الدروس المهمة لعامة الأمة
يهدف الكتاب إلى تعليم المسلمين أساسيات دينهم بطريقة مبسطة وشاملة. يتناول مجموعة من الدروس المهمة مثل قراءة الفاتحة وقصار السور، وأركان الإسلام والإيمان، وأقسام التوحيد والشرك، وشروط وأركان وواجبات الصلاة، بالإضافة إلى مبطلاتها، مع بيان مختصر لشروط الوضوء وفروضه ونواقضه. كما يسلط الضوء على التحلي بالأخلاق الإسلامية والآداب الشرعية، ويقدم إرشادات لطيفة حول تجهيز الميت والصلاة عليه ودفنه.
முஸ்லிம் சமூகம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடங்கள்
மதிப்பிற்குரிய பேரறிஞர் அஷ்ஷெய்க்
அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ்
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக
முன்னுரை
புகழனைத்தும் அனைத்துலக இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது. நல்ல முடிவு பயபக்தியுடயோருக்கேயாகும். அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான எங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அவனின் ஸலாத்தையும் ஸலாமையும் பொழிவானாக!
இவற்றுக்குப் பின்:
இந்நூலானது இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் பற்றி பேசும் ஒரு சுருக்கமான தொகுப்பாகும். இதற்கு (அத்துருஸுல் முஹிம்மா லிஆம்மதில் உம்மா) என்று பெயரிட்டுள்ளேன்
இதன் மூலம் முஸ்லிம்கள் அனைவருக்கும் பயனளிக்கும் படியும், இப்பணியை என்னிடமிருந்து ஏற்று நற்கூலி வழங்க வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். அவன் மாபெரும் கொடையாளான்.
மதிப்பிற்குரிய அஷ்ஷேய்க் அப்துல் அஸீஸ் ,இப்னு அப்தில்லாஹ் இப்னி பாஸ் (ரஹ்) அனைத்து முஸ்லிம் சமூகத்திற்குமான முக்கிய பாடங்கள் (1) (1) மார்க்கத் தீர்ப்புக்கள் மற்றும் கட்டுரைகள் தொகுப்பு (3/ 288- 298).
முதலாம் பாடம் ஸூறத்துல் பாத்திஹாவும் சிறிய ஸுறாக்களும்
ஸுறத்துல் பாத்திஹாவுடன் முடியுமான சிறிய ஸுறாக்களை அதாவது ஸூறத்துஸ் ஸல்ஸலா முதல் ஸூறத்துன் நாஸ் வரை சரியாக பார்த்து ஓதுவதற்கு கற்றுக்கொள்வதுடன் அவற்றை மனனமிட்டு அவற்றில் அவசியம் விளங்கிக் கொள்ளவேண்டியவற்றைப் பற்றி தெளிவு பெறுவதும் அவசியமாகும்.
இரண்டாம் பாடம் : இஸ்லாத்தின் ஜந்து தூண்கள்
இஸ்லாத்தின் ஐந்து தூண்கள், அவற்றுள் முதன்மையானதும் மகத்தானதும்: அல்லாஹ்வைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவதை, அதன் கருத்துக்களின் விளக்கத்துடனும், லாஇலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகளின் விளக்கத்துடனும் அறிதல். அதன் கருத்தாவது: (லாஇலாஹ) அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படக்கூடிய அனைத்தையும் நிராகரித்து, (இல்லல்லாஹ்) வணக்கத்தை இணையில்லா அல்லாஹ் ஒருவனுக்கே உறுதிப் படுத்துவதாகும். (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்பதன் நிபந்தனைகளாவன: அறியாமைக்கு மாற்றமான அறிவு, சந்தேகத்திற்கு மாற்றமான உறுதி, இணைவைப்பிற்கு மாற்றமான உளத்தூய்மை, பொய்க்கு மாற்றமான உண்மை, வெறுப்பிற்கு மாற்றமான நேசம், கைவிடுவதற்கு மாற்றமான கட்டுப்படுதல், மறுப்பதற்கு மாற்றமான ஏற்றுக்கொள்ளுதல், அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவற்றை நிராகரித்தல். இந்த நிபந்தனைகள் யாவற்றையும் பின்வரும் இரு கவிதை வரிகள் உள்ளடக்கியுள்ளன
அறிவுடன் அகத்திடமும் உளத்தூய்மையுமாம் அன்பு கொண்டு உண்மைப்படுத்தி அதற்குள் அடங்கி ஏற்று வாழலுமாம் அல்லாஹ்வை அன்றி வணங்குபடுவற்றை நிராகரித்து வாழ்வது இவைகளுள் எட்டாவதாம்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறல் என்பது, அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துவது, அவர்கள் கட்டளையிட்டவைகளுக்கு கட்டுப்படுவது, அவர்கள் தடுத்தவைகளை தவிர்ந்து நடப்பது, அல்லாஹ்வும் அவனின் தூதரும் மார்க்கமாக காட்டித் தந்ததன் அடிப்படையில் அல்லாஹ்வை வணங்குவது போன்ற விடயங்களை வேண்டி நிற்கிறது. இதனைத் தொடர்ந்து இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் எஞ்சிய ஏனைய கடமைகளான தொழுகை, ஸகாத், ரமழான் மாத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ளவர் ஹஜ் செய்வது போன்ற விடயங்களை இஸ்லாத்தைக்கற்றுக்கொள்வோருக்கு தெளிவுபடுத்தல் வேண்டும்.
மூன்றாம் பாடம் :அர்கானுல் ஈமான் (இறைவிசுவாசத்தின் அடிப்படைகள்)
'அர்கானுல் ஈமான்' (இறைவிசுவாசத்தின் அடிப்படைகள்); ஆறு அவையான : அல்லாஹ்வையும் அவனின் மலக்குகளையும், வேதங்களையும், தூதர்களையும்;, நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது என்பதையும் விசுவாசிப்பதாகும்.
நான்காம் பாடம் : தவ்ஹீதின் (ஏகத்துவத்தின்) வகைகளும் மற்றும்; ஷிர்கின் (இணைவைப்பின்) வகைகளும்
தவ்ஹீதின் வகைகள் மூன்றாகும். அவையாவன: தவ்ஹீதுர் ருபூபிய்யா, தவ்ஹீதுல் உலூஹிய்யா, தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத் என்பவைகளாகும். அவைபற்றிய விபரம் பின்வருமாறு :
1- தவ்ஹீதுர் ருபூபிய்யா: என்பது அல்லாஹ்வே அனைத்தையும் படைத்து, அனைத்தையும் வழிநடாத்துபவன், இதில் அவனுக்கு இணையாக எவரும் இல்லை என்பதை விசுவாசம் கொள்வதாகும்.
2- தவ்ஹீதுல் உலூஹிய்யா: என்பது அல்லாஹ் மாத்திரமே உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் என்றும், அவனுக்கு அதில் இணை இல்லை என்பதையும் விசுவாசம் (ஈமான்) கொள்வதாகும். இதுவே 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்பதன் கருத்தாகும். அதன் அர்த்தமாவது: அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப் படக்கூடியவன் வேறு யாருமில்லை. ஆகவே, தொழுகை, நோன்பு போன்ற அனைத்து வணக்கங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தூய்மையாகச் செய்யப்பட வேண்டும்; அவற்றில் எதனையும் அவனல்லாத வேறு எவருக்கும் செய்வது கூடாது.
3- தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிஃபாத்: இது அல்குர்ஆன் கரீமிலும், அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலும் வந்துள்ள அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் ஈமான் கொள்வதாகும். பின்வரும் அல்லாஹ்வின் கூற்றுக்கு அமைவாக, அவற்றின் கருத்துக்களை மாற்றி திரிவு படுத்தாமலும், இல்லையென்று மறுக்காமலும், அமைப்பைப் கூறாமலும், உவமைப் படுத்தாமலும் அவனுக்கே உரிய முறையில் அதனை உறுதிப் படுத்துவதையே குறிக்கும். (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான். (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவருக்கும்) பிறக்கவுமில்லை. (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை. (ஸூறத்துல் இஹ்லாஸ்: 1-4 மேலும் அல்லாஹ்கூறுகிறான் "அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்". (அஷ்ஷூரா :11) சில அறிஞர்கள் தவ்ஹீதின் வகைகளை இரண்டாகக் குறிப்பிட்டு தவ்ஹீதுத் ருபூபிய்யாவினுள் தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாதையும் உள்ளடக்கியுள்ளனர். இதில் எவ்விதப்பிர்சினையும் கிடையாது. ஏனெனில் அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட இரு பிரிவுகளின் நோக்கம் தெளிவானதாகும்.
