ثلاثة الأصول وأدلتها
هذا الكتاب هو متن صغير أساسي يبين فيه التوحيد والدين والنبوة، يبين هذه المعاني الثلاثة الأساسية المهمة في فهم العقيدة، وفي دراستها دراسة سليمة وصحيحة. وهو كتاب مختصر، لكنه كتاب مبارك؛ لأنه سهل العبارة ومركز وموجه، وليس فيه أي تعقيد أو إشكالات. فالإنسان بمجرد أن يقرأ الكتاب يستطيع أن يفهمه، ويستطيع أن يعرف المعاني المتضمنة فيه. هذا الكتاب قبل أن يبدأ الشيخ في الأصول الثلاثة قدم لذلك بأربعة مسائل، ثم بعد ذلك بثلاثة مسائل أخرى، ثم شرع في الأصول الثلاثة، وهي التي يجب على كل مسلم أن يتعلمها، وهي التي يسأل عنها العبد في قبره: من ربك؟ وما دينك؟ ومن نبيك؟ ألفها رحمه الله للمبتدئين واجتهد في تسهيلها واختصارها حتى خرجت بأحسن حلة وأعظم فائدة؛ يفهم بها الصغير، ولا يستغني عنها الكبير فعم نفعها، وكثر خيرها؛ لعظم قدر موضوعاتها وشرف محتواها.
மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும்
அஷ்ஷேக் முஹம்மத் அத்தமீமீ (ரஹ்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்;)
அறிந்துகொள்! அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக! நாம் நான்கு விடயங்களைக் கற்றுக் கொள்வது நம்மீது கடமையாகும்:
முதலாவது: அறிவு. அதாவது அல்லாஹ்வை அறிதல், அவனது நபியை அறிதல் மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை ஆதாரங்களுடன் அறிதல்.
இரண்டாவது : அதன்படி செயல்படுதல்.
மூன்றாவது : அதனை நோக்கி அழைத்தல்
நான்காவது: அவ்வழியில் ஏற்படும் துன்பங்களை பொறுமையாக சகித்துக் கொள்ளுதல்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகின்றேன்). காலத்தின் மீது சத்தியமாக! (1) நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான்.(2) எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர.(3) (ஸுறா அல்-அஸ்ர் -1-3)
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் படைப்புகளுக்கு இந்த அத்தியாயத்தை மட்டுமே ஆதாரமாக இறக்கியிருந்தாலும், அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்.
மேலும் இமாம் புகாரி (ரஹ்) கூறினார்கள்: பாடம்: சொல் மற்றும் செயலுக்கு முன் அறிவு; அதற்கான ஆதாரம், அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்; மேலும், உங்கள் பாவங்களுக்காக மன்னிப்பும் கேளுங்கள்” (ஸூரா முஹம்மத்) (இங்கு அல்லாஹ்) சொல் மற்றும் செயலுக்கு முன் அறிவைக் கொண்டு அல்லாஹ் ஆரம்பித்துள்ளான்.
அறிந்து கொள்வீராக - அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக - : ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும், இந்த மூன்று விடயங்களைக் கற்று, அதன்படி அமல் செய்ய வேண்டும்:
முதலாவது: அல்லாஹ் எம்மைப் படைத்து, எமக்கு வாழ்வாதாரங்களையும் வழங்கி, எம்மை வீணாக விட்டுவிடவில்லை; மாறாக, அவன் எம்மிடம் ஒரு தூதரை அனுப்பினான். எவர் அவருக்குக் கட்டுப்பட்டாரோ அவர் சுவனம் புகுவார். எவர் அவருக்கு மாறு செய்தாரோ அவர் நரகம் புகுவார்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நிச்சயமாக நாம் (உங்களில் யார் நம்பிக்கை கொண்டார், யார் நிராகரித்தார் என்று என்னிடம்) உங்களைப் பற்றி சாட்சி கூறுகின்ற ஒரு தூதரை உங்களிடம் அனுப்பினோம், ஃபிர்அவ்னுக்கு ஒரு தூதரை நாம் அனுப்பியது போன்று.(15) ஆக, ஃபிர்அவ்ன் அந்த தூதருக்கு மாறுசெய்தான். ஆகவே, மிகக் கடுமையாக நாம் அவனை பிடித்தோம். (-அவனை கடுமையான தண்டனையைக் கொண்டு தண்டித்து அழித்தோம்.) (16) (அல்முஸ்ஸம்மில் : 15-16).
