وجوب العمل بالسنة وكفر من أنكرها

وجوب العمل بالسنة وكفر من أنكرها

رسالة لطيفة تبين أهمية الالتزام بسنة النبي محمد صلى الله عليه وسلم وبيان كفر من ينكرها. تبدأ بالتأكيد على أن مصادر التشريع الإسلامي تعتمد على القرآن الكريم وسنة النبي محمد صلى الله عليه وسلم وإجماع علماء الأمة. تشرح الرسالة كيف أن القرآن وسنة النبي متلازمان، وتؤكد على ضرورة اتباع السنة لفهم وتطبيق أحكام الشريعة. يُستدل فيها بآيات القرآن وأحاديث النبي العدنان وشهادات من الصحابة والتابعين، لإثبات حجية السنة وأهمية التمسك بها. تُختتم الرسالة بتذكير المسلمين بضرورة طاعة الرسول والابتعاد عن مخالفة سنته لتحقيق الهداية والرحمة من الله جل جلاله.

Language: lang_ta
Prepared by:
Version: 1.0
Translations 22
Akan Amharic Assamese Bambara +18
Attachments 7
PDF
Audio
Video
+3

நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவை ஏற்றுநடப்பதன் அவசியம் மற்றும் அதை மறுப்பவர் இறைநிராகரிப்பாளராகக் கொள்ளப்படல் தொகுப்பு:

அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.

முன்னுரை

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. நல்ல முடிவு பயபக்தியுடையோருக்குரியதாகும். சாந்தியும், சமாதானமும் அவனது அடியாரும், அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட தூதருமாகிய, எங்கள் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும், தமது இரட்சகனின் வேதத்தையும், தமது நபி வழிமுறையையும் பின்வந்த சமூகத்தினருக்கு மிக்க அமானிதத்துடனும், திறம்படவும், சொற்களையும், அர்த்தங்களையும் சரியாகப் பாதுகாத்த வண்ணமும் கொண்டுபோய்ச் சேர்த்த நபித் தோழர்களுக்கும் உண்டாகட்டும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக. அவர்களை அழகிய முறையில் பின்பற்றுபவர்களாகவும், அனைத்து இறையடியார்களுக்கான ஆதாரமாகவும் எங்களை ஆக்கிவைப்பானாக!

சட்டங்களை நிறுவுவதற்கும், ஹராம், ஹலாலைத் தெளிவுபடுத்துவதற்குமான தகுதியான மூலாதாரங்கள், எத்திசையிலும் அசத்தியம் நுழைய வாய்ப்பில்லாத அல்குர்ஆனும், பின்பு, தன் மனோஇச்சைப் படி பேசாமல் வஹ்யைக் கொண்டே பேசும் நபி (ஸல்) அவர்களது வழிமுறையும், பின்பு இச்சமுதாய மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவுகளும் தான் என்பதை அன்றும், இன்றும் அறிஞர்கள் ஏகோபித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். வேறு சில ஆதாரங்கள் தொடர்பாக அவர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு உள்ளது. அவற்றில் கியாஸ் (ஒப்பிட்டு சட்டங்களைப் பெறுவது) மிக முக்கியமானது. பெரும்பாலான அறிஞர்கள், அதன் நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால் அது ஆதாரமாகக் கொள்ளப்படும் என்ற கருத்திலேயே உள்ளனர். இந்த மூலாதாரங்களுக்கான ஆதாரங்கள் மட்டிடமுடியாத அளவு அதிகமானவை. கூறப்படாமலேயே பிரபல்யமானவை.

சட்டங்களை நிறுவுவதற்குரிய மூலாதாரங்கள்.

முதல் மூலாதாரம் : அல்லாஹ்வின் கண்ணியமிக்க வேதம்.

முதலாவது மூலாதாரம், அல்லாஹ்வின் கண்ணியமிக்க அல்குர்ஆனாகும். எமது இறைவன் தனது வேதத்தின் பல இடங்களில், இவ்வேதத்தைப் பின்பற்றிக் கடைப்பிடிப்பதன் அவசியத்தையும், அது வகுத்திருக்கும் எல்லைகளோடு நின்று கொள்வதன் அவசியத்தையும் பற்றிக் கூறியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் : இது நாம் இறக்கிய, பரகத் செய்யப்பட்ட வேதமாகும். எனவே இதைப் பின்பற்றுங்கள். நீங்கள் அருள் புரியப்படுவீர்கள்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும். அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக;

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

இது மனிதர்கள் எச்சரிக்கப்படுவதற்கான அவர்களுக்குரிய ஓர் அறிவிப்பாகும்.

இக்கருத்தைத் தரும் வசனங்கள் அதிகமாக உள்ளன. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தொட்டும் பல ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள், அல்குர்ஆனைப் பற்றிப் பிடிக்குமாறு ஏவுகின்ற அதேவளை, அதைப் பற்றிப் பிடிப்பவர் நேர்வழியில் இருப்பார் என்றும், அதைக் கைவிடுபவர் வழிகேட்டில் இருப்பார் என்றும் உணர்த்தி நிற்கின்றன. நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ் பேருரையில் பின்வருமாறு கூறினார்கள்:

“நான் உங்களிடம் விட்டுச் செல்லும் அல்லாஹ்வின் வேதத்தை நீங்கள் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறமாட்டீர்கள்.”

ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்

அதே ஸஹீஹ் முஸ்லிமில், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஸைத் பின் அர்கம் (ரழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்:

நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்"

அல்லாஹ்வின் வேதத்தை நோக்கித் தூண்டி, ஆர்வமூட்டிய பின்னர் பின்வருமாறு கூறினார்கள்:

பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.

இன்னொரு அறிவிப்பில் அல்-குர்ஆனைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்:

அது அல்லாஹ்வின் கயிறு. அதனைப் பற்றிப் பிடிப்பவர், நேர்வழியில் இருப்பார். அதைக் கைவிடுபவர் வழிகேட்டில் இருப்பார்.

இக்கருத்தை உணர்த்தும் ஹதீஸ்கள் ஏராளம் உள்ளன. இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் அல்குர்ஆனைப் பற்றிப்பிடிப்பதும், அதைக் கொண்டே தீர்ப்பளிப்பதும், அதனிடமும் நபிகளாரிடம் ஸுன்னாவிடமுமே தீர்ப்புக் கேட்டுச் செல்வதும் கடமை என்பதில் ஏகோபித்த கருத்துடன் இருப்பதால் (இஜ்மா) இதுபற்றி நிறைய ஆதாரங்களை அடுக்கிக்கொண்டு செல்லவேண்டிய அவசியம் இல்லை.

இரண்டாவது ஆதாரம்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தொட்டும் மற்றும் அவர்களது தோழர்கள், அவர்களுக்குப் பின்னர் வந்த இறைவிசுவாசம் கொண்ட அறிஞர்கள் ஆகியோரைத் தொட்டும் ஆதாரப் பூர்வமாக வந்தவை.

ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று மூலாதாரங்களிலும் இரண்டாவது மூலாதாரமாகின்றது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தொட்டும் மற்றும் அவர்களது தோழர்களைத் தொட்டும் ஆதாரப் பூர்வமாக வந்தவையாகும். அவர்களுக்குப் பின்னர் வந்த இறைவிசுவாசம் கொண்ட அறிஞர்கள் இந்தத் தூய்மையான மூலாதாரத்தை விசுவாசிப்பார்கள். அதேபோன்று, அதை ஆதாரமாகக் கொள்ளவும், சமுதாயத்திற்குக் கற்றுக்கொடுக்கவும் செய்வார்கள். இது தொடர்பாக அவர்கள் நிறைய நூற்களை எழுதியுள்ளார்கள். சட்டக்கலை அடிப்படைகள் மற்றும் ஹதீஸ் கலை அடிப்படைகளுக்கான நூல்களில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதற்கு எண்ணிலடங்கா ஆதாரங்கள் உள்ளன. அல்லாஹ்வின் கண்ணியமிக்க வேதத்திலேயே அவரைப் பின்பற்றி, கட்டுப்படுமாறு அவன் ஏவியுள்ளான். அந்த ஏவல் அக்காலத்தவர்களுக்கு மாத்திரமன்றி, பின்வரும் அனைவருக்கும் உரியதே. ஏனெனில், நபியவர்கள் அனைத்து மக்களுக்கும் தூதரே. அதேபோன்று, மறுமை வரை அவரைப் பின்பற்றுமாறு அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள். அல்குர்ஆனில் பொதுப்படையாகக் கூறப்பட்டுள்ளவற்றைத் தமது சொல், செயல், அங்கீகாரங்களால் நபியவர்கள் தான் தெளிவுபடுத்தினார்கள். நபியவர்களின் ஸுன்னா இல்லையென்றிருந்தால், முஸ்லிம்கள் தொழுகை ரக்அத்களின் எண்ணிக்கையையோ, அதன் முறையையோ, அதன் கடமைகளையோ அறிந்திருக்கமாட்டார்கள். அதேபோன்று, அல்குர்ஆனில் வந்துள்ள, நோன்பு, ஸகாத், ஹஜ் அரப்போர், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் ஆகியவற்றின் விரிவான சட்டங்களையோ, பரிவர்த்தனைகள், தடைசெய்யப்பட்டவைகள், கடமையாக்கப்பட்டுள்ள தண்டனைகள் ஆகியவை பற்றிய விரிவான விளக்கங்களையோ அறிந்திருக்கமுடியாது. இதுபற்றி வந்துள்ள வசனங்களுக்கு உதாரணமாக, பின்வரும் ஸூரா ஆலு இம்ரானின் வசனத்தைக் கூறலாம்:

நீங்கள் அருள்புரியப்படும் பொருட்டு, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.

ஸூரா அந்நிஸாவின் பின்வரும் வசனத்தையும் கூறலாம்:

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

அதே ஸூரா அந்நிஸாவில் அல்லாஹ் பின்வருமாறும் கூறுகின்றான்:

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவ ராக அனுப்பவில்லை.

