فتاوى الحج والعمرة والزيارة
ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
உம்ரா செய்பவர்களுக்கு அதிகம் தேவைப்படும் நூல் [1] சவூதி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மொத்த மார்க்கத் தீர்ப்புக்களிலிருந்தும் கேள்விகளும், விடைகளும் தேர்வு செய்யப்பட்டு, பொருத்தமான நிலைமைக்கு ஏற்ப சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன.
பல்மொழிகளில் இஸ்லாமிய உள்ளடக்கத்திற்கு சேவை செய்வதற்கான அமைப்பின் ஆய்வுக் குழு.
முதலாவதாக: பொதுத் தீர்ப்புகள்
கேள்வி : வங்கியிலிருந்து கடன் வாங்கிய பணத்திலிருந்து எனது பெற்றோர் உம்ரா செய்யலாமா?
பதில் : ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புபவர் அல்லது மற்றொருவருக்காக செய்ய விரும்புபவர், தமது ஹஜ் மற்றும் உம்ராவுக்காக ஹலாலான சம்பாத்தியத்தை தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் அல்லாஹ் மிக உயர்ந்தவன், தூய்மையானதைத் தவிர ஏற்றுக்கொள்வதில்லை.
வங்கி அல்லது பிற இடங்களில் வட்டியுடன் கடன் பெறுவது கூடாது. நபி ﷺ அவர்கள் வட்டியை உண்டவரையும், கொடுத்தவரையும், எழுதுபவரையும், சாட்சியமளிப்பவரையும் சபித்தார்கள். "அவர்கள் அனைவரும் சமமானவர்கள்" என்று கூறியுள்ளார்கள். தடுக்கப்பட்ட ஒன்றை உண்பது துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதற்கும், செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதற்கும் காரணமாக அமையும். வட்டியின்றி கடன் வாங்குவதில் எவ்விதக் குற்றமும் இல்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/ 353)
***
கேள்வி: யார் மக்காவை விட்டும் நாற்பது நாட்கள் விலகியிருப்பாரோ பலமுறை உம்ரா செய்திருந்தாலும் அவருக்கு உம்ரா கடமையாகும் என்பது சரியா?
பதில் : உம்ரா என்பது வணக்க வழிபாடுகள் செய்வதற்கு தகுதியுள்ள, சக்திபெற்றவருக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கடமையாகும்; அதற்கு மேல் செய்யப்படும் உம்ரா சுன்னத் ஆகும். உம்ரா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கென ஒரு குறிப்பிட்ட கால, நேரம் கிடையாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/20)
***
கேள்வி: உம்ராவை வருடத்தின் எந்த நேரத்திலும் நிறைவேற்ற முடியுமா?
பதில்: துல்ஹஜ் மாதம் உட்பட வருடத்தின் அனைத்து மாதங்களிலும் உம்ராவை நிறைவேற்ற முடியும். துல்ஹஜ் மாதம் உம்ராவை செய்து, அதற்கு அடுத்து ஹஜ் செய்தால் அவர் தமத்துஃ முறையில் ஹஜ் செய்தவராக மாறிவிடுவார். உம்ராவை ஹஜ்ஜோடு இணைத்து செய்தால் அவர் கிரான் முறையில் ஹஜ் செய்தவராக மாறிவிடுவார். அவர்களின் குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் வசிக்காவிட்டால் இருவரும் உழ்ஹிய்யாவையும் நிறைவேற்ற முடியும். துல்ஹஜ் மாதம் தஷ்ரீக்குடைய நாட்களுக்குப் பிறகும் உம்ரா செய்ய முடியும். இவ்வாறு செய்தால் அவர் உழ்ஹிய்யா கொடுக்க வேண்டியதில்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/316)
***
கே : ஒருவர் கட்டாய ஹஜ்ஜை செய்வதற்கு முன் உம்ரா செய்யலாமா?
பதில் : ஆம்; ஒருவர் ஹஜ் செய்யமுன் உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார். நபி ﷺ அவர்களும் அவர்களின் தோழர்களும் கட்டாய ஹஜ் செய்யமுன் உம்ரா செய்தார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/318)
***
கேள்வி: ஒரு ஆண்டில் பலமுறை உம்ரா செய்வதன் சட்டம் என்ன?
பதில் : ஒரு வருடத்தில் பல முறை உம்ரா செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகார மாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத் தைத் தவிர வேறு கூலியில்லை" ஆதாரம்: புஹாரி 1773, முஸ்லிம் 1349.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/334)
***
கேள்வி: தமத்துஃ முறையில் ஹஜ் செய்ய வருபவர் உம்ராவை செய்த பின், தனது பெற்றோரில் ஒருவருக்காக உம்ரா செய்ய விரும்பினால் எப்படி செய்வது?
பதில்: தமத்துஃ முறையில் ஹஜ் செய்ய நிய்யத் வைத்தவர் உம்ராவை செய்த பின் ஹஜ் செய்யும் நேரம் வந்து அதற்காக நிய்யத் வைக்கும் வரை மக்காவில் தங்கியிருப்பதே மிகவும் சிறந்தது. பல உம்ராக்களுக்காக நிய்யத் வைக்க புனித பூமியை விட்டு வெளியில் செல்வது உகந்தது அல்ல. ஹஜ் செய்து முடித்ததும் புனித பூமிக்கு வெளியில் சென்று நிய்யத் வைத்து மீண்டும் உம்ரா செய்வதில் தவறில்லை. இதன் போது மரணித்த தனது பெற்றோர்களுக்கும், தீராத நோயால் உம்ரா செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கும் அவர் உம்ரா செய்துகொள்ளலாம். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகார மாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத் தைத் தவிர வேறு கூலியில்லை" ஆதாரம்: புஹாரி 1773, முஸ்லிம் 1349.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/117)
***
கேள்வி: ஒரு உம்ராவை செய்ய பயணம் வந்த ஒருவர், அந்த ஒரு பயணத்தில் பல உம்ராக்களை செய்வதன் சட்டம் யாது? ஒவ்வொரு உம்ரா செய்யும் போதும் புனித பூமிக்கு வெளியில் சென்று இஹ்ராம் நிய்யத் வைத்து வரகிறார்.
பதில்: உம்ராவுக்காக மக்காவுக்கு குறுகிய பயணம் வந்த ஒருவர் அதே பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது நபி ﷺ அவர்களோ, நபித்தோழர்களோ காட்டித் தராத வழிமுறையாகும். இவ்வாறு செய்வது மிகவும் சிறந்தது என்றிருந்தால் எமக்கு முன்னர் அவர்களே இதை போட்டிப்போட்டு செய்திருப்பார்கள். எனவே மக்காவுக்கு வந்த ஒருவருக்கு குறிப்பாக அதிக தவாஃப்கள் செய்வது மார்க்கமாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் ஓதுதல், தொழுதல், தானதர்மங்களில் ஈடுபடுதல் போன்ற ஏனைய வணக்கங்களையும் இங்கு அதிகம் செய்திட முடியும். தூர நாடுகளிலிருந்து வருவோர் உம்ராவுக்காக திரும்பவும் வருவதற்கான வாய்ப்பு கிடைக்காது என்றிருந்தால் தனக்காக அல்லது மரணித்தவருக்காக அல்லது வயோதிபம், தீராத நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சக்தியின்றி இருப்போருக்காக மீண்டும் உம்ரா செய்வதில் எவ்விதக் குற்றமும் கிடையாது. இதன்போது தனக்கோ, பிறருக்கோ சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகார மாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத் தைத் தவிர வேறு கூலியில்லை" ஹஜ்ஜுக்காக வந்த இடத்தில் ஆஇஷா (ரழி) அவர்களுக்கு உம்ரா செய்ய முடியாமல் போனது. ஹஜ் முடிந்த பின் நபி ﷺ அவர்கள் மக்காவுக்கு மிகவும் அருகாமையில் உள்ள புனித பூமியின் எல்லையான தன்ஈம் இற்குச் சென்று உம்ராவுக்காக நிய்யத் வைத்துவிட்டு வந்து, உம்ராவை நிறைவேற்றுமாறு ஆஇஷா (ரழி) அவர்களுக்கு கூறினார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/355)
***
இரண்டாவதாக : பிரதேச எல்லைகள் (மீகாத்) பற்றிய மார்க்க தீர்ப்புக்கள்
கேள்வி: ஒருவர் ஹஜ் அல்லது உம்ராவுக்கு விமானத்தில் வரும் போது பிரதேச எல்லையை அறிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டு, விமானத்தில் வைத்து இஹ்ராம் ஆடை அணிய முடியாமல் போனால் ஜித்தாவை வந்தடைந்ததும் அதை அணிய முடியுமா?
பதில்: ஹஜ் உம்ராவுக்கு விமானத்தில் வருபவர் வீட்டில் வைத்தே குளித்து, இஹ்ராம் ஆடையையும் அணிந்து வர வேண்டும். தனக்கான மீகாத்தை நெருங்கும் போது ஹஜ் அல்லது உம்ராவுக்காக நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சிரமம் என்று எதுவுமில்லை. மீகாத் நெருங்குவதை அறிய முடியாவிட்டால் விமானியிடம் அல்லது அவரின் உதவியாளர்கள் அல்லது விமானப் பணியாளர்கள் அல்லது தனக்கு நம்பிக்கையுள்ள சக பயணி என யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/153)
***
கேள்வி: உம்ராவுக்காக விமானத்தில் வரும் ஒருவர் இஹ்ராம் ஆடை அணியாமல் வெறும் தல்பியிா மாத்திரம் கூறிக்கொண்டு வர முடியுமா? ஏனெனில் அவருக்கு ஜித்தாவில் சில வேலைகள் உள்ளன. அவை முடிந்ததும் ஜித்தாவில் இஹ்ராம் ஆடையை அணிந்து, உம்ராவை நிறைவேற்ற செல்வார்.
பதில்: ஹஜ் உம்ராவுக்காக வருபவர் அவற்றுக்கான நிய்யத் வைக்காமலும், தைத்த ஆடைகளுடனும், இஹ்ராத்தின் போது தடைசெய்யப்பட்டவற்றை தவிர்க்காமலும் மீகாத்தை தாண்டிச் செல்ல முடியாது.
இதன் அடிப்படையில், நீங்கள் கேள்வியில் கேட்டிருக்கும் முறையில் மார்க்க சட்டத்திற்கு முரணாக ஒருவரால் ஹஜ் உம்ரா செய்ய முடியாது. ஆனால் ஜித்தாவிலுள்ள தனது தேவைகளை செய்துமுடிக்க ஒருவர் பயணம் செய்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. தனது தேவைகள் அனைத்தும் முடிந்ததும், அருகிலுள்ள மீக்காத்திற்குச் சென்று நிய்யத் வைத்து, இஹ்ராம் ஆடையை அணிந்து வந்து ஹஜ்ஜையோ, உம்ராவையோ நிறைவேற்ற முடியும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/81)
***
கேள்வி: ஹஜ் அல்லது உம்ராவுக்காக வரும் ஒருவர் ஜித்தா விமான நிலையத்தில் இறங்கி, மதீனாவிற்குச் செல்கிறார். அங்கிருந்து மீண்டும் மக்காவுக்கு வரும் வழியில் "ஆபார் அலீ" எனும் மதீனாவாசிகளுக்கான மீகாத்தில் வைத்து மீண்டும் நிய்யத் வைக்கிறார். இவ்வாறு "ஆபார் அலீ" எனும் மீகாத்தில் நிய்யத் வைப்பது சரியா?
பதில்: ஹஜ் உம்ராவுக்காக வரும் ஒருவர் இவ்வாறு ஜித்தா விமான நிலையத்தில் இறங்கி, ஹஜ் உம்ராவை நிறைவேற்ற முன்னர் மதீனாவை தரிசிக்கச் சென்று, அதை தரிசித்த பின் மீண்டும் மக்காவுக்கு திரும்பும் போது, "ஆபார் அலீ" எனும் மீகாத்தை அடைந்தால், அதுவே அவருக்கான மீகாத்தாகும். இது "துல்ஹுலைஃபா" எனவும் அழைக்கப்படும். இந்த சூழ்நிலையில் இவரின் மீகாத் சட்டம் மதீனாவாழ் மக்களின் சட்டமாகும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "இந்த எல்லைகள் இப் பகுதியினருக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக வேறு பகுதியிலிருந்து இவ்வழிகளில் வருபவர்களுக்கும் உரியனவாகும்." ஆதாரம்: புஹாரி 1524, முஸ்லிம் 1181.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/94)
***
கேள்வி: ஏதாவது ஒரு மாதத்தின் வெள்ளிக்கிழமையன்று ஒருவர் உம்ராவுக்கு வந்து, உம்ராவும் செய்து முடித்து, வேறொரு ஊருக்கு பயணம் செல்கிறார். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் மக்காவுக்கு வந்து, இன்னொரு உம்ரா செய்ய வேண்டுமென நினக்கிறார். இப்போது இஹ்ராம் ஆடை அணியாமல் உம்ரா செய்ய முடியுமா?
பதில்: உம்ரா செய்ய விரும்புபவர் தான் மக்காவுக்கு வரும் வழியில் உள்ள மீகாத்தில் வைத்து இஹ்ராம் ஆடை அணிந்து, நிய்யத் வைத்துக்கொள்வது அவசியமாகும். இஹ்ராம் ஆடையோ, நிய்யத்தோ இன்றி மீகாத்தை கடந்து செல்லக் கூடாது. ஏனெனில் நபி ﷺ அவர்கள் ஹஜ் உம்ராவுக்காக வருபவர்களுக்கு என பிரதேச எல்லைகளை நியமித்துள்ளார்கள். இதனூடாக முதலாவது, இரண்டாவது, பல தடவைகள் என உம்ராவுக்கு வருபவர்கள் அனைவரும் அதன் சட்டத்தை பின்பற்ற வேண்டும். மீகாத் பகுதிக்கு உள்ளே இருப்பவர்கள் தான் இருக்கும் இடத்திலிருந்து நிய்யத் வைத்து, இஹ்ராம் ஆடை அணிந்து உம்ராவுக்கு வர வேண்டும். மக்காவில் இருப்பவர்கள் புனித பூமிக்கு வெளியில் சென்று உம்ராவுக்காக நிய்யத் வைத்து, இஹ்ராம் ஆடை அணிந்து உம்ராவுக்கு வர வேண்டும். ஆஇஷா (ரழி) அவர்களும் மக்காவில் வைத்து நபி ﷺ அவர்களின் கட்டளைக்கு ஏற்ப இவ்வாறே செய்தார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/354)
***
கேள்வி: ஒருவர் தனக்காக உம்ரா செய்துவிட்டு, தனது தந்தைக்காக உம்ரா செய்ய விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
பதில்: நீங்கள் உங்களுக்கான உம்ராவை செய்து முடித்து, உம்ராவிலிருந்து விடுபட்டதும், மரணித்த அல்லது முடியாமல் இருக்கும் உங்கள் தந்தைக்காக உம்ரா செய்ய விரும்பினால் புனித பூமியை விட்டும் வெளியில் செல்ல வேண்டும். உங்களுக்கு அருகிலுள்ள பகுதி "தன்ஈம்" எனும் இடமாகும். அங்கு சென்று, இஹ்ராம் ஆடை அணிந்து, நிய்யத் வைத்து மீண்டும் உம்ராவுக்கு வர முடியும். இதற்காக நீங்கள் மீகாத்திற்கு செல்ல வேண்டியதில்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/135)
***
மூன்றாவது: இஹ்ராம் நிய்யத், இஹ்ராம் ஆடை, தடுக்கப்பட்டவைகள் என்பவற்றுடன் தொடர்பான மார்க்கத் தீர்ப்புகள்.
கேள்வி: ஹஜ் அல்லது உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் ஆடையை அணிந்து, பிறகு அதைக் கழட்டினால் அதற்காக என்ன செய்ய வேண்டும்?
பதில் : அவர் வேட்டியும், மேலாடையும் அணிந்து, ஹஜ் அல்லது உம்ராவுக்காக நிய்யத் வைக்காமலும், தல்பியா கூறாமலும் இருந்தால் அவருக்கு பின்வரும் இரு சந்தர்ப்பங்கள் உள்ளன: அவர் விரும்பினால் ஹஜ் உம்ரா வணக்கத்தினுள் நுழையலாம். விரும்பினால் செய்யாமல் விட்டு விடலாம். வாழ்வில் முதல் உம்ரா முதல் ஹஜ் நிறைவேற்றியிருந்தால் அவற்றை செய்யாமல் விட்டு விடுவதில் எவ்விதக் குற்றமும் கிடையாது.
ஆனால் இஹ்ராம் ஆடை அணிந்து, ஹஜ் அல்லது உம்ரா வணக்கத்தினுள் நிய்யத் வைத்து நுழைந்துவிட்டால் அதிலிருந்து விடுபடுவது கூடாது. அதை மார்க்கம் கூறிய அடிப்படையில் அவர் அவசியம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், "ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்" -அல்குர்ஆன் 02:196-
இந்த அல்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் ஹஜ் அல்லது உம்ரா வழிபாட்டில் நுழைந்துவிட்டால் அதை முழுமையாக பூரணப்படுத்தும் முன் அதிலிருந்து விடுபட முடியாது என்பது தெளிவாகிறது. ஆனால் ஒருவர் ஹஜ் உம்ராவுக்கு நிய்யத் வைக்கும் போது ஹஜ் உம்ராவை செய்யமுடியாமல் ஏதும் தடை ஏற்பட்டு விடுமோ என பயந்து முன்நிபந்தனையிட்டு நிய்யத் வைத்திருந்தால் அவர் இவ் வணக்கங்களிலிருந்து விடுபட முடியும். நபி ﷺ அவர்களிடம் ளுபாஆ பின்த் ஸுபைர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்ய ஆசைப்படுகிறேன், ஆனால் நோயாளியாக இருக்கிறேனே" என முறைப்பாடு செய்தார்கள். அதற்கு நபியவர்கள், ‘‘‘நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக ‘இஹ்ராம்’ கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று சொல்லிவிடு எனக் கூறினார்கள்.’’ ஆதாரம்: புஹாரி 5089, முஸ்லிம் 1207.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/166)
***
கேள்வி: ஒரு பெண் உம்ராவுக்காக நிய்யத் வைத்த பின் மாதவிடாய் ஏற்பட்டது. அவள் தவாஃபோ, ஸஃயோ செய்யவில்லை. தனது வீட்டுக்குத் திரும்பி உம்ராக் கடமையிலிருந்து விடுபட்டாள். இவள் ஏதாவது குற்றப்பரிகாரம் செய்ய வேண்டுமா? அவள் உம்ராக் கடமையிலிருந்து விடுபடாமல் இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
பதில்: உம்ராவுக்காக நிய்யத் வைத்த பெண் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு, தவாஃபையும், ஸஃயையும் செய்வதற்கு முன் உம்ராவிலிருந்து விடுபட்டால் அவளின் உம்ரா தொடர்பாக பின்வரும் மூன்று நிலைகளில் அவளின் உம்ரா பரிசீலிக்கப்படும்: அ. யதார்த்தமாகவே உம்ராவின் சட்டங்கள் தொடர்பாக தெரியாத பெண்ணாக இருந்து, தனது கனவருடன் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் மாதவிடாய் நின்ற பின் உம்ராவை பூர்த்தி செய்வது கட்டாயமாகும். இதற்காக குளிப்பு கடமையானவர் போல் குளித்து சுத்தமாகி, தவாஃபையும், ஸஃயையும் செய்து, தலை முடியை வெட்டிய பின் உம்ராவிலிருந்து விடுபட வேண்டும். இதற்காக அவள் எவ்வித பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை.
ஆ. அவள் கனவனுடன் உடலுறவு கொண்டால் உம்ரா முறிந்து விடும். மீதமிருக்கும் தவாஃப், ஸஃயு, தலை முடியைக் குறைத்தல் ஆகிய கடமைகளை மாதவிடாய் நின்ற பின் செய்துவிட்டு, முறிந்த உம்ராவை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதற்காக முன்னர் கடந்து வந்த மீகாத்திற்குச் செல்ல வேண்டும். உம்ரா முறிந்ததற்காக அறுப்புப் பிராணி ஒன்றையும் அறுத்துப் பலியிட வேண்டும். இதற்காக ஆறு மாதங்கள் தாண்டிய செம்மறியாடு, அல்லது ஒரு வருடம் தாண்டிய வெள்ளாடு ஒன்றை அறுத்து, மக்காவிலுள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
இ. மாதவிடாய் ஏற்பட்ட பின் உம்ராவிலிருந்து விடுபடாமல் இருந்தால், மாதவிடாய் நின்றதும் தவாஃப், ஸஃயு செய்து, தலை முடியைக் குறைத்து உம்ராவை பூர்த்தி செய்துவிட்டு, உம்ராவிலிருந்து விடுபட வேண்டும். மாதவிடாய் ஏற்படுவதால் ஒரு போதும் உம்ரா முறிந்துவிடாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 323)
***
கேள்வி: உம்ராவுக்காக நிய்யத் வைத்த பின் வாசணையுள்ள சவர்க்காரம் பயன்படுத்த முடியுமா?