இரண்டாவது: அல்லாஹ், அவனுடைய வணக்கத்தில் அவனுக்கு இணையாக வேறு எவரும் சேர்க்கப்படுவதை பொருந்திக்கொள்வதில்லை; அது (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்காகவோ, அனுப்பப்பட்ட நபியாகவோ இருக்கலாம். அதற்கு ஆதாரம் அல்லாஹ் தஆலாவின் கூற்றாகும்: இன்னும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்காதீர்கள்! (அல்ஜின் : 18).
மூன்றாவது : தூதருக்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியவர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்கள் மிக நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், அவர்களுடன் நட்பு பாராட்டுவது ஆகுமானதல்ல.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிற மக்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுபவர்களை (மார்க்க சட்டங்களை எதிர்ப்பவர்களை) நேசிப்பவர்களாக இருப்பதை நீர் காணமாட்டீர். (மார்க்க சட்டத்தை எதிர்க்கிற) அவர்கள் தங்கள் தந்தைகளாக; அல்லது, தங்கள் பிள்ளைகளாக; அல்லது, தங்கள் சகோதரர்களாக; அல்லது, தங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! இத்தகையவர்கள்தான் - இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஈமானை உறுதிபடுத்திவிட்டான். இன்னும் அவர்களை தன் புறத்திலிருந்து உதவியைக் கொண்டு பலப்படுத்தினான். இன்னும், அவன் அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்குவார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வான். (அவர்களினால் மகிழ்ச்சி அடைவான்.) அவர்களும் அவனை பொருந்திக் கொள்வார்கள். (அவர்களும் அவனால் மகிழ்ச்சி அடைவார்கள்.) அவர்கள்தான் அல்லாஹ்வின் கட்சியினர். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அல்லாஹ்வின் கட்சியினர்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.” (அல்முஜாதலா : 22).
அறிந்துகொள் — அல்லாஹ் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கு உனக்கு நேர்வழி காட்டுவானாக — : இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கமாகிய அல் ஹனீபிய்யா என்பது, மார்க்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவனாக, அல்லாஹ் ஒருவனை மாத்திரமே நீ வணங்குவதாகும். இதனைக்கொண்டே அல்லாஹ் மக்கள் அனைவரையும் ஏவினான்; மேலும், இதற்காகவே அவர்களைப் படைத்தான். அல்லாஹ் கூறுகின்றான் : ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை. (அத்ஸாரியாத் : 56). “என்னை வணங்குவதற்காக" என்பதன் கருத்து, என்னை ஒருமைப்படைத்துவதற்காக என்பதாகும்.
அல்லாஹ் ஏவியவற்றில் மிக மகத்தானது தவ்ஹீத் ஆகும். அதாவது, வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.
அவன் தடுத்தவற்றில் மகத்தானது ஷிர்க் ஆகும், அதாவது, அவனுடன் சேர்த்து மற்றவர்களைப் பிரார்த்திப்பதாகும்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : இன்னும், அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், அவனுக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்கள்... (அந்நிஸா : 36).
மனிதன் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படைகள் யாவை? என உன்னிடம் கேட்கப்பட்டால்,
அடியான் தனது இரட்சகனையும், தனது மார்க்கத்தையும், தனது நபியாகிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அறிந்து கொள்வதாகும்" எனக் கூறுவீராக.
[முதலாம் மூலாதராம்]
உன்னிடம், 'உன் இரட்சகன் யார்?' என்று கேட்கப்பட்டால்
என் இறைவன் அல்லாஹ். அவனே என்னையும், அகிலத்தார் அனைவரையும் தனது அருட்கொடைகளைக் கொண்டு பரிபாலிப்பவன். அவனே என் வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர எனக்கு வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று கூறுவீராக. இதற்கு ஆதாரம் அல்லாஹ்வின் கூற்றாகும்: புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது! (2) (அல்பாதிஹா : 2). அல்லாஹ்வைத் தவிர உள்ளவை அனைத்தும் “ஆலம்” என்பதில் அடங்கும், நானும் அந்த ஆலத்தைச் சேர்ந்த ஒருவனாவேன்.
உன்னிடம்: உன் இறைவனை எதைக் கொண்டு அறிந்தாய்? என்று கேட்கப்பட்டால்
‘அவனுடைய அத்தாட்சிகளைக் கொண்டும் அவனுடைய படைப்புகளைக் கொண்டும்’ எனக் கூறுவீராக.
இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை.
அவனுடைய படைப்புகளில் ஏழு வானங்களும், அவற்றில் உள்ளவையும், ஏழு பூமிகளும், அவற்றில் உள்ளவையும், அவ்விரண்டிற்கும் இடையில் உள்ளவையும் அடங்கும்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : இரவு, பகல், சூரியன், சந்திரன் அனைத்தும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள்! இவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள் நீங்கள் அ(ந்த உண்மையான இறை)வனை வணங்குபவர்களாக இருந்தால்.(37) (புஸ்ஸிலத் : 37).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக உங்கள் (காரியங்கள் அனைத்தையும் சீர்ப்படுத்துபவனும், உங்களை நிர்வகிப்பவனுமாகிய உங்கள்) இறைவன் அல்லாஹ்தான் (-எல்லாப் படைப்புகளும் உண்மையில் வணங்குவதற்கு தகுதியானவன்.) அவன்தான் வானங்களையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (இவை எல்லாம் அவனுக்கு) பணிந்தவையாக இருக்கும் நிலையில் தனது கட்டளையினால் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதைத் தேடுகிறது (-பின் தொடர்கிறது). அறிந்து கொள்ளுங்கள் “படைத்தல் இன்னும் (-படைப்புகள் அனைத்தின் மீது) அதிகாரம் செலுத்துதல்” அவனுக்கே உரியன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். (அல் அஃராப் : 54)
ரப்பே வணக்கத்திற்குரியவன்; இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : மக்களே! நீங்கள் (உண்மையான) இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள். அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்தி(ன் மேகத்தி)லிருந்து (மழை) நீரை இறக்கினான். ஆக, அதன் மூலம் உங்களுக்கு (பல விதமான) கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்(து கொடுத்)தான். ஆகவே, (இந்த உண்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில், அல்லாஹ்விற்கு நிகரானவர்களை (-பொய்யான இணை தெய்வங்களை) ஏற்படுத்தாதீர்கள். (அல்பகரா : 21,22)
இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : இப்பொருட்களைப் படைத்தவனே வணங்கி வழிபடத் தகுதியானவன்.
அல்லாஹ் கட்டளையிட்டுள்ள வணக்கத்தின் வகைகளாவன: இஸ்லாம், ஈமான், இஹ்ஸான்; மேலும் அவற்றுள்: பிரார்த்தனை (துஆ), பயப்படுதல், ஆதரவு வைத்தல், தவக்குல் (முழு நம்பிக்கை வைத்தல்), ஆர்வம் கொள்ளுதல், அச்சப்படுதல், உள்ளச்சம் கொள்ளுதல், அஞ்சுதல், பாவமன்னிப்புக் கோரி திரும்புதல், உதவி தேடுதல், பாதுகாப்பு கோரல், அபயம் தேடுதல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் மற்றும் இது அல்லாத அல்லாஹ் கட்டளையிட்டுள்ள வணக்கத்தின் ஏனைய வகைகள் - இவை அனைத்தும் அல்லாஹ் தஆலாவுக்கே உரியனவாகும். அதற்கான ஆதாரம் அல்லாஹ் தஆலாவின் கூற்றாகும்: இன்னும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்காதீர்கள்! (அல்ஜின் : 18).
ஆகவே, யார் அவற்றில் எதனையாவது அல்லாஹ் அல்லாதவற்றுக்காக திருப்புகிறாரோ, அவர் இணைவைத்தவர், நிராகரித்தவர் ஆவார். அதற்கான ஆதாரம் அல்லாஹ் தஆலாவின் கூற்றாகும்: இன்னும், யார் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைப்பாரோ - அதற்கு அவரிடம் அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க - அவருடைய விசாரணையெல்லாம் அவரது இறைவனிடம்தான். நிச்சயமாக (அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க மறுக்கின்ற) நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள். (அல்முஃமினூன் : 117).
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள் : “துஆ என்பது வணக்கத்தில் பிரதானமானதாகும்.”
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : இன்னும், உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக விரைவில் நரகத்தில் நுழைவார்கள்.” (ஃகாபிர் : 60).
அச்சத்திற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : (உண்மையான, உறுதியான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களைப் பயப்படாதீர்கள்; (உங்கள் இறைவனாகிய) என்னைப் பயப்படுங்கள். (ஆல இம்ரான் : 175).
