شرح ألفاظ الأذان

شرح ألفاظ الأذان

كتاب ألفاظ الأذان شرح مختصر لمعاني ألفاظ الأذان بأسلوب يناسب غير المسلمين

Language: lang_ta
Prepared by: பல்மொழிகளில் இஸ்லாமிய கல்வி சேவை செய்வதற்கான நிறுவனத்தின் கல்விக் குழு
Version: 1.1
Translations 39
Assamese Azerbaijani Bengali Bosnian +35
Attachments 7
PDF
Audio
Video
+3

அதானுடைய (பாங்கு) சொற்களின் விளக்கம் :

பன்மொழி இஸ்லாமிய உள்ளடக்கம் மற்றும் தகவல் சேவைச் சங்கத்தின் அறிவியல் குழு

அதான் என்பது முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை கேட்கும் இறையழைப்பாகும் ; அது அல்லாஹ்வின் மகத்துவத்தை நினைவூட்டி, நன்மை மற்றும் வெற்றியின் பக்கம் அழைக்கவும் செய்கிறது. அது மனிதனுக்கும் அவனைப் படைத்த அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பின் தருணமாகும்; அந்நேரத்தில் அவன் உலகின் சந்தடிகளிலிருந்து விலகி, தன் இறைவனை நோக்கி மனமாற மன்றாட தயாராகிறான். அதான் என்பது வெறும் தொழுகையின் நேரத்தை அறிவிக்கும் ஒரு அறிவிப்பு மட்டுமல்ல; மாறாக, அது மன அமைதிக்கும், ஈமானுக்குமான அழைப்பாகவும், அல்லாஹ்வுடன் உள்ள தொடர்பை புதுப்பிப்பதற்கான அழைப்பாகவும் அமைகிறது. அதான் உயரிய கருத்துக்களைத் தன்னகத்தே பொதிந்துள்ளது ; அது அல்லாஹ்வை மகிமைப்படுத்துதலில் தொடங்கி தொழுகைக்கான அழைப்பில் முடிவடைகிறது; அதன் மூலம் முஸ்லிம் அமைதியை அடைகிறான். அதான் சொல்லப்படும் ஒவ்வொரு வேளையும், உண்மையான வாழ்க்கை அல்லாஹ்வின் நெருக்கத்தில் தான் தொடங்குகிறது என்பதை உள்ளம் அமைதியாகச் சொல்கிறது.

அதான் வாசகங்கள் :

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

அல்லாஹ் மிகப்பெரியவன்

உயர்ந்த திருநாமமாகிய “அல்லாஹ்” என்பது “வணங்கப்படுபவன்”, அதாவது வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற பொருள் உடையது. இது மகிமை மிகு படைப்பாளனான இறைவனின் பெயர். மற்ற அனைத்து இறை பெயர்களும் அதன் நீட்சியாகவும், அவனை விவரிக்கும் பண்புப் பெயர்களாகவும் உள்ளன. அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன், இணை துணையற்றவன்; அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவுமில்லை. வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே.

'அல்லாஹு அக்பர்' என்பதன் கருத்து: அல்லாஹ் எல்லாவற்றையும் விட உண்ணதமானவன்; மேலும் அவனுடைய கண்ணியத்திற்கும் பூரணத் தன்மைக்கும் ஏற்றதல்லாத எதையும் அவனோடு ஒப்பிட முடியாத அளவிற்கு அவன் மிகவும் உயர்ந்தவன்.

'அல்லாஹு அக்பர்' : இந்த சொல் ஒரு முஸ்லிமை, இவ்வாழ்க்கையில் தன் படைப்பாளனிடமிருந்து அவன் மனதைத் திசைதிருப்ப ஒன்றும் இருக்கக் கூடாது என்று நினைவூட்டுகிறது; மேலும் மனிதன் தன் மன இச்சை மற்றும் புலனாசைகளைச் சார்ந்து இல்லாமல் வாழ்வை அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் அவனது இறைச்சட்டத்திற்கும் ஏற்ப நடத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது; ஏனெனில் அல்லாஹ் இந்த உலகிலுள்ள அனைத்தையும் விடவும் மிகப் பெரியவன்.