நபியவர்களின் ஸுன்னா ஆதாரமாகக் கொள்ளப்பட முடியாது என்றிருந்தாலோ, அல்லது அது முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை என்றிருந்தாலோ, அவருக்குக் கட்டுப்படுவதும், மக்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளுக்குத் தீர்வை அல்குர்ஆன், ஸுன்னாவில் பெறுவதும் எவ்வாறு சாத்தியமாகும்? இந்த வாதத்தின் படி, இல்லாத ஒன்றை நாடிச் செல்லுமாறு அல்லாஹ் கூறியதாக அமையுமே! இது மிகப் பொய்யான கருத்து மாத்திரமல்லாமல், மிக மோசமான இறைநிராகரிப்பும், இறைவனைப் பற்றிய கெட்டஎண்ணமுமாகும்.

அல்லாஹ் ஸூரா அந்நஹ்லில் இவ்வாறு கூறுகின்றான்:

"மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்"".

அதே ஸூராவில் பின்வருமாறும் கூறுகின்றான்:

(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ் விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை இறக்கினோம்; இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது.

நபியவர்களது ஸுன்னா இல்லை என்றிருந்தால், அல்லது அது ஆதாரமாகக்கொள்ளப்படமாட்டாது என்றிருந்தால், எவ்வாறு மக்களுக்கு இறக்கப்பட்டதை விளக்கும் பொறுப்பை அல்லாஹ் தஆலா நபியவர்களுக்குச் சாட்டமுடியும்?

ஸூரா அந்நூரில் அல்லாஹ் கூறியிருப்பதும் இதுபோன்றதுதான்:

. “அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.

அதே ஸூராவில் அல்லாஹ் இவ்வாறும் கூறுகின்றான் :

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.

ஸூரா அல்-அஃராபில் இவ்வாறு கூறுகின்றான்:

(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”

நேர்வழி, இறையருள் என்பவை நபியவர்களைப் பின்பற்றுவதில் தான் உள்ளது என்பதை இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. அப்படியாயின், அவர்களது ஸுன்னாவை செயற்படுத்தாமலோ, அல்லது அது ஆதாரமற்றது எனக் கூறிக்கொண்டோ, அல்லது அதைப் பின்பற்றமுடியாது எனக் கூறிக் கொண்டோ இது எப்படி சாத்தியப்படும்?

ஸூரா அந்நூரில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

ஸூரா அல் ஹஷ்ரில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்;

இக்கருத்தை உணர்த்தும் வசனங்கள் ஏராளம் உள்ளன. அவை அனைத்தும் நபியவர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் கொண்டுவந்துள்ளதைப் பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துரைக்கின்றன. ஏற்கனவே கூறிய ஆதாரங்கள் அல்குர்ஆனைப் பின்பற்றி, அதன் ஏவல், விலக்கல்களுக்குக் கட்டுப்படுவதன் அவசியத்தை உணர்த்தின. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்த அடிப்படைகளாகும். இவற்றில் ஒன்றை மறுப்பவர் மற்றையதையும் மறுத்துப் பொய்ப்பிக்கின்றார். அது நிராகரிப்பையும், வழிகேட்டையும் ஏற்படுத்தி, இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் வந்துள்ள ஹதீஸ்கள்:

நபியவர்கள் காலத்தில் இருந்தவர்களும், நபியவர்களுக்குப் பின்னர் மறுமை வரை வரும் அனைவரும், அவர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் கொண்டுவந்துள்ளதைப் பின்பற்றுவது அவசியம் என்பதையும், அவருக்கு மாறுசெய்வது கூடாது என்பதையும் உணர்த்தும் ஹதீஸ்கள் தட்டமுடியாத அளவு அதிக எண்ணிக்கையில் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது:

"யார் எனக்குக் கட்டுப்படுகின்றாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுவிட்டார். யார் எனக்கு மாறுசெய்கின்றாரோ, அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்துவிட்டார்."

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னுமொரு ஹதீஸ் புகாரி கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது:

''என் சமுதாயத்தார் அனைவரும் சுவர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சுவர்க்கம் நுழைவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், ஹாக்கிம், அபூ தாவூத் ஆகிய கிரந்தங்களில் ஆதாரப் பூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் பதியப்பட்டுள்ளது:

"அறிந்துகொள்ளுங்கள்! எனக்கு அல்குர்ஆனும், அதுபோன்ற இன்னுமொன்றும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மனிதர் வயிறு நிரம்ப சாப்பிட்டு, பின்னர் தனது கட்டிலில் சாய்ந்த வண்ணம், 'இந்தக் குர்ஆனைப் பற்றிக்கொள்ளுங்கள். அதில் ஹலால் எனப்பட்டதை, ஹலால் எனவும், அதில் ஹராம் எனப்பட்டதை ஹராம் எனவும் எடுத்துக்கொள்ளுங்கள்' எனக் கூற முனைவார்.