இணைவைத்தல் மூன்று வகைப்படும்ز அவையாவன : பெரிய இணைவைப்பு, சிறிய இணைவைப்பு, மறைமுக இணைவைப்பு என்பவைகளாகும்
பெரிய இணைவைப்பானது நல்லறங்களை அழித்து (இல்லாமல் செய்து) அதன் மீது மரணித்தவருக்கு நிரந்தர நரகத்தை கட்டாயப்படுத்திவிடும். அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான் : உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறியுள்ளது போல (( அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நல்ல)வைகள் அவர்களைவிட்டும் அழிந்து பயனற்றுப் போய்விடும் (அல் அன்ஆம் : 88) மேலும் இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தான் என்று (பகிரங்கமாக) கூறிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கி விடுவார்கள். (அத்தவ்பா 17) மேலும் யார் இணைவைத்த நிலையில் மரணித்துவிடுகிறானோ அவனது பாவம் மன்னிக்கப்படமாட்டாது, அவனுக்கு சுவர்க்கம் ஹராமாகி விட்டது அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். அது தவிரவுள்ள ஏனையவற்றை தான் நாடியோருக்கு மன்னிப்பான்". ( அந்நிஸா : 48) மேலும் இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். இன்னும் அவருடைய தங்குமிடம் நரகம்தான். இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை. (அல்மாஇதா 72)
மரணித்தவர்களிடமும், சிலைகளிடமும் பிரார்த்திப்பதும் அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவதும், அவர்களுக்கு நேர்ச்சைச் செய்வதும், அவர்களுக்கு அறுத்துப் பலியிடுவதும் மற்றும் இவை போன்ற செயற்பாடுகள் அனைத்தும் பெரிய இணைவைப்பின் (அஷ்ஷிர்குல் அக்பர்) வகையை சார்ந்ததாகும்.
சிறிய இணைவைப்பு என்பது அல் குர்ஆன் அல்லது அஸ்ஸுன்னாவின் ஆதாரங்களில் இணைவைப்பு என்ற பெயரில் குறிப்பிடபட்டு வந்திருக்கும் செயல்களாகும். என்றாலும் அவை பெரிய இணைவைப்பைச் சார்ந்தவைகள் அல்ல. உதாரணத்திற்கு சில நற்காரியங்களை முகஸ்துதிக்காக செய்வது, அல்லாஹ் அல்லாதவற்றில் சத்தியம் செய்வது, அல்லாஹ்வும் இன்னாரும் நாடிவிட்டான் என்று சேர்த்துக் கூறுவது மற்றும் இது போன்றவைகளும் இதற்கு உதாரணங்களாகும். நபியவர்கள் இது குறித்து பின்வறுமாறு குறிப்பிடுகிறார்கள்: ((நான் உங்களிடம் மிக அதிகம் பயப்படுவதெல்லாம் சிறிய (ஷிர்க்) இணைவைத்தலையாகும். (8) அது குறித்து நபியவர்களிடம் வினவப்பட்ட போது அவர்கள்( முகஸ்துதி) என நபியவர்கள் பதிலளி;த்தார்கள். (2) இந்த ஹதீஸை இமாம் அஹ்மதும் தபரானியும் பைஹகியும் மஹ்மூத் இப்னு லபீத் அல் அன்ஸாரி அவர்களின் வாயிலாக தரமான அறிவிப்பாளர் தொடர் மூலம் பதிவு செய்துள்ளார்கள். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ராபிஃ இப்னு கதீஜும் அவர்களிடமிருந்து மஹ்மூத் இப்னு லபீத் என்ற ஸஹாபி மூலம் மிகத் தரமான அறிவிப்பாளர் தொடரினால் இமாம் தபரானி அவர்கள் பதிவு செய்துள்ளார். (2) இதனை இமாம் அஹ்மத் (5/428), தபரானி அவர்கள் அல்கபீர் (4/338) லும், பைஹகீ அவர்கள் அஷ்ஷுஃஅப் (14/355) லும் பதிவு செய்துள்ளனர். மஜ்மஉஸ் ஸவாயித் (1/121) ல், இதனை அஹ்மத் பதிவு செய்துள்ளதாகவும், இதன் அறிவிப்பாளர்கள் ஸஹீஹ் நூற்களின் அறிவிப்பாளர்கள் ஆவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : 'யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்'[3] இமாம் அஹ்மத் அவர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் மூலம் உமரிப்னுல் கத்தாப் (ரழி)அவர்களின் ஹதீஸாக இதனைப் பதிவுசெய்துள்ளார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், அபூதாவூதும் திர்மிதியும் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் மூலம் பதிவு செய்துள்ளனர். 'அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்'. [4] நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னாரும் நாடினார் என்று கூறுங்கள்". [5] ஹுதைபதுப்னுல் யமான் (ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் இந்த ஹதீஸை அபூதாவூத் அவர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் மூலம் பதிவு செய்துள்ளார். (3) இமாம் அஹ்மத் (1/ 47) இதனைப் பதிவு செய்துள்ளார்கள். (4) அபூ தாவூத் ஹதீஸ் எண் 3251, திர்மிதி ஹதீஸ் எண் 1535. (5) அபூ தாவூத் ஹதீஸ் எண் 4980, அஹ்மத் (5/384).
இவ்வகை ஷிர்கானது மதம்மாறிவிடுதல், நரகத்தில் நிரந்தரமாக தங்கிவிடுதல் போன்றவற்றை ஏற்படுத்தமாட்டாது. மாறாக இது அடிப்படையில் இருக்க வேண்டிய ஏகத்துவத்தின் (தவ்ஹீத்) பரிபூரணதன்மைக்கு முரணானது.
மூன்றாம் வகை: மறைவான இணைவைப்பு இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக அமைகிறது: (மஸீஹுத் தஜ்ஜாலைவிட உங்களின் மீது நான் மிகவும் பயப்படும் ஒரு விடயத்தை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்ட போது அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அறி வித்துத் தாருங்கள் என்று கூறினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அது மறைவான ஷிர்க் (இணைவைத்தல்) அதாவது, ஒரு மனிதர் எழுந்து தொழுதுகொண்டிருக்கும் போது, தன்னை ஒருவன் பார்க்கிறான் என்பதற்காக அவன் தனது தொழுகையை அழகாகச் செய்கிறான் எனக் கூறினார்கள்.))(6) இமாம் அஹ்மத் அவர்கள் தனது முஸ்னதில் அபூஸஈத் அல் குத்ரி (ரழி)அவர்களின் ஹதீஸாக பதிவு செய்துள்ளார் (6) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 4204 லும், அஹ்மதில் பாகம் 3 பக்கம் 30 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(இணைவைத்தலை) ஷிர்க்கை இருவகையாக மாத்திரம் பெரியது சிறியது எனப்பிரிப்பதும் ஆகுமாகும்.
ஆனால் மறைமுகமான ஷிர்க்கை பொறுத்தவரை இவ்விரண்டையும் உள்ளடக்கிக்கொள்கிறது. எனவே இம்மறைமுகமான ஷிர்க் சில வேளைகளில் முனாஃபிக்குகளின் ஷிர்க்கைப் போன்று பெரிய ஷிர்க்கில் இடம்பெற்றுவிடுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களின் தவறான நம்பிக்கைகளை (கொள்கைகளை) மறைத்து வைத்துக்கொண்டு, முகஸ்துதிக் காகவும், தங்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற பயத்திற்காகவும் முஸ்லிம் போல் நடிக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட மஹ்மூத் இப்னு லபீத் அல் அன்ஸாரி (ரழி), மற்றும் அபூஸஈத் (ரழி) அவர்களின் மூலமாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களில் வருவதுபோல் சில வேளை இது -முகஸ்துதியைப் போல- சிறிய ஷிர்க்கிலும் இடம்பெற்று விடும். ஈடேற்றத்தை வழங்க அல்லாஹ்வே பொறுப்பாளன்.