'அல்லாஹு அக்பர்' என்பதை ஒரு உழைப்பாளி கேட்கும்போது தனது உற்பத்தியை நிறுத்துகிறார்; விவசாயி கேட்கும்போது தன் உழவு வேலையை நிறுத்துகிறார்; வியாபாரி கேட்கும்போது தனது கடையை மூடுகிறார்; ஆசிரியர் கேட்கும்போது தனது பாடத்தை நிறுத்துகிறார்; ஏனெனில் அல்லாஹ் எல்லா பணி மற்றும் செயல்களை விட பெரியவன். இவ்வாறு பணிகள் அனைத்தியும் நிறுத்தி வணக்கத்தில் ஈடுபடுதல், முஃமினின் உள்ளத்தில் அல்லாஹ் இவ்வுலகின் வாழ்வு மற்றும் அதிலுள்ள வசதிகளையும் விட பெரியவன் என்பதற்கான சான்றாகும். அல்லாஹு அனைத்துச் சோதனைகளையும் துன்பங்களையும் விடவும் மிகப் பெரியவன் (அவனுக்கு முன் இவை அனைத்தும் ஒன்றுமே கிடையாது), வாழ்வின் எந்தச் சூழ்நிலைகளை விடவும் மேலானவன் ஆவான். யார் இதனை நம்பிக்கை கொள்வாரோ, அவர் நெருக்கடிகளைச் சிறியதாகக் கருதுவார்; அவர் அல்லாஹ்வுடன் இருப்பதனால் அவரின் உள்ளம் அமைதியடையும்; அல்லாஹ்வின் தீர்ப்பில் திருப்தியுடையவராகவும், அவனது ஞானத்திலும் ஏற்பாட்டிலும் உறுதியான நம்பிக்கையுடையவராகவும் இருப்பார்.

அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன், அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன்,

அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் எதுவுமில்லை என்று சாட்சி பகர்கின்றேன்.

இதுவே முதல் ஷஹாதா (சான்று பகர்தல்) ஆகும்; அதன் பொருள் : அல்லாஹ்வே எல்லாவற்றையும் படைத்தவன், அவற்றை பரிபாலிப்பவன், அதிபதி, அவற்றின் விவகாரங்களை திட்டமிட்டு நடத்துபவனுமாக இருப்பதை நம்பி ஏற்றுக்கொள்வதாகும். மேலும் அவனை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும்; அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கத்தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை இல்லை, பிள்ளை இல்லை, அவனுக்கு ஒப்பாக யாரும் இல்லை. ஆகவே வணக்கவழிபாடுகள் அல்லாஹ்வைத் தவிர வேறொருவருக்குச் செலுத்தப்படக் கூடாது; அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் எதையும் அழைக்கவும் கூடாது.

இந்த ஷஹாதத் எனும் சான்று பகர்தல், உலகிலுள்ள எல்லா சாட்சியை விடவும் மிகப் பெரியது; இது எல்லாத் தூதுச்செய்திகளும் உள்ளடக்கிய ஈமானின் அடிப்படையாகும். எனவே நூஹ் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) முதல் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் தங்கள் மக்களை, “அல்லாஹ்வையன்றி வணக்கத்துக்குரிய இறைவன் எவருமில்லை” என்பதை ஒப்புக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், அதை ஈமான் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாத்தின் பக்கமே அழைத்தனர். இந்த ஷஹாதத்திற்காகத் தான் அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான்; இதை நிலைநிறுத்த தூதர்களை அனுப்பினான்; இதை விளக்குவதற்காகத் தான் வேதங்களை அருளாக இறக்கினான். இதனை தூய வடிவில் உளமார ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு சொர்க்கத்தை கூலியாக வைத்துள்ளான்; அதில் உறுதியான நம்பிக்கையுடன் மரணிப்பவர்களுக்கு நரக வேதனையை தடை செய்துள்ளான்.

