக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் ஹாஜிகள் அல்லாஹ்வை திக்ர் செய்வதிலும், அவனுக்கு கீழ்ப்படிவதிலும், நற்செயல்களில் ஈடுபடுவதிலும் தொடர்ச்சியாக ஈடுபடுவது விரும்பத்தக்கது. தொழுகைகளையும், புனித கஃபாவை வலம் வருதலையும் அதிகமாக நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் ஹரமில் நன்மைகள் இரட்டிப்பாகும், பாவங்கள் மிகவும் கடுமையானவையாகும். மேலும் நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்தும் சொல்ல வேண்டும்.
ஹாஜிகள் மக்காவிலிருந்து புறப்பட விரும்பினால், அவர்கள் இறுதியாக தவாபுல் வதாஃ செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களது கடைசி சந்திப்பு கஃபாவாக இருக்கும். ஆனால் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் உள்ள பெண்களுக்கு தவாபுல் வதாஃ கட்டாயமில்லை. இதற்கு ஆதாரமாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்த பின்வரும் ஹதீஸ் உள்ளது: (ஹஜ்ஜை முடித்துத் திரும்பும்) மக்கள் இறுதியாக செய்வது கஃபாவைத் தவாப் செய்வதாக இருக்கவேண்டும் என ஏவப்பட்டுள்ளார்கள். என்றாலும் மாதவிடாயுள்ள பெண்ணுக்கு இதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. [106] (106) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 1755, முஸ்லிம் ஹதீஸ் எண் 1328
அவர் புனித கஃபாவுக்கு பிரியாவிடை கொடுத்து பள்ளிவாயளிலிருந்து வெளியேற விரும்பினால், அவன் நேராக சென்று வெளியேற வேண்டும்; பின்னோக்கி நடப்பது நபியவர்களிடமிருந்து அல்லது அவர்களின் தோழர்களிடமிருந்து வந்த வழிமுறை கிடையாது. இது புதிதாக உருவான பித்அத்தாகும். நபியவர்கள் கூறியதாவது: எவரேனும் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்வாராயின் அது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்" (107). மேலும் கூறினார்கள், புதிதாக உருவாக்கப்படும் விடயங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன், ஏனெனில் ஒவ்வொரு புதிதாக உருவாக்கப்பட்ட விடயமும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் [108]. (107) முன் குறிப்பிடப்பட்ட ஆதார நூல். (108) முஸ்லிமில் ஹதீஸ் எண் 867 ல் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்விடம் அவனது மார்க்கத்தின் மீது உறுதியையும், அதற்கு முரண்பட்டவற்றில் இருந்து பாதுகாப்பையும் வேண்டுகிறோம். அவன் கண்ணியமானவன், கொடையாளன்.
பிரிவு.
மதீனாவை சியாரத் செய்வதன் சட்டங்களும் ஒழுங்குகளும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாயிலை ஹஜ்ஜுக்கு முன்போ, பின்போ தரிசிப்பது ஸுன்னத்தாகும். ஏனெனில் புகாரி, முஸ்லிமின் அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : என்னுடைய இப்பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராத்தைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விட மேலானதாகும்." [109] நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : என்னுடைய இப்பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராத்தைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விட மேலானதாகும்." [110] ஆதாரம் : முஸ்லிம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: என்னுடைய இப்பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராத்தைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விட சிறப்பாகும். மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது என்னுடைய இப்பள்ளியில் தொழும் நூறு தொழுகைகளை விடவும் சிறப்பானதாகும்." [111] ஆதாரம்: அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான். (109) ஆதாரம் : புஹாரி 1190, முஸ்லிம் 1394. (110) ஆதாரம் : முஸ்லிம் 1395. (111) அஹ்மதில் பாகம் 4 பக்கம் 5ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : என்னுடைய இப்பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராத்தைத் தவிர ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறப்பாகும். மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் ஒரு இலட்சம் தொழுகைகளை தொழுவதை விடவும் சிறப்பானதாகும்." [112] ஆதாரம்: அஹ்மத், இப்னு மாஜஹ். இதே போன்ற கருத்தில் பல நபிமொழிகள் உள்ளன. (112) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 1406 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஸ்ஜிதை வந்தடைந்தவருக்கு, உள்ளே நுழையும் போது தனது வலது காலால் முன்வைத்து, “بِسْمِ اللهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِ، أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ القَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ” என்று கூறுவது விரும்பத்தக்கதாகும்.