பதில்: உம்ராவுக்காக நிய்யத் வைத்த ஆணோ, பெண்ணோ நறுமணம் பயன்படுத்தப்பட்ட எந்தப் பொருளையும் பயன்படுத்துவது கூடாது. அதில் நறுமனமான சவர்க்காரமும் உள்ளடங்கும். யார் தெரிந்தும் வேண்டுமென்றே வாசணைத் திரவியம் பயன்படுத்தினால் அவர் தடுக்கப்பட்ட ஒன்றை செய்ததற்காக அறுப்புப் பிராணி ஒன்றை அறுத்துப் பலியிட வேண்டும். சட்டம் தெரியாமலோ அல்லது மறதியாகவோ வாசணைத் திரவியம் பயன்படுத்தியிருந்தால் அவர் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. அல்லாஹ் கூறுகிறான், "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!" -அல்குர்ஆன் 02:286- நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் என் உம்மத்தின் மீது தவறால், மறதியால், வலுக்கட்டாயத்தால் ஏற்படும் தவறுகளை மன்னித்துவிட்டான்." -ஆதாரம்: இப்னுமாஜா 2045-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/137)
***
கேள்வி: நான் மஸ்ஜிதுல் ஹராமிற்குள் நுழைவதற்கு முன் கழிவறைக்குச் சென்றேன். மறதியாக இஹ்ராம் ஆடையின் ஒ்ரு பகுதியை எனது தலைக்கு மேல் போட்டுவிட்டேன். நினைவுக்கு வந்ததும் உடனே எடுத்து விட்டேன். நான் இதற்காக ஏதும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?
பதில்: இஹ்ராம் நிய்யத் வைத்திருக்கும் ஒருவர் இஹ்ராத்தின் போது தடுக்கப்பட்டவற்றில் ஏதாவது ஒன்றை மறதியாக செய்தால் நினைவு வரும் போது அதிலிருந்து உடனடியாக விடுபட வேண்டும். இதனால் அவருக்கு பாவமோ, எவ்வித குற்றப்பரிகாரங்களோ கிடையாது. அல்லாஹ் கூறுகிறான், ""எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!" -அல்குர்ஆன் 02:286-" நபி ﷺ அவர்கள் கூறினார்கள், , "அல்லாஹ் என் உம்மத்தின் மீது தவறால், மறதியால், வலுக்கட்டாயத்தால் ஏற்படும் தவறுகளை மன்னித்துவிட்டான்." -ஆதாரம்: இப்னுமாஜா 2045-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/149)
***
கேள்வி: ரமழான் மாதம் ஒன்றில் நானும், எனது மனைவியும், எனது சகோதரியும் உம்ரா செய்தோம். அப்போது நான் கூறியதற்காக அவர்கள் இருவரும் கையுறை அணிந்து உம்ரா செய்தனர். நான் அதன் சட்டத்தை அறியாமல் தான் அவ்வாறு செய்யுமாறு கூறினேன். நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
பதில் : இஹ்ராம் நிய்யத் வைத்த பெண் சட்டம் தெரியாமல் கையுறை அணிந்திருந்தால் அவர்களுக்கு எவ்வித குற்றமுமில்லை. அவர்கள் எந்த வித பரிகாரங்கள் செய்ய வேண்டியதில்லை. சட்டம் அறிந்த நிலையில் ஒரு பெண் இவ்வாறு செய்தால் உடனடியாக கையுறைகளைக் கழட்டுவது அவசியமாகும். இதற்காக தெரிவு முறையில் குற்றப்பரிகாரம் செய்ய வேண்டும். ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அல்லது மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/156)
***
கேள்வி: நானும், எனது மனைவியும் உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்தோம். நிய்யத் வைத்த பின் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டது. சட்டம் தெரியாமல் நானும் இஹ்ராம் ஆடைகளைக் கலைந்து உம்ராவிலிருந்து விடுபட்டேன். அதன் பின் நாம் இருவரும் மக்காவுக்குச் செல்லவில்லை. இந்த வருட ரமழான் மாதத்தில் நாம் இருவரும் -அல்லாஹ்வின் உதவியால்- மீண்டும் உம்ரா செய்தோம். நான் செய்தது பற்றிய மார்க்க விளக்கத்தை எனக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
பதில்: நீங்கள் உம்ராவிலிருந்து விடுபடாமல் அதை முழுமையாக நிறைவேற்றியிருக்க வேண்டும். உம்ரா நிய்யத்தை செயலிழக்கச் செய்வதும், இஹ்ராம் ஆடையைக் கழைந்து, வழமையான ஆடைக்கு மாறுவதும் உம்ராவிலிருந்து விடுபடுவதற்கான முறைகள் அல்ல. அது உம்ராவை எதுவும் செய்துவிடாது. உங்கள் முதல் உம்ராவின் நிய்யத் இரண்டாம் உம்ரா செய்யும் வரை முறியாமல் அப்படியே இருந்திருக்கிறது. உங்கள் இரண்டாவது உம்ரா முதல் உம்ராவின் தொடர்ச்சியாகவே கருதப்படும். உங்கள் முதலாவது உம்ராவிலிருந்து இரண்டாவது உம்ராவை நிறைவேற்றுவதற்கு முன் வரையுள்ள காலப்பகுதியில் மனைவியுடன் உடலுறவு கொண்டிருந்தால் உங்கள் உம்ரா முறிந்து விடும். நீங்கள் அதற்காக இன்னொரு உம்ரா செய்ய வேண்டும். இவ் உம்ராவை செய்யும் போது முறிந்த உம்ராவை செய்வதற்கு எந்த மீகாத்துக்குச் சென்றீர்களோ அங்கு செல்ல வேண்டும். உடலுறவு செய்து உம்ராவை முறித்ததற்காக இருவரும் அறுப்புப் பிராணி ஒன்றை அறுத்துப் பலியிட வேண்டும். அதை மக்காவிலுள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/384)
***
கேள்வி: தோலினால் செய்யப்பட்ட பொருட்கள் வைப்பதற்கு ஏதுவான இடுப்புப் பட்டியை அணிவதன் சட்டம் யாது? அது தையல் இயந்திரத்தில் தைக்கப்பட்ட இடுப்புப் பட்டி. அவ்வாறே தைக்கப்பட்ட செருப்புகளையும் அணியலாமா?
பதில் : ஹஜ் உம்ராவுக்காக நிய்யத் வைத்தவர்கள் தையல் இயந்திரத்தில் தைக்கப்பட்டிருந்தாலும் இடுப்புப் பட்டியையும், செருப்புகளையும் அணிந்துகொள்ளலாம்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/170)
***
கேள்வி: நான் "அப்யார் அலீ" எனும் மீகாத்தில் இஹ்ராம் அணிந்து நிய்யத் வைத்தேன். மக்காவுக்கு வரும் வழியில் எனக்கு காய்ச்சல் அதிகாகவும் தலையை மூடி தூங்கிவிட்டேன். இதற்காக நான் ஏதும் செய்ய வேண்டுமா?
பதில் : நீங்கள் அவசியம் குற்றப்பரிகாரம் செய்ய வேண்டும். இதற்காக தேர்வு நிலையிலுள்ள குற்றப்பரிகாரங்களை செய்ய வேண்டும். மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது மக்காவின் புனித பூமியில் வைத்து ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/181)
***
கேள்வி: தைக்கப்பட்ட காலுரை அணிந்து தவாஃப் செய்ய முடியுமா?
பதில் : ஹஜ் உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த ஆண்கள் காலுறை அணிவது கூடாது. நோய் போன்ற தேவைகளுக்கா அதை அணிவது கூடும். ஆனால் தேர்வு அடிப்படையில் அவர் குற்றப்பரிகாரம் நிறைவேற்ற வேண்டும். அதாவது மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். ஒருவருக்கான உணவின் அளவு அரை ஸாஉ (1.25KG) ஆகும். அல்லது மக்காவின் புனித பூமியில் வைத்து ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/183)
***
கேள்வி: இஹ்ராம் நிய்யத் வைத்தவர் சூட்டைத் தணிக்க உடல் முழுவதையும் கழுவிக்கொள்ள முடியுமா? சொல்லப்படும் சட்டத்தின் காரணம் யாது?
பதில்: இஹ்ராம் நிய்யத் வைத்த ஒரு முஸ்லிம் வெப்பமான காலநிலை ஏற்பட்டால் சூட்டைத் தணிக்க உடம்பை கழுவிக்கொள்ள முடியும். இது குறித்த வணக்கத்தை சுறுசுறுப்புடன் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அவ்வாறு கழுவும் போது உடலிலிருந்து முடிகள் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/184)
***
கேள்வி: இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் தனது வாகத்தினால் மரத்தில் மோதினால் அல்லது புற்களின் மீது வாகனத்தை செலுத்தினால் அவர் என்ன செய்ய வேண்டும்?
பதில்: இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் புனித பூமிக்கு வெளியில் மரத்தில் மோதினால் அதற்காக அவருக்கு எவ்வித குற்றப்பரிகாரங்களும் கிடையாது. சேதமடைந்த மரம் யாருக்காவது சொந்தமானதாக இருந்தால் அதற்குரிய பெறுமதியை அவருக்கு வழங்க வேண்டும். புனித பூமியில் வைத்து ஒருவருக்கு சொந்தமான மரத்தை வாகனத்தினால் சேதப்படு்ததியிருந்தால் அப்போதும் அவருக்கு மரத்தின் சொந்தக்காரருக்கு அதன் பெறுமதியை கொடுப்பதைத் தவிர வேறு எவ்வித குற்றப்பரிகாரங்களும் கிடையாது. அவ்வாறு மோதி, சேதமடைந்த மரமோ புற்தரையோ ஒருவருக்கும் சொந்தமில்லை என்றால் வேண்டுமென்று மரத்தை சேதப்படுத்தாத காரணத்தினால் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/185)
***
கேள்வி: ஹஜ் உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த ஆண்களோ, பெண்களோ இஹ்ராம் ஆடையை மாற்றி, வேறு இஹ்ராம் ஆடைகளை அணிய முடியுமா?
பதில் : ஹஜ் உம்ராவுக்காக நிய்யத் வைத்தவர் இஹ்ராம் ஆடைகளைக் கலைந்து, வேறு இஹ்ராம் ஆடைகளை அணிவதில் தவறில்லை. இவ்வாறு ஆடையை மாற்றிக்கொள்வது அவர்களின் ஹஜ்ஜிலோ, உம்ராவிலோ எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/185)
***
கேள்வி: கஃபாவின் மில்தஸம் பகுதியில் நான் துஆ கேட்டுக்கொண்டிருக்கும் போது கஃபாவுடன் உரசிக்கொண்டு நான் இருந்ததால் அதில் பூசப்பட்ட வாசணைத் திரவியத்தின் எண்ணெய் என் கைகளில் பட்டுவிட்டது. நான் அதை எனது உடம்பிலும், தலை முடியிலும், ஆடையிலும் பூசிக்கொண்டேன். நான் பூச வேண்டும் எனும் நோக்கில் இல்லாமல் எதேச்சையாகவே பூசிக்கொண்டேன். இதன் சட்டம் யாது?
பதில்: கஃபாவில் பூசப்பட்டுள்ள வாசணைத் திரவியங்களின் எண்ணெய்ப் படிவம் உங்கள் கைகளில் பட்டு, அதை நீங்கள் உடம்பிலும், தலைமுடியிலும், ஆடையிலும் பூசுவது இஹ்ராம் நிய்யத்துடன் இருக்கும் போது உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் தேர்வு அடிப்படையில் குற்றப்பரிகாரம் செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அல்லது ஆறு ஏழைகளுக்கு -ஒருவருக்கு அரை ஸாஉ (1.25Kg) அளவில்- உணவளிக்க வேண்டும். அல்லது புனித பூமியில் வைத்து ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும். நீங்கள் மறதியாகவோ, சட்டத்தை அறியாமலோ இவ்வாறு செய்திருந்தால் உங்கள் மீது குற்றமில்லை. அதற்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/186)
***
கேள்வி: ஒரு பெண் மூன்று முறை உம்ரா செய்தார். ஒவ்வொரு முறையும் புர்கா அணிந்தே உம்ரா செய்தார். புர்காவுக்கு மேலால் திரை போன்ற சிறு புடவையையும் போட்டிருந்தார். அதை சில சமயங்களில் புர்காவுக்கு மேல் போட்டும், சில சமயம் உயர்த்தியும் வைத்தார். இஹ்ராத்தின் போது புர்கா அணிவதன் சட்டம் தெரியாமலே இவ்வாறு செய்தார். இதன் சட்டம் யாது?
பதில்: ஹஜ் அல்லது உம்ராவுக்காக நிய்யத் வைத்த பெண்கள் முகத்தை மறைக்கும் எந்த ஆடையையும் அணியக் கூடாது. அந்நிய ஆண்கள் பார்த்துவிடுவார்கள் எனும் அச்சம் இருந்தால் ஹஜ்ஜதுல் வதாஃ வில் நபியவர்களின் மனைவிமார் செய்தது போல் முந்தானையால் மாத்திரம் முகத்தை மறைத்துக்கொள்ள முடியும். ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட பெண் இதன் சட்டம் தெரியாமல் செய்தமையால் அவருக்கு எவ்வித குற்றப்பரிகாரங்களும் கிடையாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/194)
***
நான்காவது: தவாஃப் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: நான் உம்ரா செய்யும் போது அதன் நிபந்தனைகள், கடமைகள் என்பவற்றை அறியாமல் உம்ரா செய்தேன். தவாஃபை ஆரம்பிக்கும் போது ஹஜருல் அஸ்வத்திடமிருந்து ஆரம்பிக்காமல் ருக்னுல் யமானியிடமிருந்து ஆரம்பித்தேன். உம்ராவின் ஏனைய கடமைகளை அல்லாஹ்வின் நாட்டத்தால் சரியாகவே செய்தேன். நான் தவாஃபில் செய்தது பற்றிய மார்க்கத் தீர்ப்பை எனக்கு தாருங்கள்.
பதில்: கேள்வி கேட்டவர் தவாஃபை ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பிக்காமல் ருக்னுல் யமானியிலிருந்து ஆரம்பித்தது தவறாகவே கருதப்படும். தவாஃப் என்பது ஹஜருல் அஸ்வதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஆனாலும் முதல் சுற்றை சற்று அதிகமாக செய்தார் என்பதைத் தவிர இந்தத் தவறு அவரது தவாஃபில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏழாவது தவாஃபை முடிக்கும் போது ஹஜருல் அஸ்வதிடம் முடித்திருந்தால் ஏழாவது தவாஃபும் எவ்விதத் தவறும் இன்றி பூரணமாக
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/210)
***
கேள்வி: தவாஃபில் 'இழ்திபாஃ' (வலது தோல் புஜம் தெரியும் வகையில் இஹ்ராம் ஆடையை அணிதல்) சுன்னத்தாகுமா? இம்முறையில் ஆடை அணிய மறந்தவர் என்ன செய்ய வேண்டும்? 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' எனக் கூற மறந்த ஒருவர், ஹஜருல் அஸ்வதை மாத்திரம் முத்தமிடுகிறார். அவ்விடத்திலிருந்து சற்று தூரம் செல்லும் போது இவ்விடயம் நினைவுக்கு வருகிறது. மகாமு இப்றாஹீம் இருக்கும் இடத்தை அடையும் போது அவ் வார்த்தையைக் கூறுகிறார். இது கூடுமா?
பதில்: 'இழ்திபாஃ' என்பது மேலாடையின் நடுஓரப் பகுதியை தமது வலது கையின் அக்குளுக்கு கீழ் வைத்து, இரு ஓரப் பகுதிகளையும் இடது கை தோல் புயத்திற்கு மேல் போட்டு, வலது புஜம் தெரியும் வகையில் அணியப்படும் இஹ்ராம் முறையாகும். உம்ராவுக்காக மாத்திரம் செல்பவர்களும், தமத்துஃ, கிரான், இஃப்ராத் ஆகிய முறைகளில் ஹஜ் செய்யச் செல்பவர்களும் தவாஃபின் போது இவ்வாறு அணிந்துகொள்வது சுன்னத்தாகும். இவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டால் அவருக்கு எவ்விதக் குற்றமும் கிடையாது.
தவாஃபை துவங்கும் போது தக்பீரையும், 'பிஸ்மில்லாஹ்' வையும் கூறாமல் விட்டுவிட்டால் அவருக்கு எவ்விதக் குற்றமும் ஏற்படுவதில்லை. ஏனெனில் தக்பீர், திக்ர், துஆக்கள் அனைத்தும் தவாஃபிலும், ஸஃயிலும் கட்டாயம் செய்ய வேண்டியவை கிடையாது. இவை அனைத்தும் சுன்னத்தான விடயங்களாகும். ஆனால் தவாஃபையும், ஸஃயையும் நிய்யத்துடன் நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/210)
***
கேள்வி: எனது சிறிய மகளை டயாபர் அணிந்த நிலையில் சுமந்துகொண்டு நான் தவாஃப் செய்வேன். அதில் சிலவேளை சிறுநீர் படியும் என்பதால் இந்நிலையில் தவாஃப் செய்வது கூடாது என நான் கேள்விபட்டுள்ளேன். இது பற்றிய சட்டத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
பதில் : டயாபரில் உள்ள அழுக்கு தவாஃப் செய்பவரின் உடலிலோ, ஆடையிலோ படாமல் இருக்கும் பட்சத்தில் அக்குழந்தையை சுமந்துகொண்டு தவாஃப் செய்யலாம். தொழுகைக்கும் இதே சட்டம் தான்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/236)
***
கேள்வி: மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவாஃப் செய்யலாமா?
பதில்: மாதவிடாய் ஏற்பட்ட பெண் அதிலிருந்து சுத்தமாகும் வரை தவாஃப் செய்வது கூடாது. ஹஜ்ஜின் போது ஆஇஷா (ரழி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டதும் நபி ﷺ அவர்கள், "ஹஜ்ஜு செய்பவர் செய்வதைப் போன்றே நீயும் செய்! ஆயினும் நீ தூய்மையடையாத வரை இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்யாதே" எனக் கூறினார்கள். ஆதாரம்: புஹாரி 1650, முஸ்லிம் 1211.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/249)
***
கேள்வி: தவாஃப் செய்யும் ஒரு பெண் தனது கனவரையோ, மஹ்ரமையோ மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியில் தனக்காக காத்திருக்குமாறு கூறி, தவாஃபையும், ஸஃயையும் தனியாக செய்ய முடியுமா?
பதில்: ஹஜ் அல்லது உம்ரா தவாஃபின் போது ஒரு பெண்ணுக்கு மஹ்ரம் இருக்க வேண்டுமென்பது நிபந்தனை கிடையாது. அப்பெண் ஹஜ் உம்ரா அல்லது வேறு தேவைகளுக்காக பயணம் செல்லும் போது மஹ்ரம் இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/ 353)
***
கேள்வி: ஒருவர் தவாஃப் செய்துகொண்டிருக்கும் போது உதாரணத்திற்கு ஐந்தாம் சுற்றில் இருக்கும் போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டது. அவர் தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கும் போது ஐந்தாம் தவாஃபை தான் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது ஐந்தாம் தவாஃபை ஹஜருல் அஸ்வதிடம் சென்று மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமா?
பதில் : இவ்வாறான சூழ்நிலையில் தவாஃபின் சுற்று ரத்துச் செய்யப்படுவதில்லை. தொழுகை முடிந்ததும் தான் விட்ட இடத்திலிருந்து சுற்றை ஆரம்பிக்க முடியும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/230)
***
கேள்வி: 'ஹஜருல் அஸ்வத்' எனப்படும் கல் வானத்திலிருந்து இறங்கியதா? அல்லது அது உலகிலுள்ள ஏனைய கற்களைப் போன்றதா?
பதில்: 'ஹஜருல் அஸ்வத்' எனப்படும் கல்லை தொடுமாறும், அதற்கு முத்தம் கொடுக்குமாறும் அல்லாஹ் எமக்கு மார்க்கமாக்கியுள்ளான். தொழுகையில் நாம் முன்னோக்கித் தொழும் கஃபாவின் ஒரு ஓரத்தில் அதை வைக்க வேண்டுமெனவும் அவன் நாடியுள்ளான். தவாஃப் செய்பவர்கள் முடிந்தால் அதைத் தொட்டு முத்தமிட வேண்டுமெனவும், முடியாவிட்டால் அதன் பக்கம் கையினால் சைகினை செய்து தக்பீருடன் தவாஃபை ஆரம்பிக்குமாறும் கட்டளையிட்டுள்ளான். இக் கல் சுவனத்திலிருந்து இறங்கியது என்பதற்கு திர்மிதியில் ஒரு ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. இதன் தரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஸஹீஹ் என்பதே சரியான கருத்தாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/228)
***
கேள்வி: ஹஜ் உம்ராக் கடமையில் கஃபாவை முத்தமிடுவது அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடுக்கப்பட்டதா?