இதுவே ஈமான் அடைவதற்கான திறவுகோலும், வெற்றிக்கான வாசலும், மார்க்கத்தின் மூலாதாரமும், தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையும் ஆகும்.

இந்த ஷஹாத்தின் காரணமாகவே மக்கள் தங்கள் மண்ணறைகளிலிருந்து எழுப்பப்படுவர்; அவர்கள் நியாயத் தீர்ப்புநாளில் கேள்வி கணக்குக்கு ஆளாக்கப்படுவர். எனவே, அதன்படி வாழ்ந்து, அதிலேயே மரணித்தவர் மாபெரும் வெற்றியைப் பெற்றுவிட்டார்; அதை நிராகரித்து, அதை மொழியாதவன் நிரந்தர நரகத்திற்கு தகுதியானவன் ஆகிறான்.

நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கின்றேன், நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கின்றேன்

நிச்சயமாக முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கின்றேன்

இந்த ஷஹாதாவின் அர்த்தம்: ஒரு முஸ்லிம், அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதித் தூதராக அனுப்பியுள்ளான் என்றும், அவர் மக்களுக்குத் தங்கள் இறைவனின் செய்தியை எத்திவைப்பவராக இருக்கிறார் என்றும் சாட்சி கூறுவதும்; மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கும் அவனது திருப்தியைப் பெறுவதற்கும், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறி, அவர்களைப் பின்பற்றி, அவரை முன்மாதிரியாகக் கொண்டு, நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எத்திவைத்த மார்க்க சட்டத்தின்படி அல்லாஹ்வை வணங்குவதிலேயே நேர்வழி இருக்கிறது; இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதை முஸ்லிம் அறிந்து உறுதிகொள்ளுவதுமாகும். மேலும், நபி (ஸல்) அவர்கள் எத்திவைக்காத எந்தவொரு வணக்க வழிபாடும் செல்லாத வணக்கமாகும்; அது அதைச் செய்பவருக்குப் இவ்வுலகிலும் மறுமையிலும் எந்த பயனும் அளிக்காது; மாறாக அதற்காக அவன் கேள்வி கேட்கப்பட்டு தண்டிக்கப்படுவான்; ஏனெனில் அவன் தன் தூதர் (ஸல்) அவர்கள் எத்திவைத்ததல்லாத முறையில் அல்லாஹ்வை வணங்கியுள்ளான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அகிலத்தின் இறைவனின் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுவதன் அர்த்தம் இந்த ஷஹாதத்தில் அடங்கியுள்ளது. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதர்களில் இறுதித்தூதர் என்றும், அவருக்குப் பின் நபி இல்லை என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது. அதுபோல, அவர்கள் கொண்டுவந்த எல்லா அத்தாட்சிகளை ஈமான் கொள்வதும் —அவற்றில் மிகப் முக்கியமான குர்ஆன் — இது இறுதித் தூதுச் செய்தியாக இருந்து, அது இறங்கிய அதே மொழியிலேயே இன்றளவும் நிலைத்திருக்கிறது; அது கூட்டல், குறைத்தல், மாற்றம் ஏதுமின்றி பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையையும் உள்ளடக்கியுள்ளது இந்த ஷஹாதத். மகத்தான அல்குர்ஆன் அதன் இலக்கியத்திலும், சட்டதிட்டங்களிலும், வழிகாட்டுதல்களிலும் தனித்துவம் பெற்று ஒப்புமையற்றதாகும். இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தையாவது உருவாக்கிக் கொண்டு வருமாறு அல்லாஹ் மனித இனம் முழுவதற்கும் சவால் விடுகிறான்; ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை அவர்களால் அதனைச் செய்ய முடியவில்லை; இன்றளவும் மனித இனம் அதற்கு ஆற்றலற்றதாகவே உள்ளது.