மற்ற பள்ளிகளில் பிரவேசிக்கும் போதும் இதையே கூற வேண்டும். நபி (ஸல்) அவர்களின் பள்ளியில் பிரவேசிப்பதற்கு தனிப்பட்ட திக்ர் எதுவும் இல்லை. பின்னர் இரண்டு ரக்அத்களை தொழுது, உலக, மறுமை வாழ்விற்குத் தேவையான நன்மைகளை வேண்டியும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். மேலும் அந்த இரு ரக்அத்களையும் ரெளலா ஷரீபில் தொழுதால், அது சிறப்பானதாகும்; ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்" [113]. பிறகு தொழுகையை முடித்த பின் நபியவர்களின் கப்ரையும், அவர்களின் இரு தோழர்களான அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் கப்ருகளையும் தரிசிக்க வேண்டும். நபியவர்களின் கப்ருக்கு அருகில் அமைதியாகவும் ஒழுக்கத்துடனும் குரலைத் தாழ்த்தி நின்று, "அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு" என ஸலாம் கூற வேண்டும். ஸுனன் அபூ தாவூதில், ஹஸன் தரத்திலான அறிவிப்பாளர் வரிசையில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: «யாராவது ஒருவர் என்மீது ஸலாம் கூறினால் அவருக்கு பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனது உயிரை மீண்டும் திருப்பித்தருகிறான்» [114]. நபியவர்களின் கப்ரை தரிசிப்பவர் தனது ஸலாமில்: "அஸ்ஸலாமு அலைக யா நபிய்யல்லாஹ், அஸ்ஸலாமு அலைக யா கீரதல்லாஹ் மின் கல்கிஹி, அஸ்ஸலாமு அலைக யா ஸையிதுல் முர்ஸலீன் வஇமாமுல் முஸ்லிமீன், அஷ்ஹது அன்னக கத் பல்லக்த ரிஸாலா வஅத்தைத்தஅமானா வநஸஹ்தல் உம்மத வஜாஹத்த பில்லாஹி ஹக்க ஜிஹாதிஹி" என்று கூறினால் அதில் தவறில்லை; ஏனெனில் இவை அனைத்தும் நபியவர்களின் (ஸல்) பண்புகளிலிருந்தும் உள்ளதாகும். மேலும், அவர்கள் மீது ஸலவாத் கூறி, அவர்களுக்காக பிரார்த்திக்கவும் செய்வார். இவ்வாறு ஸலாமுடன் ஸலவாதும் கூறுவது மார்க்கம் காட்டிய ஒன்றாகும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! இன்னும் ஸலாம் கூறுங்கள்! (அல் அஹ்ஸாப் : 56). பிறகு அபூபக்கர் மற்றும் உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களுக்கு ஸலாம் கூறி, அவர்களுக்காக பிரார்த்தித்து, அவர்களை பொருந்திக் கொள்ளும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். (113) ஆதாரம் : புஹாரி (1195), முஸ்லிம் (1390) அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (114) ஆதாரம்: அபூதாவூத் 2041.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் அவர்களின் இரு தோழர்களுக்கும் சலாம் கூறும்போது, பெரும்பாலும் இவ்வாறு கூறுவதைத் தவிர அதிகமாகச் சொல்லமாட்டார்கள்: அஸ்ஸலாமு அலைக யா ரஸூலல்லாஹ், அஸ்ஸலாமு அலைக யா அபா பக்கர், அஸ்ஸலாமு அலைக யா அபதாஹ் (என்னுடைய தந்தையே!) பின் திரும்பி விடுவார்கள்.
இந்த தரிசனம் ஆண்களுக்கு மட்டும் ஷரீஆ அனுமதித்ததாகும், பெண்களைப்பொறுத்தவரை அவர்கள் எந்த கப்ருகளையும் தரிசிப்பதற்கு அனுமதியில்லை, ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '' கப்ருகளை -மண்ணறைகளை- அதிகம் தரிசிக்கும் பெண்களையும் , அதன் மீது பள்ளிவாசல்கள் மற்றும் விளக்குகள் அமைப்பவர்களையும் சபித்துள்ளார்கள் ([115])''. (115) ஆதாரம்: அபூதாவூத் 3236.
ஆனால் மதீனாவிற்கு பிரயாணம் செய்து, பிற பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டவற்றைப் போன்று, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பள்ளியில் தொழுதல், அதில் பிரார்த்தனை செய்தல் போன்றவை அனைவருக்கும் அனுமதிக்கப்பட்டதாகும்; இதற்கான ஆதாரங்கள் முன்பே கூறப்பட்டுள்ளன.
நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாயிலை தரிசிக்க வருபவர்களுக்கு அதிலே ஐந்து நேர தொழுகைகளை நிறைவேற்றுவதும், அதில் அதிகமாக திக்ர், துஆ, நஃபில் தொழுகைகளை நிறைவேற்றுவதும் ஸுன்னத்தாகும். ஏனெனில் அதில் பெரும் நன்மைகள் உள்ளன.
மேலே கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ரௌழா ஷரீஃபில் ஸுன்னத்தான தொழுகைகளை அதிகமாக நிறைவேற்றுவது விரும்பத்தக்கது, இதன் சிறப்பை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்" [116]. [116] ஆதாரம் முன்னர் விளக்கப்பட்டுள்ளது.