நபியவர்கள் கூறியதாக அபூ ராபி அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் ஆபூ தாவூத், இப்னு மாஜா ஆகிய கிரந்தங்களில் ஆதாரப் பூர்வமாக பதியப்பட்டுள்ளது:

"உங்களில் யாரும் தனது கட்டிலில் சாய்ந்துகொண்டு, நான் ஏவிய, தடுத்த விடயங்கள் பற்றி அவரிடம் கூறப்படும் போதெல்லாம், 'எமக்குத் தெரியாது, அல்குர்ஆனில் நாம் கண்டவற்றிற்கு மாத்திரமே கட்டுப்படுவோம்' என்று கூறிக்கொண்டிருப்பதை நான் காணக் கூடாது."

அல் மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹஸன் பின் ஜாபிர் அறிவிக்கின்றார்கள்:

கைபர் தினம் நபி (ஸல்) அவர்கள் சில பொருட்களை தடைசெய்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உங்களில் யாராவது சாய்ந்த நிலையில், எனது ஹதீஸ் அவரிடம் கூறப்படும் போது, 'எமக்கும் உங்களுக்கும் மத்தியில் அல்லாஹ்வின் வேதம் உள்ளது. அதில் ஹலால் எனக் கூறப்பட்டதை ஹலால் எனவும், அதில் ஹராம் எனக் கூறப்பட்டதை ஹராம் எனவும் எடுத்துக்கொள்வோம்' எனக் கூறி என்னைப் பொய்ப்பிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஹதீஸ் ஹாகிம், திர்மிதி, இப்னு மாஜா ஆகிய கிரந்தங்களில் ஆதாரப் பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தமது உரையில், சமுகமளித்தவர்கள் வராதவர்களுக்கு ஏத்திவைக்குமாறு தமது தோழர்களிடம் ஏவி, 'எத்திவைக்கப்படுபவர் சிலவேளை இங்கு கேட்டுக்கொண்டிருப்பவரை விடப் புரிந்துகொள்வார்' என்று கூறினார்கள் என, மறுக்கமுடியாதளவு அறிவிப்பாளர் எண்ணிக்கையுடன் ஹதீஸ்கள் வந்துள்ளன .தோழர்களிடம் ஏவி, 'எத்திவைக்கப்படுபவர் சிலவேளை இங்கு கேட்டுக்கொண்டிருப்பவரை விடப் புரிந்துகொள்வார்

உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில், அரபா தினமும், பத்தாம் தினமும் மக்களுக்கு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்கள்:

"சமுகமளித்தவர்கள், வராதவர்களுக்கு ஏத்திவைக்கட்டும். அவ்வாறு ஏத்திவைக்கப்படுபவர்கள் சிலவேளை செவிமடுத்தவர்களை விடப் புரிந்துகொள்பவர்களாக இருக்கலாம்."

தனது ஸுன்னா, கேட்பவர்கள், கேள்விப்படுபவர்கள் அனைவருக்கும் ஓர் ஆதாரமாக இல்லாவிட்டால், மேலும், அது மறுமை வரை இருக்கும் ஒன்றாக இல்லாவிட்டால், அதை எத்திவைக்குமாறு நபியவர்கள் ஏவியிருக்கமாட்டார்கள். எனவே, இந்த ஸுன்னாவை நபியவர்களது வாயினால் நேரடியாகக் கேட்டவர்கள், அல்லது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்குமே அது ஒரு ஆதாரமாகும்.

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களது சொல், செயல் சார்ந்த ஸுன்னாக்களைப் பாதுகாத்து, பின்னால் வந்த தாபிஈன்களுக்கு எத்திவைக்க, அவர்கள் அவர்களுக்குப் பின்வந்தவர்களுக்கு ஏத்திவைத்தார்கள். இவ்வாறே நம்பகமான அறிஞர்கள் வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக அறிவித்து, தமது நூற்களில் தொகுத்து, அவற்றில் பலமான, பலவீனமான அறிவிப்புக்களைத் தெளிவுபடுத்தியதோடு, அவ்வாறு வேறுபிரித்து அறிந்துகொள்ளும் நோக்கில் தமக்கிடையே சில வரையறைகள் மற்றும் விதிகளையும் வைத்துக்கொண்டார்கள். அறிஞர்கள், புகாரி மற்றும் முஸ்லிம் போன்ற சுன்னா நூற்களை ஆதாரமாகக் கொண்டது மாத்திரமல்லாமல், அல்லாஹ் தனது கண்ணியமிக்க வேதத்தைப் பாதுகாத்தது போன்று, அவர்களும் இந்த ஸுன்னாவைப் பொய்யர்களின் திரிபுகள், இறைமறுப்பாளர்களின் நிராகரிப்பு, வீணர்களின் கையாடல்கள் என்பவற்றை விட்டும் பாதுகாத்து, அல்லாஹ்வுடைய இந்த வசனத்தை உண்மைப்படுத்தினார்கள்:

"நாம்தான் இந்தக் அல்குர்ஆனை இறக்கியுள்ளோம். மேலும் நாமே அதனை பாதுகாப்பவர்களாவோம்"