பதில்: ஹஜருல் அஸ்வதை முத்தமிடுமாறே இஸ்லாம் எமக்குக் கூறியுள்ளது. நபி ﷺ அவர்களும் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் கஃபாவை முத்தமிட்டதற்கான எவ்வித சான்றுகளும் இஸ்லாத்தில் இல்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/228)
***
கேள்வி: அந்நிய ஆண்கள் சுற்றி இருக்கும் போது ஒரு பெண் ஹஜருல் அஸ்வதை முத்தமிட முடியுமா?
பதில்: ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது தவாஃபின் போது செய்ய வேண்டிய சுன்னத்தான விடயங்களில் ஒன்றாகும். நபி ﷺ அவர்கள் செய்தது போல் பிறருக்கு தொந்தரவின்றியும், சனநெரிசலை ஏற்படுத்தாமலும் அக்கல்லை முத்தமிட வேண்டும். தன்னால் பிறருக்கு தொந்தரவு ஏற்படுமென்றிருந்தால் அல்லது சனநெரிசல் ஏற்படுமென்றிருந்தால் அதனை நோக்கி கையினால் சைகினை செய்வது போதுமானது. குறிப்பாக பெண்களைப் பொறுத்த வரையில் அவர்களின் உடல் முழுவதும் அவ்ரத்தாக இருப்பதால் இவ்வாறு செய்வதே மிகவும் ஏற்றமானது. சனநெரிசலை ஏற்படுத்துவது ஆண்களுக்கே கூடாது என்றிருக்கும் போது பெண்கள் அதை விட ஒரு படி மேல் சென்று இதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். சனநெரிசல் இல்லாத நேரத்தில் பெண்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட நேர்ந்தால் அந்நிய ஆண்கள் தன்னை பார்த்துவிடுவார்கள் எனும் அச்சம் ஏற்பட்டால் முகத்தை துணியால் மறைத்துக்கொள்வது சிறந்தது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/229)
***
கேள்வி: ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் தவாஃப் செய்யும் போது இஸ்மாஈல் சுவற்றின் உள்புறத்தால் தவாஃப் செய்வது கூடுமா?
பதில்: ஹஜ் உம்ரா செய்பவரோ அல்லது சுன்னத்தான தவாஃப் செய்பவரோ தவாஃபின் போது இஸ்மாஈல் சுவற்றின் உள்புறத்தால் தவாஃப் செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் அச்சுற்று ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் இஸ்மாஈல் சுவரும் கஃபாவிற்குள் உள்ளடங்கும் பகுதியாகும். நாம் கஃபாவிற்கு வெளிப்புறத்திலே தவாஃப் செய்ய வேண்டும். அல்லா்ஹ கூறுகிறான், "மிகப் பழமையான இறையாலயத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்" -அல்குர்ஆன் 22:29- ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி ﷺ அவர்களிடம் (கஅபா வை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, “இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். நான், “அப்படியானால், கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “உன் சமூகத்தாருக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். -ஆதாரம்: புஹாரி 1584, முஸ்லிம் 1333- மற்றொரு அறிவிப்பில், "நான் கஅபாவினுள் நுழைந்து அங்கு ஆசைப்பட்டேன். அப்போது நபியவர்கள் எனது கையைப் பிடித்து, (இஸ்மாஈல்) சுவற்றின் உட்புறத்தில் விட்டார்கள். கஃபாவின் உட்புறத்தில் தொழ நாடியிருந்தால் இச்சுவர் பகுதியில் தொழுவீராக, இதுவும் கஃபாவின் ஒரு பகுதி தான்" எனக் கூறினார்கள். -ஆதாரம்: அபூதாவுத் 2028, அஹ்மத் 24616-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/233)
***
ஐந்தாவது: ஸஃயு பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: ஸஃயு செய்யும் போது பச்சை விளக்குப் பகுதியில் பெண்கள் துள்ளித் துள்ளி ஓடக் கூடாது என்பதற்கான ஆதாரத்தை ஃபிக்ஹ் புத்தகங்களில் ஹஜ் உம்ரா பாடங்களில் நான் காணவில்லை. தொலைக்காட்சியில் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர் பேசும் போது, "ஸஃயில் பெண்கள் துள்ளி ஓடக் கூடாது. இது ஆண்களுக்கு மாத்திரமானது. பெண்கள் ஓட நேர்ந்தால் அவர்களின் அவ்ரத் வெளிப்பட்டு விடும் என்பதால் அவர்கள் துள்ளி ஓடாமல் இருப்பது அவர்களுக்கு மிகவும் ஏற்றமானது" எனக் கூறினார். இதற்கு அவர் எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. 'ஹாஜர் (ரழி) அவர்கள் ஆரம்பித்து வைத்து வழக்கமே இவ்வாறு துள்ளித் துள்ளி ஓடுவது. அவர் கூறுவது உண்மையாக இருந்தால் அது அவரது இஜ்திஹாதுக்கு உட்பட்ட கருத்தாகவே இருக்கும்' என நான் எனக்குள் கூறிக்கொண்டேன். அல்லாஹ்வின் அருளால் நான் இஜ்திஹாதுடன் தொடர்பான கருத்துக்களையும் ஏற்பவன். மார்க்கம் என்பது வெறும் அறிஞர்களின் கருத்துக்களால் ஆனவை அல்ல என்பதையும் ஏற்பவன். எனவே எனக்கு இதற்கான தெளிவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.
பெண்களின் அவ்ரத்தையும், மஹ்ரம் எனும் சட்டத்தையும் அடிப்படையாக வைத்து சில பொதுவான சட்டங்களில் பெண்களுக்கு கூடுதல் சட்டங்களோ, அல்லது சட்டங்களில் தளர்வுகளோ இஸ்லாமிய அறிஞர்களினால் முன்வைக்கப்படுகின்றன. இவை அவர்களின் சொந்த கருத்தினால் முன்வைக்கப்படும் சட்டங்கள் கிடையாது. மாறாக ஒப்புவமை அடிப்படையில் (கியாஸ்) இயற்றப்படும் சட்டங்களாகும். அந்த அடிப்படையில் தளர்த்தப்பட்ட சட்டமாக அமைந்ததே ஸஃயில் பெண்கள் பச்சை விளக்குப் பகுதியில் துள்ளி ஓடக் கூடாது எனும் சட்டம். இப்னுல் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், "தவாஃபில் முதல் மூன்று சுற்றுக்களிலும், ஸஃயிலும் பெண்கள் துள்ளி ஓடக் கூடாது என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். இவ்வாறு ஓடுவதால் அவர்களின் அவ்ரத்களில் சில பகுதிகள் வெளியில் தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தவாஃவில் பெண்கள் இழ்திபாஃ (வலது தோல்புஜம் தெரியும் வகையில் ஆடை அணிதல்) முறையில் ஆடை அணியவும் கூடாது. இழ்திபாஃ முறையில் தோலை வெளிப்படுத்த வேண்டுமென்பதே அதன் நோக்கமாகும். இது பெண்களுக்கு தடுக்கப்பட்ட ஒன்றாகும். பெண்கள் அப்பகுதியை மறைத்துக்கொள்ள வேண்டும்." -ஆதாரம்: அல்முஃஹ்னீ 03/197-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/226)
***
ஆறாவது : உம்ராவில் இருந்து விடுபடுதல் தொடர்பான மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: இவ்வாரம் உம்ரா செய்துவிட்டு தலை முடியை மழித்தவர், அடுத்த வாரம் உம்ரா செய்ய நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? அவரின் தலைமுடி சிறியதாகவே வளர்ந்திருக்கும். அல்லது வளராமலும் இருக்கும்.
பதில் : ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் தனது தலை முடியை மழிப்பதோ, அல்லது குறைத்துக்கொள்வதோ கட்டாயக் கடமையாகும். அவரின் தலையில் முடி இல்லாவிட்டால் அக்கடமை அவரை விட்டும் நீங்கிவிடுகிறது. அவரின் குறித்த ஹஜ் அல்லது உம்ராவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/327)
***
கேள்வி: ஒரு குழுவினர் உம்ராவுக்கு சென்று, அக்கடமையை முடித்ததும், ஒருவர் மற்றவர்களின் தலை முடியை மழிக்க ஆரம்பித்தார். அனைவரது தலைமுடிகளையும் மழித்த பிறகு, வேறொருவர் இவரின் தலை முடியையும் மழித்தார். இவ்வாறு இவர்கள் உம்ராவிலிருந்து விடுபட்டனர். இவ்வாறு செய்துகொள்வதன் சட்டம் யாது?
பதில்: இஹ்ராம் நிய்யத்துடன் இருக்கும் ஒருவர் இஹ்ராம் நிய்யத்துடன் இருக்கும் இன்னொருவருக்கு தலை முடியை மழிப்பதிலோ, குறைப்பதிலோ எவ்விதத் தவறும் கிடையாது. ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து விடுபடுவதற்கு தலை முடி மழிக்கப்பட்டோ, அல்லது குறைக்கப்பட்டோ இருக்க வேண்டுமென்பதே நிபந்தனையாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/146)
***
கேள்வி: ஹஜ் உம்ராவில் தலை முடியை இறக்குவது பற்றிய சரியான தெளிவை உங்களிடம் எதிர்பார்க்கிறோம். தலை முடியை சவரக் கத்தியால் மழிக்க வேண்டுமா? அல்லது சவர இயந்திரத்தால் மழிக்க வேண்டுமா? தலை முடியை மழிக்க சவரக் கத்தி பயன்படுத்துவது சிறந்ததா? அல்லது சவர இயந்திரமா? அல்லது எதையும் பயன்படுத்த முடியுமா?
பதில்: எந்தக் கருவியைப் பயன்படுத்தினாலும் தலை முடியை மழிப்பதும், அல்லது குறைப்பதுமே முக்கியமான விடயமாகும். தலை முடியை மழிப்பதே மிகவும் சிறந்தது. நபி ﷺ அவர்கள் தலை முடியை மழித்தவர்களுக்கு மூன்று முறையும், குறைத்தவர்களுக்கு ஒரு முறையும் பாவமன்னிப்பையும், அருளையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/201)
***
கேள்வி: ஜித்தாவில் வசிக்கும் ஒருவர் உம்ரா செய்துவிட்டு, மீண்டும் ஜித்தாவிற்கு சென்றே தனது தலைமுடியை மழித்தார். இச்செயல் பற்றிய சட்டம் யாது?
பதில்: ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றிவிட்டு, புனித பூமிக்கு உள்ளே அல்லது வெளியே எந்த இடத்தில் வைத்தும் தலை முடியை மழிக்கவோ, குறைத்துக்கொள்ளவோ முடியும். தலை முடியை மழிக்க, அல்லது குறைப்பதற்கு முன் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது. ஹஜ்ஜில் பெரிய ஜம்ராவில் கல் எறிந்து விட்டு, தவாஃபையும், ஸஃயையும் செய்து, தலை முடியை மழிக்க, அல்லது குறைப்பதற்கு முன் தன் துணையுடன் உடலுறவில் ஈடுபடக் கூடாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/203)
***
கேள்வி: ஒருவர் தன் வாழ்நாளில் முதல் முறையாக உம்ரா செய்வதற்கு ஜித்தாவிற்கு வந்து, தனது உறவுக்காரர் ஒருவருடன் மக்காவிற்குச் சென்றார். உம்ராவை ஆரம்பித்து, ஸஃயு செய்து முடிந்ததும் ஒருவர் மற்றவரிடம், 'நாம் தலைமுடியை மழிப்பதா? அல்லது குறைப்பதா?' எனக் கேட்டார். அதற்கு மற்றவர், 'நாம் வீட்டிற்குச் சென்று தலைமுடியை மழித்துக்கொள்வோம்' எனக் கூற, இருவரும் ஜித்தாவிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்த இருவரும் மறதியால் இஹ்ராம் ஆடையைக் கழட்டி விட்டனர். இப்போது இவர்கள் இருவரும் என்ன செய்ய வேண்டும்?
பதில்: உம்ரா செய்ய வந்தவர் தவாஃபையும், ஸஃயையும் நிறைவேற்றிய பின் தலை முடியை இறக்குவதற்கு முன் இஹ்ராம் ஆடையைக் கலைந்து, வேறு ஆடையை அணிந்துகொண்டால், தான் தலைமுடியை நீக்கவில்லை என்பது நினைவுக்கு வந்ததும் உடனே இஹ்ராம் ஆடையை அணிந்து தலைமுடியை நீக்கிக் கொள்வது கட்டாயக் கடமையாகும். மறதி காரணமாக அவருக்கு இவ்வாறு நிகழ்ந்தமையினால் அவர் மீது எவ்விதக் குற்றமும் ஏற்படாது. இவ்வாறு செய்ததற்காக இவருக்கு எவ்வித குற்றப்பரிகாரங்களும் கிடையாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/206)
***
ஹஜ் செய்பவர்களுக்கு தேவைப்படும் மார்க்கத் தீர்ப்புகள் (2) இவை சவூதி அரேபியாவின் மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தரக் குழுவின் மொத்த மார்க்கத் தீர்ப்புக்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜின் சட்டமும், அதன் அந்தஸ்த்துகளும்
கேள்வி: முஸ்லிம் உலகிற்கு மக்காவின் முக்கியத்துவம் யாது?
பதில்: மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடமாகவும், பாதுகாப்பான இடமாகவும், புனித பூமியாகவும் அல்லாஹ் மக்காவை ஆக்கியுள்ளான். இங்கு ஹஜ் உம்ரா செய்பவர்கள் அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து, அவனின் தண்டனைகளுக்கு அஞ்சி, தமது வணக்கங்களை சிறப்பாகவும், மன அமைதியுடன் நிறைவேற்றுகின்றனர். முஸ்லிம்கள் இங்கு ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகிக் கொள்கின்றனர். அவர்களின் மார்க்க, உலக விடயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்துகொள்கிறன்றனர். இங்கு அவர்களின் தொழுகைகளுக்கும், நற்செயல்களுக்கு பல மடங்கு நற்கூலிகள் கிடைக்கின்றன.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/8)
***
கேள்வி: எனது தந்தை சுமார் 40 வருடங்களுக்கு முன் கால்நடையாக வந்து ஹஜ் செய்தார். அவர் தன் வாழ்நாளில் இரு உம்ராக்களையும் செய்துள்ளார். கடைசி உம்ராவை அவர் மரணிப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன் நிறைவேற்றினார். எனது தந்தைக்கு எழுத வாசிக்கத் தெரியாது. இந்நிலையில் எப்படி அவர் சரியாக ஹஜ் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் அவர் செய்த ஹஜ்ஜை மீண்டும் அவருக்காக செய்ய வேண்டுமா? எனக்கு இது பற்றிய தெளிவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதில்: ஹஜ் என்பது ஆயுளில் ஒரு தடவை செய்ய வேண்டிய வணக்கமாகும். இதற்கு உடல் பலத்தையும், பண பலத்தையும் தவிர எழுத, வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனை கிடையாது. இரண்டாவது தடவையாக ஹஜ் செய்வது கட்டாயக் கடமை கிடையாது. ஆனாலும் நீங்கள் உங்கள் தந்தைக்காக ஹஜ் செய்ய விரும்பினால் அது சுன்னத்தான ஹஜ்ஜாக கருதப்படும். இவ் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொண்டால் உங்கள் இருவருக்கும் அதற்கான கூலிகளை அல்லாஹ் வழங்குவான்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 15)
***
கேள்வி: கனவனின் அனுமதியின்றி ஒரு மனைவி கடமையான ஹஜ்ஜுக்குப் புறப்படுவதன் சட்டம் யாது?
பதில் : பண பலமும், உடல் பலமும், மஹ்ரமும் பூர்த்தியாக இருந்தால் வசதி வரும் போது ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும். இதற்கு கனவனின் அனுமதி தேவையில்லை. மனைவி ஹஜ் செய்யச் செல்வதை கனவன் தடுக்கவும் கூடாது. மாறாக இக்கடமையை நிறைவேற்றுவதற்கு அவர் தனது மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/20)
***
கேள்வி: ஒரு பெண் தனது கனவனின் அனுமதியின்றி தனது சகோதரர்களுடந் ஹஜ் செய்ய புறப்படலாமா?
பதில்: கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற ஒரு பெண் செல்வதாக இருந்தால் அதற்காக கனவனின் அனுமதியைப் பெறத் தேவையில்லை. மனைவிக்கு ஹஜ்ஜின் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தியாகி விட்டால் கனவன் அவளை தடுக்கவும் முடியாது. இதற்கு மாறாக சுன்னத்தான ஹஜ் செய்ய செல்வதாக இருந்தால் கனவனின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ்ஜோ, வேறு பயணங்களோ மேற்கொள்ளக் கூடாது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், ''அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மேற்கொள்ள வேண்டாம்'' -ஆதாரம்: புஹாரி 1088, முஸ்லிம் 1339- ஆண் துணையின்றி பெண்கள் கூட்டாகச் செல்வது மஹ்ரம் தேவையை பூர்த்தி செய்யாது. கடமையான ஹஜ் பயணத்திலும், வேறு பயணங்களிலும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/ 40)
***
கேள்வி: நான் பருவமடையாத எனது சிறு பிள்ளையுடன் ஹஜ் செய்ய நாடியுள்ளேன். அவருக்கு நான் இஹ்ராம் ஆடையை அணிவித்து, அவருக்கு பகரமாக நான் ஹஜ்ஜின் அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்ற வேண்டுமா? அல்லது அவருக்கு வழமையான ஆடையை அணிவித்து, ஹஜ் செய்விக்காமல் என்னோடு கூட்டிச் செல்ல வேண்டுமா?
பதில் : பருவமடையாத சிறுவன் நல்லது கெட்டதை பிரித்தறிய முடியுமான நிலையில் இருந்தால் அவரை ஹஜ்ஜுக்காக கூட்டிச் செல்ல முடியும். அவருக்கு இஹ்ராம் ஆடையை அணிவித்து, இஹ்ராம் நிய்யத் வைத்ததிலிருந்து ஹஜ்ஜின் இறுதி கடமை வரை அனைத்தையும் அவரை செய்விக்க வேண்டும். கல்லெறிய முடியாமல் போனால் பொறுப்பானவர் அவருக்குப் பகரமாக கல் எறிய முடியும். இஹ்ராத்தின் போது தடுக்கப்பட்டவற்றிலிருந்து தவிர்ந்திருக்குமாறும் அவருக்குக் கூற வேண்டும். அச்சிறுவன் நல்லது கெட்டதை பிரித்தறிய முடியாத நிலையில் இருந்தால் அவருக்குப் பகரமாக ஹஜ்ஜபொறுப்பாளர் அனைத்தையும் செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/22)
***
கேள்வி: சிறு ஆண் அல்லது பெண் குழந்தையை ஹஜ்ஜுக்குக் கூட்டிச் சென்று கடமையான ஹஜ்ஜை செய்வித்தால், அது அவர்களுக்குரிய ஹஜ்ஜாக கருதப்படுமா? அல்லது மேலதிக வணக்கம் எனக் கருதப்பட்டு அதற்கான கூலி பெற்றோருக்குக் கிடைக்குமா?
பதில்: பருவ வயதை அடையாத பிள்ளைகளின் ஹஜ்ஜும் உம்ராவும் மேலதிக வணக்கமாகவே கருதப்படும். அவர்கள் முதல் ஹஜ் அல்லது முதல் உம்ரா செய்தவர்களாக கருதப்படமாட்டார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/23)
***
கேள்வி: ஒரு பெண் சவூதிக்கு வந்து, விருந்தினரின் செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார். இவர் செய்த இந்த ஹஜ் தனது முதல் ஹஜ்ஜாகக் கருதப்படுமா? ஏனெனில் தனது ஹஜ்ஜுக்காக எந்த செலவையும் இவர் தனது பணத்திலிருந்து செலவு செய்யவில்லை.
பதில் : ஹஜ் கடமையை நிறைவேற்ற தனது செல்வத்திலிருந்து முழுமையாக செலவு செய்ய வேண்டுமென்றோ, அல்லது தனது ஹஜ்ஜுக்காக தான் சிறிது செலவு செய்து, மற்றைய அனைத்து செலவுகளையும் வேறு சிலர் நிறைவேற்றுவதோ ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் இல்லை. பணபலம் இருக்க வேண்டுமென்பது ஹஜ்ஜின் நிபந்தனையாகும். இதற்கான பணம் பிறரின் உதவியால் கிடைக்கப்பெற்றாலும் குறித்த நபர் பணபலமிக்கவராகவே கருதப்படுவார். ஆனாலும் இப்பெண்ணின் ஹஜ் செலவீனத்தை வேறு தரப்பினர் பொறுப்பேற்றிருந்தாலும் ஹஜ்ஜின் அனைத்து நிபந்தனைகள், ருக்குன்கள், வாஜிப்கள் என அனைத்தையும் சரிவரவும், பூரணமாகவும் செய்திருந்தால் அவரிடமிருந்து அவ் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/34)
***
கேள்வி: எமது நாட்டில் ஒருவர் ஹஜ் செய்ய விரும்பினால் 125,000 பெறுமதியான பணத்தை வங்கியில் வைப்புச் செய்ய வேண்டும். இது அதியுயர் தொகையாகும். வைப்புச் செய்யும் வங்கியும் வட்டியுடன் தொடர்புடைய வங்கியாகும். இவ்வாறான முறையைத் தவிர வேறு முறைகளில் ஹஜ்ஜிற்கு வருவதற்கான வழிகள் எதுவும் எனது நாட்டில் இல்லை. இந் நிலையில் சக்திபெற்ற ஒரு முஸ்லிமுக்கு ஹஜ் கடமையாகுமா? அவ்வாறு அவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக கருதப்படுமா? ஏனெனில் குறித்த நபரின் பணம் வட்டியுடன் தொடர்பான வங்கிக்கும், நாட்டிற்கும் உதவியாக இருந்துள்ளது.