கடமையான தொழுகைகளைப் பொருத்தவரை, தரிசிக்க வந்தவர்களும், ஏனையோரும் அவற்றை முந்திச்சென்று நிறைவேற்ற வேண்டும். மேலும் முடிந்த வரை முதல் வரிசையை( அது விஸ்தரிக்கப்பட்டுள்ள முற்பகுதியாக இருந்தாலும் சரி) பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முதல் வரிசையில் நிற்பதை ஆர்வமூட்டி பல ஹதீஸ்களில் எடுத்துரைத்துள்ளார்கள். உதாரணமாக, நபியவர்கள் கூறினார்கள் : மக்கள் அதான் சொல்வதிலும், முதல் வரிசையிலும் உள்ள மகத்துவத்தை அறிந்திருந்தால், அதற்காக அவர்கள் சீட்டு குலுக்கிப்போட்டு தான் வரவேண்டி இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்திருப்பார்கள். (117) இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக அறிவித்துள்ளனர். இவ்வாறே நபியவர்கள் தமது தோழர்களை நோக்கி: “நீங்கள் முந்திக்கொள்ளுங்கள், என்னை அடுத்து நில்லுங்கள். உங்கள் பின்வருபவர்கள் உங்களை அடுத்து நிற்பார்கள். ஒருவர் தொழுகையை விட்டும் பின்வாங்கிக்கொண்டே இருப்பார், இறுதியில் அல்லாஹ் அவரை பின்தள்ளும் வரை.” என்று கூளினார்கள் [118] இமாம் முஸ்லிம் இதனை அறிவித்துள்ளார்கள். (117) முஸ்லிமில் அபூஸயீத் அல்-குத்ரி (ரழி) அவர்கள் மூலம் ஹதீஸ் எண் 438 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (118) ஆதாரம் : புஹாரி ஹதீஸ் எண் 615, முஸ்லிம் ஹதீஸ் எண் 437.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை அபூ தாவூத் ஹஸன் தரத்திலான சனதின் மூலம் பதிவு செய்துள்ளார்கள்: ஒரு மனிதன் முன் வரிசையில் இருந்து தொடர்ந்து பின்தங்கிக் கொண்டே இருந்தால், அல்லாஹ் அவனை நரகத்திலும் பின் நிலையில் வைத்துவிடுவான்." [119] ஒரூ ஆதாரபூர்வமான அறிவிப்பிலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் பின்வருமாறு கூறினார்கள்: நீங்கள் வானவர்கள் தங்கள் இறைவனிடம் வரிசையாக நிற்பது போல் வரிசையாக நிற்க மாட்டீர்களா?" அதற்கு அவர்கள்: "அல்லாஹ்வின் தூதரே, வானவர்கள் தங்கள் இறைவனிடம் எவ்வாறு வரிசையாக நிற்கின்றனர்?" என்று கேட்டனர். அதற்கு நபிகளார்: "மலக்குகள் முதல் வரிசைகளைப் பூர்த்தி செய்து, வரிசையில் நெருக்கமாக நிற்கின்றனர்" என்றார். [120] இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள். (119) முஸ்லிமில் ஜாபிர் பின் ஸமுரா மூலம் ஹதீஸ் எண் 430 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (120) அபூதாவூதில் ஹதீஸ் எண் 679 இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் வாசகம்: "முதல் வரிசையில் இருந்து பின்தங்கிக்கொண்டே இருக்கும் மக்களை அல்லாஹ் அவர்களை நரகத்திலும் பின்தள்ளுவான்.”
இந்த அர்த்தத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பள்ளிவாசலையும், பிற பள்ளிவாசல்களையும், விரிவாக்கத்திற்கு முன்பும், பிறகும் உள்ளடக்கும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்களை வரிசைகளின் வலப்புறம் நிற்பதற்கு ஊக்குவித்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக வந்துள்ளது. அவர்களின் முதல் பள்ளிவாசலில் வரிசையின் வலப்புறம் ரௌதா அல்-ஷரீபாவின் வெளியே இருந்தது என்பது தெரிந்ததே. இதனால், முதல் வரிசைகள் மற்றும் வரிசைகளின் வலப்புறம் நிற்றல், ரௌதா அல்-ஷரீபாவில் தொழுகை செய்வதை விட முக்கியமானது என்பதும், அவற்றில் ஆர்வமாக இருப்பது ரௌதாவில் தொழுவதில் ஆர்வமாக இருப்பதை விட மேலானது என்பதும் தெளிவாகிறது. இந்தத் தலைப்பில் வரும் ஹதீஸ்களை ஆராய்ந்தால் இது தெளிவாகத் தெரியும். அல்லாஹ் தான் அருள் புரிபவன்.
அந்த அறையின் சுவர்களைத் தொடவோ, முத்தமிடவோ, அல்லது அதனை வலம் வரவோ கூடாது. ஏனெனில் இது ஸலஃபுஸ் ஸாலிஹீன்களிடமிருந்து அறிவிக்கப்படாத ஒரு புதுமையான செயல் ஆகும்.
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தேவையை நிறைவேற்றுமாறோ, துயரத்தைப் போக்குமாறோ, நோயாளியை குணப்படுத்துமாறோ யாரும் கேட்கக் கூடாது. ஏனெனில் இவை அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம்தான் கேட்கப்பட வேண்டும். மரணித்தவர்களிடம் இதனை வேண்டுதல் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகவும், அல்லாஹ் அல்லாதோரை வணங்குவதாகவும் உள்ளது. இஸ்லாமிய மார்க்கம் இரண்டு அடிப்படைகளின் மீது அமைந்துள்ளது:
முதலாவது: அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது.
இரண்டாவது : நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக குறிப்பிடப்பட்டவற்றை கொண்டு மாத்திரமே அவனை வணங்கவேண்டும்.
இதுவே, அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லையெனவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் சாட்சியம் சொல்வதன் அர்த்தமாகும்.