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது ஸுன்னாவும் இறக்கப்பட்ட வஹீ என்பதில் சந்தேகம் கிடையாது. அல்லாஹ் தனது வேதத்தைப் பாதுகாத்தது போலவே, இதனையும் பாதுகாத்தான். கூரிய அறிவுகொண்ட அறிஞர்களை அல்லாஹ் நியமித்து, அசத்தியவாதிகளின் திரிபுகளையும், அறிவீனர்களின் வழிந்துரைகளையும் அதை விட்டும் நீக்கினான். இறைநிராகரிப்பாளர்களது, பொய்யர்களது, அறிவீனர்களது இடைச் செருகல்களை விட்டும் அவர்கள் சுன்னாவைப் பாதுகாத்தார்கள். ஏனெனில், அல்லாஹ் தஆலா இந்த ஸுன்னாவை அல்குர்ஆனுக்கான விளக்கவுரையாகவும், அதில் சுருக்கமாகக் கூறப்பட்டவைக்கான விரிவான விளக்கமாகவும் வைத்திருப்பதோடு, கண்ணியமிக்க குர்ஆனில் கூறப்படாத வேறு பல சட்டங்களையும் உள்ளடக்கச் செய்துள்ளான். உதாரணமாக, பால்குடி சட்ட விளக்கங்கள், சில அநந்தரச் சொத்து சட்டங்கள், ஒரு பெண்ணையும் அவளது தாயின் சகோதரியையுமோ, அல்லது தந்தையின் சகோதரியையுமோ சமகாலத்தில் மனைவிகளாக வைத்திருத்தலைத் தடைசெய்தல் போன்ற, அல்குர்ஆனில் கூறப்படாமல், ஸுன்னாவில் கூறப்பட்ட சட்டங்களைக் கூறலாம். இது தொடர்பாக நபித் தோழர்கள், தாபிஈன்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களைத் தொட்டும் வந்துள்ளவை. ஸுன்னாவை மகத்துவப்படுத்தல் மற்றும் அதைக் கொண்டு அமல் செய்வது கட்டாயம் என்பது தொடர்பாக நபித் தோழர்கள், தாபிஈன்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களைத் தொட்டும் வந்துள்ளவை:

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக, புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அரபிகளில் சிலர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய போது, அபூ பக்கர் (ரலி) அவர்கள், "தொழுகையையும் ஸகாத்தையும் வேறுபிரித்துப் பார்ப்பவர்களுக்கு எதிராக நான் போரிடுவேன்" என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், 'மக்கள் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் வரை அவர்களோடு போரிடுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன். அவ்வாறு கூறிவிட்டார்கள் என்றால், அவர்களது உயிர்களையும், சொத்துக்களையும் - அவற்றில் உள்ள கடமைகளைத் தவிர - பாதுகாத்துக்கொள்வார்கள்.' என்று கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு போரிடுவீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்கர் அவர்கள், "ஸகாத் சொத்தின் கடமைகளில் ஒன்றல்லவா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண் ஆட்டை கொடுக்காமல் விட்டாலும் நான் அவர்களுக்கு எதிராகப் போரிடுவேன்." என்று கூறினார்கள். 'அப்போது தான் நான், அல்லாஹ் அபூ பக்கரின் உள்ளத்தை யுத்தம் செய்ய விசாலப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். எனவே அதுவே சத்தியம் என்பதை அறிந்துகொண்டேன்' என்று கூறினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

நபித் தோழர்கள் அதனை ஏற்று, இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களுடன் யுத்தம் செய்து, அவர்களை மீண்டும் இஸ்லாத்தில் நுழையவைத்தார்கள். தொடர்ந்தும் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தவர்களைக் கொலை செய்தார்கள். இந்தச் சம்பவத்தில், ஸுன்னாவை மகத்துவப்படுத்துவதும், அதனைக் கொண்டு அமல் செய்வதும் கடமை என்பதற்கான தெளிவான ஆதாரம் உண்டு. மரணித்த ஒருவரின் பாட்டி ஒருவர் அபூ பக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, தனக்கு சொத்துரிமை உள்ளதா? என வினவிய போது,

"அல்லாஹ்வின் வேதத்தின் உங்களுக்கு எதுவும் உள்ளதாகக் கூறப்படவில்லை, நபி (ஸல்) அவர்களும் உங்களுக்கு ஏதும் பங்குள்ளது எனத் தீர்ப்பளித்ததாக நான் அறியமாட்டேன். (சஹாபா) மக்களிடம் கேட்டுப் பார்க்கின்றேன்" எனக் கூறிவிட்டு, பின்பு நபித் தோழர்களிடம் கேட்டார்கள். அப்போது சிலர், நபி (ஸல்) அவர்கள் பாட்டிக்கு ஆறில் ஒன்றை வழங்கினார்கள் எனக் கூற, அவ்வாறே அவர்களும் தீர்ப்பு வழங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது பணியாட்களுக்கு, மக்கள் மத்தியில் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்குமாறும், குறித்த பிரச்சனைக்கான தீர்வை அதில் காணாவிட்டால், நபியவர்களின் சுன்னாவைக் கொண்டு தீர்ப்பளிக்குமாறும் உபதேசிப்பார்கள்.