இந்த சான்று, தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு முன் இப்ராஹீம், மூஸா, ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) அவர்கள் செய்ததுபோல் மக்களை மீண்டும் தவ்ஹீதின் பக்கம் மீட்க வந்தார்கள் என்ற செய்தியையும் தெளிவுபடுத்துகிறது; அவர் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வின் தூதராகவும், இறைவனின் செய்திகளை அறிவிப்பதில் அனைத்து நபிமார்களும் நடந்த பாதையிலேயே அவரும் சென்றார் என்பதையும் அவருக்கு பின் நபி எவரும் இல்லை என்பதையும் அறிவிக்கிறது.

தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள், தொழுகையின்பக்கம் விரைந்து வாருங்கள்

தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்

இவ்வாக்கியத்தின் பொருள்: ஈமான் கொண்டோர்களே! உங்கள் இறைவனின் வழிபடுவதின் பக்கம் விரையுங்கள், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மாபெரும் கருணை உடையவன்; அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் மற்றும் பாவங்களை மன்னிப்பவன்.

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும், அதான் – தொழுகைக்கான அழைப்பை தினமும் ஐந்துவேளை அவர்களை அழைக்கவும், அவர்களிடம்: ‘வாருங்கள்; உங்கள் இறைவனின் வழிபடுவதன் பக்கம் முந்துங்கள்’ என்று சொல்லுமாறு, அல்லாஹ் ஒருவருக்கு உத்தரவிடுவது எவ்வளவு பெரும் கௌரவம்!

இது நம்பிக்கையாளர்களுக்கு இறைவனைக் வணங்குவதற்கான நேரம் வந்து விட்டது என்பதற்காக விடுக்கப்படும் ஓர் அழைப்பும் ஞாபகமூட்டலுமாகும். ஆகையால் அவர்களைப் சூழ்ந்திருக்கும் இவ்வுலக விடயங்களை விட்டும் விலகி வணக்கத்தில் முனைவதும், தாம் ஈடுபட்டிருக்கும் வியபாரம் அல்லது விவசாயத்தை ஓரங்கட்டி அல்லாஹ்வை நோக்கி செல்லவேண்டும் என்பது அவர்கள் மீது கடமையாகும். இது ஈமானின் உண்மைத்தன்மைக்கான ஓர் அடையாளமாகும். மேலும் இது இவ்வுலகின் செல்வங்கள் அனைத்தையும் விட சிறந்ததாகும்.

இது மக்களை தொழுகையின் பக்கம் அழைக்கும் ஓர் அழைப்பு. இந்த தொழுகையானது ஓர் அடியானுக்கும் அவனது இறைவனுக்கும் இடையிலான நேரடி தொடர்பாகும். இது மக்களிடையில் உள்ள பாகுபாட்டை தகர்த்து, அவர்களை தமது இறைவனின் முன்னிலையில் சமமாக்கும் ஒரு வணக்கமாகும்.

வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள், வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்

வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்

வெற்றி என்றால் திருப்தி, வெற்றி, இவ்வுலகிலும் மற்றும் மறுவுலகிலகின் பாதுகாப்பு மற்றும் ஈடேற்றம், நிரந்தர மகிழ்ச்சி, மேலும் சரியான வழிக்கு வழிகாட்டுதல் ஆகும்.

அதன் அர்த்தங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வெல்வதும், சுவர்க்கத்தில் நுழைவும் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறுதலும் அடங்கும். ஏனெனில் ஈமான் கொண்டு யார் தொழுகையில் ஈடுபட்டுவருவாரோ அவர் வெற்றி பெற்றார். யார் வெற்றி பெருவாரோ அவர் சுவர்க்கத்தில் நிரந்தரமாக இருப்பார்.

முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பவர்) ஒவ்வொரு தொழுகையின்போதும் நம்பிக்கையாளர்களை அமைதி, பாதுகாப்பு, நிம்மதி, உளத்தூய்மை, இவ்வுலகம் மற்றும் மறுவுலகின் மகிழ்ச்சியை நோக்கி விரைந்து வருமாறு ஞாபகமூட்டுகிறார்.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ்

முடிவு தக்பீராலும் தவ்ஹீத் எனும் ஏகத்துவ வார்த்தையாலும் அமைகிறது.