ஐந்தாம் பாடம் : அல் இஹ்ஸான்
இஹ்ஸான் என்பதன் அடிப்படை : நீ அல்லாஹ்வை பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதாகும்
ஆறாம் பாடம் : தொழுகையின் நிபந்தனைகள்
அவைகள் (9) ஒன்பதாகும்
1- இஸ்லாம், (முஸ்லிமாய் இருத்தல் ) 2- புத்திசுவாதீனம் (புத்திசுவாதீனமானவராக இருத்தல்) 3- (நல்லதையும் கெட்டதையும்) பகுத்தறியும் நிலையை அடைந்திருத்தல், 4- தொடக்கை நீக்குதல், 5- அசுத்தத்தை அகற்றுதல், 6- அவ்ரத்தை (உடலில் கட்டாயம் மறைக்கவேண்டிய பகுதியை) மறைத்தல், 7-தொழுகைக்கான நேரத்தை அடைந்திருத்தல்;, 8-கிப்லாவை முன்னோக்குதல், 9-நிய்யத் (மனதால் நினைத்தல்)
ஏழாம் பாடம் : தொழுகையின் கடமைகள் (ருக்ன்கள்)
இவை பதினான்கு (14) ஆகும். அவையான :
1-சக்தியுள்ளவர் நின்று தொழுதல், 2-அல்லாஹு அக்பர் என்று இஹ்ராம் தக்பீர் (ஆரம்பத்தக்பீர்) கூறுதல், 3-ஸூறத்துல் பாத்திஹா ஓதுதல், 4-ருகூஉ செய்தல், 5-ருகூஉக்குப் பின் நிலைக்கு வந்து நேராக நிற்றல், 6-ஏழு உறுப்புக்களின் மீது ஸுஜுத் செய்தல், 7-அதிலிருந்தும் எழும்புதல், 8-இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்தல், 9-எல்லாச் செயல்களிலும் அவசரமின்றி நிதானம் பேணல், 10-தொழுகையின் ருக்ன்களை(கடமைகளை) ஒழுங்கு முறைப்படி செய்தல், 11-கடைசி அத்தஹிய்யாத் ஓதுதல், 12-அதற்காக உட்காருதல், 13- அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் கூறுதல், 14-இரு ஸலாம் கூறுதல் ஆகியவைகளாகும்.
எட்டாம் பாடம்:தொழுகையின் வாஜிப்கள்
அவைகள் எட்டாகும் (8)
1-இஹ்ராம் (ஆரம்ப) தக்பீர் தவிர ஏனைய எல்லா தக்பீர்களும், 2- இமாமும், தனித்துத் தொழுபவர்களும் (ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்) எனக் கூறுதல் (பொருள் : தன்னைப் புகழ்பவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்து அங்கீகரித்தான்.) 3-அனைவரும் ( இமாம், மஃமூம்,தனித்துத் தொழுபவர்) (ரப்பனா வலகல் ஹம்து) எனக் கூறுதல், 4- ருகூஇல் (சுப்ஹான ரப்பியல் அழீம்) எனக் கூறுதல் (பொருள் : மகத்துவமிக்க என் இரட்சகனைத் தூயவன் எனத் துதிசெய்கிறேன்) , 5-சுஜூதில் (சுப்ஹான ரப்பியல் அஃலா ) எனக் கூறுதல் (பொருள் :உயர்ந்தோனாகிய என் இரட்சகனைத் தூயவன் எனத் துதிசெய்கிறேன்) , 6-இரு ஸஜ்தாக்களுக்கிடையே (ரப்பிக்ஃபிர்லீ) எனக் கூறுதல் (பொருள்) எனதிரட்சகனே எனக்கு மன்னிப்பளிப்பாயாக!), 7-முதல் அத்தஹிய்யாத்து ஓதுதல், 8-அதற்காக அமர்தல் ஆகியவைகளாகும்.
ஒன்பதாம் பாடம் : தஷஹ்ஹுதின் (அத்தஹிய்யாத்தின்) விபரம்
அதனை இவ்வாறு கூறுவார் :
அத்தஹியாது லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. பொருள் : ((காணிக்கைகளும், தொழுகைகளும் (வணக்கங்களும்), நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன.நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் கருணையும் அருட்பேறும் உண்டாகட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாவதாக! உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதியாக ஏற்று சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக ஏற்று சாட்சி கூறுகிறேன்.
பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது ஸலாவாத்துக் கூறி, அவர்களுக்கு அருள்வளம் வேண்டி, ஸலவாத்தை இவ்வாறு கூறுவார்: 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்' ((யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது அருள் புரிந்தது போல், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர் மீதும் அருள்புரிவாயாக. நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன் )) யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மீதும்; அவரின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும் செழிப்பையும் அள்ளிப் பொழிந்தது போல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும செழிப்பையும் பொழிவாயாக! நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன் )) (77)
ஸலவாத் ஓதியதன் பின்பு கடைசி (தஷஹ்ஹுத்) அத்தஹிய்யாத்தில் நரகின் தீங்கை விட்டும். மண்ணறையின் தீங்கை விட்டும், வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பங்களை விட்டும். தஜ்ஜாலின் குழப்பங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். பின்பு தான் விரும்பியதை கேட்கலாம். என்றாலும் குறிப்பாக நபிமொழியில் வந்திருக்கின்ற துஆக்களைக் கேட்பது சிறந்தது. பின்வரும் துஆ நபி மொழியில் இடம்பெற்ற துஆக்களில் உள்ளதாகும்
அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னி இபாததிக. (யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வாயாக). அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த, ஃபக்ஃபிர்லீ மஃக்ஃபிரதன் மின் இன்திக வர்ஹம்னீ இன்னக அன்தல் கஃபூருர் ரஹீம் (யாஅல்லாஹ்! நானே எனக்கு மிக அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர எனது பாவங்களை மன்னிக்க வேறு யாருமில்லை. ஆகவே உன் பேரருளால் என்னை மன்னித்து கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீயே மிகப் பெரும் மன்னிப்பாளனாயும் கருணையாளனுமாய் உள்ளாய்)!
முதலாம் தஷஹ்ஹுதைப் பொருத்தவரை லுஹர் அஸர் மஃரிப் இஷா போன்ற தொழுகைகளில் அத்தஹிய்யாத்தில் வந்துள்ள இரண்டு ஷஹாதத்தையும் ஓதி முடிந்ததும் மூன்றாவது ரக்அத்திற்காக எழும்ப வேணடும். இதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மீது ஸலவாத் கூறுவது பொதுவாக வந்துள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் மிகவும் சிறப்புக்குறியது அவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மீது ஸலவாத் கூறிவிட்டு அதன் பின் மூன்றாம் ரக்அத்திற்காக எழுவார்.
பத்தாம் பாடம் : தொழுகையின் ஸுன்னத்துக்கள்
அவற்றுள் :
1-ஆரம்ப தக்பீர் கூறியதும் ஆரம்பமாக ஓதும் துஆ
2- ருகூவிற்கு முன்னரும் பின்னருமான நிலையின் போது, இடது மணிக்கட்டின் மீது வலது கையினை வைத்து அதனை நெஞ்சின் மீது வைத்துக் கொள்ளுதல்.
3- இரு தோள் புயங்களுக்கு அல்லது இரு காதுகளுக்கு நேராக-இரு கைகளையும் அதன் விரல்களை சேர்த்து நீட்டி வைத்து உயர்த்துதல், இதனை ஆரம்ப (இஹ்ராம்) தக்பீர் கூறும் போதும், ருகூவுக்குச் செல்லும் போதும். அதிலிருந்து எழும்போதும், முதல் அத்தஹிய்யாத்திலிருந்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும்போதும் செய்தல்.
4- ருகூஃ மற்றும் ஸுஜூதின் தஸ்பீஹை ஒரு முறைக்கு மேல் அதிகமாக கூறுதல்.
5- ருகூஃவிலிருந்து எழுந்தன் பின் 'ரப்பனா வலகல் ஹம்த் ' என்பதுடன் சேர்த்து வந்துள்ள தஸ்பீஹை மேலதிகமாக ஓதுதல். மேலும் இரு ஸுஜூதிற்கிடையே 'ரப்பிஃ பிர்லீ' எனக்கூறுவதை ஒரு முறைக்கு மேல் மேலதிகமாகக் கூறுதல்.