அதுபோலவே, தூதர் (ஸல்) அவர்களிடம் பரிந்துரை வேண்டப்படலாகாது; ஏனெனில் அது அல்லாஹ்வுக்கே சொந்தமானது, அதனை அவனிடமே வேண்டவேண்டும், அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே) கூறுவீராக! சிபாரிசுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தமாகும்... (அஸ்ஸுமர் : 44). இறைவா! உனது நபியினால் எனக்கு பரிந்துரை செய்வாயாக, இறைவா! உனது வானவர்களால் எனக்கு பரிந்துரை செய்வாயாக, உனது விசுவாசிகளான அடியார்களால் எனக்கு பரிந்துரை செய்வாயாக, இறைவா! எனது குழந்தைகளால் எனக்கு பரிந்துரை செய்வாயாக" போன்ற வார்த்தைகளைக் கூறுங்கள. மரணித்தவர்களிடம் பரிந்துரையோ அல்லது வேறு எதுவோ வேண்டப்படலாகாது, அவர்கள் நபிமார்களாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் சரியே! ஏனெனில் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. மேலும் மரணித்தவரின் செயல்கள், இறைவன் விதிவிலக்களித்த சிலவற்றைத் தவிர, நிறுத்தப்பட்டுவிடுகின்றன.
முஸ்லிமின் அறிவிப்பில், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆதமின் மகன் மரணித்தால், மூன்று விடயங்களைத் தவிர அவனின் கிரியைகள் நிறுத்தப்படும்: நிலையான தர்மம், பயனுள்ள அறிவு அடுத்து அவனுக்காக துஆ செய்யும் நல்ல பிள்ளை. [121] (121) முஸ்லிமில் ஹதீஸ் எண் 1631 ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அபூஹூறைரா (ரழி) அவர்கள் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதும் மற்றும் மறுமை நாளிலும் அவர்களிடம் பரிந்துரையை வேண்டுவது அவர்களுக்கு அதற்கான ஆற்றல் உள்ளதாலே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் தமது இறைவனிடம் சென்று, பரிந்துரை வேண்டுபவரின் தேவையைக் கேட்க முடியும். இவ்வுலகில் இது தெளிவாக அறியப்பட்ட ஒன்று. அவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பொதுவானதாகும். எனவே ஒரு முஸ்லிம் தமது சகோதரரிடம் "இன்ன விடயத்திற்காக எனக்காக பரிந்துரை செய்யுங்கள்" எனக் கூறலாம், அதாவது "எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும்" எனும் பொருளில். மேலும், அவ்வாறு வேண்டப்படுபவர், அதனை கேட்டவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, அவருக்காக பரிந்துரை செய்யலாம்.
மறுமை நாளில் அல்லாஹ்வின் அனுமதியின்றி யாரும் பரிந்துரை செய்ய முடியாது, அல்லாஹ் கூறுகின்றான்: அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? (அல்பகரா : 255).
மரணம் என்பது ஒரு தனிப்பட்ட நிலை ஆகும். இதனை மனிதன் மரணத்திற்கு முன் அல்லது மறுமையில் எழுப்பப்பட்ட பின் உள்ள நிலைக்கு தொடர்புபடுத்த முடியாது. ஏனெனில் மரணித்தவரின் செயல்கள் நிறுத்தப்பட்டு, அவர் சம்பாதித்தவற்றோடு மட்டுப்படுத்தப்பட்டவராக இருப்பார், மார்க்கம் விதிவிலக்காகக் கூறியவற்றைத் தவிர. மரணித்தவர்களிடம் பரிந்துரை வேண்டுவது மார்க்கம் விதிவிலக்காகக் கூறியவற்றில் இல்லை, எனவே அதனைச் செய்ய அனுமதியில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரணத்திற்கு பின் பர்ஸகுடைய வாழ்க்கையில் இருக்கின்றார்கள். அது ஷஹீத்களின் வாழ்க்கையை விட மேம்பட்டதாகும். ஆனால் அது அவர்களின் மரணத்திற்கு முந்தைய வாழ்க்கையோ, மறுமை நாளின் பின் இருக்கும் வாழ்க்கையோ அல்ல. அதன் உண்மைத்தன்மை மற்றும் அமைப்பை அல்லாஹ் மட்டுமே அறிவான். இதனால் தான் முன் சென்ற ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ((யாராவது ஒருவர் என்மீது ஸலாம் கூறினால் அவருக்கு பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனது உயிரை மீண்டும் திருப்பித்தருகிறான்)) [122]
இது, அவர்கள் மரணித்தவர் என்பதையும், அவர்களது உயிர் உடலை விட்டுப் பிரிந்துவிட்டது என்பதையும் உணர்த்துகின்றது. ஆனால் அவர்களுக்கு ஸலாம் கூறப்படும் போது உயிர் அவரிடம் திரும்பக் கொடுக்கப்படும். அவர்கள் மரணித்துவிட்டதாகக் கூறும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் அறியப்பட்டவையாகும், மேலும் இது அறிஞர்களிடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். ஆனால் இது அவரின் பர்ஸக் வாழ்க்கையை மறுக்காது; அதேபோன்றுதான், பின்வரும் வசனத்தின் பிரகாரம், இறைப் பாதையில் உயிர்நீத்தவர்களின் மரணம், அவர்களது பர்ஸக் வாழ்க்கையை மறுக்காது. (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக எண்ணாதீர். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள், தங்கள் இறைவனிடம் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (ஆல இம்ரான் : 169). (122) ஆதாரம்: அபூதாவூத் 2041.
இந்த விடயத்தை நாம் விரிவாக எடுத்து நோக்கியதற்கான காரணம், இவ்விடயத்தில் பலர் குழப்பமடைந்து, இணைவைப்பை நோக்கியும், அல்லாஹ்வைத் தவிர்த்து மரணித்தோரை வணங்குவதற்கும், அழைப்பதாகும். எனவே, நாங்கள் அல்லாஹ்விடம், அவனுடைய ஷரீஆவிற்கு முரணான அனைத்திலிருந்தும் நமக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பை வேண்டுகிறோம். அல்லாஹ் மிகச்சிறந்த அறிவுடையவன்.