நம்பிக்கைக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை பயப்படுவாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! இன்னும், தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!” (அல் கஹ்ஃப் : 110).
தவக்குலுக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்!’’ (அல்மாஇதா : 23). மேலும் அல்லாஹ் கூறுகிறான் : எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பாரோ அவருக்கு அவனே போதுமானவன் ஆவான். (அத்தலாக் : 3).
ஆர்வம், அச்சம், பணிவு ஆகியவற்றிற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர். (அல் அன்பியாஃ : 90).
பயபக்திக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : ...அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள்... (அல்மாஇதா : 3).
இனாபா எனும் மீளுதலுக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள். (அஸ்ஸுமர் : 54).
உதவி தேடுவதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : (அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்பாதிஹா : 5), நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்: உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு.
பாதுகாப்புத் தேடலுக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : (நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இரட்சகனைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகின்றேன் (அல்பலக் : 1) (நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், (ஸுறத்துன்னாஸ் : 1)
இரட்சிக்கத் தேடுதலுக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான்... (அல்அன்பால் : 9).
அறுத்தலுக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் தொழுகையும், என் பலியும் (எனது வணக்க வழிபாடுகளும்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை.” அவனுக்கு இணை அறவே இல்லை... (அல்அன்ஆம் : 162, 163) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுவோரை அல்லாஹ் சபிப்பானாக"
நேர்ச்சைக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். இன்னும், ஒரு நாளை பயப்படுவார்கள், அதன் தீமை (அல்லாஹ் கருணை புரிந்தவர்களைத் தவிர மற்ற எல்லோரையும்) சூழ்ந்ததாக, (அவர்கள் மீது) பரவியதாக, கடுமையானதாக இருக்கும். (அல்இன்ஸான் : 7).
[இரண்டாவது அடிப்படை]
ஆதாரங்களுடன் இஸ்லாம் மார்க்கத்தை அறிவத்து. அதாவது, ஏகத்துவப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வுக்கு முழுமையாக சரணடைவதும், வழிபடுவதன் மூலம் அவனுக்கு கட்டுப்படுவதும், இணைவைத்தல் மற்றும் இணைவைப்பாளர்களை விட்டும் முழுமையாக விலகி இருப்பதுமாகும்.
அது மூன்று படித்தரங்களாகும்: இஸ்லாம், ஈமான், இஹ்ஸான்.
ஒவ்வொரு படி நிலைக்கும் ருகூன்கள் உண்டு.
இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல், தொழுகையை நிறைவேற்றுதல், ஸகாத் வழங்குதல், ரமழானில் நோன்பு நோற்றல், அல்லாஹ்வின் புனித இல்லத்திற்கு ஹஜ் செய்தல்.
ஷஹாதாவுக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: “நிச்சயமாக அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை’’ என்று. இன்னும், வானவர்களும் கல்விமான்களும் இதற்கு சாட்சி கூறுகிறார்கள். மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (ஆல இம்ரான் : 18)
அதன் பொருள்: உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்பதாகும்.
'லாஇலாஹ' என்பது அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தையும் நிராகரிப்பதாகும்.
'இல்லல்லாஹ்' என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கே நிலைநாட்டுகிறது.
அவனது அதிகாரத்தில் அவனுக்கு நிகரேதும் இல்லாதது போலவே, அவனை வணங்குவதிலும் அவனுக்கு நிகரேதும் இல்லை.
இதனைத் தெளிவுபடுத்தும் விளக்கமாவது, அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : இன்னும், (நபியே!) தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக: “நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்,” என்னைப் படைத்த (இறை)வனைத் தவிர.. (என்று கூறினார்) (அஸ்ஸுஃக்ருப் : 26-27) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! எங்கள் மத்தியிலும் உங்கள் மத்தியிலும் (நீதமான) சமமான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்! அதாவது: அல்லாஹ்வைத் தவிர (எவரையும் நீங்களும் நாமும்) வணங்கமாட்டோம்; அவனுக்கு எதையும் (நீங்களும் நாமும்) இணையாக்க மாட்டோம்; அல்லாஹ்வைத் தவிர நம்மில் சிலர் சிலரை வணங்கப்படும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது.’’ (இதுதான் அந்த நீதமான சமமான விஷயம்.) ஆக, அவர்கள் (இதை ஏற்காமல் புறக்கணித்து) விலகி சென்றால், “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சி சொல்லுங்கள்!’’ என்று நீங்கள் (அவர்களிடம்) கூறிவிடுங்கள். (ஆல இம்ரான் : 64).