6- ருகூஃவில் முதுகுக்கு சமமாக தலையை வைத்தல்
7- ஸுஜூதில் இரு தோள்பட்டைகளை இரு விலாப்புறங்களைவிட்டு அகற்றியும், வயிற்றைத் தொடைகளை விட்டு அகற்றியும், இரு கெண்டைகால்பகுதிகளை விட்டும் இரு தொடைகளையும் அகற்றிவைத்தல்.
8- ஸுஜூது செய்யும் போது இரு முழங்கைகளையும் நிலத்தில் படாதாவாறு உயர்த்தி வைத்தல்.
9- முதலாம் அத்தஹிய்யாத்தின் இருப்பிலும் இரு ஸுஜூதுகளுக்கிடையிலும் வலது காலை நட்டி இடது காலின் மீது அமர்ந்து கொள்ளல். (இப்திராஷ் இருப்பு)
10- மூன்று மற்றும் நான்கு ரக்அத் தொழுகைளில் கடைசி இருப்பில் 'தவர்ருக்'கென்னும் அமைப்பில் அமர வேண்டும், தவர்ருக்கென்பது இடது காலை வலது காலின் உட்பக்கம் செலுத்தி தனது பின்புறத்தை நிலத்தில் வைத்து வலது காலினை நட்டிவைத்து உட்கார்ந்து கொள்வதாகும்.
11- முதலாம் இரண்டாம் அத்தஹிய்யாத்திற்காக அமர்ந்தது முதல் அத்தஹிய்யாத்தின் இறுதி வரை ஆள்காட்டி விரலினால் சைக்கினை செய்வதும் துஆவின் போது விரலை அசைத்தலும்
12- முதலாம் அத்தஹிய்யாத்தில் நபிகளார் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் இப்ராஹீம் (அலை) மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்துக் கூறி பரகத் (அருள்) வேண்டி பிரார்த்தித்தல்
13- கடைசி அத்தஹிய்யாத்தில் துஆ இறைஞ்சுதல்
14- பஜ்ர் தொழுகை ஜும்ஆத் தொழுகை இரு பெருநாட்கள் தொழுகை, மழைவேண்டித் தொழும் தொழுகை மஃரிப் மற்றும் இஷாவின் முதலிரண்டு ரக்அத்களிலும் சப்தமாக ஓதுதல்.
15-லுஹர் அஸ்ர் தொழுகைகளிலும் மற்றும் மஃரிப் தொழுகையில் மூன்றாம் ரக்அத், இஷாவின் கடைசி இரண்டு ரக்அத்கள் ஆகியவற்றில் சப்தமில்லாமல் ஓதுதல்
16- தொழுகையின் ஏனைய ஸுன்னாக்களை கருத்திற் கொள்வதுடன் ஸூறத்துல் பாதிஹாவுடன் மேலதிகமாக குர்ஆனிலிருந்து ஸூறா ஒன்றை ஓதுதல். மேலும் ருகூஃவிலிருந்து எழும்பியதன் பின் 'ரப்பனா வலகல் ஹம்து' என்பதற்கு மேலதிகமாக வந்துள்ள துஆக்களில் ஒன்றை இமாம் மஃமூம் தனித்துத் தொழுபவர் கூறுவது ஸுன்னத்தாகும். மேலும் ருகூவின் போது முழங்கால் மீது கைவிரல்களை சேர்த்துவைக்காது விரித்து வைத்தலும் இவற்றுள் உள்ளடங்குகின்ற விடயமாகும்
பதினொன்றாவது பாடம் : தொழுகையை முறிக்கும் விடயங்கள்
அவைகள் எட்டாகும் (8)
1- சுயநினைவுடனும், அறிந்த நிலையிலும் வேணுமென்றே பேசுவதினால் தொழுகை முறிந்து விடும். ஆனால் மறந்து அல்லது அறியாது பேசினால் தொழுகை முறிந்து விடமாட்டாது
2- சிரித்தல்
3- உண்ணுதல்
4 -பருகுதல்
5- 'அவ்ரத்' (உடலில் கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள்) வெளிப்படுதல்
6- கிப்லா திசையை விட்டும் அதிகம் திரும்பியிருத்தல்
7- தொழுகையில் தேவையற்ற செயல்களை தொடராக அதிகம் செய்தல்.
8- வுழு முறிந்துவிடுதல்
பன்னிரண்டாவது பாடம் : வுழூவின் நிபந்தனைகள்
அவை 10 ஆகும் :
1-முஸ்லிமாக இருத்தல் 2 -புத்திசுவாதீனமானவராக இருத்தல் 3-பகுத்தறிவுள்ளவராக இருத்தல் 4 - நிய்யத் (மனதால் நினைத்தல்) 5-வுழுச் செய்து முடிக்கும் வரையில் நிய்யத்தை முறித்திடாத முறையில் அதன் சட்டம் பேணுதல். (அதாவது வுழுச்செய்ய ஆரம்பித்தது முதல் இறுதி வரையில் வுழுச்செய்யும் எண்ணத்துடன் இருத்தல்) 6-வுழுவை கடமையாக்கும் காரியமான மல சலம் போன்ற ஏதும் ஏற்படாதிருத்தல்(அவ்வாறு ஏற்பட்டால் ) வுழுவுக்கு முன் நீரினாலோ, அல்லது கற்களாலோ சுத்தம் செய்திருத்தல் 8 – சுத்தம் செய்யும் பொருள் சுத்தமானதாகவும் அனுமதிக்கப்பட்டதாகவும் இருத்தல். 9-வுழுவுடைய உறுப்புகளில் தண்ணீரைச் சேரவிடாது தடுக்கும் பொருள் இல்லாதிருத்தல். 10 - எப்போதும் வுழு முறிந்து விடுபவர் வுழுச் செய்வதாயிருந்தால் தொழுகைக்கான நேரம் நுழைந்திருத்தல்
பதின்மூன்றாவது பாடம்: வுழுவின் ஃபர்ழுகள் ஆறு
அவை ஆறு ஆகும்.
முகத்தைக் கழுவுதல், மேலும் வாய் கொப்பளித்தலும் நாசுக்குத் தண்ணீர் செலுத்துவதும் அதில் அடங்கும், இரு கைகளையும் முழங்கை உட்படக் கழுவுதல், தலையை முழுமையாக மஸ்ஹ் செய்தல், இதில் இரு காதுகளும் அடங்கும், கரண்டைக்கால் உட்பட இரு கால்களையும் கழுவுதல், ஒழுங்கு முறைப்படி செய்தல், தொடராகச் செய்தல். முகத்தையும், இரு கைகளையும், இரு கால்களையும் மும்முறை கழுவுவது முஸ்தஹப்பாகும். இது போன்றே வாய்க் கொப்பளிப்பதையும், நாசுக்குத் தண்ணீர் செலுத்துவதையும் மும்முறை செய்வதும் முஸ்தஹப்பாகும். எனினும், ஒருமுறை கழுவுவதே பர்ழாகும் (கடமையாகும்). என்றாலும் தலையை மஸ்ஹ் செய்தலைப் பொறுத்தவரை ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் வந்துள்ளது போல் பல தடவைகள் செய்யாது ஒரு தடவை மாத்திரமே மஸ்ஹ் செய்தல் வேண்டும்.
பதிமூன்றாம் பாடம் : வுழுவை முறிக்கும் காரியங்கள்
அவை ஆறு ஆகும்.