நபியவர்களின் கப்ரை தரிசிக்கும் சிலர் அதனருகில் சப்தங்களை உயர்த்துவதும், நீண்ட நேரம் அங்கு நிற்பதும் அனுமதிக்கப்படாத செயலாகும்; ஏனெனில் அல்லாஹ், நபியவர்களின் சப்தத்திற்கு மேலாக சப்தங்களை உயர்த்துவதையும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவது போல் அவரிடம் இரைந்து பேசுவதையும் தடைசெய்துள்ளான். மேலும், அவர்கள் முன்னிலையில் சப்தங்களை குறைத்துக்கொள்ளுமாறும் ஏவியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்: நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேல் உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்! இன்னும், உங்களில் சிலர், சிலருக்கு முன் உரக்கப் பேசுவதைப் போல் அவருக்கு முன் பேசுவதில் உரக்கப் பேசாதீர்கள்! நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் உங்கள் அமல்கள் பாழாகிவிடாமல் இருப்பதற்காக (அவருடன் மிக மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்!). நிச்சயமாக எவர்கள் தங்கள் குரல்களை அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் தாழ்த்திக் கொள்கிறார்களோ - அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் சோதித்து (தேர்வு செய்து) இருக்கிறான். அவர்களுக்கு (அல்லாஹ்வின்) மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (ஹுஜுராத் : 2 - 3).
நபியவர்களின் மண்ணறைக்கருகில் நீண்ட நேரம் நிற்பதும், அடிக்கடி ஸலாம் கூறுவதும், கூட்டம் அதிகரித்து, சத்தம் அதிகரித்து, நபியவர்களின் மண்ணறைக்கருகில் சப்தங்கள் உயர்வதற்குக் காரணமாக அமைந்துவிடும். இது முஸ்லிம்களுக்கு அல்லாஹ், இவ்வசனங்கள் ஊடாக விதித்துள்ள சட்டங்களுக்கு முரணாகும். நபியவர்கள் உயிரோடு இருந்தாலும், மறைந்திருந்தாலும் மதிக்கப்பட வேண்டியவர்களாகும். எனவே நபியவர்களின் மண்ணறைக்கருகில் நின்று, மார்க்க ஒழுக்கங்களுக்கு முரணான செயல்களை நம்பிக்கையுள்ள ஒருவர் செய்யக் கூடாது.
இவ்வாறே, ஸியாரத்து செய்யும் சிலர் நபியவர்களின் கப்ரின் அருகில் நின்று கப்ரை நோக்கி கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது, நபியவர்களின் தோழர்களும் அவர்களை நன்கு பின்பற்றியவர்களும் செய்த வழிமுறைக்கு மாறானதாகும். மாறாக, இது புதிதாக உருவான பித்அங்களில் ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எனது வழிமுறையையும், எனக்குப் பின்னால் வரும் நேர்வழிபெற்ற கலீபாக்களினது வழிமுறையையும் பின்பற்றுங்கள், அவற்றைப் பற்றிக்கொண்டு உங்கள் கடைவாய் பற்களால் உறுதியாகப் பிடியுங்கள்; மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், ஏனெனில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விடயமும் பித்அத் ஆகும், அனைத்து பித்அத்களும் வழிகேடாகும். [123] (123) அபூதாவூதில் அல் இர்பாழ் பின் ஸாரியா அவர்களைத் தொட்டும் ஹதீஸ் எண் 4607 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கூறினார்கள், 'எமது இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்' [124] எவரேனும் ஒருவர் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்வாராயின் அது மறுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்" (125). [124] ஆதாரம் முன்னர் விளக்கப்பட்டுள்ளது (125) இதற்கான ஆதாரம் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அலி பின் ஹுசைன் ஸைனுல் ஆபிதீன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கப்ரின் அருகில் ஒருவர் துஆ செய்வதைப் பார்த்து, அவரை அதிலிருந்து தடுத்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை எனது பாட்டன் கேட்டதாக, எனது தந்தை கூறிய ஒரு ஹதீஸை உமக்கு சொல்லித்தரவா? என்று கேட்டுவிட்டு, இவ்வாறு கூறினார்கள் :' எனது கப்ரை திருவிழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள், உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், ஏனெனில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது ஸலவாத் என்னிடம் வந்தடைகிறது"([126]). (126) ஸைனுல் ஆபிதின் அறிவிப்பை ஹாபிழ் மக்திசி அவர்கள் அறிவித்துள்ளதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தக் கதை இல்லாமல் ஹதீஸை மாத்திரம் இமாம் அஹ்மத் தனது முஸ்னதில் பதிவு செய்துள்ளார்கள். பாகம் 2 பக்கம் 367
இவ்வாறே சியாரத்து செய்யும் இன்னும் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறும் போது, தொழுகையில் வைப்பது போன்று, வலக்கையை இடக்கையின் மீது வைத்து, மார்பின் மேல் அல்லது கீழே வைப்பதும் அனுமதிக்கப்படாத ஒரு செயலாகும். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமல்லாது மற்ற மன்னர்கள், தலைவர்கள் மற்றும் பிறருக்கும் ஸலாம் கூறும் போது கூட அனுமதிக்கப்படாதது. ஏனெனில் இது அடக்கமும் பணிவும் கொண்ட ஒரு நிலைமையாகும், இது அல்லாஹ்வுக்கே உரியதாகும். இதனை ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது பத்ஹுல் பாரீ நூலில் பல அறிஞர்களைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள். இதனை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு, மற்றும் முன்னோர்களின் வழியைப் பின்பற்றும் நோக்கமுடையவர்களுக்கு இது மிகத் தெளிவான ஓர் விடயமாகும்.