யாராவது ஒரு பெண்ணைத்தாக்கி, அதன் காரணமாக, வயிற்றில் இருந்த சிசு மரணித்து விழுந்துவிட்டால் அதற்கான தீர்ப்பு என்ன என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்ட போது, அதுபற்றி நபித் தோழர்களிடம் கேட்டார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா, முகீரா பின் சுஃபா ஆகிய நபித்தோழர்கள், இந்த விவகாரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமையைக் குற்றப் பரிகாரமாக அக்குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளித்ததாக சாட்சியம் அளித்தார்கள். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தீர்ப்பளித்தார்கள்.

ஒரு பெண் தனது கணவனின் மரணத்திற்குப் பின்னர், தனது வீட்டில் இத்தா இருப்பதன் சட்டம் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்ட போது, அபூ சஈத் (ரலி) அவர்களின் சகோதரி, புரைஆ பின்த் மாலிக் அவர்கள், தன்னுடைய கணவனின் மரணத்திற்குப் பின்னர் கணவனது வீட்டிலேயே உரிய காலம் முடியும் வரை இத்தா இருக்குமாறு நபியவர்கள் தனக்கு ஏவியதாகக் கூறியதும், உஸ்மான் (ரலி) அவர்கள் அவ்வாறே தீர்ப்பு வழங்கினார்கள்.

வலீத் பின் உக்பா என்பவருக்கு மது அருந்தியமைக்கான தண்டனையை வழங்குவதிலும் அவர்கள் இவ்வாறே ஸுன்னாவைக் கொண்டே தீர்ப்பளித்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் தமத்து முறையிலான ஹஜ்ஜைத் தடுப்பதாக அலி (ரலி) அவர்களுக்குக் கேள்விப்பட்ட போது, அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டுக்குமாக நிய்யத் வைத்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: "மக்களில் யாருடைய கருத்துக்காகவும், நான் நபியவர்களது ஸுன்னாவை விட்டுவிடமாட்டேன்." இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹஜ்ஜை 'தமத்து' முறையில் செய்வதுவே சிறப்பு எனக் கூறிய போது, சில மனிதர்கள் அவர்களிடம் வந்து, அபூ பக்கர், உமர் (ரலி) ஆகியோர் ஹஜ்ஜை 'இப்ராத்' முறையில் செய்வதுவே சிறப்பு எனக் கூறுவதாகக் கூறியதும் இவ்வாறு பதிலளித்தார்கள்: 'உங்கள் மீது வானத்தில் இருந்து கல் மழை இறங்கிவிடும்! நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நான் கூறுகின்றேன், நீங்களோ, அபூ பக்கர், உமர் கூறியதாகக் கூறுகின்றீர்கள்.' அபூ பக்கர், உமர் (ரலி) ஆகியோரின் கருத்திற்காக ஸுன்னாவை விடுபவருக்கே தண்டனை இறங்கும் என்று பயப்படுவதென்றால், அவர்களை விட அந்தஸ்தில் குறைந்தவர்களுக்காகவோ, அல்லது தனது தனிப்பட்ட தெரிவுகளுக்காகவோ ஸுன்னாவுக்கு மாறு செய்பவரின் நிலை எவ்வாறு இருக்கும்? ஒரு சுன்னாவின் விடயத்தில் சில மனிதர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் தர்க்கித்த போது, 'நாம் ஏவப்பட்டுள்ளது உமரைப் பின்பற்றுமாறா? அல்லது ஸுன்னாவைப் பின்பற்றுமாறா?' என்று கேட்டார்கள்.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஹதீஸை அறிவித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து அறிவித்துத் தாருங்கள் எனக் கூறியவுடன், கோபங்கொண்டு, "ஸுன்னா தான் அல்லாஹ்வின் வேதத்திற்கான விளக்கம். ஸுன்னா இல்லாவிட்டால், ழுஹர் நான்கு ரக்அத்கள் என்றோ, மக்றிப் மூன்று ரக்அத்கள் என்றோ, ஸுபஹு இரண்டு ரக்அத்கள் என்றோ அறிந்திருக்கமாட்டோம். ஸகாத்தின் சட்டங்கள் போன்ற, ஸுன்னாவில் விரிவாக விளக்கிக் கூறப்பட்ட எந்த சட்டங்களையும் அறிந்திருக்கமாட்டோம்." என்று கூறினார்கள். ஸுன்னாவை மகத்துவப்படுத்துவது, அதைக் கொண்டு கட்டாயமாக செயற்படுவது, அதற்கு முரண்படுவதை எச்சரிப்பது ஆகிய விடயங்களை உணர்த்தும் நபித்தோழர்களின் கருத்துக்கள் நிறைய உள்ளன. உதாரணமாக, இப்னு உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் பெண் அடியார்களைப் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்கவேண்டாம்" என்ற நபிமொழியை அறிவித்தபோது,

அவரது ஒரு மகனார், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களை நிச்சயம் நாங்கள் தடுப்போம்." என்று கூறியதும் கடுமையாகக் கோபம் கொண்டு. "நான் அல்லாஹ்வின் தூதர் கூறியதாகக் கூறுகின்றேன். நீரோ, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களை நிச்சயம் நாங்கள் தடுப்போம்." என்று கூறுகின்றீர் எனக் கூறிக் கடுமையாக ஏசினார்கள். அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் சிறு கற்களை எறிந்து (வேட்டை யாடிக்)கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரிடம், ‘‘சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது ‘சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் ‘அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்துவிடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள். அதன் பிறகு ஒருமுறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டதும் அவரிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது ‘சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் ஒருபோதும் பேசமாட்டேன்” என்று சொன்னார்கள்.