1-முன் பின் துவாரங்களில் இருந்து ஏதேனும் வெளிப்படுதல்.2-உடலிலிருந்து அருவருக்கத்தக்க ஏதேனும் அசுத்தம் வெளியாகுதல்.3-தூக்கத்தினாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களினாலோ புத்தி நீங்குதல். 4-திரையின்றி முன் அல்லது பின் துவாரத்தைக் கையால் தொடுதல.5-ஓட்டக இறைச்சி உண்ணுதல். 6-இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுதல் எம்மையும் ஏனைய முஸ்லிம்களையும் இந்நிலையை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக
முக்கியக் குறிப்பு : தகுந்த ஆதரங்கள் இல்லாமையின் காரணமாக மைய்யித்தை குளிப்பாட்டுவதால் வுழு முறிந்துவிடாது என்பது தான் அதிகமான அறிஞர்களின் நிலைப்பாடாகும். எனினும் குளிப்பாட்டுபவரின் கை, மைய்யித்தின் (ஜனாஸாவின்) மறைவிடத்தில் திரையிறின்றி பட்டுவிட்டால் அவர் மீண்டும் வுழுச் செய்வது அவசியமாகும்
ஆகவே குளிப்பாட்டுபவர் திரையுடன் மறைவிடத்தைத் தொடுவது அவசியமாகும் (கடமையாகும்). இவ்வாறுதான், பொதுவாக ஒருவர் ஒரு பெண்ணை இச்சையுடன் தொடுவதும்;, இசசையின்றித் தொடுவதும் அதாவது -ஏதும் வெளியாகாத வரை- வுழுவை முறிக்காது என்பதே அறிஞர்களின் கூற்றுக்களில் மிகச் சரியான நிலைப்பாடாகும். ஏனெனில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தமது மனைவியரில் சிலரை முத்தமிட்ட பின்பு வுழுச் செய்யாமலேயே தொழுதுள்ளார்கள்.
அல்குர்ஆனில் ஸூறத்துன்னிஸா,மற்றும் அல் மாஇதா என்ற இரு அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ள அல்லது, நீங்கள் பெண்களுடன் உறவுகொண்டால் (அந்நிஸா: 43) (அல்மாஇதா: 06) என்ற வசனத்தின் கருத்து 'தாம்பத்தியத்தில் ஈடுபடுதல்' என்பதாகும். இதுவே அறிஞர்களின் கூற்றுக்களில் மிகச்சரியான நிலைப்பாடாகும். மேலும் இதுவே இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா மற்றும் முன்னோர்களான ஸலபுகள் பின்வந்த அறிஞர்களில் ஒரு குழாமினதும் கூற்றுமாகும் எந்த விடயங்களிலும் நல்லதை தெரிவு செய்து ஈடேற்றத்தை அடைந்து கொள்ள உதவியாளனாய் அல்லாஹ்வே உள்ளான்
பதினைந்தாவது பாடம் : ஒவ்வொரு முஸ்லிமும் நற்குணங்களால் தம்மை அழகுபடுத்திக்கொள்ளல்
அவ்வாறான நற்குணங்களில் சில : உண்மை பேசுதல், அமானிதம் பேணுதல், (நம்பகத்தன்மை) கற்பொழுக்கம், வெட்கம், வீரம், தயாள குணம், நேர்மை, அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் முற்றாக விலகி நடத்தல், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல், தனது இயலுமை சக்திக்கேட்ப தேவையுள்ளோருக்கு உதவி செய்தல். மேலும் இவையல்லாத அல் குர்ஆனும், ஸுன்னாவும் (நபி வழிமுறையும்) காட்டித்தந்துள்ள முறையான நற்குணங்கள் யாவும் இதில் உள்ளடங்குபவையாகும்.
இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை கடைபிடித்து ஓழுகுதல்
ஸலாம் கூறுதல், முகமலர்ச்சியோடு இருத்தல், வலது கையால் சாப்பிடுதலும்;குடித்தலும், சாப்பிடவும் குடிக்கவும் ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ' கூறுதல், சாப்பிட்;ட பிறகும் பாணம் அருந்தியதன் பின்னரும் 'அல்ஹம்து லில்லாஹ கூறுதல், தும்மிய பின் 'அல் ஹம்து லில்லாஹ'; கூறுதல், அதைக் கேட்பவர் 'யர்ஹமுக்கல்லாஹ்' என்று கூறுதல்,( யர்ஹமுக்கல்லாஹ்' என்று கூறியவருக்கு தும்மியவர் யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹுபாலகும் ' என்று கூறுதல்) நோயாளியை நோய் விசாரித்தல் ஜனாஸாத் தொழுகை தொழுவதற்காகவும், அடக்கம் செய்வதற்காகவும் ஜனாஸாவைத் பின்பற்றிச் செல்லுதல்,பள்ளிவாசல் வீடு போன்ற இடங்களில் நுழையும்போதும் வெளியேறும் போதும் மார்க்க ஒழுக்கம் பேணி நடத்தல், பயணத்தின் ஒழுக்கங்களைப் பேணுதல், பெற்றோர் உறவினர்கள், அண்டை வீட்டார் சிறியவர், பெரியவர் ஆகிய அனைவரிடமும் மார்கக ஒழுக்கங்கங்களை பேணி நடந்து கொள்ளுதல், ஒருவருக்கு குழந்தை கிடைத்த செய்தி கிடைத்தால் குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்துத் தெரிவித்தல் புதிதாக திருமணபந்தத்தில் இணைந்தோருக்கு பரக்கத் வேண்டி துஆச்செய்தல் சோதனை ஏற்பட்டவருக்கு ஆறுதல்கூறுதல். மேலும் இஸ்லாம் கற்றுத் தந்துள்ள ஒழுங்கில்; ஆடை அணிதல் களைதல்,செருப்பணிதல் போன்றவையும் இஸ்லாமிய ஓழுக்க நெறிகளுள் உள்ள விடயங்களாகும்
இணைவைத்தல் மற்றும் எல்லா வகையான பாவகாரியங்களை விட்டும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுதல்
அவ்வாறான பாவமான காரியங்களுள் மனிதனை அழித்து விடக்கூடிய ஏழு பெரும்பாவங்கள் பிரதானமானவை. அவை பின்வருமாறு : அல்லாஹ்விற்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், உரிய காரணமின்றி அல்லாஹ் ஹராமாக்கிய ஒரு உயிரைக் கொலை செய்தல், வட்டியை சாப்பிடுதல், அநாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர் நடந்து கொண்டிருக்கும் போது போர்களத்திலிருந்து புறமுதுகாட்டி ஓடுதல், இறைநம்பிக்கையுள்ள, கற்பொழுக்கம் நிறைந்த பெண்கள் மீது அவதூறு கூறுதல்.
மேலும் பெற்றோருக்கு நோவினை செய்தல், இரத்த உறவை துண்டித்து நடத்தல், பொய் சாட்சி கூறுதல், பொய்ச் சத்தியம், அண்டை வீட்டாரைத் துன்புறுத்துதல், மக்களின் உயிர்கள்,உடமைகள்,மானம் போன்றவற்றில் அநியாயமாக நடந்து கொள்ளுதல், போதை பொருள் பாவனை, சூதாட்டத்தில் ஈடுபடுதல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் போன்ற அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் தடுத்துள்ள எல்லாக் காரியங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
பதினெட்டாம் பாடம் : மரணித்தவருக்கு தொழுகை நடாத்தி அடக்கம் செய்யவதற்கான முன் ஏற்பாடுகள் செய்தல்
இது குறித்த விபரம் பின்வருமாறு :
முதலாவதாக: மரணப் படுக்கையில் இருப்பவருக்கு 'லாஇலாக இல்லல்லாஹ்' என்ற ஏகத்துவக் கலிமாவை சொல்லிக் கொடுப்பது மார்க்கமாக்கப் பட்டுள்ளது; இது குறித்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்: (மரணத்தருவாயில் இருப்போருக்கு லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவக்;கலிமாவை சொல்லிக்கொடுங்கள்.') (7) முஸ்லிம் தனது ஸஹீஹில் பதிவு செய்துள்ளார். ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'அல் மவ்தா' என்பதன் கருத்து , மரண நேரத்தை அடைந்தவர் (ஸகராத் நிலையில் உள்ளோர்) அதாவது மரணித்திற்கான அடையாளங்கள் வெளிப்பட்டோர் என்பதாகும். (7) முஸ்லிமில் ஹதீஸ் எண்கள் 916-917 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது : மரணித்தது உறுதியாகி விட்டால், ஸுன்னாவில் வந்துள்ளதற்கேற்ப, அவரது இரு கண்களையும் மூடி, இரு தாடைகளையும் இறுக்கமாகக் கட்டிவிட வேண்டும்.