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி பகர்வதற்குரிய ஆதாரம்; அல்லாஹ் தஆலாவின் கூற்று: (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார். (அத்தௌபா : 128).
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்வதன் அர்த்தம்: அவர் ஏவியவற்றில் அவருக்குக் கட்டுப்படுவதும், அவர் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துவதும், அவர் தடுத்து விலக்கியவற்றை தவிர்ந்து கொள்வதும், மேலும் அவர் மார்க்கமாக்கிய வழியைக் கொண்டு அல்லாஹ்வை வணங்காமலிருப்பதுமாகும்.
தொழுகை, ஸகாத், மற்றும் தவ்ஹீதின் விளக்கத்திற்குமான ஆதாரம்; அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : அவர்கள் வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர ஏவப்படவில்லை. இன்னும், இதுதான் நேரான (நீதியான, சரியான சட்டங்களுடைய) மார்க்கமாகும். (அல்பய்யினாஃ : 5).
நோன்பிற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது - உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று. (அல் பகரா : 183).
ஹஜ்ஜிற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான். (ஆல இம்ரான் : 97).
இரண்டாவது படித்தரம்: ஈமான்; அது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும்.
ஈமானின் தூண்கள் ஆறு: அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், விதியின் நன்மையையும் தீமையையும் நம்பிக்கை கொள்வதாகும்.
இந்த ஆறு அர்கான்களுக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நன்மை என்பது மேற்கு, கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்... (அல்பகரா : 177).
விதிக்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் படி நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம். (அல் கமர் : 49)
மூன்றாம் படித்தரம்: இஹ்ஸான். அது ஒரே ஒரு அடிப்படையாகும். அதாவது, அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைக் காணாவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான். (அந்நஹ்ல் : 128).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் மிகைத்தவன், மகா கருணையாளன் மீது நம்பிக்கை வைப்பீராக! (217) அவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்றபோது உம்மை பார்க்கிறான். இன்னும், (உம்மை பின்பற்றி) சிரம் பணி(ந்து தொழு)பவர்களுடன் (ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு) நீர் மாறுவதையும் (அவன் பார்க்கிறான்).219 (அஷ்ஷுஅராஃ : 217- 219).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : (நபியே) நீர் எந்த ஒரு செயலில் இருந்தாலும், இன்னும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், இன்னும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சியாளர்களாக (உங்களை கண்காணித்தவர்களாக) நாம் இருந்தே தவிர... (யூனுஸ் : 61) அல்குர்ஆன் வசனத்தைப் பார்க்கவும்.
ஸுன்னாவிலிருந்து இதற்கான ஆதாரம், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்ட பிரபல்யமான ஜிப்ரீல் (அலை) அவர்களின் ஹதீஸாகும்: ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நபி (ஸல்) அவர்களின் முன் அமர்ந்து, தனது முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும், தனது இரு கைகளைத் தன் தொடைகள் மீது வைத்தும், 'முஹம்மதே!'.
இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றார்
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: «இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் சாட்சியம் கூறுவதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், ஸகாத்தை வழங்குவதும், ரமழானில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் அவ்வீட்டிற்கு ஹஜ் செய்வதும் ஆகும்». என்று கூறினார்கள். அதற்கு அவர், 'உண்மைதான்' என்றார். - அவரே கேள்வியும் கேட்டுவிட்டு, அவரே அதனை உண்மைப்படுத்துவதைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்.
(பின்னர்) அவர், “ஈமான் பற்றி அறிவித்துத் தாருங்கள்” எனக் கேட்டார்.
(அதற்கு) ‘அல்லாஹ்வையும், அவனின் மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும், நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்பபடியே நடைபெறும் என்பதையும் விசுவாசம் கொள்வதாகும்' என (நபியவர்கள்) கூற, 'நீர் உண்மையே கூறினீர்' என அவர் கூறினார்.
(பின்னர்) அவர் “இஹ்ஸான் குறித்துக் கூறுங்கள்” என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான்.” என்று கூறினார்கள்.
பின்னர் அவர், "மறுமையைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்" என வினவினார்.
அதற்கு நபியவர்கள், “அது பற்றி வினவப்பட்டவர், வினவுபவரை விட மிக்க அறிந்தவரல்லர்.” என்று கூறினார்கள்
அதற்கு அவர், 'அதன் அடையாளங்கள் பற்றி எனக்குக் கூறுங்கள்' என்று கூறினார்.
