آداب السفر وأحكامه

آداب السفر وأحكامه

பிரயாண ஒழுங்குகளும் அதன் சட்டங்களும் அகில உலகின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அவனது இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள், இறுதி நாள் வரை அவரைப் பின்பற்றும் நல்லடியார்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் உண்டாவதாக.

Language: lang_ta
Prepared by: பல்மொழிகளில் இஸ்லாமிய உள்ளடக்கத்திற்குச் சேவை செய்யும் நிறுவனத்தின் ஆய்வுக் குழு
Version: 3.0
Translations 50
Akan Amharic Assamese Azerbaijani +46
Attachments 7
PDF
Audio
Video
+3

பிரயாண ஒழுங்குகளும் அதன் சட்டங்களும் அகில உலகின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அவனது இறுதித் தூதர் முஹம்மத் ﷺ அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள், இறுதி நாள் வரை அவரைப் பின்பற்றும் நல்லடியார்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் உண்டாவதாக.

அல்லாஹ்வைப்போற்றி புகழ்ந்தன் பின்னால்

இது பயணத்தின் ஒழுங்குகளும் சட்டங்களும் பற்றிய ஒரு சுருக்கமான கையேடாகும். இதில் பயணிகளுக்கு தேவையான பல முக்கிய விடயங்களை விளக்க முயன்றுள்ளோம்.

இதை அவனின் திருமுகம் நாடி செய்த தூய பணியாகவும், முஸ்லிம்கள் அனைவருக்கும் பயனளிக்கும் படியாகவும் ஆக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

பல்மொழிகளில் இஸ்லாமிய உள்ளடக்கத்திற்குச் சேவை செய்யும் நிறுவனத்தின் ஆய்வுக் குழு

முதலாவது : பயணத்தின் ஒழுங்குகள்

ஹஜ் அல்லது பிற வழிபாடுகளுக்காகப் பயணம் செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

1. பயணம் செல்ல இருக்கும் நேரம், பயணத்துக்காக தேர்வு செய்த வாகனம், பயணத்தில் துணையாக வருபவர்கள், பயணம் செல்ல இருக்கும் பாதை (பல பாதைகள் இருந்தால்) ஆகியவற்றில் நல்லதைத் தெரிவுசெய்து தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். அது தொடர்பாக தொடர்பாக சிறந்த, அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஹஜ், உம்ராவுக்குச் செல்வதாக இருந்தால் அது நிச்சயம் நல்ல பயணமாகவே இருக்கும். இதற்காக இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, நபியவர்கள் கற்றுத் தந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும். இதுவே பிரயாணத்தில் அல்லாஹ்விடம் நலவை வேண்டும் முறையாகும்.

2- ஹஜ் உம்ராவுக்காக பயணம் செல்ல இருப்போர் தமது ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, அவனின் நெருக்கத்தைப் பெறவேண்டும் எனும் நோக்கில் அப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும். உலக மோகத்திற்காகவோ, பெருமையடைவதற்காகவோ, பட்டங்களைப் பெறுவதற்காகவோ, பிறருக்கு காண்பிப்பதற்காகவோ, புகழைப் பெறுவதற்காகவோ அப்பயணத்தை மேற்கொள்ளக் கூடாது. இது அவரது வணக்கத்தை பால்படுத்திவிடுவதோடு, அல்லாஹ்விடம் அச்செயல் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதற்கும் காரணியாக அமையும். அல்லாஹ் கூறுகிறான், "(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.” (அல்குர்ஆன் 18 : 110). ஹதீஸுல் குத்ஸியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: “வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களில் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன். (1) (1) ஆதாரம் : முஸ்லிம் 2985.

3. ஹஜ், உம்ராவுக்குச் செல்பவர்கள், செல்ல முன்னர் அவற்றின் சட்டங்களையும், பிரயாணத்தின் சட்டங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். இது குறித்த வணக்கத்தில் கடமையான ஒரு நிலையை விட்டுவிடாமல் இருக்கவும், தடுக்கப்பட்ட ஒன்றை செய்யாமல் இருக்கவும் அவருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான். (2) (2) ஆதாரம்: புஹாரி 3116, முஸ்லிம் 1037. (2) ஆதாரம்: புஹாரி 3116, முஸ்லிம் 100.

4- ஹஜ், உம்ரா செல்ல இருப்பவர்கள் தனது பயணத்துக்காக ஆகுமான முறையில் சம்பாதித்த பணத்தையே செலவு செய்ய வேண்டும். ஏனெனில் அல்லாஹ் தூயவன், அவன் தூய்மையானவற்றையே விரும்புகிறான். தடுக்கப்பட்ட முறையில் பணம் சம்பாதிப்பது ஒருவரின் துஆ அங்கீகரிக்கப்படாமல் போவதற்கு காரணமாக அமையும்.