பதில்: இந்த பணத்தில் செய்யும் ஹஜ் சரியான ஹஜ்ஜாகும். மேற்சொன்ன காரணம் ஹஜ் செய்ய பூரண சக்தியுடன் இருக்கும் ஒருவருக்கு கடமையான ஹஜ்ஜை பிற்போடுவதற்கான காரணியாக அமையாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 42)
***
கேள்வி: ஹராமான சம்பாத்தியத்திலிருந்து ஹஜ் செய்பவரது ஹஜ்ஜின் சட்டம் யாது? இந்த ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படுமா?
பதில்: ஹராமான பணத்தில் ஹஜ் செய்வது ஹஜ் சரியானது என்பதைத் தடுத்து விடாது. ஆனால் அவர் ஹராமான முறையில் பணம் சம்பாதித்ததற்கான கூலி அவருக்கு வழங்கப்படும். அவரின் ஹஜ்ஜின் நன்மைகளிலும் குறைகள் ஏற்படும். இது ஹஜ்ஜை முறித்து விடாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 43)
***
கேள்வி: வங்கியில் தவணை அடிப்படையில் செலுத்துவதற்காக ஒரு தொகைப் பணத்தை நான் பெற்றேன். இப்பணத்தினால் ஹஜ் செய்ய முடியுமா?
பதில் : பண பலம் இருப்பது ஹஜ்ஜின் நிபந்தனைகளில் ஒன்றாகும். நீங்கள் ஹஜ் செய்வதற்கும், தவணையை சரியாக கட்டிவருவதற்கும் சக்தி பெற்றால் ஹஜ் செய்வது கடமையாகும். உங்களுக்கு ஹஜ் செய்வதும், தவணையை கட்டுவதும் ஒரே நேரத்தில் வந்து, இரண்டையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டால் தவணையைக் கட்டுவதை முற்படுத்துங்கள். ஹஜ் செய்வதை அதற்கான பலம் வரும் வரை பிற்படுத்துங்கள். அல்லாஹ் கூறுகிறான், "இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்." -அல்குர்ஆன் 03:97-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 45)
***
கேள்வி: இறந்தவருக்காக அல்லது இதற்கு முன் ஹஜ் செய்திராத முதியவருக்காக குறித்த நபரின் பணத்தில் ஹஜ் செய்யச் செல்பவர் முதலில் தனது ஹஜ்ஜை முற்படுத்த வேண்டுமா? அல்லது யாருக்காக ஹஜ் செய்ய வந்தாரோ அவரின் ஹஜ்ஜை முற்படுத்த வேண்டுமா?
பதில் : ஒருவர் தனக்காக ஹஜ் செய்வதற்கு முன் பிறருக்காக ஹஜ் செய்வது கூடாது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "லைப்பைக்க அன் ஷுப்ருமா" என ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய நிய்யத் வைப்பதை நபி ﷺ அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவரிடம், "யார் அந்த ஷுப்ருமா?" என நபியவர்கள் வினவியபோது, "அவர் எனது உறவுக்காரர்" என அம்மனிதர் கூறினார். அப்போது நபியவர்கள், "நீங்கள் உங்களுக்காக ஒரு போதும் ஹஜ் செய்ததில்லையா?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை" எனக் கூற, "இதை உங்களுக்கான ஹஜ்ஜாக ஆக்கிக்கொள்ளுங்கள். ஷுப்ருமாவுக்காக பிறகு ஹஜ் செய்யுங்கள்" எனக் கூறினார்கள். -ஆதாரம்: அபூதாவுத் 1811, இப்னுமாஜா 2903-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 50)
***
கேள்வி: தனக்கு கடமையான ஹஜ்ஜை செய்த ஒருவர் கடமையான ஹஜ் செய்ய முடியாமல் இருக்கும் தனது குடும்ப உறவினர் ஒருவருக்காக ஹஜ் செய்யலாமா?
பதில்: வயோதிபம், தீராத நோய் அல்லது மரணம் ஆகிய காரணங்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனோருக்காக, தனக்காக ஹஜ் செய்து முடித்த ஒருவர் பகரமாக ஹஜ் செய்யலாம். இதுபற்றி அதிகமான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. நாளடைவில் குணமடையும் நோய், அரசியல் ரீதியான தடைகள், பாதுகாப்பு அற்ற சூழ்நிலை ஆகிய இடைநடுவே ஏற்பட்ட தடங்களில் சிக்கிக் கொண்டவர்களுக்கு பகரமாக ஹஜ் செய்ய முடியாது. ஏனெனில் அவர்களின் காரணிகள் நாளடைவில் நீங்கிவிடும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/51)
***
கேள்வி: ஏழ்மையின் காரணமாக ஹஜ் கடமையாகாமல் மரணித்த எனது பெற்றோருக்காக நான் ஹஜ் செய்யலாமா?
பதில்: முதலில் நீங்கள் உங்களுக்காக ஹஜ் செய்திருந்தால் உங்கள் பெற்றோருக்காக நீங்கள் ஹஜ் செய்யலாம். அல்லது அவர்களுக்காக ஹஜ் செய்ய தனக்கு ஹஜ் செய்த ஒருவரை நியமிக்கலாம். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிர்கிறார்கள், "லைப்பைக்க அன் ஷுப்ருமா" என ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய நிய்யத் வைப்பதை நபி ﷺ அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவரிடம், "யார் அந்த ஷுப்ருமா?" என நபியவர்கள் வினவியபோது, "அவர் எனது உறவுக்காரர்" என அம்மனிதர் கூறினார். அப்போது நபியவர்கள், "நீங்கள் உங்களுக்காக ஒரு போதும் ஹஜ் செய்ததில்லையா?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை" எனக் கூற, "இதை உங்களுக்கான ஹஜ்ஜாக ஆக்கிக்கொள்ளுங்கள். ஷுப்ருமாவுக்காக பிறகு ஹஜ் செய்யுங்கள்" எனக் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவுத் 1811, இப்னுமாஜா 2903.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 53)
***
கேள்வி: ஒருவர் ஒரே தடவையில் தனக்காகவும், தனது தாய் தந்தைக்காகவும் ஹஜ் செய்யலாமா?
பதில்: தக்க காரணங்களால் ஹஜ் செய்ய முடியாமல் உள்ளவர்கள், மரணித்தவர்கள் ஆகியோருக்கு பகரமாக ஹஜ் செய்வது கூடும். ஆனால் ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு பகரமாக ஹஜ்ஜோ உம்ராவோ செய்வது கூடாது. ஹஜ்ஜும் உம்ராவும் ஒரே நேரத்தில் ஒருவருக்காகவே நிறைவேற்ற முடியும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/57)
***
கேள்வி: ஒருவர் ஹஜ்ஜுக்காக பயணம் மேற்கொண்டு, உம்ராவை தனது தாய்க்கும், ஹஜ்ஜை தனது தந்தைக்குமாக நிய்யத் வைத்து செய்கிறார். அடுத்த வருடம் இதற்கு மாற்றமாக உம்ராவை தனது தந்தைக்கும், ஹஜ்ஜை தனது தாய்க்கும் செய்கிறார். இவ்வாறு செய்வது கூடுமா?
பதில்: ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனியான வணக்கங்களாகும். இவை ஒவ்வொன்றையும் எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை தனித்தனியாக நபியவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். குறிப்பாக கிரான், தமத்துஃ ஆகிய முறைகளில் ஹஜ் செய்பவர் எவ்வாறு இவ்விரு வணக்கங்களையும் செய்ய வேண்டுமென்பது தெளிவாகவே உள்ளது. அதன் அடிப்படையில் ஒருவர் தனது தாய்க்காக உம்ரா செய்து அதிலிருந்து விடுபட்டதும், தனது தந்தைக்காக நிய்யத் வைத்து ஹஜ் செய்ய முடியும். இதற்கு மாற்றமாகவும் செய்துகொள்ள முடியும். அதில் ஒரு வணக்கத்தை தனக்காக செய்து அதிலிருந்து விடுபட்டதும், மற்றைய வணக்கத்தை தனது தாய் அல்லது தந்தைக்காகவும் செய்துகொள்ளலாம். ஏனெனில் எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொருவரும் தாம் எண்ணியதன் பலனை அடைந்துகொள்வார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/58)
***
கேள்வி: என் கனவர் -அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்ய வேண்டும்- இறந்துவிட்டார். இவ்வருடம் அவருக்கு பகரமாக ஹஜ் செய்வதற்கு நான் ஒருவரை நியமிக்கவுள்ளேன். என் கனவருக்குப் பரகரமாக ஹஜ் செய்ய இருப்பவருக்கு நான் ஹஜ்ஜுக்காக கொடுக்கும் பணம் அல்லாத கூலிப் பணத்தையும் கொடுக்க வேண்டுமாெ? எனக்கு இதுபற்றிய தெளிவைத் தாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
பதில்: பிறருக்காக ஹஜ் செய்ய நியமிக்கப்பட்டவர் ஹஜ்ஜுக்கான பணத்தைப் பெற்றிருந்தாலும் கூட ஹஜ்ஜின் போது தனக்கு ஏற்படும் களைப்புக்காகவும், தனது முயற்சிக்காகவும் கூலியாக மேலதிக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதை அவர் பணத்தை நோக்காகக் கொண்டு மாத்திரம் செய்யாமல் அல்லாஹ்விடம் நன்மையை நாடி, புனித பூமியில் தனக்கு வணக்கங்கள் செய்வதற்கு சந்தர்ப்பத்தை அளித்த அல்லாஹ்வுக்காகவும் செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள்- முதல் தொகுப்பு (11/60)
***
கேள்வி: நாம் ஹஜ் செய்யும் போது எம்மோடு ஒரு சிறு பையனும் இருந்தான். நாம் இறந்து போன ஒரு பெண்ணுக்கு பகரமாக ஹஜ் செய்ய இப்பையனுக்கு நிய்யத் சொல்லிக்கொடுத்தோம். தவாஃப் செய்தோம், மற்றைய கடமைகளையும் நிறைவேற்றினோம். மரணித்த அப்பெண்ணுக்காக இப்பையனை வைத்து குர்பானியும் கொடுத்தோம். இவ்வாறு நாம் செய்ததன் சட்டம் யாது?
பதில் : இச்சிறுவன் செய்த அனைத்தும் அவனுக்கான சுன்னத்தான வணக்கமாகவே கருதப்படும். தனக்காக ஹஜ் செய்யாமல் பிறருக்கு ஹஜ் செய்ய முடியாது. தனக்காக ஹஜ் செய்வது பருவ வயதை அடையாமல் நிறைவேறாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/68) சிறிய மாற்றத்துடன்
***
கேள்வி: ஒருவர் தான் ஹஜ் செய்வதற்கு முன் தனது தாய் தந்தையை ஹஜ் செய்ய அனுப்ப முடியுமா?
பதில் : சுதந்திரமான, புத்தியுள்ள, பருவமடைந்த, உடலாலும், பணத்தாலும் சக்திபெற்ற ஒருவர் ஆயுளில் ஒரு தடவை ஹஜ்ஜை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். முடிந்தவரை பெற்றோருக்கு உபகாரம் செய்வது இஸ்லாம் கடமையாக்கிய ஒரு வணக்கமாகும். உஙகளைப் பொருத்த வரை ஒரே தடவையில் அனைவரும் சென்று ஹஜ் செய்ய முடியாத சூழல் இருந்தால் முதலில் நீங்கள் உங்களுக்காக ஹஜ் செய்ய வேண்டும். அதன் பிறகே உங்கள் பெற்றோரை ஹஜ் செய்ய அனுப்ப வேண்டும். உங்களுக்கு போக முடியாமல் உங்கள் பெற்றோரை நீங்கள் அனுப்பினால் அவர்களின் ஹஜ் சரியான ஹஜ்ஜாகவே கருதப்படும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/70)
***
கேள்வி: எனக்கு மிகவும் வயதான தாயார் இருக்கிறார். அவருக்கு குறைந்தது 100 வயது இருக்கும். ஹஜ் செய்ய முடியாத நிலையில் இருக்கும் அவருக்குப் பகரமாக அவரது செலவில் சென்ற வருடம் நான் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்துவிட்டு வந்தேன். அவர் உயிருடன் இருக்கும் போது அவருக்காக செய்த ஹஜ் செல்லாது என சிலர் கூறுகின்றனர். நீங்கள் செய்த ஹஜ்ஜில் எவ்வித பயனுமில்லை எனவும் என்னிடம் சிலர் கூறுகின்றனர். இதுபற்றிய தெளிவை எனக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதில்: இதற்கு முன் நீங்கள் உங்களுக்காக உம்ராவையும், ஹஜ்ஜையும் செய்திருந்தால் நீங்கள் உங்கள் தாய்க்காக செய்த உம்ராவும் ஹஜ்ஜும் சரியானது தான்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/71)
***
கேள்வி : ஹஜ் செய்வதற்காக பிறரை நியமிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் யாவை? பிறருக்காக ஹஜ் செய்வது எப்போது ஆரம்பமாகிறது?
பதில்: மரணித்த ஒரு முஸ்லிமுக்காகவும், வயோதிபம், தீராத நோய் காரணமாக முடியாமல் இருப்போருக்கும் பகரமாக ஹஜ் உம்ரா செய்வது கூடும். இன்னொருவருக்குப் பகரமாக ஹஜ் உம்ரா செய்பவர் முதலில் தனக்காக அவ்விரண்டையும் செய்தவராக இருக்க வேண்டும். மினாவில் கல்லெறியும் போதும் தாமாக சென்று எறிய முடியாதவர்கள் அவர்களுக்குப் பகரமாக கல் எறிவதற்கு ஒருவரை நியமிக்க முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டவர் அதே வருடம் ஹஜ் செய்பவராகவும், தனக்காக கல் எறிந்துவிட்டு வந்தவராகவும் இருக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/76)
***
கேள்வி: சவூதி அல்லாத வேறு முஸ்லிமான நாட்டில் ஹஜ் கடமையான நிலையில் ஒரு முஸ்லிம் இறந்துவிட்டார். அவர் ஹஜ் செய்யவில்லை. நான் சவூதியில் வசிப்பதனால் குறித்த நபருக்காக நான் இங்கு ஹஜ் செய்ய முடியுமா? மக்காவை அடிப்படையாக வைத்து நான் வசிக்கும் பகுதிக்கும் மக்காவுக்குமான தூரம், குறித்த நபர் வசிக்கும் நாட்டிற்கும் மக்காவுக்குமான தூரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஹஜ்ஜின் நன்மையிலும் வித்தியாசங்கள் ஏற்படுமா?
பதில் : நீங்கள் சவூதியில் இருந்துகொண்டு உலகில் எங்கிருந்துமுள்ள ஹஜ் செய்தோ அல்லது செய்யாமலோ மரணித்த அல்லது தகுந்த காரணங்களால் வர முடியாமல் இருப்போருக்காக ஹஜ் உம்ரா செய்ய முடியும். மேற்குறிப்பிட்ட தூரம் என்பது இதில் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. உளத்தூய்மையும், செலவு செய்யும் பணமும், இஸ்லாமிய வழிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதும் ஒருவரிடம் இருப்பதற்கு ஏற்பவே அவருக்கு நன்மை வழங்கப்படும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/77)
***
கேள்வி : மரணித்த, அல்லது வயோதிபம், தீராத நோய் ஆகியவற்றால் பாதிப்புக்கு உள்ளான ஆணுக்கோ பெண்ணுக்கோ பகரமாக, ஒருவர் கூலி வாங்கி ஹஜ் செய்கிறார். அவருக்கு அல்லாஹ்விடத்தில் கூலி கிடைக்குமா?
பதில்: கூலி வாங்கியோ, கூலி வாங்காமலோ யார் பிறருக்காக ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ, இவ்வணக்கம் நிறைவேற்றப்படுபவருக்கான வெகுமதி அல்லாஹ்விடம் கிடைத்துவிடும். இதை செய்பவருக்கும் அவரின் உளத்தூய்மை, நன்மைக்காக அவர் விரைந்து செயற்படும் விதம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நன்மைகள் வழங்கப்படலாம். மஸ்ஜிதுல் ஹராமிற்கு வருகை தரும் அனைவரும் அங்கு அதிகமாக கடமையான, சுன்னத்தான வணக்கங்களில் ஈடுபடுவதால் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப அல்லாஹ்விடத்தில் வெகுமதிகள் வழங்கப்படலாம்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/77)
***
கேள்வி : ஆஃபிரிக்காவில் இருக்கும் ஒருவர் தனது தாய்க்கு பகரமாக ஹஜ் செய்வதற்காக மக்காவில் இருக்கும் ஒருவரை நியமிக்க விரும்புகிறார். இவருக்கு ஆஃபிரிக்காவில் இருந்து மக்காவுக்கு வருவதற்கான முழுச் செலவுகளையும் வழங்க வேண்டுமா? அச்செலவுக்கான பணத்தை குறைத்து கொடுக்க முடியுமா?
பதில்: மரணித்த அல்லது, வயோதிபம், தீராத நோய் காரணமாக ஹஜ் செய்ய முடியாமல் இருக்கும் தனது தாய்க்கு பகரமாக ஹஜ் செய்வதற்கு மக்காவிலோ அல்லது வேறு பிரதேசங்களிலோ இருக்கும் நம்பிக்கையான ஒருவரை தேர்வு செய்வது ஆகுமான விடயமாகும். ஹஜ்ஜுக்கான செலவுகள் போக மேலதிகமாக அவருக்கு விரும்பினால் கூலி வழங்க முடியும். விரும்பினால் அதிகமாகவோ, குறைவாகவோ ஹஜ் செய்வதற்கான கூலியை கொடுக்க முடியும். அல்லது கொடுக்காமலும் இருக்க முடியும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள்- முதல் தொகுப்பு (11/80)
***
கேள்வி: எனது தந்தை ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவருக்காக ஹஜ் செய்வது கட்டாயம் என்பதை புரிந்துகொண்ட நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்வதற்கு ஒருவரை நியமித்தேன். அவர் எனது தந்தையின் பெயரையும், தந்தையின் தாயாரது பெயரையும் கேட்டார். எனக்கு எனது தந்தையின் தாயாரது பெயர் மறந்துவிட்டது. இதற்காக மரணித்த எனது தந்தையின் பெயரை மாத்திரம் பயன்படுத்தி ஹஜ் செய்ய முடியுமா?
பதில்: பிறருக்காக ஹஜ் செய்யும் போது இஹ்ராம் நிய்யத்தின் போதும், தல்பியா கூறும் போதும், தமத்துஃ அல்லது கிரான் அடிப்படையில் ஹஜ் செய்து குர்பானி கொடுக்கும் போதும் அவரின் பெயரை மாத்திரம் கூறி நிய்யத் வைப்பது போதுமானது. குறித்த நபரின் தாய் தந்தையரின் பெயர்களைக் கூற வேண்டிய அவசியமில்லை. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ""லைப்பைக்க அன் ஷுப்ருமா" என ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய நிய்யத் வைப்பதை நபி ﷺ அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவரிடம், "யார் அந்த ஷுப்ருமா?" என நபியவர்கள் வினவியபோது, "அவர் எனது உறவுக்காரர்" என அம்மனிதர் கூறினார். அப்போது நபியவர்கள், "நீங்கள் உங்களுக்காக ஒரு போதும் ஹஜ் செய்ததில்லையா?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை" எனக் கூற, "இதை உங்களுக்கான ஹஜ்ஜாக ஆக்கிக்கொள்ளுங்கள். ஷுப்ருமாவுக்காக பிறகு ஹஜ் செய்யுங்கள்" எனக் கூறினார்கள்." -ஆதாரம்: அபூதாவுத் 1811, இப்னுமாஜா 2903-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/81)
***
கேள்வி : 25 வயதுள்ள ஒருவர் மரணித்துவிட்டார். அவர் ஹஜ் செய்யவில்லை. அவருக்கு பகரமாக ஹஜ் செய்ய முடியுமா? மரணித்தவர் வசதியுள்ளவர் என்ற போதிலும் அவருக்காக உம்ரா செய்யாமல் ஹஜ் மாத்திரம் செய்ய முடியுமா?