(அதற்கு) அவர்கள்: "அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பணியாத, ஆடையற்ற, வறிய ஆட்டு இடையர்கள் உயரமான கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போடுவதை நீர் காண்பதும் ஆகும்.” என்று கூறினார்கள்
பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டார். நான் அங்கேயே சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு (நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்), 'உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்' என்றேன் நான். (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்), 'அவர் ஜிப்ரீல் ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்' என்று கூறினார்கள்.
(மூன்றாவது அடிப்படை)
உங்கள் நபி முஹம்மத் ﷺ அவர்களை அறிவது. அவர் அப்துல்லாஹ்வின் மகனாவார், அப்துல்லாஹ் அப்துல் முத்தலிபின் மகனாவார், அப்துல் முத்தலிப் ஹாஷிமின் மகனாவார். ஹாஷிம் அவர்கள் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர். குறைஷிகள் அரபிகளாவர். அரபிகள் இப்ராஹீம் நபியின் மகனான இஸ்மாயில் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்தோராவர். அவர்களின் மீதும் எங்கள் நபி மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
அவர்கள் அறுபத்து மூன்று வருடங்கள் வாழ்ந்தார்கள். அதில் நாற்பது வருடங்கள் நுபுவ்வத்திற்கு முன்பும், இருபத்து மூன்று வருடங்கள் நபியாகவும் ரஸூலாகவும் இருந்துள்ளார்கள்.
அவர்கள் ‘இக்ரஃ’ மூலம் நபியாகவும், ‘அல்முத்தஸ்ஸிர்’ மூலம் தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய ஊர் மக்காவாகும்.
அல்லாஹ் அவரை இணைவைப்பை விட்டும் எச்சரிப்பவராகவும், ஓரிறைக் கொள்கையின்பால் அழைப்பவராகவும் அனுப்பி வைத்தான். இதற்கு ஆதாரமாக அல்லாஹ் கூறுகின்றான்: போர்வை போர்த்தியவரே! எழுவீராக! எச்சரிப்பீராக!2 உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!3 இன்னும், உமது ஆடையை (-உம்மை பாவங்களை விட்டு) சுத்தப்படுத்துவீராக!4 சிலைகளை விட்டும் (அவற்றை வழிபடுவதை விட்டும்) விலகுவீராக!5 (உமது அமல்களை) நீர் பெரிதாக கருதியவராக, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்! இன்னும், உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக! (அல் முத்தஸ்ஸிர் : 1 - 7).
மேலும், “எழுவீராக! எச்சரிப்பீராக!” என்பதன் பொருளாவது, இணைவைப்பை விட்டும் எச்சரித்து, ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதாகும்.
“உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!” என்பதன் அர்த்தமாவது, “ஓரிறைக் கொள்கையைக் கொண்டு அவனைக் கண்ணியப்படுத்த வேண்டும்” என்பதாகும்
இன்னும், உமது ஆடையை (-உம்மை பாவங்களை விட்டு) சுத்தப்படுத்துவீராக! என்பதன் அர்த்தமாவது, உம்முடைய செயல்களை இணைவைப்பை விட்டும் தூய்மையாக்குவீராக என்பதாகும்
”சிலைகளை விட்டும் (அவற்றை வழிபடுவதை விட்டும்) விலகுவீராக!” என்பதன் அர்த்தமாவது, அர்-ருஜ்ஸ்: சிலைகள். அதனை வெறுத்து ஒதுக்குதல் என்பது, அதனை விட்டுவிடுவதும், அதிலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் விலகிக்கொள்வதுமாகும்.
பத்து வருடங்கள் ஏகத்துவத்தின் பால் அழைத்தார்கள். பத்து வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மீது ஐவேளைத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. மக்காவில் மூன்று வருடங்கள் தொழுதார்கள். அதன் பின்னர் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லுமாறு கட்டளையிடப்பட்டார்கள்.
ஹிஜ்ரத் என்பது ஷிர்க் உடைய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கிப் புலம்பெயர்வதாகும்.
