الأذكار التي تقال صباحًا ومساءً
الأذكار التي تقال صباحًا ومساءً كتبها بخط يده فضيلة الشيخ العلامة محمد بن صالح العثيمين من صحيح الأذكار الثابتة عن النبي -صلى الله عليه وسلم-
அளவற்ற அருளானனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்). காலை, மாலையில் ஓத வேண்டிய வேண்டிய திக்ருகள்.
"(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவமானவன்". ஆயதுல் குர்ஸீ (பகரா : 255).
"(மனிதர்களே! நம்) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர, ‘‘அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்ல என்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து)விட மாட்டோம்'' என்றும், ‘‘(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்ப்படிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடம்தான் நாங்கள் சேர வேண்டியதிருக்கிறது'' என்றும் கூறுகிறார்கள். அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் சிரமப் படுத்தமாட்டான். அது சம்பாதித்ததன் பலன் அதற்குரியதே! அது சம்பாதிதத்தன் விளைவும் அதற்குரியதே! எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது நாங்கள் தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!". (பகரா : 285, 286).
குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயம். குல் அஊது பிரப்பில் பலக் அத்தியாயம். குல் அஊது பிரப்பிந் நாஸ் அத்தியாயம். மேற்கண்ட அத்தியாயங்களை முழுமையாக மூன்று தடவைகள் ஓத வேண்டும்.
அஊது பிகலமாதில்லாஹித் தாம்மாதி மின் ஷர்ரி மா கலக்.(அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகள் மூலம் அவனின் சிருஷ்ட்டிகளின் தீமைகளை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்). மூன்று தடவைகள்.
பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் ஃபில் அர்ழி வலா ஃபிஸ்ஸமாஇ, வஹுவஸ் ஸமீஉல் அலீம். (அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு (ஆரம்பிக்கிறேன்). அவனுடைய திருப் பெயருடன் பூமியிலும் வானத்திலும் உள்ள எதுவும் எந்த இடையூறும் செய்ய முடியாது. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், முற்றும் அறிந்தவன்). மூன்று தடவைகள்.
ரழீது பில்லாஹி ரப்பன், வபில் இஸ்லாமி தீனன், வபி முஹம்மதின்ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நபிய்யா. (நான் அல்லாஹ்வை ரப்பாகவும், (இரட்சகனாகவும்) இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நபியாகவும் ஏற்றுக்கொண்டேன்). மூன்று தடவைகள்.
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். ரப்பி அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதல் யவ்மி வகைர மா பஃதஹூ, வஅஊது பிக மின் ஷர்ரி மா ஃபீ ஹாதல் யவ்மி வஷர்ரி மா பஃதஹூ, ரப்பி அஊது பிக மினல் கஸலி வல்ஹரமி வஸூஇல் கிபர், வஅஊது பிக மின் அதாபின் நாரி, வஅதாபில் கப்ர். (ஆட்சியும், அனைத்துப் புகழும்; அல்லாஹ்விற்குரியதாய் இருக்கும் நிலையில், நாம் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். உண்மையாக வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர (வேறு) எதுவும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். என் இரட்சகனே! இப்பகல் பொழுதின் நன்மையையும், இதனைத் தொடர்ந்து வரக் கூடியவற்றின் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும் இப்பகல் பொழுதின் தீங்கிலிருந்தும் இதனைத் தொடர்ந்து வரக்கூடிய தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத்; தேடுகிறேன். என் இரட்சகனே! சோம்பல், தள்ளாடும் வயோதிபம் மற்றும் தீய தற்பெருமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இரட்சகனே! நரக வேதனை மற்றும் கப்ரின்; வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). மாலை வேளையில் மேற்கண்ட பிரார்த்தனையை பின்வருமாறு ஓத வேண்டும் : அம்ஸைனா வஅம்ஸல் முல்கு லில்லாஹ் (ஆட்சியும், அனைத்துப் புகழும்; அல்லாஹ்விற்குரியதாய் இருக்கும் நிலையில், நாம் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம்). மேலும் பின்வருமாறுகூற வேண்டும் : ரப்பி அஸ்அலுக கைர மா ஃபீ ஹாதிஹில் லைலதி... (இவ்விரவு பொழுதின் நன்மையையும்,(இதனைத் தொடர்ந்து வரக் கூடியவற்றின் நன்மையையும்உன்னிடம் நான் கேட்கிறேன்). 'அஸ்பஹ்னா வஅஸ்பஹ' (காலைப் பொழுதை அடைந்து விட்டோம்) 'ஹாதல் யவ்மி '(இப்பகல் பொழுதின்) எனும் வார்த்தைகளுக்குப் பதிலாக மேற்கண்டவாறு மாற்றி ஓத வேண்டும்.