பதில் : யாருக்கு ஹஜ் கடமையாகி, அதன் பின் மரணிக்கிறாரோ, அவரிடமிருந்த பணத்தில் ஹஜ் உம்ராவுக்கான பணத்தை வேறாக்கி வைக்க வேண்டும். வேறு யாராவது இவருக்கான ஹஜ் உம்ராவுக்கான பணத்தை பொறுப்பேற்றால் அவரின் சொத்திலிருந்து இதற்கான பணத்தை வேறாக்க வேண்டியதில்லை. ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இது கடமையான நிலையில் ஒருவர் மரணித்தால் அவரின் மரணத்திற்காக வேண்டி அக்கடமை அவரை விட்டும் நீங்கிவிடாது. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "‘ஜுஹைனா’ எனும் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி ﷺ அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்." -ஆதாரம்: புஹாரி 1852- அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "‘கஸ்அம்’ எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபியவர்களிடம் வந்து, “அல்லாஹ் விதித்த (ஹஜ்) கடமை என் தந்தைக்கு ஏற்பட்டுவிட்டது; அவர் வாகனத்தில் அமர முடியாத முதியவராக இருக்கிறார்; அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?” என்று கேட்டார். நபி ﷺ அவர்கள் “ஆம்” என்றார்கள்". -ஆதாரம்: புஹாரி 1854- அபூரஸீன் அல்அகீலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி ﷺ அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயோதிபராக இருக்கிறார். அவரால் ஹஜ் செய்யவோ, உம்ரா செய்யவோ, பயணம் செய்யவோ முடியாது". அப்போது நபியவர்கள், "நீ உனது தந்தைக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்துவிடு" எனக் கூறினார்கள். -ஆதாரம்: திர்மிதி 930, அபூதாவுத் 1810-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/87)
***
கேள்வி: தந்தையோ வேறு ஆண்துணைகளோ இல்லாத ஒரு பெண் தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற நம்பிக்கையான பெண்களுடன் செல்ல முடியுமா? இதற்காக தனது தாய், அல்லது தாயின் சகோதரி, அல்லது தந்தையின் சகோதரிகளை மஹ்ரமுக்கு பகரமாக அழைத்துச் செல்ல முடியுமா?
பதில்: ஒரு பெண் ஹஜ்ஜுக்காக பயணம் செய்வதானால் தனது கனவன் அல்லது மஹ்ரமான ஆண்கள் இன்றி பயணம் செய்வது கூடாது. தாய், தாயின் சகோதரிகள், தந்தையின் சகோதரிகள் என நம்பி்ககையான பெண்கள், மஹ்ரம் அல்லாத நம்பிக்கையான ஆண்களை தன்னுடன் அழைத்துச் செல்வதும் கூடாது. மஹ்ரமான ஆண்கள் இல்லாத பட்சத்தில் அவளுக்கு ஹஜ் கடமையாகாது. பெண்களைப் பொருத்தவரையில் சக்திபெற்றவர்கள் என இஸ்லாம் வரையறுத்துள்ள நிபந்தனை மஹ்ரம்களுடன் செல்வதையே குறிக்கிறது. அல்லாஹ் கூறுகிறான், "இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்" -அல்குர்ஆன் 03:97-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/91)
***
கேள்வி: கனவனை இழந்த அல்லது மஹ்ரம்கள் யாரும் இல்லாத, அல்லது கனவன் மரணித்ததற்காக இத்தா இருக்கும் பெண் சக்திபெற்ற நிலையில் ஹஜ்ஜுக்காக செல்ல முடியுமா?
பதில் : ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ்ஜுக்குச் செல்வது கூடாது. அவ்வாறே கனவன் மரணித்ததற்காக இத்தா இருக்கும் பெண்ணும் ஹஜ்ஜுக்காக செல்வதும் கூடாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 94)
***
கேள்வி: மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண் நல்ல பெண் துணைகளுடன் சென்று, தனது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டார். அவளுக்கு ஹஜ் கடமை நீங்கிவிடுமா?
பதில்: நீங்கள் குறிப்பிடுவது போல் நடைபெற்றிருந்தால் அவளுக்கு ஹஜ் கடமையாகாது. ஆனாலும் அவள் செய்த ஹஜ் சரியானதாக கருதப்படும். மஹ்ரம் இன்றி பயணம் செய்ததற்காக அவளுக்கு பாவம் கிடைக்கும். அவள் அல்லாஹ்விடம் அதற்காக பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 97)
***
கேள்வி: ஹஜ் கடமையான நிலையில் ஒருவர் மரணித்துவிட்டார். அவர் மரணிக்கும் போது தனது செல்வத்தில் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்ய ஒருவரை நியமிக்குமாறு வஸிய்யத் செய்திருந்தார். அவருக்காக இன்னொருவர் ஹஜ் செய்வதால் கிடைக்கும் நன்மை இவர் ஹஜ் செய்தால் கிடைக்கும் நன்மைக்கு சமனாகுமா?
பதில்: ஹஜ்ஜுக்கான நிபந்தனைகள் அனைத்தும் பூரணமான நிலையில் ஒருவர் மரணித்தால் அவர் வஸிய்யத் செய்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்காக இன்னொருவர் ஹஜ் செய்வது கடமையாகும். அவ்வாறு ஹஜ் செய்பவர் தனக்காக முதலில் ஹஜ் செய்திருக்க வேண்டும். ஹஜ் கடமையானவர் செய்யவிருந்த ஹஜ்ஜின் கூலி பற்றியும், அவருக்காக ஹஜ் செய்தவரால் கிடைக்க இருக்கும் கூலி பற்றியும் அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். ஆனாலும் அதிகமான ஆதாரங்களின் அடிப்படையில் தனக்கு மரணம் ஏற்படுவதற்கு முன், ஹஜ் கடமையாக இருந்தவருக்கு வெகுசீக்கிரம் ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும். ஹஜ் செய்யாமல் பிற்போடுவது சில வேளை அவருக்கு பாவத்தை சம்பாதித்துக் கொடுக்கும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/100)
***
கேள்வி; ஹஜ் செய்யச் சென்ற ஒருவர் தன்னோடு வந்தவர்களுடன் வாய்தகராரில் ஈடுபட்டால் அவரின் ஹஜ் கூடுமா?
பதில் : அவரின் ஹஜ் சரியானதாகும். அவரின் கடமையும் நீங்கிவிடும். ஆனால் தகராரில் ஈடுபட்டதற்காக அவரது ஹஜ்ஜின் நன்மைகளில் குறை ஏற்படும். அவர் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், "மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்." -்அல்குர்ஆன் 24:31-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/112)
***
பிரதேச எல்லைகள், இஹ்ராம் நிய்யத் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: ஜித்தாவில் இஹ்ராம் நிய்யத் வைப்பது கூடுமா?
பதில்: ஜித்தாவில் வசிக்கக் கூடியவர்கள், வேறு தேவைகளுக்காக ஜித்தாவுக்கு வந்து ஹஜ் உம்ரா செய்ய நினைப்பவர்கள் ஆகியோரைத் தவிர ஜித்தாவில் யாரும் இஹ்ராம் நிய்யத் வைக்கக்கூடாது. ஜித்தா என்பது ஹஜ் உம்ராவுக்கான பிரதேச எல்லை கிடையாது. மதீனா வழியாக தரை மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் வருபவருக்கு 'துல்ஹுலைஃபா' பிரதேச எல்லையாகும். மக்காவுக்கு வடமேற்கிலிருந்து தரை மற்றும் வான் வழியாக ஹஜ் உம்ராவுக்காக வருபவர்களுக்கு 'ஜுஹ்ஃபா' எனும் இடம் பிரதேச எல்லையாகும். மக்காவுக்கு தெற்கிலிருந்து தரை மற்றும் வான் வழியாக ஹஜ் உம்ராவுக்கு வருபவர்களுக்கு 'யலம்லம்' எனும் இடம் பிரதேச எல்லையாகும். யார் எந்தத் திசையில் மக்காவுக்கு தரை மற்றும் வான் வழியாக வருகிறாரோ அத்திசையிலுள்ள பிரதேச எல்லையில் வைத்து இஹ்ராம் நிய்யத் வைப்பதே கட்டாயக் கடமையாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/130)
***
கேள்வி: ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்தவர் குளிப்பதற்கு முன் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்த முடியுமா? அல்லது குளித்த பிறகா அவற்றைப் பயன்படுத்த வேண்டும்?
பதில்: ஹஜ் உம்ரா செய்ய வருபவர் பிரதேச எல்லையில் வைத்து இஹ்ராம் நிய்யத் வைப்பதற்கு முன் வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்த முடியும். குளித்த பிறகு அவற்றைப் பயன்படுத்தவது மிகவும் ஏற்றமானது. ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "இஹ்ராம் கட்டும் நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்காக நான் நறுமணம் பூசினேன். அவ்வாறே, இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வருவதற்கு முன்னாலும் நறுமணம் பூசுவேன்." -ஆதாரம்: புஹாரி 1539, முஸ்லிம் 1189-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/168)
***
கேள்வி: ஹஜ் செய்பவர்கள் தைத்த ஆடைகளை அணியக் கூடாது என அல்லாஹ் ஏன் தடைவிதித்துள்ளான். அதற்கு ஏதும் காரணங்கள் உள்ளனவா?
பதில் : முதலாவது: ஹஜ் என்பது அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தியான ஒருவர் ஆயுளில் ஒரு தடவை செய்கின்ற ஒரு கடமையான வணக்கமாகும். இது அவசியம் நிறைவேற்ற வேண்டிய இஸ்லாத்தின் ஐம்பெரும் ருக்குன்களில் ஒன்றாகும். இவ்வாறு ஹஜ் கடமையானவர் அல்லாஹ்வை ஏற்று, அவனின் கட்டளைகளை நிறைவேற்றி, அவனிடம் கிடைக்க இருக்கும் கூலிகளை ஆதரவுவைத்து, அவனின் தண்டனைகளுக்குப் பயந்து, அவன் எதைக் கூறினாலும் அதில் ஏதோ நலவு இருக்கிறது என்ற நம்பிக்கையிலும், அவன் தன் அடியார்களுடன் இரக்கமானவன் எனும் நம்பிக்கையிலும் இவ் வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ் ஒன்றை கடமையாக்கினால் அல்லது ஒன்றைத் தடுத்தால் அதில் நாம் அறிந்துகொள்ள முடியாத இம்மைக்கும், மறுமைக்குமான நற்பயன்கள் அதிகம் இருக்கும். எமது இறைவனான அல்லாஹ் சட்டங்களை இயற்றுவதில் நுணுக்கமானவன். அடியார்கள் அச்சட்டங்களை அச்சொட்டாகப் பின்பற்ற வேண்டும்.
இரண்டாவது: ஹஜ் உம்ராவின் போது தைத்த ஆடைகளை தவிர்ந்திருப்பதில் அதிக நுணுக்கங்களை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். மக்கள் மறுமைக்காக எழுப்பப்படும் போது காலணியின்றி, ஆடையின்றி நிர்வாணமாகவே எழுப்பப்பட்டு, அதன் பின்னரே ஆடை அணிவிக்கப்படுவார்கள். எனவே இது மறுமையை நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். உள்ளத்தை கட்டுப்படுத்தல், பேணுதலாக இருத்தல், பெருமையைக் கலைந்த எரிதல், அனைவரும் சமம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தல், ஆடம்பரத்திலிருந்து விலகியிருத்தல், ஏழை எளியோருடன் சமமாக நடத்தல் என உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பகுக்குவத்தையும் இது உண்டுபன்னுகிறது. இவை அனைத்தும் அல்லாஹ் கடமையாக்கிய ஹஜ் மற்றும் உம்ராவின் ஒவ்வொரு பகுதியில் காணலாம்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/179)
***
கேள்வி: ஹஜ் செய்பவர்கள் ஏன் குறிப்பிட்ட வெள்ளை நிற ஆடையை அணிகின்றனர்?
பதில்: ஹஜ் உம்ராவின் போது ஆண்கள் வெள்ளை நிற வேஷ்டியையும், மேலாடையையும் அணிய வேண்டுமென நபி ﷺ அவர்கள் வாயிலாக அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். இதன் காரணத்தை அவன் மாத்திரமே அறிவான். அல்லாஹ் தன் கட்டளைகள் ஒவ்வொன்றுக்குமான காரணங்களை எமக்குக் கூறியிருந்தாலும், கூறாவிட்டாலும் அவன் எமக்கு தர இருக்கும் வெகுமதிகளை ஆதரவு வைத்து, அக்கட்டளைகளை நிறைவேற்றுவதே அடியார்களாகிய எமக்கு கடமையாகும். ஹஜ் உம்ராவின் போது ஆண்கள் குறிப்பிட்ட வெள்ளை நிற ஆடையை அணிவது மறுமையை நினைவுபடுத்துவதாகவும், உள்ளத்தில் பேணுதலை வளர்ப்பதாகவும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டைக் களையவுமே இருக்கிறது என இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் இதற்கான சில காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். இஸ்லாத்தில் உறுதியுடன் இருக்கவும், அல்லாஹ்வின் கட்டளைகளை சரிவர பின்பற்றுவதற்கும் அவன் எம் அனைவருக்கும் அருள்புரிவானாக.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/171)
***
கேள்வி: மாதவிடாய் ஏற்பட்ட பெண் ஹஜ் கடமைகளில் ஈடுபட முடியுமா?
பதில்: மாதவிடாய் என்பது ஹஜ்ஜை தடுத்துவிடாது. மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் ஒரு பெண் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்தால் அவள் தவாஃபைத் தவிர ஹஜ்ஜின் மற்றைய எல்லா கடமைகளையும் செய்ய முடியும். மாதவிடாய் நின்ற பிறகு, குளித்து சுத்தமாகி, தவாஃப் செய்ய வேண்டும். குழந்தைப் பேறு இரத்தம் ஏற்படும் பெண்களும் இவ்வாறே செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் ஹஜ் சரியானதாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/172)
***
கேள்வி: ஹஜ் செய்யச் சென்ற ஒரு பெண்ணுக்கு "தவாஃபுல் குதூம்" -மக்காவுக்கு வந்ததற்காக செய்யும் தவாஃப்- இற்கு முன்னர் மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? மாதவிடாயோடு அரஃபா மைதானத்திற்குச் செல்ல முடியுமா?
பதில்: அவள் ஹஜ்ஜுக்கான இஹ்ராம் நிய்யத்துடனே இருந்து, தவாஃபைத் தவிர ஹஜ்ஜின் ஏனைய கடமைகள் அனைத்தையும் ஏனையோரைப் போல் செய்ய வேண்டும். மாதவிடாய் நின்றதும், குளித்து சுத்தமாகி, தவாஃபை செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/173)
***
கேள்வி: ஹஜ்ஜுக்காக சென்ற ஒரு ஆண் மீகாத்தில் (பிரதேச எல்லையில்) வைத்து தனது நகங்களை வெட்டிக்கொள்ள முடியுமா? அல்லது அவர் ஹஜ்ஜில் குர்பான் கொடுத்த பின்னரா நகம் வெட்ட வேண்டும்?
பதில்: ஹஜ்ஜுக்காக வந்தவர் இஹ்ராம் நிய்யத் வைப்பதற்கு முன் நகங்களையும், முடிகளையும் வெட்டிக்கொள்ள முடியும். இஹ்ராம் நிய்யத் வைத்த பிறகு ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து விடுபடும் வரை இவ்வாறு செய்வது கூடாது. உம்ராவு்ககாக இஹ்ராம் நிய்யத் வைத்தவர், தவாஃபையும், ஸஃயையும் செய்துவிட்டு தலைமுடியை இறக்குவதோடு உம்ராவிலிருந்து விடுபடுவதால் இதன் பின் அவர் தனது உடலின் ஏனைய முடிகளையும், நகங்களையும் வெட்டிக்கொள்ளலாம். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்தவர், பெரிய ஜம்ராவில் கல் எறிந்ததும் தலைமுடியை இறக்கி ஹஜ்ஜிலிருந்து முதல் விடுவிப்பைப் பெறுவதால் குர்பானி கொடுப்பதற்கு முன்னரோ, அல்லது கொடுத்த பிறகோ அவர் தனது உடலின் ஏனைய முடிகளையும், நகங்களையும் வெட்டிக்கொள்ளலாம். குர்பானி கொடுத்த பின் இவ்வாறு செய்வது மிகவும் சிறந்தது. ஊரில் குர்பானி கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டு ஹஜ் செய்ய வந்திருந்தால் அக்குர்பானி கொடுக்கும் வரை தனது நகங்களையோ, முடிகளையோ வெட்டக் கூடாது. நபி ﷺ அவர்கள் இதை முற்றிலும் தடை செய்துள்ளார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/178)
***
கேள்வி: சென்ற ஆண்டு எனது தந்தை ஹஜ் செய்தார். அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தமையால் இஹ்ராம் ஆடையை அணிய முடியாமல் போய்விட்டது. இதற்காக இவர் என்ன செய்ய வேண்டும்?
பதில்: ஹஜ்ஜுக்கா இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் அதிக குளிர், நோய் போன்ற காரணங்களால் இஹ்ராம் ஆடையை அணியாமல் சாதாரன ஆடையில் ஹஜ் செய்வதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. ஹஜ்ஜுக்காக அவர் தைத்த ஆடைகளை அணிந்தமையால் இதற்கான பரிகாரமாக அவர் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அல்லது ஒரு ஏழைக்கு அரை சாஃஉ (1.25kg) அளவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது ஒரு ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும். ஹஜ்ஜின் போது நேரடியாக தலையை மறைத்திருந்தாலும் இவ்வாறே செய்ய வேண்டும். நோன்பைப் பொறுத்தவரையில் அவர் எங்கிருந்தும் பிடிக்க முடியும். ஏழைகளுக்கு உணவளித்தல், ஆட்டை அறுத்துப் பலியிடல் ஆகியவற்றைச் செய்வதாக இருந்தால் மக்காவின் புனித பூமியில் மாத்திரமே செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/180)
***
கேள்வி: அல்லாஹ்வின் நாட்டத்தால் ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆசையில் நான் இருக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் வழுக்கைத் தலையுடையவன். எனது தலையின் தோல் மிகவும் மிருதுவாகவும், செம்மையாகவும் இருப்பதால் சூரிய வெளிச்சத்தில் சென்றால் அலர்ஜி ஏற்படுகிறது. தலையோடு சேர்த்து முகத்திலும் இவ் அலர்ஜி பரவுகிறது. இஹ்ராத்தின் போது தடுக்கப்பட்ட ஒன்று தான் தலையை மறைப்பது. இது தொடர்பாக எனக்கு மார்க்க வழிகாட்டலை தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் குட்டையாக இருப்பதால் குடையும் பிடிக்க முடியாது. அது பிறரை தொந்தரவு செய்வதாகவும் அமைந்துவிடுகிறது. அல்லாஹ் உங்களைக் காத்து உங்கள் பாவங்களை மன்னிப்பானாக.
பதில்: நீங்கள் கூறுவது போல் உங்கள் நிலை இருந்தால் நீங்கள் தலையை மறைத்து ஹஜ் செய்யுங்கள். இதற்கான பரிகாரமாக ஓர் ஆட்டை அறுத்து மக்காவின் புனித பூமியில் உள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளியுங்கள். அல்லது ஒருவருக்கு அரை ஸாஃஉ (1,25kg) வீதம் புனித பூமியிலுள்ள ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள். அல்லது ஹஜ் முடிந்ததும் மூன்று நாட்கள் நோன்பிருங்கள். இப்பரிகாரங்கள் நீங்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்தால் செய்ய வேண்டியவை. உம்ராவுக்கு நீங்கள் இஹ்ராம் நிய்யத் வைத்திருந்தால் இப்பரிகாரங்களையே செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/181)
***
கேள்வி: ஹஜ் செய்யும் ஒருவர் பெரிய ஜம்ராவில் கல்லெறிந்து, தலைமுடியையும் இறக்கிவிட்டு, தவாஃபுல் இஃபாழாவுக்கு முன், ஹஜ் செய்யாத தனது துணையை முத்தமிட்டார். ஆசையின் காரணமாக அவருக்கு விந்து வெளிப்பட்டுவிட்டது. இவருக்கான சட்டம் யாது?