இணைவைக்கும் பிரதேசத்திலிருந்து இஸ்லாமியப் பிரதேசத்திற்கு ஹிஜ்ரத் செய்வது இந்த சமூகத்தின் மீது கடமையாகும். மேலும் அது யுகமுடிவு நாள் வரை நிலைத்திருக்கும்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நிச்சயமாக எவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, அவர்களிடம் - (“மார்க்கக் கட்டளையை நிறைவேற்றி ஹிஜ்ரத் செய்யாமல்) - நீங்கள் எவ்வாறு (தங்கி) இருந்தீர்கள்?” என்று வானவர்கள் கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (வசித்த நெருக்கடியான இடத்திலிருந்து) அதில் (பூமியில் வேறு பகுதிக்கு) ஹிஜ்ரத் செய்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இத்தகையவர்கள் அவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது (மிகக்) கெட்ட மீளுமிடமாகும்! ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் (ஹிஜ்ரத் செய்ய முடியாமல்) பலவீனர்களாக இருந்தவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள்.) இவர்கள் (ஹிஜ்ரத் செல்வதற்கு தேவையான) யுக்திகளை மேற்கொள்ள சக்தி பெறாமல் இருந்தார்கள். இன்னும், இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் பெறாமல் இருந்தார்கள். (அந்நிஸா : 97-98).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானது. ஆகவே, என்னையே (கலப்பற்ற முறையில்) நீங்கள் வணங்குங்கள்! (அன்கபூத் : 56).
இமாம் அல் பஃகவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த வசனம் இறங்குவதற்கான பிண்ணனி: ஹிஜ்ரத் செய்யாது மக்காவில் இருந்த முஸ்லிம்களாகும். அல்லாஹ் ஈமான் எனும் பெயரால் அவர்களை அழைத்துள்ளான்.
ஹிஜ்ரத்திற்கு சுன்னாவிலிருந்து ஆதாரம் நபி (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்றாகும்: “தவ்பா தடைபடும் வரை ஹிஜ்ரத் தடைபடாது, சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை தவ்பா தடைபடாது.”
மதீனாவில் அவர்கள் நிலைபெற்ற போது, ஸகாத், நோன்பு, ஹஜ், அதான், ஜிஹாத், நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் போன்ற இஸ்லாத்தின் ஏனைய மார்க்கக் கடமைகள் விதியாக்கப்பட்டன. இதன் மீதே அவர்கள் பத்து வருடங்கள் இருந்தார்கள்.
நபியவர்கள் மரணித்துவிட்டார்கள்; அவர்களின் மார்க்கமோ நிலைத்திருக்கிறது. இதுவே அவர்களின் மார்க்கமாகும்: எந்தவொரு நன்மையையும் இந்த உம்மத்திற்கு அவர்கள் வழிகாட்டாமல் விட்டதில்லை; எந்தவொரு தீமையையும் விட்டும் அவர்களை எச்சரிக்கை செய்யாமல் விட்டதில்லை.
அவளுக்கு வழிகாட்டப்பட்ட நன்மையானது : ஓரிறைக் கொள்கையும், அல்லாஹ் விரும்புகின்ற, அவன் பொருந்திக் கொள்கின்ற அனைத்துமாகும்.
அவர் எச்சரித்த தீமை என்பது இணைவைப்பும், அல்லாஹ் வெறுத்து நிராகரிக்கின்ற அனைத்துக் காரியங்களுமாகும்.
அல்லாஹ் அவரை உலக மக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பியதோடு, ஜின்னினத்தவர், மனிதரினத்தவர் ஆகிய இரு சாரார் மீதும் அவருக்குக் கட்டுப்படுவதைக் கடமையாக்கினான். அதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும்: (நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன்... (அஃராப் : 158)
அல்லாஹ் அவரைக் கொண்டு மார்க்கத்தை முழுமைப்படுத்தினான்; இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன். (மாஇதா : 3).
அவர் மரணித்ததற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : நிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும், நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான். பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் (உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள். (அஸ்ஸுமர் : 30-31).
மேலும், மனிதர்கள் மரணித்ததன் பின்னர் மீளெழுப்பப்படுவார்கள்; அதற்கான ஆதாரம், அல்லாஹ் கூறுகின்றான்: “அதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். இன்னும், அதில்தான் உங்களை திரும்பக் கொண்டுவருவோம். இன்னும், அதிலிருந்துதான் மற்றொரு முறை உங்களை வெளியேற்றுவோம்.” (தாஹா : 55). மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும், அல்லாஹ்தான் உங்களை பூமியில் இருந்து முளைக்க வைத்தான். பிறகு, அவன் உங்களை அதில்தான் மீட்பான். இன்னும், (அதிலிருந்து) அவன் உங்களை (பூமியிலிருந்து) வெளியேற்றுவான். (நூஹ் : 17-18).