ஆனால், எவரிடம் கடுமையான பிடிவாதம், மனோ இச்சை, கண்மூடித்தனமான பின்பற்றுதல் மற்றும் நல்வழியை அழைக்கும் அழைப்பாளர்களைப் பற்றிய தவறான எண்ணம் என்பன மேலோங்கிக் காணப்படுகிறதோ, அவரின் விடயம் அல்லாஹ்விடமே உள்ளது. எமக்கும் அவர்களுக்கும், சத்தியத்தை மற்ற அனைத்திற்கும் மேலாக விரும்பி ஏற்பதற்கு வழிகாட்டுமாறு நாம் கேட்கின்றோம். கேட்கப்படுபவர்களில் அவனே சிறந்தவன்.
சிலர் புனித மண்ணறையைத் தூரத்திலிருந்து நோக்கி, தமது உதடுகளை அசைத்து ஸலாம் கூறுவது அல்லது பிரார்த்தனை செய்வது போன்ற செயல்கள் முன்னர் கூறிய நூதனங்களில் ஒன்றாகும். அல்லாஹ் அனுமதிக்காததை அவனது மார்க்கத்தில் புதிதாகச் சேர்ப்பது முஸ்லிமுக்கு ஏற்றதல்ல. இச்செயல் நெருக்கத்தையும் தூய்மையையும் ஏற்படுத்துவதற்கு மாறாக, புறக்கணிப்பை அதிகரிக்கக் கூடியதாகும். இம்மாதிரியான செயல்களை இமாம் மாலிக் (ரஹ்) கண்டித்து, இவ்வாறு கூறினார்கள்: இந்த சமுதாயத்தின் ஆரம்பத்தில் வந்தவர்களை சீர்திருத்தியதே, இறுதியில் வருபவர்களையும் சீர்த்திருத்தும்." (127) (127) இகாஸதுல் லஹ்ஃபான் மின் மஸாயிதிஷ் சைதான் நூலைப் பார்க்கவும், 1ம் பாகம் பக்கம் 363
இச்சமுதாயத்தின் முன்னோர்களை சீர்படுத்தியது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறையையும், நேர்வழி நடந்த கலீபாக்களினதும், பொருந்திக்கொள்ளப்பட்ட தோழர்களினதும், நல்லமுறையில் பின்பற்றியவர்களினதும் பாதையைப் பின்பற்றுவதுதான் என்பது அறியப்பட்டதே. இச்சமுதாயத்தின் பின்னோர்களும் அதனைப் பற்றிக்கொண்டு அதே பாதையில் நடக்கின்றபோதே சீர்பெற முடியும்.
முஸ்லிம்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றமும் மகிழ்ச்சியும் கண்ணியமும் அடைய அல்லாஹ் அவர்களை வழிநடத்துவானாக! நிச்சயமாக அவன் மாபெரும் கொடையாளன், தயாளன்.
விழிப்பூட்டல் :
நபியவர்களின் கப்ரை தரிசிப்பதன் சட்டம்.
சில பொதுமக்கள் நினைப்பது போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கப்ரை தரிசிப்பது ஹஜ்ஜின் கடமையோ, நிபந்தனையோ அல்ல. மாறாக, நபியவர்களின் பள்ளிவாயிலை தரிசிக்க வந்தவர்கள் அல்லது அதற்கருகில் இருப்பவர்களுக்கு அது ஸுன்னத்தாகும்.
மதீனாவிலிருந்து தொலைவில் இருப்பவர்களுக்கு, நபியவர்களின் மண்ணறையை நோக்கி புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை. ஆனால் புனித பள்ளிவாயிலை நோக்கி புனிதப் பயணம் மேற்கொள்வது ஸுன்னத்தாகும். அங்கு சென்ற பின், நபியவர்களின் மண்ணறையையும், அவர்களின் இரு தோழர்களின் மண்ணறைகளையும் தரிசிக்க வேண்டும். நபியவர்களின் பள்ளிவாயிலை தரிசிக்கச் செல்லும் போது, அதனோடு இணைந்து, நபியவர்களின் மண்ணறையையும், அவர்களின் தோழர்களின் மண்ணறைகளையும் தரிசிக்கவேண்டும். ஏனெனில், புகாரி மற்றும் முஸ்லிமின் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : “மஸ்ஜிதுல் ஹராம், எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெங்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.” [128] (128) ஆதாரம் : புஹாரி (1189), முஸ்லிம் (1397). அறிவிப்பவர் : அபூஹூறைரா (ரலி)
நபியவர்களின் கப்ரை நோக்கி அல்லது வேறு ஒருவருடைய கப்ரை நோக்கி புனிதப்பயணம் மேற்கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால், நபியவர்கள் தமது சமூகத்திற்கு அதனை அறிவித்து அதன் சிறப்பை எடுத்துரைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் மக்களுக்கு அதிகம் நன்மை நாடுபவரும், மார்க்க விவகாரங்களில் மிகுந்த அறிவுடையவரும், அல்லாஹ்வை மிகவும் அஞ்சக்கூடியவர் ஆவார்கள். மேலும் அவர்கள் தமது சமூகத்திற்கு ஒவ்வொரு நன்மையையும் எடுத்துரைத்ததோடு, ஒவ்வொரு தீமையிலிருந்தும் எச்சரித்தார்கள். இவையனைத்துடன், மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது என எச்சரித்தும் உள்ளார்கள்! மேலும் அவர்கள், எனது கப்ரை திருவிழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள், உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், ஏனெனில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது ஸலவாத் என்னிடம் வந்தடைகிறது"([129]) என்றும் கூறியுள்ளார்கள். (129) ஆதாரம் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
நபியவர்களின் கப்ரை தரிசிக்க புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு ஷரீஆ வில் அனுமதி உண்டு என்று கூறுவது, அதனை விழாக் கொண்டாடும் தளமாக ஆக்குவதற்கு வழிவகுக்கும். மேலும், நபியவர்கள் அஞ்சிய அபயமாகிய, எல்லை மீறிய போற்றுதலும் ஏற்படும். ஏனெனில், நபியவர்களின் கப்ரை தரிசிக்க புனிதப் பயணம் மேற்கொள்வது மார்க்கத்தில் உள்ளது என நம்பிய பலர் இதில் வீழ்ந்துள்ளனர்.