பதில்: ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவுக்காக அல்லது அவ்விரண்டிற்கும் சேர்த்து இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் தனது இஹ்ராம் நிய்யத்தை பாழ்படுத்தும் விடயங்களில் ஈடுபடக் கூடாது. ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் பெரிய ஜம்ராவில் கல்லெறிந்து, தலை முடியை இறக்கி, தவாஃபுல் இஃபாழாவையும், விடுபட்ட ஸஃயையும் செய்து முடித்து ஹஜ்ஜிலிருந்து பூரணமாக விடுபடும் வரை தனது துணையுடன் உடலுறவில் ஈடுபடவோ, முத்தம் கொடுக்கவோ கூடாது. ஹஜ்ஜிலிருந்து பூரணமாக விடுபடும் வரை அவர் இஹ்ராம் நிய்யத்தில் இருப்பதால் துணையுடன் சேர்வதற்கான தடை நீடித்துக்கொண்டே இருக்கும். ஹஜ்ஜின் முதல் விடுவிப்புக்குப் பின் தனது துணைக்கு முத்தம் கொடுத்து, இந்திரியம் வெளிப்பட்டால் அவரின் ஹஜ் முறிந்துவிடாது. ஆனால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, ஓர் ஆட்டை அறுத்து, மக்காவின் புனித பூமியில் உள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/188)
***
கேள்வி: நான் ஹஜ் கடமையில் இருக்கும் போது மினாவில் இரவு தங்கினேன். அப்போது எனக்கு தூக்கத்தில் குளிப்பு கடமையாகியது. என்னால் குளிக்க முடியவில்லை. இதற்காக நான் ஏதும் செய்ய வேண்டுமா?
பதில்: ஹஜ் உம்ராவுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த பின் தூக்கத்தில் விந்து வெளிப்படுவது ஹஜ்ஜையோ, உம்ராவையோ முறித்துவிடாது. அவற்றில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு ஏற்படுபவர் தூங்கி எழுந்ததும், தனது ஆடையில் விந்தைக் கண்டால் குளித்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் பரிகாரங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. தூக்கத்தில் விந்து வெளிப்படுவது அவரது சக்திக்கு அப்பாற்பட்ட விடயமாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/188)
***
கேள்வி: மக்கா, மதீனாவில் உள்ள புறாக்களுக்கு என ஏதும் தனித்துவங்கள் உள்ளனவா?
பதில்: இஹ்ராம் நிய்யத்துடன் இருக்கும் ஒருவர் புறாக்களை விரட்டவோ, வேட்டையாடவோ கூடாது என்பதைத் தவிர மக்கா, மதீனாவிலுள்ள புறாக்களுக்கு என எவ்வித தனித்துவங்களும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) ‘‘நிச்சயமாக, அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான். (இங்கு போர் செய்வது) எனக்குமுன் எவருக்கும் அனுமதிக்கப்பட வில்லை; எனக்குக்கூட பகலில் சிறிதுநேரம்தான் அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள புற்பூண்டுகள் பறிக்கப்படக் கூடாது! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது! இங்குள்ள வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக்கூடாது! இங்கே கீழே விழுந்துகிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது!” என்று கூறினார்கள். அப்போது அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரழி) அவர்கள், ‘‘எங்கள் வீடுகளின் கூரைகளுக்கும் பொற்கொல்லர்களுக்கும் பயன்படும் இத்கிரை’த் தவிரவா?” என்று கேட்டார்கள். நபி ﷺ அவர்கள் இத்கிரைத் தவிர!› என்றார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘‘வேட்டைப் பிராணி விரட்டப்படுவது என்றால் என்னவென்று உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் அதை விரட்டிவிட்டு, அந்த இடத்தில் நீங்கள் தங்குவதுதான்” என்று கூறுகிறார்கள்." ஆதாரம்: புஹாரி 2090, முஸ்லிம் 1353. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். அதன் முள்மரங்கள் வெட்டப்படக் கூடாது; அதன் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது." ஆதாரம்; முஸ்லிம் 1362.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/202)
***
கேள்வி: நான் தமத்துஃ முறையில் ஹஜ் செய்யும் போது உம்ரா செய்துவிட்டு இஹ்ராம் ஆடையைக் கழட்ட முடியுமா?
பதில்: தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர் தனது உம்ராக் கடமையாகிய தவாஃப், ஸஃயு, தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல் ஆகிய கடமைகளை செய்த பின் இஹ்ராம் ஆடையைக் களைந்து, தமது அன்றாட ஆடையை அணிந்துகொள்ள முடியும். நபி ﷺ அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது தம்மோடு அறுப்புப் பிராணியை கொண்டு வராத ஸஹாபாக்களுக்கும் இவ்வாறே கூறினார்கள். துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மீண்டும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் ஆடையை அணிந்துகொள்ள வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/202)
***
கேள்வி: தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர் தனது உம்ராக் கடமையை நிறைவு செய்த பின் செய்ய வேண்டிய ஆகுமான விடயங்கள் பற்றி கூறவும்.
பதில்: தமத்துஃ முறையில் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்தவர் தனது உம்ராக் கடமையாகிய தவாஃப் செய்தல், ஸஃயு செய்தல், தலைமுடியை இறக்குதல் ஆகியவற்றை செய்த பின் உம்ராவிலிருந்து விடுபடுவார். இதன் பின் நகம் வெட்டுதல், தைத்த ஆடைகளை அணிதல், தலையை மறைத்தல், முகத்தை மூடுதல், வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்தல், வேட்டையாடுதல், திருமண ஒப்பந்தங்களில் ஈடுபடுதல், துணையுடன் உடலுறவு போன்றவற்றில் ஈடுபடுதல் ஆகிய இஹ்ராம் நிய்யத்துடன் இருக்கும் போது தனக்கு தடுக்கப்பட்ட அனைத்தும் ஆகுமானதாக மாறிவிடும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/204)
***
கேள்வி: ஒருவர் தல்பியாவை சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் அதை மீண்டும் கூறும் கூட்டு தல்பியா முறையில் ஹஜ் செய்பவர் தல்பியா கூற முடியுமா?
பதில்: கூட்டுத் தல்பியா என்பது கூடாது. இவ்வாறு தல்பியாவை ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் அவரைத் துயர்ந்து கூறுவதற்கு நபி ﷺ அவர்களிடமிருந்தும், அவருக்குப் பின்வந்த நான்கு கலீஃபாக்களிடமிருந்தும் எவ்வித வழிகாட்டல்களும் இடம்பெறவில்லை. இது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட விடயமாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/358)
***
கேள்வி: ஹஜ் காலத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண் ஹஜ்ஜின் அனைத்து கடமைகளையும் செய்துவிட்டு குளிக்க வேண்டுமா? அல்லது செய்ய முடியாத கடமைகள் என ஏதாவது உள்ளனவா?
பதில்: ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்த ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர் அதே இஹ்ராம் நிய்யத்துடன் இருந்து, தவாஃபைத் தவிர ஹஜ்ஜின் ஏனைய கடமைகளான அரஃபா மைதானத்தில் இருத்தல், முஸ்தலிஃபாவில் தங்குதல், மினாவில் தங்குதல், ஜம்ராக்களில் கல் எறிதல் ஆகிய கடமைகளை ஏனையோரைப் போல் செய்ய வேண்டும். மாதவிடாயிலிருந்து சுத்தமாகியதும் குளித்து சுத்தமாகிய பின் தவாஃபை செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/128)
***
கேள்வி: ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது பெண்கள் அலங்காரம் செய்துகொள்ள முடியுமா?
பதில் : ஹஜ் உம்ராக் கடமைகளை செய்யும் போது பெண்கள் அலங்காரங்கள் எதுவுமின்றியே அவற்றை செய்ய வேண்டும். வழமையாக அவள் அணியும் ஆபரணங்கள், கை கால்களுக்கு வைக்கும் மருதாணி ஆகியவற்றை அந்நிய ஆண்கள் பார்க்காதவாறு மறைத்துக் கொள்ள வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/144)
கேள்வி: நான் மீகாத்தில் வைத்து இஃப்ராத் முறை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைக்கும் போது, "லப்பைகல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன்" என கூறிக்கொண்டேன். மீண்டும் கூறும் போது, மறதியாக "லப்பைகல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்" என கூறிவிட்டேன். இப்போது நான் செய்ய வேண்டியது என்ன என்பதை தயவு செய்து எனக்கு விளக்குங்கள்.
பதில்: நீங்கள் மனதால் நினைக்காமல் மறதியாக வாயால் மொழிந்ததற்கு எவ்வித குற்றமும் கிடையாது. இதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அல்லாஹ் தன்னிடம் பிரார்த்திக்கும் போது கூறவேண்டியதை பின்வருமாறு கூறுகிறான், "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! " -அல்குர்ஆன் 02:286- நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்." -ஆதாரம்: புஹாரி 01-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/132)
***
கேள்வி: ஹஜ்ஜுக்கு வந்த சிலர் மினாவிலுள்ள சில மரக்கிளைகளை உடைத்து, அதை பல்துலக்குவதற்கு பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். இதன் சட்டம் யாது? அவ்வாறு புனித பூமியில் வைத்து உடைக்கப்பட்ட மரக்கிளைகளின் குச்சிகள் பல்துலக்குவதற்காக எனக்கு தர்மமாக கொடுக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்: இஹ்ராம் நிய்யத் வைத்தவரோ, அல்லது வைக்காதவரோ புனித பூமியிலுள்ள எந்த மரத்தையும் சேதப்படுத்தக் கூடாது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "இந்நகரின் முட்செடி பிடுங்கப்படக் கூடாது; இங்குள்ள மரம் வெட்டப்படக் கூடாது" ஆதாரம்: புஹாரி 112, முஸ்லிம் 1355.
இவ்வாறு செய்தவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். திரும்பவும் இச்செயலில் ஈடுபடுவதில்லை என அவனிடம் வாக்குக் கொடுக்க வேண்டும். புனித பூமியில் உடைக்கப்பட்ட மரக்கிளைக் குச்சிகளை தர்மமாகப் பெறுவதும் கூடாது. இவ்வாறு பெற்றுக்கொள்வது தடுக்கப்பட்ட அச்செயலை அங்கீகரிப்பதாக அமையும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/166)
***
மினாவில் தங்குதல் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: நான் ஒரு குழுவுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நள்ளிரவில் நாம் மினாவை அடைந்து அங்கு தங்கினோம். (இஸ்லாமிய முறைப்படி மஃரிப் அதானுடன் அடுத்த நாள் ஆரம்பித்துவிடும்) ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னரே அரஃபாவிற்குப் புறப்பட்டு அங்கு சென்று, ஃபஜ்ர் தொழுதோம். அதிக சனநெரிசல் ஏற்படுவதற்கு முன்னர் அரஃபாவிற்குச் செல்ல வேண்டுமென்பதற்காகவே நான் சென்ற குழுவின் பொறுப்பாளர் இவ்வாறு செய்தார். இதன் சட்டம் யாது?
பதில் : நீங்கள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதயமாகியதும் அரஃபாவுக்குச் செல்வதே மிகவும் சிறந்தது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/210)
***
கேள்வி : நான் உள்நாட்டில் உள்ள ஒரு குழுவுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அன்று இரவு மினாவுக்கு வெளியில் எம்மை தங்க வைத்தார்கள். ஆனால் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் மினாவில் தான் தங்கவைக்கப்பட்டோம். அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் பிறை 9ம் நாள் இரவில் மினாவில் தங்குவது அவசியமா? அவ்வாறு தங்குவது கட்டாயம் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ் உங்கள் மூலமாக எனக்கும், முழு இஸ்லாமிய சமூகத்தின் பிரயோசனத்தை ஏற்படுத்தாவானாக.
பதில் : துல்ஹஜ் ஒன்பதாம் நாள் இரவு மினாவில் தங்குவது ஹஜ் செய்பவர்களுக்கு சுன்னத்தாகும். அவர்களுக்கு இது கட்டாயக் கடமை கிடையாது. அவ்விரவில் நீங்கள் மினாவில் தங்கவில்லை என்பதற்காக நீங்கள் எந்த பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை. உங்களுக்கு செய்ய முடியாமல் போனது சுன்னத்தான விடயமாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/177)
***
அரஃபாவில் தரித்தல் தொடர்பான மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி : அரஃபா தினம் வெள்ளிக்கிழமையில் வந்தால் 07 ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர். இதற்கு ஏதும் ஆதாரங்கள் உள்ளனவா?
பதில் : இதற்கு எவ்வித சரியான ஆதாரங்கள் இல்லை. இன்னும் சிலர் இவ்வாறு நிகழ்ந்தால் எழுபது ஹஜ் செய்த நன்மை, அல்லது எழுபத்தி இரண்டு ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் என்றெல்லாம் கூறுகின்றனர். இவற்றுக்கு இஸ்லாத்தில் எவ்வித ஆதாரங்களும் இல்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/211)
***
கேள்வி: அரஃபாவில் இமாமோடு ழுஹரையும் அஸரையும் தொழுத ஒருவர் மஃரிப் தொழுகை வரும் வரை சுன்னத்தான தொழுகைகளில் ஈடுபட முடியுமா?
பதில்: அரஃபாவில் ழுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் சேர்த்து முற்படுத்தி தொழுத நபி ﷺ அவர்கள் அதற்கு பின் எவ்வித சுன்னத்தான தொழுகைகளையும் தொழவில்லை. அவ்வாறு தொழ முடியுமாக இருநதிருந்தால் அவர்களே அதை செய்திருப்பார்கள். நாம் நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதே சரியான நன்மைகளைப் பெற்றிட வழிவகுக்கும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/211)
***
கேள்வி: வாகனத்தில் தன்னோடு வந்தவர்கள், 'சூரியன் மறைந்துவிட்டது' எனக் கூறியதும், மஃரிப் அதானுக்காக குறிக்கப்பட்ட நேரம் வருவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் அரஃபாவை விட்டும் ஒருவர் வெளியேறினால் அவரின் சட்டம் யாது?
பதில்: துல்ஹஜ் பிறை ஒன்பதில் ஹஜ் செய்பவர் சூரியன் மறையும் வரை அரஃபாவில் இருக்க வேண்டும். அதற்கு முன் அங்கிருந்து வெளியேறக் கூடாது. இங்கு சூரியன் மறைவதே கணக்கில் கொள்ளப்படும். சூரியன் மறைந்ததை உறுதிப்படுத்திய பின் ஒருவர் அரஃபாவிலிருந்து வெளியேறினால் அவர் தனது கடமையை சரியாகச் செய்தவராக கருதப்படுவார். சூரியன் மறைவதற்கு முன் அல்லது சூரியன் மறைந்ததை உறுதிப்படுத்தாமல் ஒருவர் வெளியேறி, திரும்பவும் அரஃபாவுக்கு வந்து சூரியன் மறையும் வரை இருக்காவிட்டால், அல்லது இரவில் திரும்பவும் வந்து ஒரு கனமேனும் அங்கு இருக்காவிட்டால் அவர் தனது கடமையை முடிக்காமல் போனதற்காக ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/181)
***
முஸ்தலிபாவில் தங்குதல் பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: எனது வாகனத்தை வாடகைக்கு எடுத்த ஒரு குடும்பத்துடன் நான் ஹஜ் செய்தேன். நாம் அரஃபாவிலிருந்து இரவு ஒன்பது மணிக்கு வெளியேறி நள்ளிரவு இரண்டு மணிக்கு முஸ்தலிஃபாவை அடைந்தோம். அவர்கள் குடும்பத்துடன் இருப்பதால் முஸ்தலிஃபாவில் தங்க முடியாது எனக் கூறிவிட்டனர். நாம் கால் மணிநேரமே அங்கு இருந்தோம். அதன் பின் மினாவிற்கு சென்றோம். நாம் முஸ்தலிஃபாவில் தங்காமல் சென்றதற்காக ஏதும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?
பதில்: நீங்கள் சொல்வது போல் நிலைமை இருந்திருந்தால், ஃபஜ்ர் நேரம் வரை முஸ்தலிஃபாவில் குடும்பத்துடன் தங்குவதற்கு சிரமமாக இருந்திருந்தால் இரவு இரண்டு மணிக்கே நீங்கள் முஸ்தலிஃபாவை விட்டும் சென்றதில் உங்களுக்கோ, அவர்களுக்கோ எவ்விதக் குற்றமும் கிடையாது. இரவு இரண்டு மணி என்பது நடு இரவுக்குப் பிந்தைய நேரமாகும். நடு இரவு தாண்டிவிட்டால் பெண்களும், இயலாதவர்களும் மினாவை நோக்கி செல்ல முடியும் என அல்லாஹ் இரக்கப்பட்டு ஒரு சலுகையை வழங்கியிருக்கிறான்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/ 212)
***
கேள்வி: சென்ற ஆண்டு ஹஜ்ஜில் அதிக சனநெறிசல் ஏற்பட்டிருந்ததால் ஹஜ் செய்யும் சிலர் சிரமம் காரணமாக முஸ்தலிஃபாவில் தங்கவில்லை. சிலர் வழிதவறியும் சென்றுவிட்டனர். இவர்களின் நிலைமை யாது?
பதில்: அதிக சனநெறிசல் காரணமாக முஸ்தலிஃபாவில் தங்க முடியாமல் போனால் அவர்களுக்கு அங்கு தங்கவேண்டிய கடமை தளர்த்தப்பட்டு விடும். ஆனால் வழிதவறிச் சென்று வேறு இடங்களில் தங்கியவர்கள் அவசியம் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட வேண்டும். ஏனெனில் முஸ்தலிஃபா எங்கு இருக்கிறது என்பதை கேட்டறிந்துகொள்ள பல வழிகள் இருந்தும் அவர்கள் பொடுபோக்குத் தனத்தினால் கேட்காமல் இருந்துள்ளார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/189)
***
கேள்வி: ஹஜ் செய்ய வந்த ஒருவர் இரவின் முதல் பகுதியிலே முஸ்தலிஃபாவிலிருந்து வெளியேறிவிட்டார். அப்போது சுமார் இரவு 10 மணி இருந்திருக்கும். பெண்கள் சிலர் தம்மோடு இருந்தமையினாலே இவ்வாறு நேரகாலத்துடன் செல்வதாகக் கூறுகிறார். இவர்களுக்கான சட்டம் யாது?
பதில்: நோய் போன்ற இஸ்லாம் அனுமதித்த தகுந்த காரணங்கள் இன்றி முஸ்தலிஃபாவிலிருந்து நடு இரவு தாண்டுவதற்கு முன் வெளியேறிச் செல்வது கூடாது. அவ்வாறு செல்வது முஸ்தலிஃபாவில் தங்குதல் எனும் கடமையை செய்யாமல் போனதாகவே கருதப்படும். இதற்கான பரிகாகரமாக அவர் மக்காவில் ஆடு ஒன்றை அறுத்து, அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். ஏனெனில் முஸ்தலிஃபாவில் குறைந்தது நடு இரவு வரை தங்கியிருக்க வேண்டும். இயலாதவர்களும் நடு இரவுக்குப் பின்னரே முஸ்தலிஃபாவை விட்டும் வெளியேற முடியும் என நபி ﷺ அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/194)
***
துல்ஹஜ் பத்தாம் நாள் தொடர்பான மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: நடு இரவுக்குப் பின் முஸ்லதலிஃபாவிலிருந்து மினாவிற்குச் சென்ற இயலாத நிலையில் உள்ள ஹஜ் செய்பவர்கள் துல்ஹஜ் பிறை 10ம் நாள் ஃபஜ்ர் உதயமாவதற்கு முன் பெரிய ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு, ஃபஜ்ருக்கு முன் நேரமிருந்தால் தவாஃபுல் இஃபாழாவையும் செய்துகொள்ள முடியுமா?
பதில் : பெண்கள், வயோதிபர்கள் என ஹஜ் செய்வோரில் இயலாமல் இருப்போர் நடு இரவிற்குப் பின் முஸ்தலிஃபாவில் இருந்து மினாவிற்குச் சென்று, ஃபஜ்ருக்கு முன்னரே பெரிய ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு, தவாஃபுல் இஃபாழாவையும் செய்து, தலைமுடியையும் இறக்கிக் கொள்ள முடியும். இது அவர்கள் மீதுள்ள கருணையின் வெளிப்பாடாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/190)
***
கேள்வி: ஹஜ் செய்பவர் துல்ஹஜ் பத்தாம் நாள் பெரிய ஜம்ராவில் கல்லெறியாமல் அதை தஷ்ரீக்குடைய இரண்டாம் மூன்றாம் நாட்கள் வரை எவ்விதக் காரணங்களும் இன்றி பிற்போட முடியுமா? அவ்வாறு செய்வதன் சட்டாம் யாது?