மீளெழுப்பப்பட்டதன் பின்னர், அவர்கள் தங்களது செயல்களுக்காக விசாரணை செய்யப்பட்டு, அதற்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். இதற்கு ஆதாரம், அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: இறுதியில், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்கு (தகுந்த தண்டனையை) அவன் கூலி(யாகக்) கொடுப்பான். இன்னும், நன்மை செய்தவர்களுக்கு (மிக அழகிய) சொர்க்கத்தை அவன் கூலி(யாகக்) கொடுப்பான். (அந்நஜ்ம் : 31).
யார் உயிர்த்தெழுப்பப்படுவதைப் பொய்யாக்குகிறானோ, அவன் நிராகரித்துவிட்டான்; அதற்கான ஆதாரம் பின்வரும் இறைவசனமாகும் : “அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள்” என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு, நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக நீங்கள் அறிவித்துக் கொடுக்கப்படுவீர்கள். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!” (அத்தஃகாபுன் : 7).
அல்லாஹ் அனைத்து தூதர்களையும் நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிப்பவர்களாகவும் அனுப்பினான்; அதற்கு ஆதாரமாக அல்லாஹ் கூறுகின்றான்: தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (எமது அடியார்களுக்கு தொடர்ந்து நாம் அனுப்பினோம்). (அந்நிஸாஃ : 165).
அவர்களில் முதலாமவர் நூஹ் (அலை) ஆகும்.
அவர்களில் இறுதியானவரும், நபிமார்களின் முத்திரையுமானவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்; அன்னாருக்குப் பின் வேறு நபிமார் யாரும் இல்லை. அதற்கு ஆதாரமாக அல்லாஹ் கூறுகின்றான்: முஹம்மத் உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார்... (அல்அஹ்ஸாப் : 40).
அவர்களில் முதலாமவர் நூஹ் என்பதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். (அன்நிஸாஃ : 163)
மேலும், ஒவ்வொரு சமூகத்திற்கும், அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு ஏவவும், தாகூத்களை வணங்குவதை விட்டும் தடுக்கவும், நூஹ் முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வரை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினான். அதற்கு ஆதாரம் அல்லாஹ் தஆலாவின் கூற்றாகும்: “அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், ஷைத்தானை விட்டும் விலகுங்கள்” என்று (போதிப்பதற்காக) ஒவ்வொரு சமுதாயத்திலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். (அன்நஹ்லு : 36)
அனைத்து அடியார்களின் மீதும் தாகூத்தை நிராகரிப்பதையும், அல்லாஹ்வை ஈமான் கொள்வதையும் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : தாஃகூத் என்பதன் பொருள்: வணங்கப்படுபவன், அல்லது பின்பற்றப்படுபவன், அல்லது வழிப்படப்படுபவன் என, அடியான் வரம்பு மீறும் அனைத்தும் ஆகும்.
தாகூத்துகள் அதிகமானோர் உள்ளனர், அவர்களில் தலைவர்கள் ஐந்து பேர் ஆவர்: இப்லீஸ் (அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும்), தன்னை வணங்குவதை பொருந்திக்கொள்பவன், தன்னை வணங்குமாறு மக்களை அழைப்பவன், மறைவான ஞானத்திலிருந்து தனக்கு ஏதேனும் தெரியும் என்று வாதிடுபவன், அல்லாஹ் இறக்கிய சட்டங்களுக்கு மாற்றமாக தீர்ப்பளிப்பவன்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : இஸ்லாமில் (இணைவதில்) அறவே நிர்ப்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. (மௌட்டீகத்திலிருந்து, மூடத்தனத்திலிருந்து விலகி பகுத்தறிவும், அறிவு ஞானமும் மிகத் தெளிவாகிவிட்டன.) ஆக, எவர் ஷைத்தானை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார். அறவே, அ(ந்)த (வளையத்தி)ற்குத் துண்டிப்பு இல்லை. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 02 : 256). இதுவே 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்பதன் அர்த்தமாகும், மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “விடயங்களில் தலையாயது இஸ்லாமாகும், அதன் தூண் தொழுகையாகும், அதன் உயர்நிலை அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதாகும்".
அல்லாஹ்வே நன்கறிந்தவன்