நபியவர்களின் கப்ரை நோக்கி புனிதப் பயணம் மேற்கொள்ளலாம் எனக் கூறுபவர்கள் ஆதாரமாகக் கூறும் ஹதீஸ்கள் பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களைக் கொண்டவை. மேலும் அவை முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டவை. இவை பலவீனமானவை என, தாருகுத்த்னி, பைஹகீ, இப்னு ஹஜர் போன்ற ஹதீஸ்கலை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, மூன்று பள்ளிகள் தவிர வேறு இடங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறும் உறுதியான ஹதீஸ்களுக்கு இவை எதிராகக் கொள்ளப்பட முடியாது.
இந்த தலைப்பில் உள்ள சில பொய்யான ஹதீஸ்களை உங்களுக்காக வழங்குகிறேன்; அவற்றை அறிந்து, அவற்றால் ஏமாறுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்:
முதலாவது: «யாரேனும் ஹஜ் செய்து என்னை ஸியாரத் செய்யாவிட்டால் அவன் என்னை புறக்கணித்தவனாவான்».
இரண்டாவது: «என் மரணத்திற்குப் பின் என்னைச் தரிசித்தவர், என் வாழ்நாளில் என்னைச் சந்தித்தவர் போல் ஆவார்».
மூன்றாவது: "ஒரே ஆண்டில் என்னையும் என் தந்தை இப்ராஹீமையும் தரிசித்தவருக்கு சுவனத்தை கொண்டு உத்தரவாதம் அளிக்கிறேன்".
நான்காவது: 'என் கப்ரை தரிசித்தவருக்கு, என் ஷஃபாஅத்து கட்டாயமாகக் கிடைக்கும்'.
இதுபோன்ற ஹதீஸ்கள் எதுவும் நபியவர்களைத் தொட்டும் ஆதாரப் பூர்வமாகத் தரிபடவில்லை.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் (அத்தல்கீஸ்) எனும் நூலில், - இத்தகைய ஹதீஸ்களின் வழிகளை குறிப்பிட்ட பிறகு - 'இந்த ஹதீஸின் அனைத்து வழிகளும் பலவீனமானவை.' எனக் கூறியுள்ளார்கள்.
இமாம் உகைலி (ரஹ்) அவர்கள், "இந்தப் தலைப்பில் ஆதாரபூர்வமானவை எதுவும் இல்லை." என்று கூறியுள்ளார்கள்.
ஷெய்ஹூல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹூல்லாஹ் அவர்கள், இந்த ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டபட்டவையாகும் என உறுதிபடக் கூறியுள்ளார்கள். அவருடைய அறிவும், ஞாபகசக்தியும், அறிவாற்றலும் நீங்கள் அறிந்துள்ளதே!
அவற்றில் ஏதேனும் ஆதாரபூர்வமானதாக இருந்திருந்தால், நபித்தோழர்கள் அதனைச் செய்ய முந்திக்கொண்டிருப்பார்கள். அதனை உம்மத்துக்கு விளக்கி, அதற்காக அழைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் தாம் நபிகளாருக்குப் பின் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் எல்லைகளைப் பற்றியும், அவன் தனது அடியார்களுக்கு விதித்தவற்றையும் மிகச்சிறந்த முறையில் அறிந்தவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனது படைப்புகளுக்கும் அதிகம் நன்மை நாடுபவர்கள். அவர்களிடமிருந்து அவ்வாறு எதுவும் அறிவிக்கப்படாததால், அது மார்க்கத்தில் உள்ளதல்ல என்பதை உணர்த்துகிறது.
அவற்றில் ஏதேனும் ஆதாரப்பூர்வமானதாக இருந்தால், அந்த ஹதீஸ்களுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் விதமாக, அது கப்ரை தரிசிப்பதை மாத்திரம் நோக்கி புனிதப் பயணம் செய்யாமல், ஷரீஆ அனுமதித்த தரிசனமாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா நன்கு அறிவான்.
பிரிவு.