5. அனைத்து பாவங்களுக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். பிறரின் மானம், செல்வம் போன்றவற்றில் அநியாயமாக நடந்திருந்தால் உரியவர்களிடம் சென்று அதற்கான மன்னிப்பை பெற வேண்டும்.

6. பயணம் செய்பவர் தனது இறுதி விருப்பங்களையும், கடன்களையும், தனக்கு வர இருப்பவற்றையும் எழுதி வைப்பது விரும்பத்தக்கது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "(இறுதி விருப்பம் தெரிவிக்க) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தமது இறுதி விருப்பத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள்கூட கழிப்பதற்கு அனுமதியில்லை" (3) தனது இறுதி விருப்பத்திற்கு சாட்சியங்களை தயார்படுத்தி, தமக்கு உள்ள கடன்களை அடைத்து, தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொருட்களை உரியவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் அல்லது அவற்றை வைத்திருக்க அவர்களிடம் அனுமதி பெற வேண்டும். (3) ஆதாரம்: புஹாரி 2738, முஸ்லிம் 1627.

7. பயணம் செய்பவர் தனக்காக நல்ல பயணத் தோழரை தேர்வு செய்ய முயற்சிக்க வேண்டும். இதற்காக இஸ்லாமிய மார்க்கத்தை கற்றறிந்த ஒருவரை தெரிவு செய்வது மிகவும் பொருத்தமானது. இவ்வாறான தெரிவு குறிப்பாக ஹஜ் உம்ரா பயணங்களில் தான் சரியாக நடந்துகொள்வதற்கும், தவறுகளில் ஈடுபடாமல் இருக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "ஒரு மனிதன் தனது நண்பரின் வழிமுறையிலேயே இருப்பான். எனவே தான் யாருடன் நட்பு கொள்வது என்பதைக் கவனித்துக் கொள்ளட்டும்". (4) மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உண்மையான முஃமினைத் தவிர வேறு யாரையும் நண்பனாகக் கொள்ளாதே, தக்வா உடையவரைத் தவிர வேறு யாரும் உன் உணவை உண்ணக்கூடாது". (5) (4) ஆதாரம்: அபூதாவுத் 4833. (5) ஆதாரம்: அபூதாவுத் 4832, திர்மிதி 2395.

8. பயணம் செய்பவர் தனது குடும்பத்தார், உறவினர்கள், அண்டைவீட்டார், நண்பர்கள் என அனைவரிடமும் பிரியாவிடை கூறுவது விரும்பத்தக்க விடயமாகும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், பிரயாணம் செய்ய நாடிய ஒருவர், தன்னால் விட்டுச் செல்லப்படுபவர்களிடம், أَسْتَوْدِعُكُمُ ‌اللَّهَ الَّذِي لَا يُضِيعُ وَدَائِعَهُ 'அஸ்தவ்திஉகுமுல்லாஹல்லதி லா தழீஉ வதாஇஉஹு' என்று கூற வேண்டும். (6) இதன் பொருள்: "அல்லாஹ்விடம் நான் உங்களை ஒப்படைக்கிறேன். அவனிடம் ஒப்படைக்கப்பட்டவைகள் எதுவும் வீணாகிவிடுவதில்லை" நபி ﷺ அவர்கள் தமது தோழர்களில் ஒருவர் பயணம் செல்ல விரும்பினால் அவரை வழியனுப்பும் போது பின்வருமாறு கூறுவார்கள், أَسْتَوْدِعُ ‌اللهَ ‌دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ "அஸ்தவ்திஉல்லாஹ தீனக வஅமானதிக வஹமாதீம அலமிக". (7) பொருள்: உங்கள் மார்க்கத்திற்கும், பாதுகாப்பிற்கும், செயலின் நல்ல முடிவிற்கும் அல்லாஹ்வை பாதுகாப்பாளனாக ஆக்குகிறேன். பயணம் செய்பவர்கள், தமக்கு உபதேசம் செய்யுமாறு நபியவர்களிடம் கேட்டுக்கொண்டால் அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள், زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى، وَغَفَرَ ذَنْبَكَ، ‌وَيَسَّرَ ‌لَكَ ‌الخَيْرَ ‌حَيْثُ ‌مَا ‌كُنْتَ "ஸவ்வதகல்லாஹுத் தக்வா, வகஃபர தன்பக, வயஸ்ஸர லகல் ஹைர ஹைஸுமா குன்த" (8) பொருள்: அல்லாஹ் உங்களுக்கு தக்வாவை கட்டுச்சாதனமாக ஆக்கித் தந்து, உங்கள் பாவங்களை மன்னித்து, நீங்கள் எங்கிருந்தாலும் நன்மையை உங்களுக்கு இலேசாக ஆக்கித் தருவானாக! பயணம் செய்ய இருந்த ஒருவர் நபி ﷺ அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வஸிய்யத் செய்யுங்கள்" எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள், "அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறும், உயர்ந்த இடங்களில் ஏறும் போது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுமாறு அறிவுரை வழங்குகிறேன்" என்றார்கள். அவர் சென்றபின் "அல்லாஹ்வே! அவருக்குத் தூரத்தைச் சுருக்கியும், அவரின் பயணத்தை இலகுவாக்கியும் கொடுப்பாயாக" எனக் கூறினார்கள். (9) (6) ஆதாரம்: தபரானி 823. (7) ஆதாரம்: அஹ்மத் 4524. (8) ஆதாரம் : திர்மிதி 3444. (9) ஆதாரம் : அஹ்மத் 9724.