பைஹகியின் அறிவிப்பில், கண்ணியமிக்க தாபிஈ ஆகிய அய்யூப் அல் ஸிக்தியானி அவர்கள், "ஒரு மனிதருக்கு நீ ஸுன்னாவை அறிவிக்கும் போது அவர், இதை விடுங்கள். குர்ஆனில் இருந்து கூறுங்கள் என்றால், அவன் ஒரு வழிகேடன் என்பதை அறிந்துகொள்!" என்று கூறினார்கள். இமாம் அவ்தாஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஸுன்னா அல்குர்ஆனை விளக்கும். அல்லது அதில் பொதுவாகக் கூறப்பட்டதை வரையறுக்கும். அல்லது குர்ஆனில் கூறப்படாத சட்டங்களையும் கொண்டுவரும். பின்வரும் வசனம் அதற்கு ஆதாரமாகும்.

"மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்"".

ஏற்கனவே பின்வரும் நபிமொழி கூறப்பட்டது: அறிந்துகொள்ளுங்கள்! எனக்கு அல்குர்ஆனும் அதுபோன்ற ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

பைஹகியின் அறிவிப்பில் ஆமிர் அல் சஃபி அவர்கள் சில மனிதர்களைப் பார்த்து,

"நீங்கள் அழிந்தது, அறிவிப்புக்களை (அதாவது ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களை) விட்டபோதே!" என்று கூறியதாக உள்ளது. பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் அவ்தாஈ (ரஹ்) அவர்கள் தனது சில தோழர்களைப் பார்த்து, நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் ஏதாவது ஹதீஸ் உமக்குக் கிடைத்தால் அதுவல்லாத வேறு ஒரு கருத்தை எடுப்பதை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைத் தொட்டும் எத்திவைப்பவராக இருந்தார்கள்" என்று கூறினார்கள்.

பைஹகியின் இன்னுமொரு அறிவிப்பில் கண்ணியமிக்க இமாம் ஸுப்யான் அல் சவ்ரீ அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "அறிவு என்பதுவே அறிவிப்புக்களை (ஹதீஸ்களை) அறிவதுதான்" இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள்: “எங்களில் யாராக இருப்பினும், அவர் மறுப்பளிப்பவரும் தான்; மறுப்பளிக்கப்படுபவரும் தான், இந்த கப்ரில் உள்ளவரைத் தவிர” என்று கூறிவிட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மண்ணறையை சுட்டிக்காட்டானார்கள்.

ஆபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் ஒரு ஹதீஸ் வந்துவிட்டால், அதனைத் தலைமேல் வைத்து ஏற்றுக்கொள்வோம்.

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் எப்போதாவது நபியவர்களைத் தொட்டும் ஒரு ஹதீஸை அறிவித்துவிட்டு, அதை ஏற்று நடக்காவிட்டால், எனது புத்தி பேதலித்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இன்னுமொரு தடவை பின்வருமாறும் கூறினார்கள்: "நான் ஒரு கூற்றைக் கூற, ஹதீஸ் அதற்கு நேர்மாற்றமாக இருந்தால், எனது கருத்தை சுவருக்குப் பின்னால் எறிந்துவிடுங்கள்."

இமாம் அஹ்மத் அவர்கள் தமது ஒரு மாணவரைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார்கள்: என்னையோ, மாலிக்கையோ, ஷாபிஈயையோ பின்பற்றாதீர்! அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ, அங்கிருந்து எடுங்கள்.

இன்னுமொரு தடவை பின்வருமாறும் கூறினார்கள்: "ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையை அறிந்துகொண்டும், ஸுப்யானிடம் செல்பவர்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகின்றேன். அல்லாஹ் கூறுகின்றான்: ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

அவர்கள் கூறுகின்றார்கள்: இங்கு சோதனை என்றால் என்னவென்று தெரியுமா? அதுதான் இணைவைப்பு. ஒரு மனிதன் நபியவர்களின் ஒரு கருத்தைத் தட்டினால், அவரது உள்ளத்தில் வழிகேடு நுழைந்து, அவர் அழிந்துவிட வாய்ப்புள்ளது.