மூன்றாவதாக: அறப்போரில் இறந்த உயிர்த்தியாகியைத் தவிர, ஏனைய முஸ்லிம்களின் மய்யித்தைக் குளிப்பாட்டுவது கடமையாகும். அவரை குளிப்பாட்டுவதோ, அவருக்காக தொழுகை நடத்துவதோ கடமையில்லை. மாறாக, அவர் தம் ஆடைகளிலேயே அடக்கம் செய்யப்படுவார்; ஏனெனில் நபி (ஸல்லலல்லாஹு அலைஹவஸல்லம்) அவர்கள் உஹுதுப் போரில் வீரமரணமடைந்ததோரை குளிப்பாட்டவுமில்லை, தொழுகை நடத்தவமில்லை.
மைய்யித்தை (இறந்தவரை) குளிப்பாட்டும் முறை மையித்தின் 'அவ்ரத்தை' மர்மஸ்தானங்களை மறைக்கவேண்டும். பின்னர் போர்த்திய ஆடையை சற்று உயர்த்தி மெதுவாக அதன் வயிற்றை அழுத்த வேண்டும். குளிப்பாட்டுபவர் தனது கையில் ஒரு துணியையோ அல்லது அது போன்றதொன்றை சுற்றிக்கொண்டு இறந்தவரின் உடலிலிருந்து வெளியாகிய கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.; பின்பு தொழுகைக்கு வுழுச் செய்வது போல வுழுச் செய்விக்க வேண்டும். பின்பு தலையையும் தாடியையும் இலந்தை இலை (ஸித்ர்) கலந்த தண்ணீரால் அல்லது அது போன்றதால் கழுவிட வேண்டும். பின்னர் மை;யித்தின் வலப்புறத்தையும், பின்னர் இடப்புறத்தையும் கழுவ வேண்டும். பின்னர் மேற் கூறியதன் அடிப்படையில் இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் மைய்யித்தின் வயிற்றைத் தடவி கழிவுகள் ஏதும் வெளியானால் அதைச் சுத்தம் செய்ய வேண்டும.; முன்பின் துவாரங்களை பஞ்சு போன்றதால் அடைக்க வேண்டும் அது அவ்வாறு அடைத்துக்கொள்ளவில்லையென்றால் காய்ந்த களிமண், அல்லது பிளாஸ்டர் போன்ற தற்கால நவீன மருத்துவ சாதனங்கள் மூலம அடைக்க வேண்டும்
மூன்று முறை கழுவிய பின்னரும் உடல் சுத்தமாக வில்லையென்றிருந்தால் ஐந்து அல்லது ஏழு முறை கழுவ முடியும். பின்னர் ஒரு துணியால் துடைத்து உடலில் மறைவான இடங்களிலும், ஸுஜூத் செய்யும் போது நிலத்தில் படும் இடங்களிலும் வாசனை பூச வேண்டும். உடல் முழுதும் வாசனை பூசுவது விரும்பத்தக்கது. கண்புருவங்களுக்கு சந்தனம் பூசவேணடும். ஆண் மைய்யித்தின் மீசையும், நகங்களும் வளர்ந்திருந்தால் மீசையை குறைத்து நகங்களை களைய முடியும். அவ்வாறு களையாது விட்டுவிட்டாலும் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. முடியை சீவுவதோ மறையுறுப்பின் மேல் பகுதியில் வளரும் முடிகளை மழிக்கவோ, (கிதான்) விருத்த சேதனம் செய்வதோ கூடாது. ஏனெனில் இதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.பெண்ணின் ஜனாஸாவாக இருந்தால் அவளின் கூந்தலை மூன்றாக பிரித்துப் பின்னி தலையின் பின்புறத்தில் தொங்க விட வேண்டும்.
ஐந்தாவது : இறந்தவருக்கு கபன் செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தது போல இறந்தவர் ஆணாக இருந்தால் சட்டையோ தலைப்பாகையோ இன்றி மூன்று வெள்ளைத் துணிகளால் ஒன்றின் மேல் இன்னொரு துணியை வைத்து சுத்தி கபன் செய்வது மிகவும் சிறந்தது. ஒரு சட்டை மற்றும் வேட்டி, (சாரம்) ஒரு சுற்றிக் கட்டும் துணி இவைகளால் கபன் செய்வதில் எவ்விதப்ப பிரச்சினையும் கிடையாது.
பெண் மைய்யித்தைப் பொறுத்தவரை ஐந்து துணிகளால் -அதாவது இருக்கமற்ற மேலாடை, தலையை மறைக்கும் துணி, ஒரு வேட்டி, மற்றும் இரண்டு சுற்றிக்கட்டும் துணிகளால் கபன் செய்தல் வேண்டும். ஆண் குழந்தையை ஒரு ஆடை முதல் மூன்று ஆடை கொண்டு கபன் செய்திட முடியும். பெண் குழந்தையாயின் ஒரு மேலங்கி, இரு சுற்றும் துணிகளால் கபனிட முடியும்.
எல்லா மையித்திற்கும் அவற்றை முழுமையாக மூடி மறைப்பதற்கான ஒரு துணியிருப்பது கட்டாயமாகும். என்றாலும் இறந்தவர் இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்திருந்தால் இலந்தை (ஸித்ர்) இலை கலந்த தண்ணீரால் குளிப்பாட்டி அவரது வேட்டி, மேல் துண்டுடன் (போர்வை) அல்லது வேறு இரு துண்டுகளுடன் கபனிடுதல் வேண்டும தலையையும் முகத்தையும் மறைக்கக் கூடாது மேலும் மணம் பூசவும் கூடாது. ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மூலம் ஸஹீஹான ஹதீஸ் வந்துள்ளது. பெண் இஹ்ராம் அணிந்தவளாக இருந்தால் ஏனையப் பெண்களை கபனிடுவது போன்று கபனிட வேண்டும். என்றாலும் மணம் பூசுவது கூடாது மேலும் அவளின் 'நிகாபினால்'முகத்தையும், கையுறைகளால் அவளின் கைகளையும் மூடவும் கூடாது, எனினும் முன்னர் குறிப்பிட்ட அடிப்படையில் பெண்ணைக் கஃபனிடும் முறையில் குறிப்பிட்டது போல அவளை கஃபன் செய்த துணியால் அவளின் முகத்தையும், இரு கைகளையும் மூடிவிடவேண்டும்.
ஒரு ஆணின் மைய்யித்தைக் குளிப்பாட்டவும் தொழுகையை நடாத்தவும் அடக்கம் செய்யவும் தகுதிபெருவோர்
அவரால் வஸிய்யத் செய்யப்பட்டவர், பின்பு தந்தை, பின்பு பாட்டனார், பின்னர் ஒரு ஆணின் விடயத்தில் நெருங்கிய ஆண் உறவினர்களில் அடுத்தடுத்து நெருக்கமானவர்கள்.