9. பயணம் செய்பவர் தன்னுடன் நாய், புல்லாங்குழல், மணி ஆகியவற்றை எடுத்துச் செல்வது கூடாது. நபி ﷺ கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள்." (10) (10) ஆதாரம் : முஸ்லிம் 2113.

10. பயணம் செய்பவர் தனது மனைவியர்களில் ஒருவரை தன்னோடு அழைத்துச் செல்ல விரும்பினால் குழுக்கள் முறையில் அவர்களில் ஒருவரை தேர்வு செய்வது விரும்பத்தக்கதாகும். ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால், தம் துணைவியரிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். யாரது பெயர் (குலுக்கலில்) வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு புறப்படுவார்கள்." (11) (11) ஆதாரம் : புஹாரி 2593, முஸ்லிம் 2770.

11. பயணம் செய்பவர் முடியுமானால் வியாழக்கிழமை பகலின் ஆரம்ப நேரத்தில் பயணம் செய்வது விரும்பத்தக்கது. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டால் பெரும்பாலும் வியாழக்கிழமையன்றுதான் புறப்படுவார்கள்” [12] (12) புஹாரி 2949

12. பயணம் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் வீட்டிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆவை கூறிக்கொள்வது விரும்பத்தக்கது. அந்த துஆ வருமாறு, بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلا حَوْلَ وَلا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ "பிஸ்மில்லாஹி, தவக்கல்த்து அலல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் அவ் உஸல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய" (13) பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால் (புறப்பட்டுச் செல்கிறேன்), என் காரியங்களை அல்லாஹ்வின் மீது முழுமையாக ஒப்படைத்து அவன் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வின் உதவியில்லாமல் எதிலிருந்தும்; தப்பிப்பதற்கான சக்தியோ வல்லமையோ எனக்குக் கிடையாது, யா அல்லாஹ்! நான் வழி தவறிச் செல்வதில் இருந்தும், அல்லது (பிறரால்) நான் வழிகெடுக்கப்படுவதிலிருந்தும், நான் தவறுசெய்வதை விட்டும் அல்லது (பிறரால்) நான் தவறுக்கு உட்படுத்தப்படுவதை விட்டும், நான் பிறருக்கு அநீதி இழைப்பதை விட்டும்; அல்லது (பிறரால்) நான் அநீதி இழைக்கப்படுவதை விட்டும், நான் அறிவீனமாக நடந்துகொள்வதைவிட்டும் அல்லது (பிறர்) என்மீது அறிவீனமாக நடந்துகொள்வதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (13) அபூதாவூத்: 5094.

13- பயணம் செய்பவர் தனது கால்நடையில், மோட்டார் வாகனத்தில், விமானத்தில் என எந்த வாகனத்தில் பயணித்தாலும் பிரயாண துஆவை ஓதிக்கொள்வது விரும்பத்தக்கது. اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ ‌إِنَّا ‌نَسْأَلُكَ ‌فِي ‌سَفَرِنَا ‌هَذَا ‌الْبِرَّ ‌وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا السَّفَرَ، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ المنظر، وسوء الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். ஸுப்ஹானல்லதீ ஸஹ்ஹரலனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன், வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ. பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குக் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் (14), மோசமான தோற்றத்திருந்தும் (15), செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் (16) உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (17) (14) பயணத்தின் சிரமம்: பயணத்தில் ஏற்படும் அசௌகரியம், கஷ்டம். பார்க்க: அல்இஃப்ஸாஹ் அன் மஆனிஸ் ஸிஹாஹ் 04/284 (15) மோசமான தோற்றம்: மோசமான மனோநிலை மற்றும் மனச்சோர்வு. பார்க்க: அல்இஃப்ஸாஹ் அன் மஆனிஸ் ஸிஹாஹ் 04/284. (16) தீய விளைவுகள்: ஒன்றன் விளைவாக ஏற்படும் ஆபத்துகள் மற்றும் நஷ்டங்கள். பார்க்க: அல்இஃப்ஸாஹ் அன் மஆனிஸ் ஸிஹாஹ் 04/284. (17) ஆதாரம் : அஹ்மத் 6374.

