شرح ألفاظ الأذان
அதானுடைய (பாங்கு) சொற்களின் விளக்கம் :
அதானுடைய (பாங்கு) சொற்களின் விளக்கம் :
பல்மொழிகளில் இஸ்லாமிய கல்வி சேவை செய்வதற்கான நிறுவனத்தின் கல்விக் குழு
அதான் என்பது முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை கேட்கும் இறையழைப்பாகும்; அது அல்லாஹ்வின் மகத்துவத்தை நினைவூட்டி, நன்மை மற்றும் வெற்றியின் பக்கம் அழைக்கவும் செய்கிறது. அது மனிதனுக்கும் அவனது படைப்பாளனுக்கும் இடையிலான ஒரு தொடர்புத் தருணமாகும்; அதில் அவன் உலக இரைச்சல்களிலிருந்து விடுபட்டு, தன் இறைவனுடன் அந்தரங்கமாக உரையாட (தனிமையில்) நிற்கிறான்
அதான் உயரிய கருத்துக்களைத் தன்னகத்தே பொதிந்துள்ளது ; அது அல்லாஹ்வை மகிமைப்படுத்துதலில் தொடங்கி தொழுகைக்கான அழைப்பில் முடிவடைகிறது; அதன் மூலம் முஸ்லிம் அமைதியை அடைகிறான்.
அதான் வாசகங்கள் :
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
உயர்ந்த திருநாமமாகிய “அல்லாஹ்” என்பது “வணங்கப்படுபவன்”, அதாவது வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற பொருள் உடையது. இது மகிமை மிகு படைப்பாளனான இறைவனின் பெயர். மற்ற அனைத்து இறை பெயர்களும் அதன் நீட்சியாகவும், அவனை விவரிக்கும் பண்புப் பெயர்களாகவும் உள்ளன. அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன், இணை துணையற்றவன்; அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவுமில்லை. வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே.
'அல்லாஹு அக்பர்' என்பதன் கருத்து: அல்லாஹ் எல்லாவற்றையும் விட உண்ணதமானவன்; மேலும் அவனுடைய கண்ணியத்திற்கும் பூரணத் தன்மைக்கும் ஏற்றதல்லாத எதையும் அவனோடு ஒப்பிட முடியாத அளவிற்கு அவன் மிகவும் உயர்ந்தவன்.
'அல்லாஹு அக்பர்' : இந்த சொல் ஒரு முஸ்லிமை, இவ்வாழ்க்கையில் தன் படைப்பாளனிடமிருந்து அவன் மனதைத் திசைதிருப்ப ஒன்றும் இருக்கக் கூடாது என்று நினைவூட்டுகிறது; மேலும் மனிதன் தன் மன இச்சை மற்றும் புலனாசைகளைச் சார்ந்து இல்லாமல் வாழ்வை அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் அவனது இறைச்சட்டத்திற்கும் ஏற்ப நடத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது; ஏனெனில் அல்லாஹ் இந்த உலகிலுள்ள அனைத்தையும் விடவும் மிகப் பெரியவன்.
அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன், அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன்,
அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன்.
இதுவே முதல் ஷஹாதா (சான்று பகர்தல்) ஆகும்; அதன் பொருள் : அல்லாஹ்வே எல்லாவற்றையும் படைத்தவன், அவற்றை பரிபாலிப்பவன், அதிபதி, அவற்றின் விவகாரங்களை திட்டமிட்டு நடத்துபவனுமாக இருப்பதை நம்பி ஏற்றுக்கொள்வதாகும். மேலும் அவனை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும்; அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கத்தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை இல்லை, பிள்ளை இல்லை, அவனுக்கு ஒப்பாக யாரும் இல்லை. ஆகவே வணக்கவழிபாடுகள் அல்லாஹ்வைத் தவிர வேறொருவருக்குச் செலுத்தப்படக் கூடாது; அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் எதையும் அழைக்கவும் கூடாது.
இந்த ஷஹாதத் எனும் சான்று பகர்தல், உலகிலுள்ள எல்லா சாட்சியிலும் மிகப் பெரியது; இது அனைத்து தூதுச்செய்திகளிளும் ஈமானின் அடிப்படையாகும். எனவே, நூஹ் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) முதல் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் தங்கள் சமூகத்தை, “அல்லாஹ்வையன்றி வணக்கத்துக்குரிய இறைவன் எவருமில்லை” என்பதை ஒப்புக் கொள்ளவும், ஈமான் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாத்தின் பக்கமே அழைத்தனர். இந்த ஷஹாதத்திற்காகத்தான் அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான்; இதை நிலைநிறுத்த தூதர்களை அனுப்பினான்; இதை விளக்குவதற்காகத் தான் வேதங்களை (அருளாக) இறக்கினான். இதனை தூய வடிவில் உளமார ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு சொர்க்கத்தை கூலியாக வைத்துள்ளான்.
இந்த ஷஹாத்தின் காரணமாகவே மக்கள் தங்கள் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவர்; அவர்கள் நியாயத் தீர்ப்புநாளில் கேள்வி கணக்குக்கு ஆளாக்கப்படுவர். எனவே, அதன்படி வாழ்ந்து, அதிலேயே மரணித்தவர் மாபெரும் வெற்றியைப் பெற்றுவிட்டார்; அதை நிராகரித்து, அதை மொழியாதவன் நிரந்தர நரகத்திற்கு தகுதியானவன் ஆகிறான்.
நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கின்றேன், நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கின்றேன்
நிச்சயமாக முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கின்றேன்
இந்த ஷஹாதாவின் அர்த்தம்: ஒரு முஸ்லிம், அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதித் தூதராக அனுப்பியுள்ளான் என்றும், அவர் மக்களுக்குத் தங்கள் இறைவனின் செய்தியை எத்திவைப்பவராக இருக்கிறார் என்றும் சாட்சி கூறுவதும்; மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கும் அவனது திருப்தியைப் பெறுவதற்கும், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறி, அவர்களைப் பின்பற்றி, அவரை முன்மாதிரியாகக் கொண்டு, நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எத்திவைத்த மார்க்க சட்டத்தின்படி அல்லாஹ்வை வணங்குவதிலேயே நேர்வழி இருக்கிறது; இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து உறுதிகொள்ளுவதுமாகும்.
இந்த சான்று, தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு முன் இப்ராஹீம், மூஸா, ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) அவர்கள் செய்ததுபோல் மக்களை மீண்டும் தவ்ஹீதின் பக்கம் மீட்க வந்தார்கள் என்ற செய்தியையும் தெளிவுபடுத்துகிறது; அவர் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வின் தூதராகவும், இறைவனின் செய்திகளை அறிவிப்பதில் அனைத்து நபிமார்களும் நடந்த பாதையிலேயே அவரும் சென்றார் என்பதையும் அவருக்கு பின் நபி எவரும் இல்லை என்பதையும் அறிவிக்கிறது.
தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள், தொழுகையின்பக்கம் விரைந்து வாருங்கள்
தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்
இவ்வாக்கியத்தின் பொருள்: ஈமான் கொண்டோர்களே! உங்கள் இறைவனின் வழிபடுவதின் பக்கம் விரையுங்கள், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மாபெரும் கருணை உடையவன்; அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் மற்றும் பாவங்களை மன்னிப்பவன்.
இது நம்பிக்கையாளர்களுக்கு தொழுகையில் தமது இறைவனின் முன்னிலையில் நிற்பதற்கான நேரம் வந்து விட்டது என்பதற்கான ஓர் அழைப்பும் ஞாபகமூட்டலுமாகும்.
வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள், வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்
வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்
அல் பலாஹ் என்றால் திருப்தி, வெற்றி, இவ்வுலகிலும் மற்றும் மறுவுலகிலகின் பாதுகாப்பு மற்றும் ஈடேற்றம் ஆகும்.
அதன் அர்த்தங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வெல்வதும், சுவர்க்கத்தில் நுழைவும் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறுதலும் அடங்கும். ஏனெனில் ஈமான் கொண்டு யார் தொழுகையில் ஈடுபட்டுவருவாரோ அவர் வெற்றி பெற்றார். யார் வெற்றி பெருவாரோ அவர் சுவர்க்கத்தில் நிரந்தரமாக இருப்பார்.
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ்
முடிவு தக்பீராலும் தவ்ஹீத் எனும் ஏகத்துவ வார்த்தையாலும் அமைகிறது.
பாங்கு, “அல்லாஹு அக்பர்” என்ற வாக்கியத்தை மீண்டும் கூறுவதுடனும், “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ கலிமாவை வலியுறுத்துவதுடனும் நிறைவு பெறுகிறது. இவ்விரு வாக்கியங்களும் முன்வந்த அர்த்தங்களை உறுதிப்படுத்துபவையாகும். மனித இருப்பின் மையம் இவ்விரண்டிலேயே நிலைபெற்றுள்ளது. காலங்கள் எவ்வளவு நீண்டாலும், நிகழ்வுகள் எவ்வளவு தொடர்ந்தாலும், இந்த யதார்த்தம் ஒருபோதும் மாறுவதோ அல்லது திரிபடைவதோ இல்லை. அதாவது, அல்லாஹ் அனைத்தையும் விட மிகப் பெரியவன். அல்லாஹ்வே உண்மையான இறைவன், அவன் ஒருவன் மாத்திரமே வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் தகுதியானவன், அவனைத் தவிர்த்து வணங்கப்படுபவை அனைத்தும் அசத்தியமானவை.
இறுதியாக: அதான் என்பது சாதாரணமாக ஒரு தொழுகைக்கான அழைப்பு மட்டும் அல்ல. மாறாக, அது நல்வாழ்வு, மாபெரும் வெற்றி மற்றும் சாதனைக்கான அழைப்பாகும். தினமும் ஐந்து முறை பள்ளிவாசல்களில் எதிரொலித்து, இதயங்களை விழிப்புறச் செய்து, அல்லாஹ் எமக்கு அருகில் இருக்கிறான் என்பதை நினைவூட்டும் ஒரு செய்தியாகும்
உன் உள்ளத்தை ஈமானுக்காக திறந்து, “அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிந்தால் அல்லாஹ்வின் அருளினுள் நுழைவாய். இவ்வுலகில் மகிழ்ச்சியை அடைந்து, மறுமையில் வெற்றியைப் பெறுவாய், மேலும் கியாமத் நாளில் ஈமான் கொண்டவர்களின் அணியில் எழுப்பப்படுவாய்.