பதில்: எவ்விதக் காரணங்களும் இன்றி பெரிய ஜம்ராவில் கல்லெறிவதை அதற்கு அடுத்து வரும் நாட்களுக்கு பிற்போடுவது கூடாது. ஏனெனில் நபி ﷺ அவர்கள் பெருநாள் தினமான துல்ஹஜ் பத்தாம் நாள் தான் பெரிய ஜம்ராவில் கல்லெறிந்துள்ளார்கள். அவரைப் பின்பற்றிய ஸஹாபாக்களும் பெரிய ஜம்ராவில் கல்லெறிவதை அடுத்து வரும் நாட்களுக்கு பிற்போட்டதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "நபி ﷺ அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத்துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா,) செய்யமாட்டேனா என்பதை அறியமாட்டேன்" என்று கூறிக்கொண்டிருந்தார்கள்." -ஆதாரம்: முஸ்லிம் 1297- எவ்விதக் காரணங்களும் இன்றி அடுத்து வரும் தஷ்ரீக்குடைய நாட்கள் வரை பிற்போடுவது நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றமான செயலாகும். ஹஜ்ஜின் நன்மைகளில் சிலதையும் இதனால் இழக்க நேரிடும். எனவே அல்லாஹ்விடம் இதற்காக பாவமன்னிப்பு கேட்டு, இனி வரும் காலங்களில் வணக்கங்களை நபியவர்கள் கூறிய முறையில் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/217)
***
கேள்வி: ஹஜ் உம்ராவில் தலை முடியை இறக்கும் போது, சிலர் தலையின் பிற்பகுதியின் கீழ் பகுதியை மாத்திரம் வட்டமாக குறைத்துக்கொள்வதை கண்டிருக்கிறேன். தலை முடியைக் குறைப்பதானால் தலை முழுவதும் ஒரே அளவில் தானே குறைக்க வேண்டும் என அவர்களிடம் கூறினால், இதுவே முறையான செயல் எனக் கூறுகின்றனர். இதில் சரியான முறை யாது?
பதில்: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து விடுபடும் போது தலை முழுவதையும் ஒரே அளவில் குறைக்கவோ அல்லது மழிக்கவோ வேண்டும். தலையின் ஒரு பகுதியை குறைத்து மற்றைய பகுதியை விடுவதோ, அல்லது ஒரு பகுதியை மழித்து மற்றைய பகுதியை விடுவதோ கூடாது. இவ்வாறு செய்வதற்கு இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் எவ்வித அங்கீகாரத்தையும் வழங்கவில்லை. இது நபி ﷺ அவர்களின் வழிமுறையும் கிடையாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/217)
***
கேள்வி: ஹஜ் செய்ய வந்த ஒருவர் அரஃபாவில் தரித்து, முஸ்தலிஃபாவில் இரவு தங்கி, பெருநாள் தினத்தில் மினாவில் காலைப் பொழுதை அடைந்து, ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து, குர்பானியும் கொடுத்து, தலைமுடியை மழித்து, மினாவில் வைத்து தனது இஹ்ராம் ஆடைகளைக் களைகிறார். பிறகு மக்காவுக்குச் சென்று தவாஃபுல் இஃபாழாவையும் செய்கிறார். இவ்வாறு செய்வது கூடுமா? ஏனெனில் தவாஃபுல் இஃபாழாவை செய்த பின்னர் தான் மினாவில் வைத்து தலைமுடியை மழித்து, இஹ்ராம் ஆடையைக் களைய வேண்டுமென சவூதி பிரஜை ஒருவர் எனக்குக் கூறினார்.
பதில்: தவாஃபுல் இஃபாழாவுக்கு முன்னரும், பின்னரும் தலை முடியை மழித்துக்கொள்ளலாம். இரண்டும் அனுமதிக்கப்பட்ட முறைதான். பெருநாள் தினத்தில் பெரிய ஜம்ராவில் கல்லெறிந்து, பிறகு குர்பானி கொடுத்து, பிறகு தலை முடியை மழித்து, பிறகு தவாஃபுல் இஃபாழாவை நீங்கள் செய்துள்ளீர்கள். இது சுன்னத்தான முறையாகும். நபி ﷺ அவர்கள் தனது பிரியாவிடை ஹஜ்ஜின் போது இவ்வாறே செய்தார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/218)
***
கேள்வி: தவாஃபுல் இஃபாழா எப்போது முடியும்?
பதில்: பெருநாள் தின நடு இரவுக்குப் பிறகிலிருந்து முஸ்தலிஃபாவிலிருந்து செல்லும் இயலாதோரை அடிப்படையாக வைத்து தவாஃபுல் இஃபாழா ஆரம்பமாகிறது. இதற்கென முடிவு நேரம் என்பது கிடையாது. ஆனாலும் ஹஜ் செய்பவர் முடிந்தளவு தன்னையும் நோகடித்துக்கொள்ளாமல், பிறரையும் துன்புருத்தாமல் தவாஃப் செய்யும் இடத்தின் சனநெறிசலை அடிப்படையாக வைத்து இதை அவசரமாக செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/227)
***
கேள்வி: ஹஜ் செய்யும் ஒருவர் தவாஃபுல் இஃபாழா செய்யும் போது ஒரு சுற்றை மறந்து மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெளியேறுகிறார். வெளியேறியதும் தவறவிட்ட சுற்று நினைவுக்கு வருகிறது. இவரின் சட்டம் என்ன? ஹஜ்ஜின் முதல் விடுவிப்பு நிகழ்வதற்கான இரண்டு கடமைகளில் ஒன்றாக தவாஃபுல் இஃபாழாவும் இருப்பதால் இதற்கான வழிகாட்டுதலை வழங்கவும்.
பதில்: ஹஜ் செய்பவர் தவாஃபுல் இஃபாழாவின் போது ஒரு சில சுற்றுக்களை மறந்துவிட்டால், மறந்து சற்று நேரமாக இருந்தால் மறந்த தவாஃபை மாத்திரம் தவாஃப் செய்யும் பகுதிக்குச் சென்று செய்துகொள்ள வேண்டும். மறந்து அதிக நேரம் ஆகிவிட்டால் அந்த தவாஃபை மீண்டும் செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/253)
***
கேள்வி: தவாஃபுல் இஃபாழா செய்த ஒருவர் தஷ்ரீக்கின் இறுதி நாள் சூரியன் மறையும் வரை ஸஃயு செய்யாமல் இருந்தால் அவரின் சட்டம் யாது? தஷ்ரீக்கின் இறுதி நாளன்று சூரியன் மறைந்த பிறகு ஸஃயு செய்துகொள்ள முடியுமா?
பதில்: கிறான், இஃப்ராத் ஆகிய முறைகளில் ஹஜ் செய்ய வந்தவர் தவாஃபுல் குதூமின் போது ஸஃயு செய்யாவிட்டால் தவாஃபுல் இஃபாழா செய்து விட்டு, ஸஃயு செய்ய முடியும். இவ்வாறு ஸஃயு செய்வதை தஷ்ரீக்கின் இறுதி நாள் வரை அல்லது தஷ்ரீக் நாட்கள் முடியும் வரை பிற்போட முடியும். அதை பிற்போடுவதில் எவ்விதக் குற்றமும் கிடையாது. தவாஃபுடனே ஸஃயும் இருக்க வேண்டுமென நிபந்தனை கிடையாது. ஆனாலும் நபியர்களின் செயலை பின்பற்ற வேண்டுமாக இருந்தால் தவாஃபுடன் ஸஃயையும் செய்வதே பூரணமானது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/262)
***
கேள்வி: தலைமுடியை குறைத்து அல்லது மழித்து ஹஜ்ஜின் முதல் விடுவிப்பைப் பெறுகிறோம். அவ்வாறே இரண்டாம் விடுவிப்பின் போதும் தலைமுடியை இறக்க வேண்டுமா?
பதில்: பெரிய ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு ஹஜ்ஜின் முதல் விடுவிப்பைப் பெறுவதற்காக தலை முடியை குறைத்து அல்லது மழித்து விடுவது போன்று இரண்டாம் விடுவிப்பிலும் செய்வது கட்டாயக் கடமையோ, சுன்னத்தோ கிடையாது. தலை முடியை இறக்குவது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் எண்பது வணக்கமாகும். வணக்கங்களில் ஆதாரங்கள் உள்ளவற்றைத் தவிர மற்றைய அனைத்தும் தடுக்கப்பட்டவையாகவே உள்ளன. ஹஜ்ஜில் தலைமுடியை இறக்குவதை ஒரு தடவை செய்யுமாறே இஸ்லாம் எமக்கு போதித்துள்ளது. மீண்டும் தலைமுடியை இறக்க வேண்டுமென நபியவர்கள் எமக்குக் கற்றுத்தரவில்லை. நபியவர்கள் முதல் விடுவிப்பைப் பெறுவதற்காகவே தலை முடியை இறக்கியுள்ளார்கள். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள்" -ஆதாரம்; முஸ்லிம் 1297-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/263)
***
கேள்வி: நான் உம்ராவை நிறைவேற்றிவிட்டு நாடு திரும்விட்டேன். இவ்வருடம் ஹஜ் செய்யும் பாக்கியத்தையும் பெற்றுள்ளேன். இதற்காக நான் ஏதும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?
பதில்: நீங்கள் ஒரே பயணத்தில் உம்ராவையும், ஹஜ்ஜையும் தமத்துஃ முறையில் நிறைவேற்ற நிய்யத் வைக்காததன் காரணமாக இதற்காக எவ்வித குற்றப்பரிகாரங்களும் நீங்கள் செய்யத் தேவையில்லை என்பதே அதிகமான இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்தாகும். நீங்கள் உம்ரா செய்துவிட்டு ஷவ்வால் மாதம் ஹி1395ல் நாடு திரும்பியிருக்கிறீர்கள். ஹஜ் செய்வதற்காக நீங்கள் மக்காவில் தங்கியிருக்கவில்லை.
நீங்கள் உம்ராவை செய்து விட்டு நாடுதிரும்பி, மீண்டும் இதே வருடம் ஹஜ் செய்தால் குற்றப்பரிகாரம் நிறைவேற்ற வேண்டுமென சில இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களின் கூற்றுக்கு ஆதாரமாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை முன்வைக்கின்றனர், "ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்" -அல்குர்ஆன் 02:196- இதில் அதிகமான இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்தே ஏற்றுக்கொள்வதற்குப் பொருத்தமானது. அந்த வகையில் குற்றப்பரிகாரம் செய்வது உங்களுக்கு கடமையாகாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/366)
***
கேள்வி: ஹஜ் கிரியைகள் அனைத்தும் முடிந்து, பலநாட்கள் கழித்து, தான் ஹஜ்ஜில் தலைமுடியை இறக்கவில்லை என்பது ஒருவருக்கு நினைவுக்கு வருகிறது. இவரது ஹஜ்ஜின் சட்டம் யாது?
பதில்: ஹஜ் உம்ராவில் தலை முடியை மழிப்பது அல்லது குறைப்பது கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு கடமையாகும். இதை மறதியாக விட்டவர், அது நினைவுக்கு வந்ததும் உடனடியாக தலை முடியை மழிக்க அல்லது குறைக்க வேண்டும். தலை முடியை இறக்குவதற்கு முன் தன் துணையுடன் உடலுறவில் ஈடுபட்டால் ஹஜ் உம்ராவிலிருந்து விடுவிப்பைப் பெறுவதற்கு முன் தன் துணையுடன் உடலுறவு செய்ததற்கான குற்றப்பரிகாரமாக ஓர் ஆட்டை அறுத்து, மக்காவின் புனித பூமிக்கு உள்ளே இருக்கும் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – இரண்டாம் தொகுப்பு (10/204)
***
கேள்வி: கிறான் அடிப்படையில் ஹஜ் செய்யும் ஒருவர் தவாஃபுல் குதூம் செய்திருந்தால், தவாஃபுல் இஃபாழாவையும் செய்ய வேண்டுமா?
பதில்: கிறான் மற்றும் இஃப்ராத் அடிப்படையி்ல ஹஜ் செய்பவர்கள் தவாஃபுல் இஃபாழாவுக்கு பதிலாக தவாஃபுல் குதூமை மாத்திரம் போதுமாக்கிக் கொள்வது கூடாது. தவாஃபுல் குதூம் என்பது மக்காவுக்கு வந்ததற்காக வேண்டிய செய்யும் முதல் தவாஃப் ஆகும். இது சுன்னத்தாகும். ஆனால் தவாஃபுல் இஃபாழா என்பது ஹஜ்ஜின் ருக்குன்களில் ஒன்றாகும். இதை செய்யாமல் ஹஜ் பூரணமாகாது. பெரிய ஜம்ராவில் கல்லெறிந்து, தலைமுடியையும் இறக்கிய பிறகே தவாஃபுல் இஃபாழாவை செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/217)
***
கேள்வி: நான் வயோதிபராகவும், உடல் நிலை சரியில்லாமலும் இருப்பதால், மக்காவுக்கு சென்றுவருவதில் சிரமமும் இருப்பதால் தவாஃபுல் இஃபாழா செய்வதற்கும், தவாஃபுல் வதாஃ (மக்காவை விட்டு பிரிந்து செல்லும் போது செய்யும் தவாஃப்) செய்வதற்கும் எனக்குப் பகரமாக இன்னொருவரை நியமிக்க முடியுமா?
பதில்: தவாஃபுல் இஃபாழா செய்வதற்கும், தவாஃபுல் குதூம் செய்வதற்கும் உங்களுக்குப் பகரமாக இன்னொருவரை நியமிக்க முடியாது. நீங்கள் அவசியம் மக்காவுக்கு வந்தே ஆக வேண்டும். வயோதிபர் இன்னொருவரின் உடலில் சுமக்கப்பட்டோ, அல்லது சக்கர நாட்காலியின் உதவியாலோ அவராகவே தவாஃப் செய்ய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/271)
***
தஷ்ரீகுடைய நாட்கள், ஜம்ராக்களில் கல்லெறிதல் தொடர்பான மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: பெருநாளைக்கு அடுத்த நாள் முற்பகல் வேளையில் ஒருவர் மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிகிறார். அதன் பிறகு, கல்லெறியும் நேரம் ழுஹருக்குப் பின்னர் என்பது நினைவுக்கு வருகிறது. இவர் என்ன செய்ய வேண்டும்?
பதில்: பெருநாளைக்கு அடுத்த நாள் என்பது தஷ்ரீக்குடைய முதலாம் நாளாகும். அன்றைய தினம் சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் ஒருவர் மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிந்தால், சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு மீண்டும் அதே தினம் கல்லெறிய வேண்டும். தஷ்ரீக்குடைய இரண்டாம் அல்லது மூன்றாம் நாள், தான் செய்த தவறை அறிந்தால், நினைவு வந்த அத்தினத்தில் சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு அத்தினத்திற்கான கல்எறிவதற்கு முன் தவறிய நாளுக்காக கல்லெறிய வேண்டும். தஷ்ரீக்குடைய மூன்றாம் நாள் சூரியன் மறைந்த பிறகு நினைவுக்கு வந்தால் அவர் மீண்டும் கல்லெறிய வேண்டியதில்லை. தான் விட்ட தவறுக்காக புனித பூமியில் வைத்து ஓர் ஆட்டை அறுத்து, அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/273)
***
கேள்வி: "எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. (அல்குர்ஆன் 02:203)" இவ்வசனத்தின் விளக்கம் யாது?
பதில்: அல்லாஹ் கூறுகிறான், "குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தாமதிக்கிறாரோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது)." -அல்குர்ஆன் 02:203- இவ்வசனத்திலுள்ள "குறிப்பிடப்பட்ட நாட்கள்" என்பது தஷ்ரீக்குடைய மூன்று நாட்களான, துல்ஹஜ் பிறை 11, 12, 13 ஆகிய நாட்களைக் குறிக்கிறது. ஹஜ் செய்பவர்கள் துல்ஹஜ் பிறை 12ம் நாள் சூரியன் நடு உச்சியை விட்டும் சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிந்து விட்டு, அன்றைய நாள் சூரியன் மறைவதற்கு முன் மினாவிலிருந்து செல்ல முடியும். இவ்வாறு செல்வோரை "விரைந்து செல்பவர்கள்" என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. ஹஜ் செய்பவர்கள் துல்ஹஜ் பிறை 13ம் நாளும் சூரியன் நடுஉச்சியிலிருந்து சாய்ந்த பிறகு, மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிந்துவிட்டு மினாவை விட்டும் செல்ல முடியும். இவ்வாறு செல்வோரை "தாமதமாக செல்பவர்" என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. இதுவே சிறந்த முறையாகும். நபியவர்களும் இவ்வாறே செய்துள்ளார்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/297)
***
கேள்வி: தஷ்ரீக்குடைய முதலாம் நாள் மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிய முடியாமல் போனவர், மறுநாள் காலை விடுபட்ட கல்லெறிதலை செய்துகொள்வது கூடுமா? அல்லது அடுத்த நாள் சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு விடுபட்ட கல்லெறிதலை செய்ய வேண்டுமா?
பதில்: தஷ்ரீக்குடைய நாட்களில் சூரியன் நடு உச்சியிலுரந்து சாய்ந்த பிறகே ஜம்ராக்களில் கல்லெறிய வேண்டும். காலை நேரத்தில் கல்லெறிவது கூடாது. ஏனெனில் நபி ﷺ அவர்களும் சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்த பிறகே கல்லெறிந்துள்ளார்கள். இது பற்றி அவர்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்கள். -ஆதாரம்; முஸ்லிம் 1297- ஒரு நாள் கல்லெறிவது முடியாமல் போனால் மறுநாள் சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு விடுபட்ட நாளுக்குரிய கல்லெறிதலை செய்ய வேண்டும். முதலில் விடுபட்ட நாளுக்குரிய கற்களை மூன்று ஜம்ராக்களிலும் முறைப்படி எறிந்துவிட்டு, மீண்டும் முதலாம் ஜம்ராவுக்கு வந்து, அன்றைய நாளுக்குரிய கற்களை மூன்று ஜம்ராக்களிலும் எறிய வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/189)
***
கேள்வி: சில வருடங்களுக்கு முன் நான் ஹஜ் செய்தேன். அப்போது எனது அறியாமையின் காரணமாக சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் நான் ஜம்ராக்களில் கல்லெறிந்தேன். இதற்காக நான் ஏதும் செய்ய வேண்டுமா?
பதில்: தஷ்ரீக்குடைய நாட்களில் சூரியன் நடு உச்சியிலிருந்து ஒரு சான் அளவு சாய்ந்த பிறகுதான் ஜம்ராக்களில் கல்லெறிய வேண்டும். இதுவே நபி வழியாகும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள்" -ஆதாரம்; முஸ்லிம் 1297- நீங்கள் நேரம் தவறி கல்லெறிந்ததற்கான குற்றப்பரிகாரமாக மக்காவின் புனித பூமியில் ஓர் ஆட்டை அறுத்து, அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அதிலிருந்து நீங்கள் எதுவும் சாப்பிடக் கூடாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/293)
***
கேள்வி: ஒருவர் மினாவிலுள்ள கற்களை மறதியாக தன்னோடு ஊருக்கு எடுத்து வந்துவிட்டார். மினாவிலுள்ள கல் மினாவிற்கே திருப்பி அனுப்ப வேண்டுமென அவரிடம் கூறப்பட்டது. இது பற்றிய தெளிவைத் தாருங்கள்.
பதில் : மினாவிலிருந்து தன்னுடன் எடுத்துச் சென்ற கல்லை மீண்டும் மினாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டிய அவசியம் கிடையாது. இதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரங்களும் இல்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/294)
***
கேள்வி: ஹஜ் செய்யும் ஒருவர் பெரிய ஜம்ராவில் கல்லெறியும் போது, ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறிந்துவிட்டார். இவரின் சட்டம் யாது?
பதில்: ஜம்ராக்களில் கல்லெறியும் போது ஒவ்வொரு ஜம்ராவிலும் ஏழு கற்களை ஒன்றன் பின் ஒன்றாகவே எறிய வேண்டும். ஒரே தடவையில் ஏழு கற்களையும் எறிவது கூடாது. அவ்வாறு செய்தது ஹஜ்ஜுடைய நாட்களாக இருந்தால் அவர் மீண்டும் ஏழு முறை ஒன்றன் பின் ஒன்றாக கல்லெறிய வேண்டும். அவ்வாறு மீண்டும் எறிவதற்குரிய சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லையாயின், ஹஜ்ஜின் ஒரு கடமையை செய்யாமல் விட்டதற்கான குற்றப்பரிகாரமாக மக்காவின் புனித பூமியில் வைத்து ஓர் ஆட்டை அறுத்து, அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கு முடியாமல் போனால் பத்து நாட்கள் தொடராகவோ, விட்டுவிட்டோ நோன்பு பிடிக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/310)
***
கேள்வி: எனது தாயின் சகோதரி சென்ற வருடம் ஹஜ் செய்தார். அவர் ஜம்ராவில் கல்லெறியும் போது, சனநெரிசல் காரணமாக தான் எறியும் கல் எங்கு விழுகிறது என்பதைக் காணவில்லை எனவும், அது ஜம்ராவின் தடாகத்தில் விழுந்ததா? அல்லது வேறு எங்காவது விழுந்ததா என்பது அவருக்குத் தெரியாது எனவும், ஜம்ரா இவருக்கு தென்பட்டது எனவும் கூறினார். இதுபற்றிய தெளிவைத் தாருங்கள்.