14. பிரயாணத் தோழர் இன்றி தனியாக பயணிப்பது விரும்பத்தக்கதல்ல. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள சிரமங்கள் குறித்து நான் அறிந்துள்ளதை மக்கள் அறிந்தால், எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்யமாட்டார்." (18). (18) ஆதாரம்: புஹாரி 2998.

15. பிரயாணம் செய்பவர்கள் தங்களில் ஒருவரைத் தலைவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது அவர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், ஒரு முடிவிற்கு அனைவரும் செவிசாய்க்கவும், அவர்களின் நோக்கத்தை அடைவதற்கும் உதவியாக இருக்கும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "மூவர் பிரயாணம் செய்தால் அவர்களில் ஒருவரைத் தங்களின் தலைவராக ஆக்கிக் கொள்ளட்டும்" (19). (19) ஆதாரம் : அபூ தாவூத் 2608.

16. பிரயாணம் செய்பவர் அல்லாஹ் தனக்கு கடமையாக்கியுள்ள வணக்கங்களை நிறைவேற்றுவதிலும், தடுத்தவற்றை தவிர்ந்திருப்பதிலும், பிரயாணத்தில் நற்குணத்தோடு நடப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். உதவி தேவைப்படுவோருக்கு விரைந்து சென்று உதவி செய்ய வேண்டும். மார்க்க சட்டங்களை அறிந்துகொள்ள ஆவலாய் இருப்போருக்கு அதை விளக்க முற்பட வேண்டும். தனக்கும், தன்னுடன் இருக்கும் ஏனைய பிரயாண தோழர்களுக்கும் தேவையானவற்றை செலவழிக்க முன்வர வேண்டும்.

17. பயணம் செய்பவர் பயணத்துக்கான கட்டுச் சாதனங்களையும், செலவுக்கான பணத்தையும் அதிகம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பிரயாணத்தில் தேவைகள் அதிகரிக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறுபடலாம்.

18. பிரயாணத் தோழர்களுக்கு உதவி செய்யும் போது முகமலர்ச்சியோடும், மனமகிழ்ச்சியோடும் இருக்க வேண்டும். அவர்களை கவனிக்கும் முறையில் அவர்களின் உள்ளங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். அனைவருடனும் அன்போடு நடந்துகொள்ள வேண்டும்.

19. பிரயாணத்தில் தலைவராக நியமிக்கப்பட்டால் சக பயண தோழர்களின் கடினமான நடவடிக்கைகளிலும், அவர்களுக்கு மத்தியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளிலும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். அவர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். இது அவர்கள் உங்களை மதிக்கவும், உங்களை கண்ணியப்படுத்தவும் காரணியாக அமையும்.

20. பயணம் செய்பவர்கள் எங்கேனும் இறங்கினால் அல்லது தங்கிச் செல்ல நேர்ந்தால் ஒருவருக்கொருவர் பிரிந்து செல்லாமல் நெருக்கமாக இருப்பது விரும்பத்தக்கதாகும். நபி ﷺ அவர்களின் தோழர்கள் பயணம் செய்து, எங்கேனும் தங்க நேர்ந்தால் கணவாய்களிலும், பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து செல்வார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூறினார்கள், "நீங்கள் கணவாய்களிலும், பள்ளத்தாக்குகளிலும் பிரிந்து விடுவீர்களாயின் அது ஷைத்தானின் புறத்தினால் ஏற்படுவதாகும்". (20) நபியவர்கள் இவ்வாறு கூறியதும் ஒரு போர்வையை விரித்தால் அனைவரும் அதில் அகப்படும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். (20) ஆதாரம்: அஹ்மத் 17736.

21 - பயணத்தின் போது ஒரு இடத்தில் இறங்கவோ அல்லது தங்கவோ நேர்ந்தால் பின்வரும் துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும். أَعُوذُ ‌بِكَلِمَاتِ ‌اللَّهِ ‌التَّامَّاتِ ‌مِنْ ‌شَرِّ ‌مَا ‌خَلَقَ "அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா ஹலக்" (21). பொருள்: அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளின் மூலம் அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். அவர் அதைச் சொன்னால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது. (21) ஆதாரம்: முஸ்லிம் 2708.