பெண்ணைக் குளிப்பாட்ட மிகத் தகுதியானவர்களுள் அவளால் வஸிய்யத்துச் செய்யப்பட்டவள், பின்னர் அவளின் தாய், பின்னர் பாட்டி, பின்னர் பெண்களில் மிக நெருக்கமான உறவினர்கள் ,மேலும் கணவர் மனைவியரில் ஒருவர் மற்றவரைக் குளிப்பாட்டமுடியும். ஏனெனில் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் தங்களின் மனைவியையும் அலி (ரழி) அவர்கள் தமது மனைவியான ஃபாத்திமா (ரழி) அவர்களையும் குளிப்பாட்டியுள்ளார்கள்
ஏழாவது : இறந்தவருக்காக தொழும் முறை
ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறப்படும் முதலாம் தக்பீருக்குப்பின் ஸூறத்துல் பாத்திஹா ஓத வேண்டும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்ட ஸஹீஹான ஹதீஸிற்கு அமைவாக ஸூறத்துல் பாத்திஹாவை ஓதியதைத் தொடர்ந்து சிறிய ஸூறா அல்லது ஓரிரண்டு வசனங்கள் ஒதுவது சிறப்புக்குரியது. இரண்டாவது தக்பீர் கூறிய பின் தொழுகையில் தஷஹ்ஹுதில் (அத்தஹிய்யாதில்) ஓதப்படும் ஸலவாத்தை ஓத வேண்டும். மூன்றாம் தக்பீருக்குப்பின் பின்வரும் துஆவை இறந்தவருக்கு பாவமன்னிப்புக் கோரி ஓத வேண்டும்: அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யித்தினா வஷாஹிதினா வகாஇபினா வஸகீரினா வகபீரினா வஸகரினா வஉன்ஸானா. அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னா பஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்ஃபைய்தஹு மின்னா பதவஃப்பஹு அலல் ஈமான், அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு, வஆபிஹி வஃபுஅன்ஹு, வஅக்ரிம் நுஸுலஹு, வவஸ்ஸிஃ முத்கலஹு, வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்பரதி, வநக்கிஹி மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அபயழு மினத் தனஸி வ அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி, வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி, வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி, வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅஇத்ஹு மின் அதாபி(B)ல் கப்( B)ரி வஅதாபின்னார், வப்ஸஹ் லஹு பீ கப்ரிஹி வனவ்விர் லஹு பீஹீ. அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வல துழில்லனா பஃதஹு. பொருள் ((யா அல்லாஹ்! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும், இறந்து விட்டவர்களுக்கும் இங்கு சமூகம் அளித்தவர்களுக்கும், சமூகம் அளிக்கதவர்களுக்கும், எங்களில் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக. இறைவா! எங்களில் எவரை நீ உயிர் வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாத்தில் வாழச் செய்வாயாக. மேலும் எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக. யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக. இவருக்கு அருள்பாலிப்பாயாக, இவருக்கு மறுமை வாழ்வில் ஆரோக்கியம் அளிப்பாயாக. இவரைப் பொறுத்தருள்வாயாக. இவரது தங்குமிடத்தை கண்ணியமாக்குவாயாக, இவர் புகும் இடத்தை (மண்ணறையை) விரிவாக்குவாயாக. மேலும் இவரை தண்ணீர், பனி (ஆலம் கட்டி) பனிக்கட்டி கொண்டு கழுவுவாயாக, வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது பாவங்களிலிருந்து நீ தூய்மைப் படுத்துவாயாக, இவரது வீட்டுக்குப் பகரமாக சிறந்த வீட்டையும், இவரது குடும்பத்தாருக்குப் பகரமாக சிறந்த குடும்பத்தாரையும் இவரது துணைக்கு பகரமாக சிறந்த துணையையும்; இவருக்கு வழங்குவாயாக, இன்னும் இவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக. இன்னும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், நரகத்தின் தண்டனையிலிருந்தும் இவரைக் காப்பாற்றுவாயாக. மேலும் இவரின் கப்ரை விசாலமாக்கி அதில் பிரகாசத்தை ஏற்படுத்தியருள்வாயாக! இவரால் எங்களுக்கு கிடைக்கும் கூலியை தடுத்து விடாதிருப்பாயாக! இவருக்குப் பின்னால் எங்களை வழிதவறச்செய்துவிடாதிருப்பாயாக. நான்காம் தக்பீர் கூறி வலது பக்கமாக ஒரு ஸலாம் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு தக்பீருடனும் கைகளை உயர்த்துவது (முஸ்தஹப்) விரும்பத்தக்கதாகும்.இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவளுக்குப் பிரார்த்திக்கும் போது 'அல்லாஹும்ம ஃபிர்லஹா' என்று ஓத வேண்டும் இரண்டு ஜனாஸா இருந்தால் 'அல்லாஹும்ம ஃபிர்லஹுமா' என்று இருமையிலும் அதிகமான ஜனாஸாக்கள் இருந்தால் 'அல்லாஹும்ம ஃபிர்லஹும் என்று துவங்கி ஓத வேண்டும்.சிறு குழந்தையாக இருந்தால் பாவமன்னிப்புக் கோருவதற்கு பதிலாக பின்வருமாறு பிரார்த்திக்க வேண்டும் 'அல்லாஹும்மஜ்அல்ஹு ஃபரதன் வதுஹ்ரன் லிவாலிதைஹி வஷபீஅன் முஜாபா, அல்லாஹும்ம ஸக்கில் பிஹி மவாஸீனஹுமா, வஅஃழிம் பிஹி உஜூரஹுமா, வஅல்ஹிக்ஹு பிஸாலிஹி ஸலஃபில் முஃமினீன், வஜ்அல்ஹு ஃபீ கபாலத்தி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் வகிஹி பிரஹ்மதிக அதாபல் ஜஹீம். ''பொருள்: ( யா அல்லாஹ் ! இந்தக் குழந்தையை பெற்றோருக்காக சுவர்க்கத்தின் விருந்தையும் இருப்பிடத்தையும் தயார் செய்யும் குழந்தையாகாவும், சேமித்து வைக்கப்பட்ட பொக்கிஷமாகவும், பரிந்து பேசக்கூடியதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் ஆக்கியருள்வாயாக! யா அல்லாஹ்! இக்குழந்தையின் மூலம் பெற்றோரின் தராசைக் கனதியானதாக ஆக்குவாயக! அவர்களின் நற்கூலியை அதிகப்படுத்துவாயாக! இறை விசுவாசம்கொண்ட நல்லோருடன் இக்குழந்தையைச் சேர்ப்பாயாக! இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொருப்பில் ஆக்குவாயாக! உனது அருளின் மூலம் நரகத்தின் நெருப்பிலிருந்து இக்குழந்தையைக் காப்பாற்றுவாயாக!
தொழுகையின் போது இமாம் ஆண்மையத்தின் தலைக்கு நேராகவும். பெண்மையித்தின் நடுவிலும் நிற்பது நபி வழியாகும். ஒன்றுக்கு மேற்றபட்ட மையி;த்;துக்களிருந்தால் இமாமுக்கு முன்னால் ஆண் மையித்தையுயும் வைத்து, பெண் மையித்தை கிப்லாவை பக்கமாக வைக்க வேண்டும். மேலும் அவர்களுடன் சிறு பிள்ளைகளின் ஜனாஸா இருந்தால் முதலில் ஆண் குழந்தையின் ஜனாஸாவையும் பின்பு பெண்ணின் ஜனாஸாவையும், பின்பு சிறுமியின் ஜனாஸாவையும் வைத்தல் வேண்டும் சிறுவனின் தலை ஆணின் தலைக்கு நேராகவும் பெண்ணின் நடுப்பகுதி ஆணின் தலைக்கு நேராகவும் இவ்வாறுதான் சிறுமியின் தலை பெண்ணின் தலைக்கு நேராகவும்,அதன் நடுப்பகுதி ஆணின் தலைக்கு நேராகவும் இருக்க வேண்டும்.தொழுவோர் அனைவரும் இமாமுக்குப் பின்னால் இருக்க வேண்டும்.என்றாலும் ஒருவருக்கு இடம் கிடைக்கவில்லையென்றால் அவர் இமாமின் வலப்பக்கத்தில் இருப்பார்.
ஜனாஸாவை அடக்கம் செய்யும் முறை
கப்ரை ஒரு ஆணின் நடுப்பகுதியின் அளவுக்கு ஆழப் படுத்துவதும் கப்ரின் உள்ளே கிப்லாத் திசை நோக்கி உள் அறை (லஹ்த்) இருப்பதும் இஸ்லாமிய நடைமுறையாகும். மையித்தை வலது பக்கமாக உள்ளறையில் (லஹ்தில்) வைத்து கபனின் முடிச்சுகளை அவிழ்த்து விடுதல் வேண்டும். மேலும் கபனைக் களையாது கபன் செய்த அமைப்பிலேயே விட்டுவிட வேண்டும். மைய்யித் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரின் முகத்தைத் திறக்கக் கூடாது. மண் மையித்தின் மீது விழாமல் உறுதியாக இருப்பதற்காக அக்கப்ரின் உள்ளக அறையின் வாயிலில் செங்கற்கள் வைத்து மண் பூசுதல் வேண்டும். இது கிடைக்காது விட்டால் இதுவல்லாத பலகை, பாராங்கல், மரக்கட்டை போன்றவற்றை; உள்ளக அறையில் மண் செல்லாது அதன்; வாயிலில் வைப்பதற்கு பயன்படுத்திட முடியும். பின் அதன் வெளிகப்ரில் மண் போடப்படும் அவ்வேளை 'பிஸ்மில்லாஹ் வஅலா மில்லத்தி ரஸூலில்லாஹ்' (அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு! அல்லாஹ்வுடைய தூதரின் வழிமுறையின்படி! (உங்களை மண்ணறையில் வைத்து அடக்கம் செய்கிறோம்;) என்று கூற வேண்டும். கப்ரை ஒரு சான் அளவு உயர்த்தி அதன் மேல் கூலாங்கற்கள் போட்டு நீர் தெளிக்க வேண்டும்.
