تعريف بالقرآن الكريم
அல்குர்ஆன் என்றால் என்ன?
அல்குர்ஆன் என்றால் என்ன?
மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மார்க்க விவகாரங்களுக்கான தலைமையகத்தின் கல்விக் குழு
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்)
அகிலத்தாரின் இரட்சகனும், அவர்களின் படைப்பாளனுமாகிய அல்லாஹ்வின் வார்த்தையே அல் குர்ஆன் ஆகும். மனித குலம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை தெளிவுபடுத்தி, அவர்களின் இம்மை, மறுமை சுபீட்ஷத்திற்காக வழிகாட்டவும், மரணத்தின் பின் நிரந்தர துன்பத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் இறுதி நபியும் தூதருமான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இதனை இறக்கியருளினான். இது இறைவேதங்களில் இறுதியானதாகவும், முன்னைய வேதங்களை உண்மைப்படுத்தி, அதன் சட்டதிட்டங்களை மாற்றியமைத்த வேதமாகமாகவும் உள்ளது.
அல் குர்ஆன் ஒர் நிலையான அத்தாட்சியும் அற்புதமுமாகும். இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நபித்துவத்தை உறுதிப்படுத்தும் சான்றாதாரமாகவும் உள்ளது. அல்லாஹ், ஜின் மற்றும் மனித இனம் முழுவதற்கும் இதைப்போன்ற ஒன்றை, அல்லது ஓர் அத்தியாயத்தையேனும் உருவாக்கிக் கொண்டு வருமாறு சவால் விடுத்துள்ளான். ஆனால் அவர்கள் அதில் தோற்றே போனார்கள்.
அல்குர்ஆன் இறங்கி,1400 வருடங்களுக்கு அதிகமான காலத்தை கடந்திருப்பினும் இதில் எந்த மனிதக் கையாடல்களான திரிபோ மாற்றமோ ஏற்பட வில்லை. இறுதிக்காலம் வரையில் இதனைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை அல்லாஹ் பொறுப்பேற்றிருப்பதால், அல்குர்ஆன் இறங்கிய மொழியான அறபு மொழியிலே இது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்ட நிலையில் காணப்படும்.
அல்குர்ஆன் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகவும், மனித வாழ்வொழுங்கை நெறிப்படுத்தி ஓழுங்கு படுத்தி, எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் தீர்ப்புக் கூறும் ஒரு சட்டயாப்பாகவும் திகழ்கிறது. அல்குர்ஆன் ஏக படைப்பாளனான அல்லாஹ்வை மாத்திரம் வணங்குமாறு அழைப்பு விடுக்கிறது. மனிதன் தனது இரட்சகன் பற்றியும் மார்க்கம் குறித்தும் அவசியம் அறிய வேண்டிய விடங்களையும், பிரபஞ்ச உருவாக்கத்தின் ஆரம்ப நிலை குறித்தும், மனித படைப்பின் கட்டங்கள் குறித்தும் தெளிவு படுத்துகிறது. மேலும் இறந்த காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பான மறைவான விவகாரங்கள், முன்னைய நபிமார்களின் சம்பவங்கள், அவர்களுக்கு எவ்வாறு அல்லாஹ் உதவி செய்து எதிரிகளை அழித்தான் போன்ற விவகாரங்கள் தொடர்பான பல செய்திகளையும் குறிப்பிடுகிறது. இவற்றுடன் அல்குர்ஆன் வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள், நற்பண்புகளை கடைப்பிடித்து ஒழுகுமாறு தூண்டுல், தீய பண்புகளை கலைந்து விலகியிருத்தல், மனிதனின் இறுதி நிலை ஆகிய விடயங்களை அல்குர்ஆன் உள்ளடக்கியுள்ளது. மறுமையில் மனிதனின் நிலையைப் பொருத்தவரை, ஒன்றில் அவன் சுவர்க்கம் செல்வான்; இல்லாவிட்டால் நரகம் செல்வான். சுவர்க்கம் முஃமின்களின் வீடாகும்; நரகம் இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் அநியாயக்காரர்களின் வீடாகும்.
இந்த மகத்துமிக்க வேதம் வகிக்கும் முக்கியத்துவம் காரணமாக, அல்லாஹ் அறபு மொழியில் இவ்வேதத்தை இறக்கியருளியதோடு, இதனை மனிதகுலத்திற்கு எத்திவைக்குமாறும் கட்ளையிடுகிறான். இந்த அடிப்படையில் வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு நற்செய்தியை குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அந்த செய்திதான் நீங்கள் உமது மொழியில் அல்குர்ஆனை இலகுவாக விளங்கிக் கொள்ளவும், பிறருக்கும் எத்திவைக்கவும் இந்த அல்குர்ஆனுக்கான மொழி பெயர்ப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த அடிப்படையில், எமது ஆக்கக் குழுவானது அல்குர்ஆனின் கருத்துக்களை விளங்கி அதனை மொழிபெயர்ப்பதில் கடுமையாக உழைத்துள்ளனர். அல்குர்ஆனின் கருத்துக்களை மொழிபெயர்த்துத் தருவதில் எவ்வளவு நுணுக்கங்களை பின்பற்றினாலும் அல்குர்ஆன் குறிப்பிடும் ஆழமான கருத்துக்களை தத்ரூபமாக தருவதில் மனித அறிவின் இயலாமையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். எனவே அல்குர்ஆனின் யதார்த்ங்களையும், அதன் கருத்துக்களையும் ஆழமாக அறிய விரும்புவோர் அல்குர்ஆனிய மொழியான அறபை கற்றுக்கொள்ளுமாறு விணயமாக வேண்டுகிறோம்.
நபிமார்கள் அனைவரின் மீது ஸலாம் உண்டாவாதாக. புகழ் அனைத்தும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியன.
இங்குள்ள QR மூலம் உமது மொழியில் குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பெறலாம்.