22. பிரயாணம் செய்யும் போது ஏற்றங்களில் ஏறினால் 'அல்லாஹு அக்பர்' என தக்பீர் கூறுவதும், பள்ளங்களில் இறங்கினால் 'ஸுப்ஹானல்லாஹ்' என தஸ்பீஹ் கூறுவதும் விரும்பத்தக்கதாகும். ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நாங்கள் (பயணத்தில் மேட்டில்) ஏறும் போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும்போது 'சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று தஸ்பீஹ்’ கூறுவோம்." (22). தக்பீர், தஸ்பீஹ் ஆகியவற்றைக் கூறும் போது சத்தத்தை உயர்த்தாமல் கூற வேண்டும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியுறுபவன்; அருகிலிருப்பவன்.". (23). (22) ஆதாரம்: புஹாரி 2994. (23) ஆதாரம்: புஹாரி 2993.

23. பயணம் செய்பவர் இரவில், அதிலும் ஆரம்பப் பகுதியில் பயணிப்பது விரும்பத்தக்கது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "நீங்கள் இரவில் பயணம் செய்யுங்கள்.ஏனெனில் இரவில் பூமி சுருக்கப்படுகின்றது" (24). (24) ஆதாரம்: அபூதாவூத் 2571.

24- பயணத்தில் அதிகம் துஆ கேட்பது விரும்பத்தக்கது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "மூன்று சந்தர்ப்பங்களில் எவ்வித சந்தேகமுமின்றி துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவையாவன: அநீதமிழைக்கப்பட்டவரின் துஆ, பிரயாணியின் துஆ, பெற்றோர் தம் பிள்ளைகளுக்காக கேட்கும் துஆ." (25) (25) ஆதாரம் : அஹ்மத் 10771.

***

இரண்டாவது : பயணத்தில் சுத்தம் பேணுதல்.

பயணம் செய்பவர் சுத்தமாக இருப்பது அவசியமாகும். சிறு தொடக்கு ஏற்பட்டவர் வுழூ செய்துகொள்ள வேண்டும். பெரு தொடக்கு ஏற்பட்டவர் குளித்துக்கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்ய தண்ணீர் கிடைக்காவிட்டால், அல்லது இருக்கும் தண்ணீர் சாப்பாட்டிற்கு மாத்திரம் போதுமானதாக இருந்தால் தயம்மும் செய்து தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனது இரு கைகளையும் புழுதியுள்ள நிலத்தில் அடித்து, அக்கைகளால் முகத்தையும், மணிக்கட்டு வரை இரு கைகளையும் தடவி, தயம்மம் செய்ய வேண்டும்.

தயம்மம் என்பது தற்காலிக சுத்தமாகும். எப்போது தண்ணீர் கிடைக்கிறதோ அப்போது அது செல்லுபடியற்றதாகிவிடும்; அவர் தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். பெருதொடக்கிற்காக தயம்மம் செய்தவர் தண்ணீர் கிடைத்ததும் குளித்துக்கொள்ள வேண்டும். சிறு தொடக்கிற்காக தயம்மம் செய்தவர் எப்போது தண்ணீர் கிடைக்கிறதோ அப்போது வுழூ செய்துகொள்ள வேண்டும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் பத்து ஆண்டுகள் தண்ணீரைப் பெறாவிட்டாலும், நல்ல மண் அவருக்கு வுழு ஆக இருக்கும். ஆனால் அவர் நீரைப் பெற்றால், அல்லாஹ்வை பயந்து, அதைத் தன் சருமத்தில் தொடவிட வேண்டும்." (26) (26) ஆதாரம்: பஸ்ஸார் 10068.

வுழூ செய்யும் போது காலுறைகள் மீது தண்ணீரால் தடவிக்கொள்வது பற்றி அல்குர்ஆன், ஸுன்னா மற்றும் இஜ்மா ஆகியவற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காலுறைகள் மீதும் அதற்கு ஒப்பான காலணிகள் மீதும் தண்ணீரால் தடவுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவை வருமாறு:

1- காலுறைகள் ஆகுமானவையாகவும், சுத்தமானவையாகவும் இருக்க வேண்டும்.

2. வுழூ செய்த பின், அவ்விரண்டையும் அணிந்திருக்க வேண்டும்.

3- வுழூ செய்யும் போது காலில் கட்டாயம் கழுவ வேண்டிய பகுதியை அவை மறைத்திருக்க வேண்டும்.