அல்லாஹும் பிக அஸ்பஹ்னா, வபிக அம்ஸைனா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகந் நுஷூர். (யாஅல்லாஹ்! நாங்கள் உன் உதவியைக் கொண்டே காலை நேரத்தை அடைந்ததோம், உன் உதவியைக் கொண்டே மாலை நேரத்தை அடைந்தோம். மேலும் உன் உதவியைக் கொண்டே உயிர் வாழ்கிறோம். உன் உதவியைக் கொண்டே மரணமடைவோம். இன்னும் மீண்டும் எழுப்பப்பட்டு உன்னிடமே திரும்பி வருவோம்). மாலை வேளையில் பின்வருமாறு ஓத வேண்டும் : அல்லாஹும் பிக அம்ஸைனா, வபிக அஸ்பஹ்னா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகல் மஸீர். (யாஅல்லாஹ்! நாங்கள் உன் உதவியைக் கொண்டே மாலை நேரத்தை அடைந்ததோம், உன் உதவியைக் கொண்டே காலை நேரத்தை அடைந்தோம். மேலும் உன் உதவியைக் கொண்டே உயிர் வாழ்கிறோம். உன் உதவியைக் கொண்டே மரணமடைவோம். இன்னும் (எமது) ஒதுங்கிமிடமும் உன்னிடமே).
அல்லாஹும்ம மா அஸ்பஹ பீ மின் நிஃமதின் அவ் பிஅஹதின் மின் கல்கிக ஃபமின்க வஹ்தக லா ஷரீக லக, ஃபலகல் ஹம்து வலகஷ் ஷுக்ர். (யா அல்லாஹ்! இந்தக் காலைப் பொழுதில் எனக்கோ அல்லது உனது படைப்பினங்களில் எவருக்காவது ஏதேனும் அருள் கிடைத்திருந்தால் அது உன்னிடமிருந்து மாத்திரமே கிடைத்ததாகும். நீ தனித்தவன்; உனக்கு யாதொரு இணையுமில்லை. புகழ் அனைத்தும் உனக்கே உரியது, மேலும் எல்லா நன்றியும் உனக்கே உரியது). மாலை வேளையில் மேற்கண்ட பிரார்த்தனையை பின்வருமாறு ஒதுதல் வேண்டும் : மா அம்ஸா பீ... (இந்த மாலைப் பொழுதில் எனக்கோ....)
மூன்று தடவைகள்.
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித் துன்யா வல் ஆஃகிரா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல் ஆஃபியத ஃபீ தீனீ வதுன்யாய, வஅஹ்லீ, வமாலீ, அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வஆமின் ரௌஆதீ, அல்லாஹும்மஹ்ஃபழ்னீ மின் பைனி யதய்ய, வமின் கல்ஃபீ, வஅன் யமீனீ வஅன் ஷமாலீ, வமின் ஃபௌகீ, வஅஊது பிஅழமதிக அன் உஃதால மின் தஹ்தீ. (யாஅல்லாஹ்! இம்மை மறுமை இரண்டிலும் உன்னிடம் ஆரோக்கியத்தைக் கேட்கிறேன். எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலப்புறமிருந்தும் இடப் புறமிருந்தும், எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனது கீழப்புறத்திலிருந்து ஏற்படும் எதிர்பாராத தண்டனையை விட்டும் உன் மகத்துவத்தைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்).