பைஹகீ அவர்கள் அறிவிப்பதாவது, கண்ணியமிக்க தாபிஈ முஜாஹித் பின் ஜப்ர் அவர்கள், 'நீங்கள் ஏதாவது விடயத்தில் கருத்துவேறுபாடுகொண்டால், அல்லாஹ்வின் பக்கமும், தூதரின் பக்கமும் அதைத் திருப்பிவிடுங்கள்" என்ற வசனத்தைப் பற்றிக் கூறும் போது,

,நீங்கள் ஏதாவது விடயத்தில் கருத்துவேறுபாடுகொண்டால், அல்லாஹ்வின் பக்கமும், தூதரின் பக்கமும் அதைத் திருப்பிவிடுங்கள்"

"அல்லாஹ்வின் பக்கம் திருப்புதல் என்பது, அவனின் வேதத்தின் பக்கம் திருப்புவதாகும். தூதரின் பக்கம் திருப்புவதென்பது, சுன்னாவின் பக்கம் திருப்புவதாகும்" என்று கூறினார்கள். இமாம் துஹ்ரீ அவர்கள் கூறியதாக பைஹகீ அவர்கள் அறிவிப்பதாவது, 'முன்சென்ற எமது அறிஞர்கள் அனைவருமே, ஸுன்னாவைப் பற்றிப்பிடிப்பதே வெற்றி என்கிறார்கள்' முவப்பகுத் தீன் இப்னு குதாமா அவர்கள் தமது ரௌழதுன் நாழிர் எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்: இரண்டாவது ஆதாரம்: நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவாகும். நபியவர்களது வார்த்தை ஆதாரமாகும். காரணம், அவர் உண்மையாளர் என்பதை அவருக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் உணர்த்துகின்றன. அவர்களுக்கு வழிப்படுமாறு அல்லாஹ் ஏவியுள்ளான். அவரது கட்டளைக்கு முரண்படுவதை எச்சரித்துள்ளான்.

முற்றும்.

பின்வரும் வசனத்தை இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் விளக்கும் போது,

ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

அதாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது கட்டளைக்கு. அதுதான், அவர்களது வழிகாட்டல், வாழ்க்கைமுறை, அவர்களது சரீஆ, அவர்களது வழிமுறை. எல்லா கருத்துக்களும், செயற்களும் அவர்களது கருத்துக்களையும், செயற்களையும் வைத்தே பார்க்கப்படவேண்டும். அவற்றிற்கு உடன்பட்டவை ஏற்கப்படும். அவற்றிற்கு முரண்பட்டவை, யார் அதைக் கூறியிருந்தாலும், செய்திருந்தாலும் அவர்களுக்கே திருப்பப்படும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது:

எமது கட்டளைக்கு உட்படாத ஒரு செயலை யார் செய்கின்றாரோ, அது தட்டப்படும்.

அதாவது, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தூதரின் ஷரீஆவுக்கு மாறுசெய்கின்றவர்கள் அஞ்சிக்கொள்ளட்டும்.

அவர்களுக்கு ஒரு குழப்பம் ஏற்படுவதை

அதாவது, அவர்களது உள்ளத்தில் நிராகரிப்பு, அல்லது நயவஞ்சகத்தனம், அல்லது பித்அத் நுழைவதை

அல்லது கடுமையான வேதனை ஏற்படுவதை

அதாவது, இவ்வுலகில் கொலை, தண்டனை, கைது போன்றவற்றைக் கொண்டு (வேதனை செய்யப்படுவதை) அஹ்மதின் அறிவிப்பில், நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளிவீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை (தீயில் விழாமல்) தடுத்துக்கொண்டிருந்தார். (ஆனால்,) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவ)திலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறீர்கள்

இமாம் அப்துர் ரஸ்ஸாக் வாயிலாக புகாரி, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவுசெய்துள்ளனர்.

'மிப்தாஹுல் ஜன்னா பில் இஹ்திஜாஜி பில் ஸுன்னா என்ற தனது நூலில் இமாம் ஸுயூதீ அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

ஹதீஸ் கலையில் உள்ள விதிகளுக்கேற்ப வரும் நபியவர்களின் சொல் அல்லது செயல் சார்ந்த ஸுன்னாக்கள் ஆதாரம் என்பதை யார் மறுக்கின்றாரோ, அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி, இறைநிராகரிப்பாளராக ஆகிவிட்டார். அவர் யூத கிறிஸ்தவர்களோடு, அல்லது அல்லாஹ் நாடிய இறைநிராகரிப்புப் பிரிவினரோடு எழுப்பப்படுவார்.

முற்றும்.

ஸுன்னாவை மகத்துவப்படுத்துவது, அதைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு முரண்படுவதை எச்சரிப்பது பற்றிய நபித்தோழர்கள், தாபிஈன்கள் மற்றும் பின்னர் வந்த இமாம்களது கருத்துக்கள் ஏராளம் உள்ளன. நாம் கூறிய அல்குர்ஆனிய வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் அறிவிப்புக்கள் சத்தியத்தைத் தேடுபவனுக்கு போதுமாக இருக்கும் என நினைக்கின்றேன். எங்களையும், எல்லா முஸ்லிம்களையும் அவனது பொருத்தத்தில் நுழைவித்து, அவனது கோபத்தின் காரணிகளை விட்டும் பாதுகாக்குமாறும், அனைவருக்கும் நேரான பாதையைக் காட்டுமாறும் அல்லாஹ்விடம் கேட்கின்றேன். அவன் செவிமடுப்பவன். சமீபமானவன்.

ஸலாத்தும் ஸலாமும் எங்கள் நபியும் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் அவரை நல்ல முறையில் பின்பற்றி வாழ்தோர் அனைவர் மீதிலும் உண்டாவதாக.

அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்)