4- சிறு தொடக்கு ஏற்பட்டால் மாத்திரமே வுழூ செய்து, அதிலிருந்து சுத்தமாகுவதற்கு காலுறைகள் மீது தண்ணீரால் தடவ வேண்டும். பெருதொடக்கு போன்ற குளிப்பை கடமையாக்கும் காரணிகளுக்கு இவ்வாறு தடவுவது கூடாது.

5- காலுறைகள் மீது தண்ணீரால் தடவுவதற்கு வரையறுக்கப்பட்ட காலம் உள்ளது. ஊரில் தங்குபவராக இருந்தால் ஒரு நாளும், பிரயாணியாக இருந்தால் மூன்று நாட்களும் இவ்வாறு செய்துகொள்ளலாம். தான் சுத்தமாக இருக்கும் நிலையில் காலுறை அணிந்து, முதல் முறையாக தண்ணீரால் தடவும் சந்தர்ப்பம் ஏற்படும் நேரத்தில் இருந்து 24 மணித்தியாளங்கள் ஊரில் தங்கியிருப்பவருக்கான காலமாகும். பிரயாணிக்கு அந்நேரத்தில் இருந்து 72 மணித்தியாளங்களாகும்.

பின்வரும் மூன்று காரணங்களால் காலுறையின் மீது தண்ணீரால் தடவும் முறை முறிந்துவிடும். அவையாவன:

1. குளிப்பை கடமையாக்கும் பெருந்தொடக்கு போன்றவை ஏற்பட்டால் காலுறையின் மீது தடவும் சட்டம் நீங்கிவிடும். அவர் குளித்துக்கொள்வது அவசியமாகும்.

2. தண்ணீரால் தடவியபின் தனக்கான காலம் முடிவதற்கு முன் காலுறையைக் கலட்டினால் அச்சட்டம் நீங்கிவிடும்.

3- வரையறுக்கப்பட்ட காலம் முடிந்த பின்னும் அச்சட்டம் நீங்கிவிடும்.

***

மூன்றாவது: பயணத்தில் தொழுகையை சுருக்கிக் கொள்வதற்கான சட்டங்கள் :

பயணத்தில் நான்கு ரக்அத் தொழுகையை பூரணமாக தொழுவதை விடவும் அதை இரண்டாக சுருக்கித் தொழுவது மிகவும் சிறந்தது. ஒருவர் தொழுகையை சுருக்காமல் தொழுதால் அவரின் தொழுகை சரியானதாகக் கருதப்படும் அதே வேளை, 'சிறந்தது' எனும் வழிமுறைக்கு மாற்றமானதாகவும் அது அமைந்துவிடும்.

பெரும்பான்மையான இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது கிராமத்தின் அல்லது நகரத்தின் அனைத்து கட்டிடங்களையும் கடந்து சென்றதன் பின் சுருக்கித் தொழும் சட்டம் அமுலாகும்.

தொழுகையின் நேரம் நுழைந்த பின் ஒருவர் பயணத்தை ஆரம்பித்தாலும் அவர் சுருக்கித் தொழ முடியும். ஏனெனில் அவர் தொழுகையின் நேரம் முடிவதற்குள் எல்லையைக் கடந்துவிட்டார்.

பயணம் செய்பவர் ளுஹர்-அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளை சுருக்கித் தொழுவது, அவசியமேற்படும் போது ஸுன்னத்தாகும். பயணத்தை நிறுத்தாமல் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இத்தொழுகைகளை தனது வசதிக்கு ஏற்பட்ட சேர்த்து முற்படுத்தியோ அல்லது சேர்த்து பிற்படுத்தியோ தொழுதுகொள்ள முடியும்.

அவசியமேற்படாவிட்டால் தொழுகைகளை சேர்த்து தொழாமல் இருக்க வேண்டும். உதாரணமாக, பயணம் செய்பவர் ஒரு இடத்தில் ஓய்வுக்காக இறங்கி, அடுத்த தொழுகை நேரம் வந்த பின்னரே அங்கிருந்து புறப்பட இருந்தால் அவருக்கு தொழுகைகளை சேர்த்து தொழ வேண்டிய அவசியம் கிடையாது. நபி ﷺ அவர்களும் தனது இறுதி ஹஜ்ஜின் போது மினாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் தொழுகைகளை சேர்த்துத் தொழவில்லை. ஏனெனில் அவருக்கு அவ்வாறு தொழ வேண்டிய தேவை ஏற்படவில்லை.