அதான் “அல்லாஹு அக்பர்” என்ற வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறுவது மற்றும், “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ கலிமாவை வலியுறுத்துவதாலும் நிறைவு பெறுகிறது. இவ்விரு வாக்கியங்களும் முன்வந்த அர்த்தங்களை உறுதிப்படுத்துபவையாகும். மனித இருப்பின் மையம் இவ்விரண்டிலேயே நிலைபெற்றுள்ளது. இதுதான் இருக்கும் யதார்த்தங்களில் மிகவும் உண்மையான யதார்த்தமாக இருக்கிறது. மனிதன் அதைப் புரிந்தாலோ புரியாவிட்டாலோ, அதைப் பற்றி அறிவு உடையவனாக இருந்தாலோ அறிவில்லாதவனாக இருந்தாலோ இந்த யதார்த்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. மகத்தான யதார்த்தங்களுக்கு சிலரின் அறியாமை எவ்விதத் தீங்கும் செய்யாது. காலம் எவ்வளவு நீண்டாலும், காட்சிகள் எவ்வளவு தொடர்ச்சியாக மாறினாலும், இந்த யதார்த்தம் மாற்றமடையாது, மாறுபடாது. அதாவது, அல்லாஹ் அனைத்தையும் விட மிகப் பெரியவன். அல்லாஹ்வே உண்மையான இறைவன், அவன் ஒருவன் மாத்திரமே வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் தகுதியானவன், அவனைத் தவிர்த்து வணங்கப்படுபவை அனைத்தும் அசத்தியமானவை.

இது, அல்லாஹ் மேன்மைப்படுத்தியதை மேன்மைப்படுத்தும் அழைப்பு; மேலும், அல்லாஹ்வுக்காக, அல்லாஹ் தனக்கென கொண்டுள்ளவை மீது சாட்சி சொல்வதாகும், அதனைத் தூதர்களும் ஏற்று (அலைஹிமுஸ்-ஸலாம்) சாட்சி கூறுயுள்ளனர், இதற்கு முஃமின்களும் சாட்சி கூறுகின்றனர்.

இறுதியாக: அதான் என்பது தொழுகைக்கான ஒரு சாதாரண அழைப்பு மட்டும் அல்ல. அது நல்வாழ்வு, மாபெரும் வெற்றி மற்றும் சாதனைக்கான அழைப்பாகும். தினமும் ஐந்து முறை பள்ளிவாசல்களில் எதிரொலித்து, இதயங்களை விழிப்புறச் செய்யும் ஒரு செய்தி அது. அல்லாஹ் அருகில் இருக்கிறான் என்பதையும், மனநிம்மதி, மேலும் நல்வாழ்வுக்கான பாதை தொழுகையாலும், அடியானும் தனது படைத்தவனமிடையிலான பிணைப்பாலும் தொடங்குகிறது என்பதை எமக்கு நினைவூட்டுகிறது.

ஆகவே பாங்கு சொல்பவருடன் சேர்ந்து ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்றும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்றும் திருப்பிச் சொல்ல வேண்டும்; தவ்ஹீதின் கலிமாவை திருப்பிச் சொல்ல வேண்டும்; அல்லாஹ் தனக்குத் தானே சாட்சி வைத்ததையும், அவனது தூதர்கள் கொண்டு வந்த உண்மையையும் நீயும் சாட்சி கூறு; அப்பொழுது நீ வெற்றி பெற்றோரிலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்திய முஸ்லிம்களிலும் ஒருவனாக மாறுவாய்.

உன் உள்ளத்தை ஈமானுக்காக திறந்து, “அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிந்தால் அல்லாஹ்வின் இரக்கத்தினுள் நுழைவாய். இவ்வுலகில் மகிழ்ச்சியை அடைந்து, மறுமையில் வெற்றியைப் பெறுவாய், மேலும் கியாமத் நாளில் ஈமான் கொண்டவர்களின் அணியில் எழுப்பப்படுவாய்.