பதில்: கல்லெறிவது சரியாக நடந்துள்ளது என்பதற்கான நிபந்தனைகளில் ஒன்று அது எறியப்படும் இடத்தில் விழ வேண்டும் என்பதாகும். எறியும் போது அது ஜம்ராவின் தடாகத்தில் விழுந்தது என்பதில் உறுதியாக இருந்து, பிறகு சந்தேகம் ஏற்பட்டால் அது அவருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவரின் கல்லெறிதல் சரியானதாகவே கருதப்படும். எறியும் போது அது சரியான இடத்தில் விழுந்ததா என்பதில் சந்தேகம் ஏற்பட்டால் அதற்கான குற்றப் பரிகாரமாக மக்காவின் புனித பூமியில் ஓர் ஆட்டை அறுத்து, அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கு முடியாத பட்சத்தில் பத்து நாட்கள் நோன்பிருக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/311)
***
கேள்வி: ஹஜ் செய்யும் சிலர் -அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழிகாட்ட வேண்டும்- ஜம்ராக்களில் கல்லெறியும் போது, செருப்பு, வெற்று தண்ணீர் போத்தல்கள் போன்ற தனது கைக்கு கிடைக்கும் அனைத்தையும் எறிகின்றனர். இவ்வாறு செய்வதால் இவர்களின் கல்லெறிதல் முறிந்துவிடுமா? அல்லது அவர்களின் அறியாமை காரணமாக குற்றம் பிடிக்கப்பட மாட்டார்களா?
பதில்: ஜம்ராக்களில் கல்லெறியும் போது இவ்வாறான பொருட்களால் கல்லெறிவது கூடாது. இது மார்க்கம் அனுமதிக்காத செயலாகும். நபியவர்களின் வழிமுறைக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். நபியவர்கள் சிறு கற்களைக் கொண்டே ஜம்ராக்களில் கல்லெறிந்துள்ளார்கள், நபியவர்கள் கூறினார்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள்" -ஆதாரம்; முஸ்லிம் 1297- இச்செயலால் அவர்களுக்கு பாவமே கிடைக்கும். இவ்வாறு செய்பவர்களைக் கண்டால் அவர்களுக்கு புத்திமதி கூறி, அச்செயலை விட்டும் அவர்களைத் தடுக்க வேண்டும். தான் எறிந்த பொருட்களோடு சிறு கற்களையும் எறிந்தால் அவரின் கல்லெறிதல் எனும் கடமை முறிந்துவிடாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/324)
***
கேள்வி: ஹஜ் செய்யும் ஒருவர் தஷ்ரீக்குடைய முதலாம், இரண்டாம் நாட்களில் மினாவில் வைத்து மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிந்து விட்டு, இரண்டாம் நாள் சூரியன் மறைவதற்கு முன் உடனடியாக மக்காவுக்குச் செல்கிறார். மூன்றாம் நாள் அவர் கல்லெறியவில்லை. இதற்காக அவர் ஏதும் குற்றப்பரிகாரம் செய்ய வேண்டுமா?
பதில்: தஷ்ரீக்குடை முதல் இரண்டு நாற்களிலும் மூன்று ஜம்ராக்களிலும் ஒருவர் கல்லெறிந்துவிட்டு, இரண்டாம் நாள் சூரியன் மறைவதற்கு முன் மினாவிலிருந்து வெளியறிவிட்டு, மூன்றாம் நாள் கல்லெறியவில்லையாயின் அவர் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஏனெனில் இரண்டாம் நாளே அவருக்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/335)
***
தவாபுல் வதாஃ (மக்காவை விட்டும் பிரிந்துசெல்வதற்கான தவாஃப்) பற்றிய மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: நான் ஜித்தாவில் வசிப்பவன். தினமும் மக்காவுக்கு சென்று வருகிறேன். ஹஜ் செய்து முடித்ததும் தான் தவாஃபுல் வதாஃ செய்ய வேண்டுமா? அல்லது நான் எனது நாட்டிற்கு திரும்பச் செல்லும் போது அதை செய்துகொண்டால் போதுமானதா? தவாஃபுல் வதாஃவை பிற்போடுவதால் ஏதும் குற்றப்பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?
பதில்: நீங்கள் ஹஜ் செய்தால் தவாஃபுல் வதாஃ செய்யாமல் ஜித்தாவுக்கு செல்ல முடியாது. தவாஃபுல் வதாஃ உம் ஹஜ்ஜில் உள்ள ஒரு கடமையாகும். அதை செய்வதற்கு முன் நீங்கள் மக்காவை விட்டும் வெளியேறினால் அதற்கான குற்றப்பரிகாரமாக மக்காவின் புனித பூமியில் வைத்து ஓர் ஆட்டை அறுத்து, அதை அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அதில் நீங்கள் உண்பதற்காக எதையும் எடுக்கக் கூடாது. தவாஃபுல் வதாஃ என்பது கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை (ஹஜ்ஜின்) இறுதி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் (‘தவாஃபுல் வதா’வை விட்டுவிட) சலுகை வழங்கப்பட்டுள்ளது." -ஆதாரம்: புஹாரி 1755, முஸ்லிம் 1328- தவாஃபுல் வதாஃ வை நிறைவேற்றாமல் ஜித்தாவுக்கு சென்றதற்காக நீங்கள் அல்லாஹ்விடம் தவ்பா செய்துகொள்ளுங்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/303)
***
கேள்வி: ஹஜ் செய்பவர் மினாவிலிருந்து தாயிஃப் சென்று, 20 நாட்கள் கழித்து மீண்டும் மக்காவுக்கு வந்து, தவாஃபுல் வதாஃவை செய்ய முடியுமா?
பதில் : ஹஜ் செய்பவர் ஹஜ்ஜின் கடமைகள் அனைத்தும் முடிவதற்கு முன் மக்காவை விட்டும் பயணம் செய்வது கூடாது. தவாஃபுல் வதாஃவும் ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றாகும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/307)
***
கேள்வி: மாதவிடாய், பிரசவ இரத்தம் ஏற்பட்டுள்ள பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள் போன்றோர் தவாஃபுல் வதாஃவை செய்ய வேண்டுமா?
பதில்: மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் ஏற்பட்டுள்ள பெண்கள் தவாஃபுல் வதாஃ செய்யவேண்டியதில்லை. வயோதிபர்கள், இயலாதவர்கள், நோயாளிகள் போன்றோர் சுமக்கப்பட்ட நிலையில், அல்லது சக்கர நாட்காலி போன்றவற்றின் உதவியோடு இந்த தவாஃபை நிறைவேற்ற வேண்டும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (நபி ﷺ அவர்களது காலத்தில் ஹஜ்ஜை முடித்ததும்) மக்கள் பல்வேறு முனைகளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "(ஹஜ் செய்த) எவரும் இறையில்லம் கஅபாவை இறுதியாகச் சந்தித்(து தவாஃப் செய்)திடாமல் மக்காவிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டாம்!" என்று கூறினார்கள். -ஆதாரம்: முஸ்லிம் 1327- இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வாயிலாக இன்னொரு ஹதீஸும் இடம்பெற்றுள்ளது, "இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை (ஹஜ்ஜின்) இறுதி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் (‘தவாஃபுல் வதா’வை விட்டுவிட) சலுகை வழங்கப்பட்டுள்ளது." -ஆதாரம்: புஹாரி 1755, முஸ்லிம் 1328- மற்றொரு ஹதீஸில் பிரசவ இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ள பெண்களும் மாதவிடாய் பெண்களைப் போல் தவாஃபுல் வதாஃவை செய்யத் தேவையில்லை என இடம்பெற்றுள்ளது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/307)
***
கேள்வி: தவாஃபுல் வதாஃ செய்துகொண்டிருக்கும் போது எனக்கு முடியாமல் போனது. தவாஃபை நிறுத்தி சற்று ஓய்வெடுத்தேன். என்னோடு வந்தவர்கள் அவர்களது தவாஃபை முடித்தவிட்டு வந்ததும், நான் விட்ட இடத்திலிருந்து தவாஃபை ஆரம்பித்து முடித்தேன். அதில் ஒரு சுற்றை நான் தவறவிட்டேன் என்பதை ஊருக்கு வந்த பிறகே தெரிய வந்தது. நான் இதற்காக ஏதும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?
பதில்: நீங்கள் தவாஃபின் ஒரு சுற்றை விட்டீர்கள் என்பது உங்களுக்கு உறுதியாக இருந்தால் அதற்காக நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். மக்காவின் புனித பூமியில் ஓர் ஆட்டை அறுத்து, அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கு முடியாமல் போனால் பத்து நாட்கள் நோன்பிருக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/126)
***
கேள்வி: நான் ஹஜ் செய்தேன். தஷ்ரீக்குடைய இரண்டாம் நாள் அஸர் தொழுகைக்குப் பின் நான் தவாஃபுல் வதாஃவையும் செய்தேன். ஆனால் நான் மக்காவில் தங்கி, மறுநாள் காலையில் தான் தாயிஃப் இற்கு புறப்பட்டேன். நானும் எனது குடும்பத்தினரும் செய்த இந்த தவாஃபுல் வதாஃ போதுமானதா? அல்லது ஏதும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா? அல்லது அந்த தவாஃபை மீண்டும் செய்ய வேண்டுமா? எனக்கு விளக்கம் தாருங்கள்.
பதில்: ஹஜ்ஜின் போது தவாஃபுல் வதாஃ செய்த பின் மக்காவில் சிறிது நேரம் இருக்க நேர்ந்தால் மீண்டும் தவாஃப் செய்ய வேண்டியதில்லை.நீண்ட நேரம் மக்காவில் தங்க வேண்டி ஏற்பட்டால் அவர் மீண்டும் தவாஃபுல் வதாஃ வை செய்ய வேண்டும். நீங்கள் மக்காவை விட்டும் புறப்படும் நேரத்தில் தான் இந்த தவாஃபை செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அஸருக்குப் பின் தவாஃபுல் வதாஃ வை செய்துவிட்டு, மறுநாள் காலையில் மக்காவை விட்டும் புறப்பட்டுள்ளீர்கள். நீண்ட நேரம் மக்காவில் தங்கியிருந்தமையால் நீங்கள் மீண்டும் தவாஃ செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சென்றமையால் உங்கள் ஒவ்வொருவருக்கும் குற்றப் பரிகாரம் உண்டு. இதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் மக்காவின் புனித பூமியில் ஓர் ஆட்டை அறுத்து, அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். உங்களோடு மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தப் போக்குள்ள பெண்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த தவாஃப் கடமையாகாது.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – இரண்டாம் தொகுப்பு (10/337)
***
கேள்வி: சென்ற வருடம் எனது மனைவி தமத்துஃ முறையில் ஹஜ் செய்தார். ஹஜ்ஜின் அனைத்து கடமைகளையும் சரியாக முடித்த பின் தவாஃபுல் வதாஃவை செய்யும் போது அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இதனால் அவரது தந்தை அவரை மஸ்ஜிதுல் ஹராமிற்கு அழைத்துச் சென்று தூரத்திலிருந்து கஃபாவை காட்டிவிட்டு வந்துள்ளார். இதன் சட்டம் யாது? எனக்கு விளக்கம் தாருங்கள்.
பதில்: மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு தவாஃபுல் வதாஃ கடமையில்லை. உங்கள் மனைவி எதுவித பரிகாரங்களும் இதற்காக செய்ய வேண்டியதில்லை. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை (ஹஜ்ஜின்) இறுதி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் (‘தவாஃபுல் வதா’வை விட்டுவிட) சலுகை வழங்கப்பட்டுள்ளது." -ஆதாரம்: புஹாரி 1755, முஸ்லிம் 1328- ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரழி) அவர்களுக்கு, அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "தவாஃபுல் இஃபாழா" செய்த பின்பு மாதவிடாய் ஏற்பட்டது. அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அவர் "தவாஃபுல் இஃபாழா" செய்துவிட்டார்,அல்லாஹ்வின் தூதரே!" என்று கூற, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், "அப்படியானால் (பரவாயில்லை) அவர் புறப்படலாம் ("தவாஃபுல் வதா" செய்ய வேண்டியதில்லை)" என்று சொன்னார்கள். -ஆதாரம்: முஸ்லிம் 1211-
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/342)
***
கேள்வி: ஒருவர் ஹஜ் உம்ரா செய்யும் நோக்கில் இல்லாமல் வெறுமனே மக்காவிற்கு வந்து, திரும்பிச் செல்லும் போது தவாஃபுல் வதாஃ செய்ய வேண்டுமா? உம்ரா செய்வதற்காக வந்த ஒருவர் மக்காவில் இரண்டு மூனறு நாட்களுக்கு தங்கிவிட்டு, மீண்டும் திரும்பிச் செல்லும் போது தவாஃபுல் வதாஃ செய்ய வேண்டுமா?
பதில்: தவாஃபுல் வதாஃ என்பது ஹஜ் செய்பவர்களுக்கு மாத்திரம் உரிய, அவர்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது செய்ய வேண்டிய ஒரு கடமையாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை (ஹஜ்ஜின்) இறுதி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் (‘தவாஃபுல் வதா’வை விட்டுவிட) சலுகை வழங்கப்பட்டுள்ளது." -ஆதாரம்: புஹாரி 1755, முஸ்லிம் 1328- ஹஜ் செய்யாதவர்களுக்கு இது கடமையாகாது. ஏனெனில் நபி ﷺ அவர்கள் உம்ரா செய்பவர்களுக்கோ, மக்காவுக்கு வந்து போகின்றவர்களுக்கோ தவாஃபுல் வதாஃ கடமை என எங்கும் குறிப்பிடவில்லை. தவாஃபுல் வதாஃ ஹஜ் செய்பவர்களுக்கு ஒரு வணக்கமாக இருப்பதால் இதன் போது நிய்யத் வைத்துக்கொள்வதும் அவசியமாகும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது." -ஆதாரம்: புஹாரி 01- அல்லாஹ்வே நன்கறிந்தவன்
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/344)
***
கேள்வி: தவாஃபுல் வதாஃ செய்த பின் கடைகளுக்குச் சென்று தேவைப்படும் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியுமா? தவாஃப் செய்த பின் ஏதும் பொருட்களை வாங்கினால் அதற்காக அவர் ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
பதில்: தவாஃபுல் வதாஃ என்பது ஹஜ் செய்பவர் செய்யும் இறுதிக் கடமையாகும். இதற்குப் பின் அவர் மக்காவை விட்டும் புறப்பட வேண்டும். புறப்படும் வேளையில் தன்னோடு வந்த சக நண்பர்களுக்காக சற்று தாமதித்தல், பொருட்களை வாகனத்தில் ஏற்றுதல், பொருட்களை வாங்குதல் என்பவற்றில் சிறிது நேரத்தை செலவிடுவதில் தவறில்லை.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/345)
***
கேள்வி: ஜித்தாவிலிருந்து ஹஜ் செய்ய வந்த ஒருவர் தஷ்ரீக்குடைய இரண்டாம் நாள் தவாஃபுல் வதாஃவை செய்துவிட்டு, மினாவுக்கு சென்று ஜம்ராக்களில் கல்லெறிந்துள்ளார். கல்லெறிவதற்கு முன் இவர் செய்த தவாஃப் சரியானதா? இதற்காக இவர் ஏதும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?
பதில்: ஜம்ராவில் கல்லெறிவதற்கு முன் தவாஃபுல் வதாஃவை நிறைவேற்றுவது கூடாது. தவாஃபுல் வதாஃ என்பது ஹஜ்ஜின் இறுதிக் கடமையாகும். அவர் தவாஃபுல் வதாஃவை மீண்டும் செய்யாமல் ஊருக்குத் திரும்பியிருந்தால் அவருக்கு குற்றப்பரிகாரம் உண்டு. இதற்காக அவர் மக்காவின் புனித பூமியில் ஓர் ஆட்டை அறுத்து, அங்குள்ள ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அதில் எந்தவொன்றையும் அவர் சாப்பிடக் கூடாது. இதற்கு முடியாமல் போனால் பத்து நாட்கள் நோன்பிருக்க வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/345)
***
கேள்வி: ஸம்ஸம் நீருக்கு அதிக முக்கியத்துவங்கள் இருக்கின்றன. இது பற்றி ஏதும் ஹதீஸ்கள் உள்ளனவா?
பதில் : ஸம்ஸம் நீரானது உலகிலுள்ள நீர்களிலே மிகவும் புனிதத்துவம் வாய்ந்தது. இது பற்றி நபி ﷺ அவர்கள், ""அது (ஸம்ஸம்) வளமிக்கதாகும். அது(ஒரு வகையில்) வயிற்றை நிரப்பும் உணவாகும்" எனக் கூறியுள்ளார்கள். ஆதாரம்: முஸ்லிம் 2473. ஸஹீஹுல் ஜாமிஃ இல் மேலதிகமான ஒரு செய்தியும் இடம்பெற்றுள்ளது. "அது நோய் நிவாரணியாகும்" -ஆதாரம்: ஸஹீஹ் அல்ஜாமிஃ 3322- மேலும் நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "ஸம்ஸம் நீர் எதற்காக அருந்தப்படுகிறதோ அதற்கே பயன்படும்." ஆதாரம் : இப்னுமாஜா 3062, அஹ்மத் 14849.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/168)
***
மதீனாவை தரிசிப்பது பற்றிய சில மார்க்கத் தீர்ப்புகள்
கேள்வி: நான் ரமழான் மாதத்தில் உம்ரா செய்துவிட்டு, மதீனாவையும் தரிசிக்க உள்ளேன். எனக்கான வழிகாட்டுதல் யாது?
பதில்: புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட மூன்று பள்ளிகளில் மஸ்ஜிதுன் நபவியும் ஒன்றாகும். இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் பள்ளியை தரிசிக்க வரவேண்டுமே தவிர நபி ﷺ அவர்களின் கப்ரை தரிசிக்க புனிதப் பயணம் வரக் கூடாது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "(மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல் களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது." -ஆதாரம்: புஹாரி 1189, முஸ்லிம் 1397- மஸ்ஜிதுன் நபவிக்கு புனிதப் பயணம் வந்த ஒருவர் நபி ﷺ அவர்கள், அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகிய மூன்று பேரின் கப்ருக்கு அருகில் சென்று அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும். அவ்வாறே பகீஃ மையவாடிக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷுஹதாக்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். மஸ்ஜிதுல் குபாவுக்குச் சென்று அங்கு தொழ வேண்டும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - முதல் தொகுப்பு (11/78)
***
கேள்வி: ஹஜ் செய்ய வந்தவர்களில் பெண்களுக்கும் நபி ﷺ அவர்களின் கப்று, பகீஃ, உஹது ஆகிய இடங்களிலுள்ள மையவாடிகளுக்கு செல்ல முடியுமா? அல்லது ஆண்கள் மாத்திரம் தான் இதற்கு அனுமதிக்கப்படுவார்களா?
பதில்: ஹஜ் செய்ய வந்த ஆண்களோ, பெண்களோ நபியவர்களின் கப்ரு பகீஃ மையவாடி ஆகியவற்றை மாத்திரம் தரிசிப்பதற்காக புனிதப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு செய்வது இருவருக்கும் தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களைப் பொருத்த வரையில் இதற்காக புனிதப் பயணம் மேற்கொள்ளாமல் வந்திருந்தாலும் அவர்களுக்கு கப்ருகளை தரிசிப்பதுஅ முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "(மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல் களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது." -ஆதாரம்: புஹாரி 1189, முஸ்லிம் 1397- மஸ்ஜிதுன் நபவிக்காக புனிதப் பயணம் வந்து நபியவர்களின் கப்ரு, பகீஃ மையவாடி ஆகியவற்றை ஆண்கள் தரிசிப்பதில் தவறில்லை. பெண்களைப் பொருத்தவரை கப்ருகளை தரிசிப்பது தடுக்கப்பட்டுள்ளது. கப்ருகளை தரிசிக்கும் பெண்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள். எனவே அவர்கள் பள்ளியில் இருந்து தொழுது, நபியவர்களுக்கு அதிகம் ஸலவாத்துக் கூறி, ஏனைய வணக்கங்களில் ஈடுபட முடியும்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் – முதல் தொகுப்பு (11/362)
***
கேள்வி: மதீனாவுக்கு வரும் யாத்திரிகர்களை இங்குள்ள தரிசிக்கும் இடங்களுக்குக் கூட்டிச் செல்வதை எனது சகோதரர் தொழிலாளக் கொண்டுள்ளார். அவர் கூட்டிச் செல்லும் இடங்களில் சிலது மார்க்கத்தில் உறுதிப்படுத்தப்படாத இடங்களாகும். இதற்காக அவர் பணமும் பெறுகிறார். இவர் செய்யும் தொழில் சரியானதா?
பதில் : ஹஜ் உம்ராவுக்கு வரும் யாத்திரிகர்களை மதீனாவின் தரிசிக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது தடுக்கப்பட்ட தொழிலாகும். இதற்காக பணம் வாங்குவதும் தடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் சகோதரருக்கு இதை விட்டு விடுமாறு புத்திமதி கூறுங்கள்.
மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தர குழுவின் மார்க்கத் தீர்ப்புகள் - இரண்டாம் தொகுப்பு (10/390) சுருக்கமாக
***