உபரியான தொழுகைகளைப் பொறுத்தவரை ஊரில் இருப்பவர் போன்றே பிரயாணியும் தொழுதுகொள்ளலாம். ழுஹாத் தொழுகை, இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை போன்ற உபரியான தொழுகைகளை பயணத்திலும் தொழ முடியும். ஆனால் கடமையான தொழுகைகளுக்கு முன்னும், பின்னும் தொழும் ராதிபான தொழுகைகளை பயணத்தில் தொழாமல் இருப்பது ஸுன்னத்தாகும்.

அவ்வாறே உபரியான தொழுகைகளை விமானம், மோட்டார் வாகனம், கப்பல் போன்ற தான் பயணம் செய்யும் வாகனத்தில், பயணம் செய்துகொண்டே தொழ முடியும். ஆனால் கடமையான தொழுகைகளை இயலாதவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வாகனத்திலிருந்து இறங்கியே தொழ வேண்டும்.

ஊரில் தங்கியிருப்பவர் தொழுகை நடாத்தினால் அவருக்குப் பின்னால் இருந்து பயணியும் தொழுதுகொள்ளலாம். அவரும் இமாமைப் போலவே முழுமையாகத் தொழுவார். அவர் தொழுகையை முழுமையாக அடைந்தாலும், ஒரு ரக்அத்தை அடைந்தாலும், அல்லது அதற்குக் குறைவாக அடைந்தாலும் சரியே! ஸலாமுக்கு முன்னர், இறுதி அத்தஹிய்யாத்தில் அவர் சேர்ந்தாலும் முழுமைப்படுத்தவே வேண்டும். இதுவே இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்துக்களில் மிகச் சரியானதாகும்.

***

நான்காவது: ஹஜ், உம்ரா அல்லது பயணத்திலிருந்து திரும்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

பயணம் முடிந்ததும் தேவையின்றி தங்காமல், அவசரமாக திரும்புவது அவசியமாகும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது உங்களில் ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்துவிடுகிறது. எனவே, ஒருவர் தமது தேவையை முடித்ததும் தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்லட்டும்." (27) (27) ஆதாரம்: புஹாரி 1804, முஸ்லிம் 1927.

பயணம் முடித்து வீடு திரும்பும் போது, தனது வாகனத்தில் ஏறியதும் பிரயாண துஆவை ஓதிக்கொள்ள வேண்டும். அதோடு சேர்த்து பின்வரும் துஆவையும் ஓத வேண்டும். آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ 'ஆயிபூன தாஇபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன்' (28) பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர்களாகவும், மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். (28) ஆதாரம் : புஹாரி 1797, முஸ்லிம் 1342.

நபி ﷺ அவர்கள் யுத்தம் முடித்து வரும் போது, அல்லது ஹஜ் உம்ரா முடித்து விட்டு வரும் போது பாதையின் மேடான பகுதியில் ஏறினால் 'அல்லாஹு அக்பர்' என மூன்று முறை கூறுவார்கள். எனவே பயணத்திலிருந்து திரும்பி வருபவரும் மேடான பகுதியில் தனது வாகனம் செல்லும் போது தக்பீர் கூறிக்கொள்வது விரும்பத்தக்கதாகும். பின்பு இவ்வாறும் கூறுவார்கள் : ا إِلَهَ إِلَّا اللهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، ‌آيِبُونَ، تَائِبُونَ، ‌عَابِدُونَ، سَاجِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீகலஹூ லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். ஆயிபூன தாஇபூன ஆபிதூன ஸாஜிதூன லிரப்பினா ஹாமிதூன். ஸதகல்லாஹு வஃதஹு வநஸர அப்தஹு வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு' (29) பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியன. அவனுக்கே புகழனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையோன். நாங்கள் பாவங்களிலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வழிபட்டவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம்பணிந்தவர்களாகவும் அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம். அல்லாஹ் தனது வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டுப் படையினரை தோற்கடித்துவிட்டான். (29) ஆதாரம்: புஹாரி 4116.

தன் ஊரைப் பார்த்தவுடன் பின்வருமாறு கூறுவது விரும்பத்தக்கது : آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ 'ஆயிபூன தாஇபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன்'. (30) பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர்களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். நபி ﷺ அவர்கள் செய்தது போல், தமது ஊரினுள் நுழையும் வரை இதனைத் தொடர்ந்து கூற வேண்டும். (30) ஆதாரம்: புஹாரி 1797 முஸ்லிம் 1342.