ஜனாஸா நிகழ்வில் கலந்து கொள்ள வந்தோர் மையித்தை அடக்கி முடிந்ததும் கப்ருக்குப் பக்கமகமாக நின்று மையித்திற்காக பிரார்த்திக்க வேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மையித்தை அடக்கம் செய்து விட்டு அதன் அருகில் நின்று இவ்வாறு கூறுவார்கள் : (('உங்கள் சகோதரருக்காக பாவ மன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியான முறையில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக பிரார்த்தனை செய்யுங்கள். ஏனெனில் தற்போது அவர் விசாரணை செய்யப்படுகிறார்')) (8) (8) அபூ தாவூத் ஹதீஸ் எண் 3221, ஹாகிம் (3/399).
ஒன்பதாவது ஜனாஸாத் தொழுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர் அடக்கம் செய்ததற்கு பின்னர் (கிப்லா திசையை நோக்கி கப்ருக்கு பக்கமாக நின்று) தொழுவார்
ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செய்து காட்டியது இதற்கு ஆதாரமாக உள்ளது. என்றாலும் இவ்வாறு செய்வது மையித்தை அடக்கம் செய்து ஒரு மாதகாலம் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியைக் கொண்டதாக இருப்பது அவசியம். அடக்கம் செய்த காலம் அதிகமாக இருந்தால் கப்ருக்கு பக்கமாக நின்று தொழுவதற்கு அனுமதியில்லை. ஏனெனில் மையித்தை அடக்கியதிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்னர் அதற்காக தொழுவது தொடர்பாக நபியவர்களிடமிருந்து எவ்வித சான்றாதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பத்தாவது : ஜனாஸாவீட்டினர் வந்திருக்கும் மக்களுக்கு உணவு சமைத்துக்கொடுப்பது கூடாது இதற்கு சிறப்புக்குறிய ஸஹாபியான ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல்பஜலி அவர்களின் கூற்று ஆதாரமாக அமைகிறது. அவர் பின்வருமாறு கூறுகிறார் : ஜனாஸாவை அடக்கம் செய்ததின் பின் ஜனாஸா வீட்டில் ஒன்று சேருவதையும் உணவு சமைப்பதையும் மரணித்தவருக்கு ஒப்பாரியிட்டுஓலமிடுவதற்கு நிகரான அம்சங்களாக கருதினோம் என்கிறார். [9] இமாம் அஹ்மத் ஹஸன் தரத்திலமைந்த அறிவிப்பாளர் தொடரின் மூலம் பதிவு செய்துள்ளார். (9) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 1612 லும், அஹ்மதில் (2/204) லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாஸா வீட்டினருக்கும் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்ள வந்தோருக்கும் உணவு சமைத்துக் கொடுப்பதில் எவ்விதப்பிரச்சினையும் இல்லை. ஜனாஸா வீட்டினரின் உறவினர் மற்றும் அண்டைவீட்டார் அவர்களுக்காக உணவு சமைத்துக் கொடுப்பது அவசியம். ஏனெனில் ஜஃபர் இப்னு அபீ தாலிப் (ரழி) அவர்களின் மரணச் செய்தி ஷாம் தேசத்திலிருந்து கிடைக்கப்பெற்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது குடும்பத்தாரிடம் ஜஃபரின் குடும்பத்தாருக்கு உணவு சமைத்துக் கொடுக்குமாறு பணித்து விட்டு இவ்வாறு கூறினார் : 'கவலையில் ஈடுபடுத்திடக் கூடிய விடயம் அவர்களை வந்தடைத்துவிட்டது (10) (10) முஸ்லிம் பாடம் அல் ஜனாஇஸ் (976) நஸாஈ பாடம்) அல் ஜனாஇஸ் 2034 அபூதாவூத்(3234) இப்னு மாஜா பாடம் ) ஜனாஸா பற்றி வந்துள்ள விடயங்கள் (1569) அஹ்மத் (2/441)
ஜனாஸா வீட்டிற்கு பிறரால் வழங்கப்பட்ட உணவை உண்பதற்காக அவர்களின் அண்டை வீட்டார் மற்றும் அவர்கள் அல்லாதோரையும் அழைப்பதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. இவ்வாறு ஜனாஸா வீட்டினருக்கு சமைத்து கொடுப்பதற்கான கால எல்லை குறித்து நாம் அறிந்த வகையில் மார்க்க சட்ட ஒழுங்கில் குறிப்பிட்ட காலம் வரையறுக்கப் படவில்லை.
பதினொன்றாவது : பெண்ணைப்பொறுத்தவரை தனது கணவனுக்கு மட்டுமே மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்க முடியும்.
அவள் அவனுக்காக நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் அனுஷ்டிப்பது கட்டாயமாகும். ஆனால் அவள் கர்ப்பிணியாக இருந்தால், பிள்ளையைப் பெற்றெடுப்பதுடன் அவளது துக்க காலம் முடிவடைகிறது; இதற்கான ஆதாரம் ஸஹீஹான நபிவழியிலிருந்து கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
ஆணைப் பொறுத்தவரை அவரின் நெருங்கிய உறவினருக்கோ அவர்கள் அல்லாதவருக்கோ துக்கம் அனுஷ்டிப்பது கூடாது
பன்னிரெண்டாவது :மரணித்தவர்களுக்கு பிரார்தனை செய்வதற்கும்,அவர்களுக்கு அருள்வேண்டுவதற்கும் மரணசிந்தனையை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ஆண்கள் அவ்வப்போது கப்ரிஸ்தானை தரிசிப்பதற்கான அனுமதியை ஷரீஆ வழங்கியுள்ளது
நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : நீங்கள் மண்ணறைகளை தரிசியுங்ள் அவை உங்களுக்கு மறுமையை ஞாபகமூட்டும் என்றார்கள். [11] இந்த ஹதீதை முஸ்லிம் தனது ஸஹீஹில் பதிவு செய்துள்ளார் (11) இப்னு மாஜாவில் ஹதீஸ் எண் 1569 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்பானி அவர்கள் இதனை ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம், கப்ரிஸ்தானங்களை தரிசித்தால் பின்வரும் துஆவை ஓதுமாறு கற்றுக்கொடுத்தார்கள் : ((இவ்வில்லங்களின் சொந்தக்காரர்களான இறைவிசுவாசிகளே! முஸ்லிம்களே! உங்கள் மீது ஸலாம் எனும் அமைதி உண்டகட்டுமாக! அல்லாஹ் நாடும்போது நாங்களும் உங்களிடம் வந்து சேரக் கூடியவர்களே! எங்களுக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ்விடம் ஈடேற்றம் கிடைக்க வேண்டிப் பிரார்த்தனை செய்கிறோம்! எங்களை முந்திச்சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி செல்லவிருப்போருக்கும் அல்லாஹ் கருணைபுரிவானாக.)) (12) (12) இந்த ஹதீஸ் முஸ்லிமில் ஹதீஸ் எண் 975 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது
பெண்களைப்பொறுத்தவரை அவர்கள் கப்ருகளை தரிசிப்பது கூடாது; ஏனெனில், நபியவர்கள் கப்ருகளை தரிசிக்கும் பெண்களை சபித்துள்ளார்கள். மேலும், அவர்கள் தரிசிப்பதன் மூலம் குழப்பம் ஏற்படுமெனவும், பொறுமை குறைந்து விடுமெனவும் அஞ்சப்படுகின்றது. இது போல்தான் பெண்களுக்கு ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்வது கூடாது; ஏனெனின் நபியவர்கள் அதனைத் தடுத்துள்ளார்கள். மேலும் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் ஜனாஸாத் தொழுகையை பள்ளியிலோ முஸல்லாவிலோ தொழுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதுவே இத்தலைப்பில் ஒன்று திரட்டுவதற்கு முடியுமாக இருந்த விடயங்களாகும். எமது நபி முஹம்மத் ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார் தோழர்கள் அனைவர் மீதிலும் அல்லாஹ்வின் ஸலாதும், ஸலாமும் உண்டாவதாக.