அல்லாஹும்ம அன்த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்த கலக்தனீ, வஅன அப்துக வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்தத ஃது, அஊது பிக மின் ஷர்ரி மாஸனஃது, அபூஉ லக பினிஃமதிக அலய்ய, வஅபூஃஉ பிதன்(ம்)பீ ஃபக்ஃபிர்லீ ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத்துனூப இல்லா அன்த. (யா அல்லாஹ்! நீயே என் எஜமான். உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. என்னை நீ அடிமையாகவே படைத்தாய், உனது உடன்படிக்கையின் படியும், வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமைகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். எனக்கு உன்னால் வழங்கப்பட்ட அருள்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். ஆகவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்கக் கூடியவன் வேறு யாருமில்லை).
அல்லாஹும்ம ஃபாதிரஸ் ஸமாவாதி வல்அர்ழி, ஆலிமல் கைபி வஷ்ஷஹாதா, ரப்ப குல்லி ஷைய்இன் வமலீகஹூ, அஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த, அஊது பிக மின் ஷர்ரி நஃப்ஸீ வமின் ஷர்ரிஷ் ஷைதானி வஷிர்கிஹீ, வஅன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன் அவ் அஜுர்ரஹூ இலா முஸ்லிம். (யாஅல்லாஹ்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்தினதும் இரட்சகனே! அரசனே! உண்மையான வணக்கத்திற்கு உரியவன் உன்னைத் தவிர யாருமில்லை என சாட்சி கூறுகின்றேன். எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். எனக்கு நானே தீங்கிழைத்துக் கொள்வதை விட்டும், இன்னும் இன்னொரு முஸ்லிமுக்கு தீங்கு செய்வதை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்).
அல்லாஹும்ம இன்னீ அஸ்பஹ்து உஷ்ஹிதுக வஉஷ்ஹிது ஹமலத அர்ஷிக வமலாஇகதக வஅன்பியாஅக வஜமீஅ கல்கிக பிஅன்னக அல்தல்லாஹு லா இலாஹ இல்லா அன்த வஅன்ன முஹம்மதன் அப்துக வரஸூலுக. (யா அல்லாஹ்! நீதான் (உண்மையான) வணக்கத்திற்குரிய ஏக நாயன் உன்னைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு எவறும் இல்லை. நீ தனித்தவன் உனக்கு யாதொரு இணையும் கிடையாது முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் உனது அடியாரும் உனது தூதரும் ஆவார்கள் என்பதற்கு உன்னையும், உனது அர்ஷை சுமப்போரையும் உனது மலக்குகளையும், உனது நபிமார்களையும், உனது அனைத்துப் படைப்புகளையும் சாட்சியாக வைத்த நிலையில் நான் காலைப்பொழுதை அடைந்துள்ளேன்). மாலையில் பின்வருமாறு (மாற்றி) ஓத வேண்டும் : அல்லாஹும்ம இன்னீ அம்ஸைது (நான் மாலைப் பொழுதை அடைந்துள்ளேன்....). நான்கு தடவைகள்.
லாஇலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்.(உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்). காலையிலும் மாலையிலும் நூறு தடவைகள்.
ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அழீம். (அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், உண்மையாக வணங்கப்படத்தகுதியான இறைவன் அவனைத் தவிர வேறுயாறுமில்லை, அவன் மீதே நான் எனது பொறுப்புக்களை ஒப்படைக்கின்றேன், அவன் மகத்தான அர்ஷின் இரட்சகனாவான்). ஏழு தடவைகள்.
ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹீ (அல்லாஹ்வை நான் புகழ்தவனாக அவனை தூய்மைப் படுத்துகிறேன்). காலையில் அல்லது மாலையில் அல்லது இரு வேளைகளிலும் நூறு தடவைகள்.
அஸ்தஃபிருல்லாஹ வஅதூபு இலைஹி (பிழையைப் பொருத் தருளும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். இன்னும் அவனிடம் மீளுகின்றேன்). நூறு தடவைகள்.
இதுவே எனக்கு எழுத முடியுமாக இருந்தது. இதனைக் கொண்டு பயனளிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
முஹம்மத் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) ஹி.1418- 1- 20 அன்று இதனை எழுதினார்கள்.