மஸ்ஜித் குபா மற்றும் அல் பகீஉ ஆகியவற்றை தரிசிப்பது ஸுன்னாவாகும்
மதீனாவை தரிசிக்க வருபவர்கள் குபா பள்ளிவாயலை தரிசித்து அதில் தொழுவது ஸுன்னத்தாகும். புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில், நபியவர்களைத் தொட்டும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒட்டகத்தில் அல்லது நடந்து குபா பள்ளிவாசலுக்கு சென்று அதில் இரண்டு ரக்அத்துக்களை தொழுவார்கள் (130) (130) ஆதாரம் : புஹாரி (1193), முஸ்லிம் (1399).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஹுநைஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவரொருவர் தனது வீட்டில் வுழூ எடுத்துவிட்டு, பின்னர் குபா பள்ளிவாசலுக்குச் சென்று அதில் ஏதாவது ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்." [131] (131) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 1412 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல் பகீஉ மையவாடி, உஹத் போரின் வீரத் தியாகிகளின் கப்ருகள், ஹம்ஸா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ரு ஆகியவற்றை ஸியாரத் செய்வதும் ஸுன்னத் ஆகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற்றை ஸியாரத் செய்து அவர்களுக்காக துஆச் செய்வார்கள். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் மண்ணறைகளை தரிசியுங்கள் அவை உங்களுக்கு மறுமையை ஞாபகமூட்டும்" என்று கூறியுள்ளார்கள் [132]. இமாம் முஸ்லிம் இதனை அறிவித்துள்ளார்கள். (132) ஆதாரம் : முஸ்லிம் 976.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம், கப்ரிஸ்தானங்களை தரிசித்தால் பின்வரும் துஆவை ஓதுமாறு கற்றுக்கொடுத்தார்கள் : அஸ்ஸலாமு அலைகும் அஹ்லத்தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன், வஇன்னா இன்ஷாஅல்லாஹு பிகும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலகுமுமுல் ஆஃபியஃ. [133] இமாம் முஸ்லிம் அவர்கள் புரைதா (ரலி) அவர்கள் வாயிலாக இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள். (133) ஆதாரம் : முஸ்லிம் 975.
திர்மிதியின் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் கப்ர்களுக்குப் பக்கமாக சென்றார்கள். அப்பொழுது அந்த கப்ர்களை நோக்கி: அஸ்ஸலாமு அலைகும் யா அஹ்லல்குபூர், யஃபிருல்லாஹு லனா வலகும், அந்தும் ஸலஃபுனா வநஹ்னு பில்அதர்" [134]. என்று கூறினார்கள். (பொருள் : மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் எங்களையும், உங்களையும் மன்னிப்பானாக! நீங்கள் (134) ஆதாரம் : திர்மிதி 1035.
கப்ர்களை தரிசிப்பதின் ஷரீஆவின் நோக்கமாக மறுமையை நினைவுகூர்வதும், மரணித்தவர்களுக்கு உபகாரம் புரிவதும், அவர்களுக்கு துஆச் செய்வதும், அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளை வேண்டுவதும் உள்ளது என்பது இந்த ஹதீஸ்கள் மூலம் அறியப்படுகின்றது.
ஆனால் கப்ருகளுக்கு சென்று, அங்கு துஆ செய்வதற்காகவோ அல்லது அவற்றின் அருகில் தங்கி இருப்பதற்காகவோ அல்லது அவர்களிடம் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது நோய்களை குணப்படுத்துவதற்காகவோ அல்லது அவர்களின் மூலமோ, அவர்களது மகத்துவத்தின் மூலமோ அல்லாஹ்விடம் கேட்பதற்காகவோ செல்வது, பித்அத்தான காரியமாகும். இதனை அல்லாஹ் அல்லது அவரது தூதர் (ஸல்) அனுமதிக்கவில்லை, மேலும் இதனை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களும் செய்யவில்லை. மாறாக, இது நபி (ஸல்) அவர்கள் தடைசெய்த 'ஹுஜ்ர்' எனப்படும் கெட்ட வார்த்தைகளில் உள்ளதாகும். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளை தரிசியுங்கள், ஆனால் தவறான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்" ([135]). (135) முஸ்லிமில் புரைதா (ரலி) அவர்கள் வாயிலாக ஹதீஸ் எண் 977 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும் நூதனம் (பித்அத்) ஆகும். ஆனால் அவை வெவ்வேறு நிலைகளில் உள்ளன. அவற்றில் சில, நூதனமாக இருக்கும்; ஆனால் இணைவைப்பாகாது; உதாரணமாக, மண்ணறைகளில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, இறந்தவர்களின் பொருட்டாலும் மகத்துவத்தாலும் கேட்பது போன்றவை. மற்றவை பெரிய இணைவைப்பாகும்; உதாரணமாக, மரணித்தோரிடம் பிரார்த்திப்பதும், அவர்களிடம் உதவி தேடுவதும் போன்றவை.
மேற்கூறிய விடயங்களுக்கான விளக்கம் விரிவாக முன்பே வழங்கப்பட்டுள்ளது. எனவே, எச்சரிக்கையுடன் இருந்து உன் இறைவனிடம் நேர்வழியும் சத்தியத்தையும் கேள். அவனே நேர்வழியளிப்பவன், சத்தியத்தைப் பின்பற்றும் பாக்கியம் அளிப்பவன். அவனைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை, அவனைத் தவிர வேறு இறைவனும் இல்லை.
இது, நாம் கூறவந்த விடயங்களில் இறுதியானதாகும். ஆரம்பம் முதல் இறுதிவரை புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! தன் அடியாரும் தூதருமான, தம் படைப்பிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் பின்பற்றும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்.