நீண்ட பயணம் முடித்து வீடு திரும்பும் போது, வீட்டில் உள்ளவர்களுக்கு தனது வருகையை கூறாமல் இரவில் வீடு திரும்புவது கூடாது. அவ்வாறு இரவில் வருவதாக இருந்தால் வீட்டினருக்கு அறிவித்துவிட்டே வர வேண்டும். ஏனெனில் அவ்வாறு செல்வதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், "(பயணத்திலிருந்து திரும்பும்போது) இரவு நேரத்தில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி ﷺ அவர்கள் தடுத்துள்ளார்கள்." (31) இதற்கான காரணம் வேறொரு ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (32) (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்" (33) மற்றொரு அறிவிப்பில், "(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தடைவிதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது)." (34) (31) ஆதாரம் : புஹாரி 1801, முஸ்லிம் 715. (32) தலைவிரிகோலமாக இருக்கும் பெண்கள்: நீண்ட நாட்கள் தலைக்கு எண்ணெய் வைக்காமலும், சீப்பினால் தலையை வாராமலும் இருக்கும் பெண்கள். சவரக்கத்தியைப் பயன்படுத்தல்: உடலிலுள்ள தேவையற்ற முடிகளை மழித்துக்கொள்ள சவரக்கத்தியைப் பயன்படுத்தல். கணவனைப் பிரிந்திருந்த பெண்: பயணம் காரணமாக நீண்ட நாட்கள் கனவனைப் பிரிந்து காத்திருந்த பெண். பார்க்க: அறிஞர் அஸ்பஹானி (ரஹ்) அவர்களின், 'அத்தஹ்ரீர் ஃபீ ஷரஹி ஸஹீஹில் முஸ்லிம்' எனும் நூல், பக்கம்: 292. (33) ஆதாரம்: நஸாஈ ஹதீஸ் என் : 9099 (34) ஆதாரம்: முஸ்லிம் 715.

பயணத்திலிருந்து திரும்பி வருபவர் நபி ﷺ அவர்கள் செய்தது போல், தனக்கு அருகிலுள்ள பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத்தக்கதாகும்.

பயணத்திலிருந்து திரும்புபவர் தன்னை வரவேற்கும் தனது வீட்டுக் குழந்தைகள், அண்டை வீட்டாரின் குழந்தைகள் ஆகியோருடன் நல்ல முறையில் நடந்துகொள்வது விரும்பத்தக்கதாகும். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "(மக்கா வெற்றியின்போது) நபி ﷺ அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம், அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் (அந்தச் சிறுவர்களில்) ஒருவரைத் தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் (தமது ஒட்டகத்தில்) அமர்த்திக் கொண்டார்கள்." அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "நபி ﷺ அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி (ஊருக்குள்) வரும்போது, (அவர்களுடைய குடும்பத்துச் சிறுவர்களான) நாங்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்போம். இவ்வாறு ஒரு முறை நானும் ஹசன் அல்லது ஹுசைன் ஆகியோரில் ஒருவரும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றபோது, எங்களில் ஒருவரைத் தமக்கு முன்பக்கத்திலும் மற்றொருவரைப் பின்பக்கத்திலும் தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள். நாங்கள் (மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தபடி) மதீனாவிற்குள் நுழைந்தோம்." (35) (35) ஆதாரம்: முஸ்லிம் 2428.

பயணத்திலிருந்து திரும்பியதும் வீட்டிலுள்ளவர்களுக்கும், ஏனையோருக்கும் அன்பளிப்புகள் வழங்குவது விரும்பத்தக்கதாகும். இவ்வாறு செய்வது உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, குரோதங்கள், பகைமை போன்றவற்றையும் நீக்கிவிடும். அவ்வாறு தமக்கு கிடைக்கும் அன்பளிப்புகளை மனதார ஏற்பதும், பதில் அன்பளிப்புக்கள் வழங்குவதும் விரும்பத்தக்கதாகும். மார்க்க காரணங்கள் இன்றி அவற்றை மறுப்பது கூடாது. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்திற்குரியவர்களாக ஆகுங்கள்" (36). பரிசுகள் வழங்கிக்கொள்வது முஸ்லிம்களுக்கு மத்தியில் அன்பு ஏற்படுவதற்கு காரணமாக அமையும். (36) ஆதாரம்: பைஹகி-சுனனுல் குப்ரா 11946.

பயணத்திலிருந்து திரும்புவர் தன்னை வரவேற்க, அல்லது சந்திக்க வருபவர்களோடு கைகுழுக்கி, கட்டியணைத்துக்கொள்வது விரும்பத்தக்கதாகும். நபித்தோழர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள். அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், "(நபித்தோழர்கள்) ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டால் கைகுழுக்கிக் கொள்வார்கள். பயணம் முடிந்து திரும்பி வந்தால் ஒருவரையொருவர் கட்டியணைப்பார்கள்" (37) (37) ஆதாரம் : தபரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் 97.

நபி ﷺ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் என்றென்றும் உண்டாவதாக.